சனி, 4 அக்டோபர், 2025

பழங்கதை பேசி கொலு பார்த்தல்


என் தங்கை வீட்டுக் கொலு இந்த பதிவில் இடம் பெறுகிறது.
பழைய கால  பொம்மைகள்  இடம் பெறும் இந்த கொலுவில்.
நவராத்திரி விழா முடிந்தாலும் கொலு பதிவு தொடர்கிறது.
கருணை செய்வாய் கற்பகமே ! ;-  எங்கள் வீட்டு சரஸ்வதி பூஜை படங்கள் , மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் பதிவு.
 பழைய பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்


தெப்பக்குளத்தில் விளக்கு போடும் முன் 


விளக்கு போட்ட பின்

இரண்டு பக்க தட்டில் தாமரைகள் வரைந்தவர் தங்கை பேத்தி


"நான் தாமரை போடுகிறேன்" என்று தாமரை கோலப்பொடியில் போட்டு வண்ணம் கொடுக்கிறாள்

சென்னை மருந்தீஸ்வரர் கோயிலில் செப்டம்பர் 22ம் தேதி  நவராத்திரி விழாவில் ஆடினாள். அதை நாங்கள் எல்லாம் பார்க்கவில்லை அதனால்  அதை ஆடு என்று கேட்டோம் ஆடி காட்டினாள்.

மேலே அரிசி போட்ட கண்ணாடி குடுவை என்ன என்று தெரிகிறதா? அது  பழைய கால லாந்தர் விளக்கின் கண்ணாடி குடுவை. அதை கீழே ஒரு கிண்ணத்தில் வைத்து அதற்குள் அரிசையை நிரப்பி  அன்னபூரணியை மேலே வைத்து இருக்கிறாள்.


அமிர்தாஞ்சன் பாட்டில்களை சேகரித்து அதில் தானியங்களை நிரப்பி  வியாபாரம் செய்ய வைத்து இருக்கிறார் செட்டியார்


நல்ல கனமான அட்டை பெட்டிகளை டிரா மாதிரி செய்து இருக்கிறார்



கல்யாணத்திற்கு வந்த உறவுகளுக்கு  தாம்பூல பை இவை எல்லாம் உள்ளன் நூலில் செய்தவை. தேங்காய், வாழைபழம், குங்குமசிமிழ், வெற்றிலை பாக்கு எல்லாமே  உள்ளன் நூல்.


தேங்காய் பழ தட்டும் உள்ளன் நூலில் பின்னியது


உள்ளன் நூலிலும், ஓயரிலும் பின்னி இருக்கிறது 
தங்கையின் ஓர்படி பின்னியது, என் அம்மா பின்னியது எல்லாம் இருக்கும் தங்கை வீட்டு கொலுவில்.

கல்யாண செட்டில் மிஞ்சியது மாப்பிள்ளை, பெண் மட்டும், அவர்களை சுற்றி சுவரில் , நிலை வாசலில் அந்தக்காலத்தில் மாட்டி வைக்கும்  தாம்பூல தட்டுகளை வைத்து இருக்கிறாள் என் அம்மாவீட்டு கொலுபொமைகள்,  மற்றும் தங்கையின் ஓர்படி வீட்டு கொலு பொம்மைகளும் இந்த கொலுவில் இருக்கும்.

மேலே உள்ள கலச குடத்திற்கும், மாவிலையும்  உள்ளன் நூலால் பின்னி இருக்கிறார்கள். 


சந்திரலேகா டிரம் நடன பொம்மை, கல்யாண நலுங்கில் பெண், மாப்பிள்ளை உருட்டி விளையாடும் தேங்காய் வைத்து இருக்கிறாள் சின்ன உருளியில்,  கண்ணன் ராதா ஊஞ்சல்  முன்.

கண்ணன் நடுவில் கோபியர் சிறிமியர்

இந்த கண்ணணை சுற்றி நிற்கும் கோபியர் அழகு.   


