கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 டிசம்பர், 2025

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்


ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டுக்கு போகும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்.


அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

இந்த பதிவில் மார்கழி கோலமும் இடம் பெறுகிறது.

திங்கள், 29 டிசம்பர், 2014

மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து

நான் முதல் முதலில் வலைத்தளம் ஆரம்பித்த போது இந்த கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் ”மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி என் பதிவுகளை ஆரம்பித்தேன். 

1953  ஆம் ஆண்டுமுதல் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் மனைவியின்  விருப்பப்படி, கோலத்தை சுற்றி எழுதுவதற்காக  எழுதிய கவிதைகளை  1958ல் சிறு நூலாக வெளியிட்டார்களாம், அந்த நூலின் முன்னுரையில் உள்ள அவருடைய கவிதைகள் :-

1’ மார்கழி மாதங்களிலே என் துணைவி
மாக்கோலம் காலையிலே தெருவிலிட்டு
ஆர்வமுடன் எனை நோக்கி அகம் பூரித்து
அக்கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு 
ஓர் பாட்டு சொல்லும் என்பாள் அந்நேரத்தில்
உதிக்கும்சில சொற்றொடரை கோத்துச்சொல்வேன்
ஊர்ந்து செல்லும் அவளின்கை விரல்கள்மாவை
உதிர்த்தெழுத்தாய் மாற்றும் பலர் கண்பார்கள்.

அன்றன்று இந்தவிதம் தோற்றமான
அனுபவ ஆராய்ச்சிகளின் குறிப்பனைத்தும்
ஒன்றொன்றின் உட்கருத்தை விவாதம் செய்து
ஒத்துணர்ந்து உள்ளத்தில் நிறைவு பெற்று
என்றென்றும் பலர் படிக்க உதவுமென்று
எண்ணிஎழுதித் தொகுத்து அச்சிலிட்டு
இன்றுஇப்போ நாம் கண்டு இன்பம் காண
ஏற்றபடி இதைத்தந்தோர்க் கெனது நன்றி.


வித்தியாசமான கோலம்  என்று  ’எங்கள் Blog’ ல் பகிர்ந்து இருந்தார்கள். அதில் “மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி  இருந்தார்கள் அதைப் பார்த்தவுடன் உங்களிடம் அதிலிருந்து சிலவற்றை பகிர ஆசை வந்து விட்டது.  எங்கள் Blogக் குழுமத்திற்கு  நன்றி.

 மார்கழி மாதங்களில் நான் கோலம் போடும்போது கோலங்களுக்கு கீழே அல்லது மேலே மகரிஷி அவர்களின்  அருளுரையிலிருந்து சில வாசகங்களை எழுதினேன். அந்தக் கோலங்களும் வாசகங்களும் இங்கே. (சில படங்களில் வாசகங்கள் போட்டோவுக்குள் அடங்கவில்லை).

இயற்கைச் சக்தியே விதி,
இதையறிந்த அளவே மதி 
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை
 எண்ணி யுண்ணிடல்  என்றும் உன் கடன்.
உடையில் ஒழுக்கம் உள்ளத்தில் கருணை ,
 நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு

நினைவை யடக்க நினைத்தால் , நிலையா
நினைவை யறிய நினைத்தால் , நிலைக்கும்
உழைப்பினால் உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர். 
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கத்துடன் உழை, உயர்வு நிச்சயம் .
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் ,
நினைப்பதும் , செய்வதும் நித்தியகடன்.

அவனில் அணு, அணுவில் அவன் 
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை
எண்ணு , சொல், செய், 
எல்லோருக்கும் நன்மை தர,
எண்ணும்படி செய்,
செய்யும்படி எண்ணு>

                                                      உலகமே ஒரு பெரிய பள்ளி,
                                      ஒவ்வொருவருக்கும் தினம் புதிய பாடம்.
                                     பலகலைகள் கற்றோர்க்கும் பாமரர்க்கும்,
                                      பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு


வாங்கும் கடனும் , தேங்கும் பணமும்
 வளர வளர  வாழ்வை கெடுக்கும்
கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை
உண்ணாடிப் பார்க்க உணராலாம் உயிர்நிலை

                                        வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                                 ---------------------

சனி, 17 டிசம்பர், 2011

மார்கழியின் சிறப்பு



மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் போன மாதிரி இல்லை.

மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.
இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.இசை,செவிக்கு விருந்து -உடலுக்கு மருந்து. மனோவியாதிக்கும் மருந்து. மனோவியாதி உள்ளவர்களை இசையால் குணப்படுத்தலாம். இப்படி இசையின் பெருமையை சொல்லிக் கொண்டு போகலாம்.

மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும். அண்மையில் காலமான சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளை சொல்லி, இந்த பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.

பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது. ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைதண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள். எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

மார்கழியில் இசை விழா சிறப்பாய் நடைபெறும். தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை விருந்து அளிக்கிறது.
இசை, நிறைய நன்மைகள் செய்யும் அதில் சில : வயலின் இசை,தந்தி வாத்தியங்கள் தலை முடியை நன்கு வளர செய்யும். வயிற்று நோய் போக்கும். வயிற்று நோய் உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு குறிப்பிட்ட இசையை மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் கேட்க வேண்டும். அப்போது வயிற்று வலி போய் விடும் என்பார்கள்.

வீணை இசை கேட்டால் நல்ல தூக்கம் வரும்.வீணை இசை உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மென்மையான பாட்டுக்கள் மனதை மயக்கும்.

நீலாம்பரிராகம்- நல்ல தூக்கம் வரும். ஸ்ரீ ராகம், நல்ல ஜீரணசக்தி தரும். துவிஜாவந்தி-நரம்பு தளர்ச்சி குணமாகும். சாமாராகம்- மன உளைச்சல் போகும். பைரவி, காம்போதி, கல்யாணி, வாசந்தி, சிவரஞ்சினி, கோசலம், அனுமத்தோடி, புராணிசாராகம், எல்லாம் பிணிதீர்க்கும் ராகங்கள்.

மார்கழிமாதம், கோலங்களுக்குச் சிறப்பு. வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, ஒற்றைப் படையில் பூ வைத்து(1,3,5,7,9,11) பின் காலை 11.30க்கு அதை எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள் அதில் தான் சிறுவீட்டுப் பொங்கல் வைப்பார்கள். சிறுமிகள் எல்லோரும் சேர்ந்து அம்மா கட்டிக் கொடுத்த அல்லது வரைந்து கொடுத்த சிறுவீட்டில் சிறு வெண்கலப் பானை வைத்து, அதில் பால் காய்ச்சுவார்கள் அல்லது பொங்கல் வைப்பார்கள் எங்கள் ஊர் பக்கம். ( திருநெல்வேலியில்)

மார்கழி சிறப்பைப் பற்றி போன வருடம் இரண்டு பதிவு எழுதி இருக்கிறேன். பாவை நோன்பு, மார்கழி கோலங்கள் என்று.

கோலங்களைப் பற்றிக் கூறும் இன்னும் சில பாடல்கள்:


நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

//வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா. கேசவா.உன்
முகத்தனகண்க ளல்லவே.//


’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//
அவள் கோலம் போட்டு முடித்தபின் சூரியன் தன் பொன்னொளியால்  பரிசு தந்தான் என்கிறது.

கண்ணதாசன், ‘நீ’ என்ற திரைப்படப்பாடலில்,

//வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
ஆ.. கூந்தலில் பூ முடித்தேன்
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்
குங்குமம் விளங்கட்டுமே -கோவில்
குங்குமம் விளங்கட்டுமே
கைவளையாடலும் காலடி ஓசையும்
வருகையை முழங்கட்டுமே -பாவை
வருகையை முழங்கட்டுமே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்

வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே -காலை
காற்றினில் விலகட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய
மன்னவன் விழிக்கட்டுமே – காதல்
மன்னவன் விழிக்கட்டுமே

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்//

என்று கோலமிடும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.


ஆனால் இப்போது பாதிவீட்டில் காலை குளிருக்கு பயந்து இரவு போட்டு விடுகிறார்கள். தெருபக்கம்  வாசல் இருப்பவர்கள் திருடனுக்கு பயந்து சூரியன் வந்தபின் கோலம் போடுகிறார்கள்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.

சனி, 18 டிசம்பர், 2010

மார்கழிக் கோலங்கள்





மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. கண்ணபிரான், மாதங்களில் நான் மார்கழி என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார்.தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.இறைவனைத் தொழுவதற்காக சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும்,இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும்,ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டு பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார்.உலகச் செயல்களைத் தொடங்குவதற்கு பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியை திருவெம்பாவையில் கூறுகிறார்.

உயிர்,கதிரவன்,திங்கள், வான்,வளி,நெருப்பு,நீர்,நிலம் இந்த எட்டு சக்திகளுடன் இறைவனும் சேரும்போது நவசக்திகளாய் மாறுகிறது.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த இந்த உயிருக்கு(நமக்கு) கை,கால்களை அசைத்து இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் (கதிரவன்)கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும்(திங்கள்) இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில்(வான்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.நல்ல காற்று(வளி) ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.

