

படங்கள் : நன்றி : கூகிள்
காயமேயிது மெய்யடா!-இதில்
கண்ணும் கருத்தையும் வையடா
நோயும் நொடியும் வாராமல் காத்து
நுட்பமாக உய்யடா!
என்று பட்டுக் கோட்டை பாடியது போல் இந்த காயத்தைப் பாதுகாக்க வெங்காயம் உதவி இருக்கிறது.வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.
உடம்புக்கு நல்ல ஊட்டச்சத்தைத் தருகிறது.பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன் படுத்துகிறார்கள்.நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயத்திற்கு முக்கிய இடமுண்டு. பல் வேறு நாட்டு விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதயத்திற்கு சக்தி தருகிறது.நரை, தலை வழுக்கையைத் தடுக்கும்.உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், வாத நோய்களைக் குணமாக்குகிறது.
இது என்ன! நாட்டில் தலைப்புச் செய்தியாக -தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில்- என்று வெங்காயத்தை தோல் உரிப்பதுப் போல் உரி உரி என்று உரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த சமயத்தில் வெங்காயம் பற்றி பேச்சு என்ன வேண்டி இருக்கிறது?
தெருவில் வெங்காய கலரில் புடவை கட்டிப் போகும் பெண் தனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணுடன் பேசும் போது வெங்காயம் விலையை பார்த்தீர்களா! என்னா விலை விக்குது. வெங்காயம் வாங்க கடைக்கு போனா தங்கம் நிறுக்கிற மாதிரி நிறுக்கிறான் கடைக்காரான் என்பது தான்.
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதிக அளவு மழையால் வெங்காயப் பயிர் பாதிக்கப்பட்டதும் வெங்காயவிலை ஏற்றத்திற்கு காரணம்.மக்களுக்கு வெங்காயம் உரிக்காமலே கண்ணில் நீர் வருகிறது, அதன் விலையைக் கேட்டு!
வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சொல்கிறது அரசாங்கம்.வெங்காயத்தை எவ்வளவு நாள் பதுக்க முடியும்? அழுகி நாறிப் போய் விடாதா?
இநத விலை ஏற்றத்தை தன் டயர் வியபாரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளும் புத்திசாலி வியாபாரியின் விளம்பரம்: ஜாம்ஜெட்பூரில் உள்ள ஒரு டயர் கடையில் லாரி டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம். கார் டயர் வாங்கினால் 1 கிலோ வெங்காயம். இது எப்படி இருக்கு!
பதவி நாற்காலிகளுக்கும் இந்த வெங்காயத்தால் ஆபத்து. 1996 லில் தில்லியில் முதல்வர் மதன்லால் குரானா காலத்தில் தில்லியில் பரபரப்பாக பேசப் பட்ட வெங்காய விலை ஏற்றம்
அவர் ஏற்றம் மிகு முதல்வர் பதவியைப் பறித்தது. பின் வந்த சுஷ்மா சிவராஜ் காலத்திலும் வெங்காய விலை குறையாததால் 1998லில் தோல்வி அடைந்தார்.
அன்றாடம் கூலி வாங்கி அதில் அரிசி,பருப்பு, காய்கறிகள் வெங்காயம் வாங்கி சாப்பிடும் ஏழை மக்களுக்கு மிகவும் கஷ்டம்.வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றால் என்ன செய்வார்கள்?
பட்டுக்கோட்டை ஒரு பாட்டில் ‘ ஏழைக்கு காலம் சரியில்லை’ என்று பாடுவார். அது சரிதான். ஒரு பச்சை மிளகாய்,வெங்காயம் வைத்துக்கொண்டு ஆனந்தமாய் கஞ்சி குடித்து விடுவார்கள் ஏழைகள். அந்த வெங்காயத்திற்கும் இப்போது வழி இல்லாமல் போகிறது.
இப்போது உள்ள பொருளாதார சூழ் நிலையில் நடுத்தர மக்களே கஷ்டப்படும் போது ஏழைகள் பாடு என்னாகும்? 1960ல் பட்டுக்கோட்டை பாடியபாட்டு இது:
கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே- என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே
மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினால் கடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான் -வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்
சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே- அது
குட்டியும் போடுது வட்டியிலே
வித விதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லை-இதை
எண்ணாமலிருக்கவும் முடியல்லே
கன்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?
அவரே இன்னொரு பாட்டில்
சாமிக்கு தெரியும்,பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலமை-அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை- இதைப்
பாடிப் பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்
நாட்டில் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துவோம்.
வரலாறு காணாத வெங்காயத்தின் வரலாறு :
//வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவுப் பொருளாகும்.ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன் படுத்தி உள்ளனர்.அராபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறர்கள்.நேபாளத்தில் வெங்காயம் இறைவனுக்கு நிவேதனம் செய்யப் பயன்படுகிறது. யூதர்களும் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர்.மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிர்டேஸ் வெங்காயத்தின் பயனைப்பற்றிக் கூறியுள்ளார்.அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறர்கள்.
வெங்காயத்தின் பிறப்பிடம் வடமேற்கு இந்தியா,ரஷ்யா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளாகும். மேற்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் வெங்காயத்தின் இரண்டாவது பிறப்பிடமாகும். வெங்காயத்தின் தாவர பெயர் ஆலியம் ஸெபா ஆகும்.இது அலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வெங்காயத்தின் ஆங்கிலப் பெயர் ஆனியன் ஆகும்.
இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘பெரியமுத்து’ என்பது பொருளாகும். வெங்காயத்தின் காரத்தனமைக்கு காரணம் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.சிறிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன, ஒரே பலனைத் தான் தருகின்றன.//
நன்றி:
’தெய்வீக மூலிகை’
Dr.c.k.மாணிக்கவசாகம்
நான் இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது மத்திய மாநில அதிரடி நடவடிக்கையால் வெங்காய விலை சரிவு என்று தலைப்புச் செய்தி சொல்கிறது. இறக்குமதியில் சுங்கவரியை ரத்து செய்தல்,ஏற்றுமதியை ஜனவரி 15 வரை தடைசெய்தல்.பதுக்கல்காரர்களை ஒடுக்குதல் எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கிறதாம். எப்படியோ ஏறிய விலை இறங்கினால் சரி. 100 விற்ற வெங்காயம் 40 என்கிறது.
பெரியார் அடிக்கடி வெங்காயம் என்று சொல்லி வெங்காயத்திற்குப் பெருமை சேர்த்தார்.
வெங்காய விலை குறைந்தவுடன் வெங்காயத்தைப் பயன் படுத்தி என்னென்ன நன்மை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.