தாம்பூல தட்டுக்கள் தான் வித விதமாக இருக்கிறது



தங்கையின் தோழி  மிஷினில் பின்னிய திரை சிலை  பீரோ போன்ற கொலு படி ஒரு பக்கம் இப்படி திரை சிலை ஒன்னொரு பக்கம் செயற்கை பூக்களால் அலங்கரித்து கதவு தெரியாமல் வைத்து இருக்கிறாள்.


என் அம்மா செட்டியார் முன் நவரத்தினகள் விற்பதாக அந்த காலத்தில் கவர் செய்து அதில்  கலர் பாசிகளை போட்டு ஒட்டி வைத்து இருப்பார்கள். அப்போது மின்னிய பாசிகள் வருடங்கள் ஆனதும் ஒளி இழந்து இருக்கிறது. தாயம் விளையாட காய்களில் பாசி பின்னி இருப்பார்கள் நான்கு காய்கள் இருக்கிறது பாருங்கள், ஒரு காய்க்கு பாசி பிய்ந்து போய் விட்டது. 

பச்சை கலரில் கால் மடித்து இருக்கும் செலுலாய்ட் பொம்மை நிறைய இருக்கும் அதை பூங்கா , வீட்டு வாசலில் வைப்போம், நிறைய இருந்தது, இப்போது ஒரு பொம்மை தான் இருக்கிறது. பீனாக்கா டூத் பேஸ்ட் வாங்கினால் பறவைகள், விலங்குகள் கொடுப்பார்கள், அதில் மிஞ்சியது வாத்து , பூனைதான். வாத்து தெப்பக்குளத்தில் போட்டு இருக்கிறாள்.

மாக்கல் ,மரசெப்பு எஞ்சியது தட்டில் உள்ளது. போன் இருக்கிறது.


கொலு பார்த்து விட்டு நாங்கள் மூன்று பேரும் அம்மாவின் நினைவுகளை பேசி மகிழ்ந்தோம். 


மதியம் கூட்டாஞ்சோறு , தயிர்சாதம், கொத்தமல்லி துவையல் , அப்பளம், வடகம் வறுத்து இருந்தாள் உறவுகளுடன் கதை பேசி கூட்டாஞ்சோறு உண்பது மகிழ்ச்சியாக இருந்தது.

பிறகு  மாலை பாடல்களை பாடி சுண்டல் வைத்து பூஜை செய்து கும்பிட்டோம் . தங்கை வீட்டில் குடி இருக்கும் பக்கத்து வீட்டு அம்மா கேசரி சூடாய் செய்து கொண்டு வந்தார்கள் 'இதையும் வைத்து கும்பிட்டு    கொடுங்க உங்கள் அக்கா  , தங்கைகளுக்கு' என்றார்கள்.  மகிழ்வாய் கொலு பார்த்து மாலை வீடு வந்து சேர்ந்தேன்.


தங்கை வீட்டு கொலு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.


2018 ல் போட்ட என் தங்கை கொலுவுக்கும் இப்போதும் பார்த்த கொலுவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நிறைய பொம்மைகள் உடைந்து விட்டது, கொஞ்சம் கோயிலுக்கு கொடுத்து விட்டாள். அம்மா, அக்கா  கைவேலைகள் நிறைய இருக்கும்  இப்போது பழைய வீட்டை இடித்து புதுசு செய்த போது கொலு பொம்மைகள்  பழுது பட்டு விட்டது.


பழைய நினைப்பில் விடமால் வைக்க வேண்டும் கொலு என்ற நினைவில் வைக்கிறாள்.

அன்றும், இன்றும் அவள் வீட்டு கொலு எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்.

பழைய பதிவில் தங்கை  வீட்டுக்கு அருகில் இருக்கும் செந்தில் ஆண்டவர் அனுமன் கோயிலை பல வருடங்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தது  தங்கை வீட்டுக்கு கொலுப்பார்க்க போன போது  கைகூடியது. தங்கை பெண் அழைத்து சென்றாள்.  இந்த கோயில் மதுரை சேதுபதி பள்ளி பேரூந்து நிறுத்தம் பக்கம் இருக்கிறது .புரட்டாசி சனிக்கிழமை அந்த கோயில் கொலுவையும் பார்த்து விடலாம் பழைய பதிவின் மூலம்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
 

14 கருத்துகள்:

  1. சிறப்பு. குழந்தை ஆடிக் காட்டியது அதன் உற்சாகத்தைக் காட்டுகிறது. அதேபோல ஒவ்வொரு பொருளும் நல்ல கறபனையுடன் தானே செய்திருப்பது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சிறப்பு. //

      நன்றி.