அந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

பித்துருக்கள்(தென்புலத்தார்)வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும்,அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அம்மாவாசை,சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு என்பார்கள்.

ஊருக்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு, என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள்.கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.

இப்படிப் பெரியவர்கள் சொன்னதைக் கடைப்பிடிப்பதில் நல்லதும், சில சங்கடங்களும் எனக்கு அவ்வப்போது வரும். ஊரிலிருந்து வந்து கொஞ்சம் களைப்பாய் படுத்து இருந்தேன் அவ்வளவுதான் பால்காரர் கோலம் இல்லை என்பதால் ஊரிலிருந்து வரவில்லை என்று பால் பாக்கெட் போடாமல் போய் விட்டார்.(கீழே திண்ணையில் கோலம் போடுவேன்) மேலே வந்து பார்க்க அவருக்கு அவ்வளவு சோம்பல். எளிதான வழி, கோலம் இருந்தால் நான் வந்து விட்டதாய் அர்த்தமாம். என்னசொலவது!

மார்கழி மாதம் வரும் முன் வாசலைச் சரி செய்ய வேண்டும். கல்,புல் எல்லாம் சுத்தம் செய்தல், பசுஞ்சாணம் கொண்டு வரச்சொல்லுதல் என்று நிறைய ஆயத்த வேலைகள் எல்லாம் முன்பு இருக்கும். மண் தரையில் கலர்க் கோலம் போட்டால் அடுத்தநாள் போட பழைய கோலத்தை முதல் நாளே அழித்து மறுநாளுக்குத் தயார் செய்வது, அடுத்த நாள் என்ன கோலம் போடுவது என்று சிந்தித்து அதற்குத் தயார் செய்வது என்று எவ்வளவு வேலைகள்! இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம். மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.

என் அம்மா பெரிய கோலங்கள் போடுவார்கள். தினம் செம்மண் இடவேண்டும். மார்கழி 30 நாளும் சிறப்பு என்பாதால் செமமண் இடவேண்டும் என்பார்கள் அம்மா. அளவாய் நீர்விட்டு கரைத்துக் கோலத்தில் ஓரம் -பூக்களுக்கு நடுவில் -என்று முதலில் செம்மண் இடப் பழுகுவதுதான் சிறுவயதில் பாடம். பின் தான் கோலம் எல்லாம். பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூ ,பீர்க்கம் பூ எல்லாம் வைப்பதும் எங்கள் வேலை. என் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கும் எனக்கும் யார் வீட்டில் அதிகப்பூ என்று போட்டாபோட்டியாக இருக்கும். அவளுடைய தாத்தா காலையில் அவர்வீட்டுப் பீர்க்கம் பந்தலிலிருந்து நிறைய பூ எனக்குப் பறித்துத் தருவார். இப்போது பூசணிப்பூ பீர்க்கை பூ கிடைக்கவில்லை. பசுஞ்சாணமும் கிடைப்பது இல்லை. அதனால் என்ன பூ கிடைக்கிறதோ அதை வைக்கிறேன், சும்மா கோலத்தின் மீது. பெண் குழந்தை இருந்தால் தினம் பூ வைக்க வேண்டும். சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள். பொங்கல் முடிந்தபின்னும் நாங்கள் அதில் விளையாடி இருக்கிறோம்.

கோலம் மனமகிழ்ச்சியை தரும்.இப்பொழுது பெரிய கோலங்கள் போட்டு கலர் கொடுப்பதுதெல்லாம் என்னால் முடிவது இல்லை.சின்ன சின்னக் கோலங்கள் தான். முன்பு என் அம்மா, தங்கை எல்லாம் புதுக் கோலங்களைக் கடிதத்தில் வரைந்து அனுப்புவார்கள்.

மாயவரத்தில் தேர் வரும் போது தேர்க் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமாய்க் கோலம் போடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி,மார்கழி மாதம் கோலம் போடும்போது அக் கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு ஒரு பாட்டு சொல்லுங்கள் என்று கேட்க, அந்நேரத்தில் உதிக்கும் சில சொற்றொடரைக் கோத்துச் சொல்வாராம் மகரிஷி. அவ்வாறு அவர் கூறிய பாடல்கள் , ‘’ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்று கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில் உள்ள கவிதைகள் நல் வாழ்விற்கான அறிவு விளக்கங்கள். நான் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்தபோது’ கிளிக் கோலம்’ ஒன்று போட்டு அதற்கு மகரிஷியின் கவிதை ஒன்று எழுதி என் பதிவை ஆரம்பித்து வைத்தேன். மே 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்தேன்.

அந்த பாடல்:

இயற்கை தரிசனம்
-----------------
எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.

என்பது தான்.

வாழ்க வளமுடன்!
----------------------------------