புதன், 19 ஜூலை, 2017

படம் சொல்லும் செய்திகள்

இன்று ஆடிக் கிருத்திகை என்று பழமுதிர்சோலைக்குப் 
போன போது கண்ட காட்சி.

மூடி இருக்கும் பாட்டிலில் உள்ள தண்ணீரைக்    குடிக்க முயலும் குரங்கு வெகு நேரம் போராடி  முடியாமல் கீழே போட்டு விட்டது. நான் போய் மூடியை திறந்து வைத்துவிட்டு  நகர்ந்தவுடன் வேகமாய் மரத்திலிருந்து இறங்கி மட மட என்று குடித்து விட்டது, பாவம் அதில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது அதனால் எங்களுக்கு  வைத்து இருந்த தண்ணீரைக் கொடுத்தவுடன்  வேக வேகமாய் ஓரே மூச்சாய் குடித்து விட்டது. தண்ணீர் தாகம்   தீர்க்க தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கலாம் மலையில். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிளாஸ்டிக் தொட்டி சின்னதாய் இரும்பு சங்கிலியில் மரத்தோடு இணைத்து கட்டி வைத்து இருந்தார்கள். அதில் தண்ணீர் இல்லை.


இன்னொரு குரங்கு காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தது
காருக்குள்ளே என்ன இருக்கு என்று பார்வை

போன மாதம் போன போது எடுத்த படம்  தாயும், சேயும்

குரங்கின் குட்டியானது தன்னுடைய  முயற்சியால் தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்கிறது, அதுபோல பக்தன் தன்னுடைய முயற்சியால் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வது 'மர்க்கட நியாயம்'   என்பார்கள். 

பிரதோஷத்தன்று கோவிலுக்குப்
போனபோது அங்கு ஒரு வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தைச் சுற்றி ஆசனங்கள் அமைத்து இருந்தார்கள் அதில் ஒரு பெண் குழந்தை செப்பு சாமான் வைத்து சமைத்து விளையாடுகிராள்.


இன்னொரு பக்கம் திண்ணை அமைத்து இருந்தார்கள். மாலை நேரம் வேப்பமரக் காற்று வாங்கிக் கொண்டு  திண்ணையில் இளைப்பாறலாம்.
என் அம்மாவின் கல்சட்டி ,  கல்சட்டியை  மூடி  வைக்கும் மரத்தட்டு
இப்போது தம்பி வீட்டில் கோலப்பொடி போடும் பாத்திரமாய்

கடைசியாக ஆசைப்பட்டு வாங்கிய வெள்ளைக் கல்லில் செய்த மருதமலை ஆட்டுக்கல், அம்மி  கோவையில் இருக்கும் போது வாங்கியது இப்போது மூலையில்- கிரைண்டர் வந்து விட்டதால்.
திருவெண்காடு கோவிலில் துவாரபாலகருக்கு அருகில் மின் விசிறியைப்
பார்த்தவுடன்
 எடுக்கத் தூண்டியது. (முருகன் சன்னதி)

கள்ளன் ஒளிந்திருக்கும் வாழைப்பூ - கிச்சன் கார்னர்


காணாமல் போன கனவுகள் என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜியின் செய்முறைப்படி செய்தேன்.  வாழைப்பூப் புட்டு. நான் துவரம்பருப்பும், கடலைப்பருப்பும் சேர்த்து  அரைத்தேன். தேங்காய்ப் பூ போட்டேன். இது தான் கொஞ்சம் மாறுதல்.

வேக வைக்கும் முன்
வெந்தபின்

புட்டு ரெடி.

பஞ்சு மிட்டாய்  பஞ்சு மிட்டாய்!
பால்கனியிலிருந்து  எடுத்த படம்

அன்பாய் தலைகோதி

'சாதம் வைத்து விட்டாயா , அம்மா'  என்று கேட்கும் காகம். (எங்கள் வீட்டு பால்கனி).