      //குழந்தை ஆடிக் காட்டியது அதன் உற்சாகத்தைக் காட்டுகிறது. அதேபோல ஒவ்வொரு பொருளும் நல்ல கறபனையுடன் தானே செய்திருப்பது நன்றாக இருக்கிறது.//

      நாமே கற்பனை திறனுடன் கொலுவுக்கு செய்து வைப்பது சிறந்தது தான் இல்லையா?

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. போன பதிவு

      போன பதிவு உங்களை நினைத்து கொண்டேன், தலைப்பை பார்த்தவுடன் பாடலை சொல்வீர்கள் என்று கருணை செய்வாய் கற்பகமே!

      https://mathysblog.blogspot.com/2025/10/blog-post.html

      நீக்கு
  2. அக்கா உங்கள் தங்கை வீட்டு கொலு சூப்பர். நல்ல பெரிதாகவும் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா உங்கள் தங்கை வீட்டு கொலு சூப்பர். நல்ல பெரிதாகவும் இருக்கு.//

      நன்றி

      நீக்கு
  3. தெப்பக்குளம் விளக்கு செட் ரொம்ப அழகாக இருக்குக்கா.

    தங்கை பேத்தி தாமரை வண்ணக் கோலம் அழகா போட்டிருக்காங்களே!!! நல்லாருக்குன்னு சொல்லிடுங்கக்கா குழந்தையிடம்.

    //சென்னை மருந்தீஸ்வரர் கோயிலில் செப்டம்பர் 22ம் தேதி நவராத்திரி விழாவில் ஆடினாள். அதை நாங்கள் எல்லாம் பார்க்கவில்லை அதனால் அதை ஆடு என்று கேட்டோம் ஆடி காட்டினாள்//

    ஓ சென்னைக்கு வந்து ஆடினாங்களா? நடனம் கற்பிக்கும் ஆசிரியர் குழுவாக வந்தாங்களோ ? சூப்பர் கோமதிக்கா

    கேட்டதும் ஆடிக் காட்டுவதும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தெப்பக்குளம் விளக்கு செட் ரொம்ப அழகாக இருக்குக்கா.//

      நன்றி

      //தங்கை பேத்தி தாமரை வண்ணக் கோலம் அழகா போட்டிருக்காங்களே!!! நல்லாருக்குன்னு சொல்லிடுங்கக்கா குழந்தையிடம்.//

      கண்டிப்பாய் சொல்கிறேன்



      //ஓ சென்னைக்கு வந்து ஆடினாங்களா? நடனம் கற்பிக்கும் ஆசிரியர் குழுவாக வந்தாங்களோ ? சூப்பர் கோமதிக்கா//

      அவள் சென்னையில் தான் இருக்கிறாள். நடனம் கற்பிக்கும் ஆசிரியர் அவர்களிடம் கற்கும் குழந்தைகளை எல்லாம் ஆட வைத்து இருக்கிறார்கள்.

      நவராத்திரி விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு வந்தவள் பெரிய பாட்டி வீட்டு கொலுவுக்கு வந்தாள். (இன்னொரு தங்கை பேத்தி)

      //கேட்டதும் ஆடிக் காட்டுவதும் சிறப்பு.//

      ஆமாம்.

      நீக்கு
  4. லாந்தர் விளக்கின் கண்ணாடிக்குள் அரிசியை நிரப்பி - தெரிகிறது அக்கா - அன்னபூரணியை அதன் மேல் வைத்தது நல்ல கற்பனை வளம்!

    அமிர்தாஞ்சன் பாட்டில்களின் புது உருவமும் நல்ல கற்பனை. நிறைய அழகா யோசிச்சு செய்திருக்காங்க.

    நல்ல கனமான அட்டை பெட்டிகளை டிரா மாதிரி செய்து இருக்கிறார்//

    அழகு. அட்டைப்பெட்டி என்றே தெரியலை ப்ளாஸ்டிக் ட்ரே போல இருக்கு

    உல்லன் நூலில் செய்தவையும் அட்டகாசம். கைத்திறன் கற்பனை செமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லாந்தர் விளக்கின் கண்ணாடிக்குள் அரிசியை நிரப்பி - தெரிகிறது அக்கா - அன்னபூரணியை அதன் மேல் வைத்தது நல்ல கற்பனை வளம்!

      அமிர்தாஞ்சன் பாட்டில்களின் புது உருவமும் நல்ல கற்பனை. நிறைய அழகா யோசிச்சு செய்திருக்காங்க.//

      ஆமாம், தங்கையின் ஓர்படி ஒன்றையும் வீணாக்க மாட்டார்கள் அத்தனை பொருட்களையும் ஏதாவது பயன் உள்ளதாக மாற்றி விடுவார்கள். ஏதாவது கைவேலை செய்து கொண்டே இருப்பார்கள்.

      //அட்டைப்பெட்டி என்றே தெரியலை ப்ளாஸ்டிக் ட்ரே போல இருக்கு//

      அட்டைப்பெட்டியை அது போல செய்து வண்ணம் கொடுத்து இருக்கிறார்கள் கீதா.

      //உல்லன் நூலில் செய்தவையும் அட்டகாசம். கைத்திறன் கற்பனை செமை.//

      என் அண்ணி வீட்டுக்கு கவேரி அம்மன் பூஜைக்கு இது போல செய்து கொடுத்தார்கள். அதை முன்பு போட்டு இருக்கிறேன் பதிவில் அது தட்டில் இருக்கும்.

      நீக்கு
  5. நானும் முன்னர் கொலு வைத்தப்ப, பெயின்ட் (ஃபேப்ரிக் பெயின்ட்) எல்லாம் தீருமே சின்ன சின்ன பாட்டில்கள் அதற்குள் செட்டியார் கடை சாமான்கள் போட்டு வைத்ததுண்டு. அது போல வாட்டர்கலர் பாக்ஸ் தீர்ந்ததும் அதங்க் குழிகளில் அரிசி வகை பருப்பு வகைகள் சாம்பிளுக்குக் கடையின் முன் வைப்பாங்க இல்லையா அப்படி நிரப்பி வைத்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் முன்னர் கொலு வைத்தப்ப, பெயின்ட் (ஃபேப்ரிக் பெயின்ட்) எல்லாம் தீருமே சின்ன சின்ன பாட்டில்கள் அதற்குள் செட்டியார் கடை சாமான்கள் போட்டு வைத்ததுண்டு. அது போல வாட்டர்கலர் பாக்ஸ் தீர்ந்ததும் அதங்க் குழிகளில் அரிசி வகை பருப்பு வகைகள் சாம்பிளுக்குக் கடையின் முன் வைப்பாங்க இல்லையா அப்படி நிரப்பி வைத்ததுண்டு.//

      உங்கள் கலைத்திறனும் அருமை. அதை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  6. ஆஹா! தேங்காய் உல்லன் நூலில் பின்னியதா...சான்சே இல்லை அக்கா அசாத்திய திறமை! ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு.

    //உள்ளன் நூலிலும், ஓயரிலும் பின்னி இருக்கிறது
    தங்கையின் ஓர்படி பின்னியது, என் அம்மா பின்னியது எல்லாம் இருக்கும் தங்கை வீட்டு கொலுவில்.//

    அட்டகாசமாக இருக்குக்கா. இத்தனையும் பராமரிக்கிறார்களே அதுவே பெரிய விஷயம்.

    வயரில் செய்தவை மெழுகில் செய்தது போன்று அத்தனை அழகாக இருக்கின்றன.