வாழ்க வளமுடன்.

27 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கிறது. தண்ணீருக்காக கஷ்டப்படும் வானரங்களின் படம் நெகிழவைத்தது. தண்ணீர் இன்மைக்கு மனிதர்கள்தானே மிகப்பெரிய காரணம், அதனால்தானே விலங்குகள் அல்லல் படுகின்றன. த.ம +1

    பதிலளிநீக்கு
  2. வாழைப்பூ புட்டு நல்லா வந்ததா?!

    பதிலளிநீக்கு
  3. காளகஸ்தில இதுமாதிரி ஒரு சீன் பார்த்தோம். அந்த குரங்கு பாட்டிலை சாய்ச்சு தண்ணிய கீழ சிந்தி நக்கி குடிச்சுட்டு.. மீண்டும் ஊத்தி குடிச்சது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    தண்ணீர் இன்மைக்கு மனிதர்கள் தான் காரணம் என்பது உண்மைதான்.
    உணரும் காலம் வந்து விட்டது.
    விலங்குகள், பறவைகள் படும் அவதி பார்க்க முடியவில்லை.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
    வாழைப்பூ புட்டு நல்லா வந்தது.
    நன்றாக இருந்தது.

    காளகஸ்தியிலும் வெயில் தானே!
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் கதை சொன்ன விதமும் அருமை
    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
  7. கோயில், வானரம் மற்றூம் பறவைகள் என
    எல்லாவற்றையும் தொகுத்து வண்ண மலர் மாலை போல அழகான படங்கள்..

    பிற உயிர்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் கெடுத்தவன் மனிதன் என்பது பளிச்.. என விளங்குகின்றது..

    எல்லா உயிர்களுக்கும் இறைவன் நல்லருள் பொழியட்டும்..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    தான் வாழ பிற உயிர்களின் உரிமையை , சுதந்திரத்தை பறித்தவன் மனிதன் என்பது உண்மையே!

    உங்கள் வாழ்த்து அருமை.
    எல்லா உயிர்களும் வாழ இறைவன் அருள் மழை பொழியட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நான் அலுவலகத்தில் பணியிலிருந்த போது ஒரு குரங்கு தண்ணீர் பாட்டிலைத் திறந்து இப்படித் தான் குடித்தது! பின்னர் எல்லாரையும் பார்த்து மிரண்ட அது, ஸ்டாம்ப் பாடில் கால் வைத்து அது போன இடமெல்லாம் காலடித் தடம்!! என் செல் ஃபோனில் படம் பிடித்தேன்!

    எல்லாப் படங்களும் கருத்துக்களோடு ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் அலுவலகத்திற்கும் வந்து விட்டதா?
    எங்கள் குடியிருப்பில் ஒருவர் வீட்டில் பொட்டுக்கடலை பாட்டிலை
    தூக்கி போய் திறந்து சாப்பிட்டது மொட்டை மாடியில்.
    ஆனால் இந்த குரங்கிற்கு பாட்டிலை ஏன்
    திறக்க முடியவில்லை என்று தெரியவில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  12. புகைப்படங்கள் அருமையாக, ரசனையுடன் இருந்தன.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. குரங்கின் தாகத்தைத் தணிக்க சமயோஜிதமாக உதவியுள்ளீர்கள். தாயும் சேயும் அழகு. படங்களும் பகிர்வுமாக அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  15. துவாரபாலகருக்கு மின் விசிறி என்றால்,கருவறை உள்ளே இருக்கும் முருகனுக்கு ஏ சி செய்து இருக்கணுமே :)