    சந்திரலேகா டிரம் நடன பொம்மை, கல்யாண நலுங்கில் பெண், மாப்பிள்ளை உருட்டி விளையாடும் தேங்காய் வைத்து இருக்கிறாள் சின்ன உருளியில், கண்ணன் ராதா ஊஞ்சல் முன்.//

    அழகாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஹா! தேங்காய் உல்லன் நூலில் பின்னியதா...சான்சே இல்லை அக்கா அசாத்திய திறமை! ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு.//

      ஆமாம், திறமை வாய்ந்தவர்கள் தான் அந்த அக்கா.

      //அட்டகாசமாக இருக்குக்கா. இத்தனையும் பராமரிக்கிறார்களே அதுவே பெரிய விஷயம்.

      வயரில் செய்தவை மெழுகில் செய்தது போன்று அத்தனை அழகாக இருக்கின்றன.//

      ஆமாம், அந்த கூடையில் மெழுகில் செய்தவையு இருக்கிறது. முருங்கை காய், பழங்கள், காரட் எல்லாம் மெழு கத்திரிக்காய்கள் பின்னியது.
      அனைத்தையும் ரசித்து குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. கண்ணன் - கோபியர், கண்ணன் - சிறுமியர் என்று விதம் விதமாக ...பழையகாலத்து பொம்மைகள்...கோபியர் பொம்மைகள் ரொம்ப நல்லாருக்கு.

    உங்கள் அம்மா பாக்கெட்டில் ரத்தினங்கள் போல பாசிகள் வைத்திருப்பது பழசாகியிருக்கு என்று தெரிகிறது என்றாலும சூப்பராக இருக்கு,.

    ஃபோன் எல்லாம் அப்போதைய நினைவுகள்...

    கூட்டாஞ்சோறா ஆஹா!!!!!! எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று அதுவும் திருநெல்வேலி ரெசிப்பிய மிஞ்ச முடியாது. நான் செய்வதுண்டு வீட்டில். நாட்டுக் காய்கள் மட்டும் போட்டு. கூட்டான்சோறு பெயருக்கு ஏற்ப கூடி இருந்து சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    உங்க தங்கை வீட்டுக் கொலு சூப்பர். வித்தியாசங்கள் வரத்தான் செய்யும் அக்கா. பொம்மைகள் பழசாகிப் போவதால்.

    எல்லாமே நன்றாக இருந்தன.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்ணன் - கோபியர், கண்ணன் - சிறுமியர் என்று விதம் விதமாக ...பழையகாலத்து பொம்மைகள்...கோபியர் பொம்மைகள் ரொம்ப நல்லாருக்கு.//

      ஆமாம், இப்போது வேறு மாதிரி இருக்கிறது கண்ணன் , கோபியர் பொம்மைகள்

      //உங்கள் அம்மா பாக்கெட்டில் ரத்தினங்கள் போல பாசிகள் வைத்திருப்பது பழசாகியிருக்கு என்று தெரிகிறது என்றாலும சூப்பராக இருக்கு,.//

      60 வருஷத்திற்கு முன்பு செய்தவை கீதா.

      //கூட்டாஞ்சோறா ஆஹா!!!!!! எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று அதுவும்

      திருநெல்வேலி ரெசிப்பிய மிஞ்ச முடியாது. நான் செய்வதுண்டு வீட்டில். நாட்டுக் காய்கள் மட்டும் போட்டு. கூட்டான்சோறு பெயருக்கு ஏற்ப கூடி இருந்து சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//

      திருநெல்வேலி பக்கம் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் கூட்டான் சோறு தான் செய்வார்கள் உற்வுகளுடன் கூடி சாப்பிடும் போது சுகம்தான்.

      //உங்க தங்கை வீட்டுக் கொலு சூப்பர். வித்தியாசங்கள் வரத்தான் செய்யும் அக்கா. பொம்மைகள் பழசாகிப் போவதால்.//

      இல்லை கீதா பழைய கொலுவில் உள்ள பொம்மைகள் இந்த கொலுவில் இடம்பெறவில்லை. பொம்மைகள் முன்பு நிறைய இருக்கும். அம்மா, அக்கா கைவேலைகள் நிறைய இருக்கும்.


      //எல்லாமே நன்றாக இருந்தன.//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் பல சொன்னதற்கு நன்றி நன்றி கீதா.

      நீக்கு