    பதிலளிநீக்கு
  16. உங்களுக்கு எவ்வளவு அன்பு பறவைகள்,பிராணிகள் மீது . அழகா படங்கள் எடுத்து பதிந்திருக்கீங்க. எனக்கும் ஊருக்கு போய் இப்படி செய்யனும் போல இருக்கு. இங்கு கொஞ்சம் இப்ப சில சிட்டுகள் பயமில்லாமல் அருகில் வாறாங்க. உணவு வைக்கலன்னா வந்து எட்டிபார்க்கிறாங்க. ஆனாலும் பயம்.
    தண்ணீர் குடிக்கும் குரங்கை பார்க்க பாவமா இருக்கு. அவ்வளவு தண்ணீர் தாகம் அதுக்கு. உண்மையில் நல்ல மனசு உங்களுக்கு அக்கா.அன்பான அக்கா..!
    புட்டு கேள்விபடல. வாழைப்பூ கிடைத்தால் செய்கிறேன் அக்கா. நல்லா இருக்கு பார்க்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    குரங்கு கீழே போட்டதை எடுக்காதே மேலே பாய்ந்து விட போகிறது என்றார்கள் சார், மெதுவாய் போய் பாட்டிலை திறந்து வைத்து விட்டு வேகமாய் காருக்கு வந்து விட்டேன்.
    அதில் கொஞ்சமாய் தண்ணீர் இருந்ததால் அதற்கு ஏமாற்றம். நான் கொடுத்தபின் அது குடித்த வேகத்தில் தெரிந்தது அதன் தாகம்.

    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
    முருகனுக்கு ஏசி இல்லை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
    அம்மு வெகு நாட்களுக்கு பின் என் வலைத்தளம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் இப்போது எங்கும் தண்ணீர் கஷ்டம் அம்மு. பற்வைகள், விலங்குகள் எல்லாம் அவதி படுகிறது மனிதர்கள் மாதிரி. மழையும் இல்லை.

    இங்கும் சிட்டுகள் மீண்டும் வர ஆறம்பித்து விட்டார்கள், அவர்கள் கூட்டை சரி செய்கிறார்கள்.

    புட்டு ராஜி பக்குவத்தில் செய்து பாருங்கள் சுவையாக இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பழனியில் ஒரு முறை என் மச்சினி கையில் ஒரு குளிர் பான பாட்டிலைத் திறக்காமல் வைத்திருந்தாள் எங்கிருந்தோ வந்தகுரங்கு அவள் கையில் இருந்து அதைப் பறித்து மூடியைத் திறந்து குடித்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    திறந்து குடிப்பதை பார்த்து இருக்கிறேன் நானும்.
    இந்த குரங்கு மட்டும் பின் பக்கத்தை ஏன் வாயில் கவிழ்த்து கொண்டது, மூடியை திறக்காமல் என்பது விளங்கவில்லை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பழமுதிர்சோலை வாலாவதாரம் எல்லாமே குறும்பு. நான் கூட முகநூலில் சில படங்கள் பகிர்ந்திருந்தேன். அதுபோல இந்த வாலாவதாரங்களும் சுவாரஸ்யம்.

    சமையல் பதிவையும் இதில் சேர்த்து விட்டீர்களா!

    எல்லாப் படங்களுமே சுவாரஸ்யம்.. சாதாரணமாய் காக்கைகள் கூடு கட்டியிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் போனால் மண்டையில் ஒன்று போடும். நான் முன்னர் வாங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் இப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்க மாலை நேரங்களில் அமரும்போது அருகில் காக்கைக் கூடு இருந்தும் ஏனோ என்னை அவைகள் ஒன்றும் செய்வதில்லை!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    குரங்காரின் குறும்புகள் நிறைய தான். ஓவ்வொரு முறையும் பார்க்கும் போது புதுமைதான்.

    ஆமாம் , சமையல் குறிப்பை தனி பதிவு போட சோம்பல்.
    பழகி விட்டால், பறவைகள், விலங்குகள் எல்லாம் நண்பர்கள் தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  24. எல்லாவற்றையும் சேர்த்து வண்ணக் கதம்பமாக ஆக்கி விட்டீர்களா? இதை நீங்க வாழைப்பூப் புட்டு என்று சொல்கிறீர்கள். நாங்க பருப்புசிலிக்கும் இப்படி வைப்போம். :) குரங்கின் தாகம் தணித்தது சரிதான் என்றாலும் உள்ளூரக் கொஞ்சம் பயமாவே இருக்கும் எனக்கு! கிட்டேப் போக மாட்டேன். இங்கே இருக்கையில் 2014 ஆம் வருஷம் வீட்டுக்குள்ளேயே குரங்கு வந்ததில் பயந்து போய்க் கொதிக்கும் எண்ணெயைக் கையில் கொட்டிக் கொண்டு ஒரு மாதம் அவதி! ஆகவே பால்கனிக்கும் கதவு போட்டு விட்டோம். ஜன்னல்களுக்கும் வலைக்கதவு! :) இங்கே எப்போ வேணாலும் வருகை தருவார்களே குரங்கார்கள்! :)

    பதிலளிநீக்கு
  25. துளசி: படங்களும் அது சொல்லும் செய்திகளும் அருமை. எல்லாவற்றையும் ரசித்தோம். எங்கள் வீட்டில் இப்போதும் அம்மியில் அரைப்பது உண்டு சிலவற்றிற்கு. உரல் இருக்கு ஆனால் கிரைண்டர் வந்துவிட்டதே!!

    கீதா: கோமதிக்கா அருமை நம்மவர் பாவம்! நீங்களும் அவருக்குத் தண்ணீர் கொடுத்து உதவியது மனது நெகிழ்ந்துவிட்டது!! பாவம் எல்லா விலங்குகளும் பறவைகளும்...அதுவும் இப்போது அடிக்கும் வெயிலில்..மனிதன் சுயநலவாதி என்பது பல சமயங்களில் உறுதியாகிறதுதான் இல்லையாக்கா..

    அம்மி உரல் கண்டால் இப்போதும் மனம் அடித்துக் கொள்ளும் வீட்டில் வாங்கிப் போட்டுவிடுவோமா என்று. ஆனால் ...அட்லீஸ்ட் அம்மியாவது வாங்கிப் போடணும் என்று நினைத்துக் கொள்வதுண்டு...

    வாழைப்பூ புட்டு என்று ராஜி போட்டிருந்ததை வாசித்தேன் அங்கும் கருத்து சொல்லியிருந்தேன் அதே தான் நாங்கள் இதனை உசிலி என்று சொல்வோம்...புட்டு என்று ஏன் இதைச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை...உதிர்த்துச் செய்வதால்??



    பதிலளிநீக்கு
  26. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    குரங்கு வீட்டுக்குள் தீடீர் என்று வருகை செய்தால் பயம் தான். பதிவு போட்டு இருந்தீர்கள் என்று நினைக்கிறேன், படித்த நினைவு.

    எடுத்த படங்களை பகிர ஒரு கதம்பம் ஆக்கீனேன்.
    ராஜி புட்டு என்று போட்டதால் நானும் அப்படியே போட்டு விட்டேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் துளசிதரன் கீதா, வாழ்க வளமுடன்.
    மின் சாதனம் அரைக்க , இடிக்க, பொடிக்க வந்தபின் அம்மி, ஆட்டுக்கல்,உரலை நாட மனம் வராது, உடலும் ஒத்துழைக்காது.

    விலங்குகள் இடத்தை நாம் ஆக்கரமித்துக் கொண்டு விட்டோம். அவை என்ன செய்யும்.தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வருகிறது.
    பழையக்காலத்து ஆசாமி வீட்டில் இருந்தால் அம்மியில் அரைத்தால்தான் துவையல் நன்றாக இருக்கும் என்பவர்களுக்காக அம்மி வீட்டிலிருந்தால் நல்லது.
    திருநெல்வேலி பக்கம், வாழைக்காய் புட்டு, உருளைபுட்டு என்று சொல்வார்கள். அது போல் உதிர்த்து செய்வதால் வாழைப்பூ புட்டு என்று சொல்லி இருப்பார்.

    உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு