திங்கள், 5 ஜூன், 2017

ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதி

பிள்ளைப் பருவம் விளையாடிக் களிக்கும் பருவம் . காலை முதல்  இரவு  தூங்கப் போகும் வரை விளையாட விரும்பும் பருவம். பாரதியார் மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் எல்லா நேரமும் விளையாடத் தோன்றும் பிள்ளைப் பருவத்தில்.

என் இளமைப் பருவத்தில்   சந்தோஷமாய் விளையாடிக் கொண்டு இருக்கும்போது அம்மா கூப்பிட்டால் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் வருவேன். இவ்வளவு நேரம் விளையாடினாய் சிரித்துக் கொண்டு -வீட்டுக்குள் வரும்போது  ஏன் இப்படி  என்று திட்டுவார்கள்.

எத்தனை எத்தனை விளையாட்டு ! ஆற்றோரம் மணல் எடுத்து அழகு அழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடி வளர்த்து என்ற பாட்டில் மணல் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்லி இருப்பார்கள்.
ஆற்று மணலை இப்போதும் வீடு கட்ட  அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - நிஜ வீடு கட்ட.

நான் போகும் இடம் எல்லாம் குழந்தைகள் விளையாடுவதை ரசிப்பேன்.


டயர் வண்டி,  ஓட்டும் கிராமத்துக்குழந்தைகள் (குத்துக்கல் வலசை என்ற ஊரில் எடுத்த படம்.)


சகோதரியின் பேரனும்  அவன் நண்பனும் விஷ்ணு சக்கரம் கையில் சூழல்வதாய் விளையாட்டு
வீடு கட்டக் கொட்டி வைத்து இருக்கும் மணலில் மலை கட்டி அதில் ஏறிச் செடியை நட்டு வைத்து மகிழும் குழந்தைகள்.

இன்று "குழந்தைகளை மரம் நட வைக்க வேண்டும் அதைப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் மரத்தை வெட்டும்போது அவர்கள் வெட்டக் கூடாது என்பார்கள்' என்றார்கள், தொலைக்காட்சியில்.   மரத்தின் நன்மைகளைக்  குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்றார்கள்.

பிஞ்சுக் கைகளால் செடி , மரம் நட வைத்து அவர்களே தண்ணீர்  ஊற்ற வைத்து துளிர்ப்பதை, மொட்டுவிடுவதை, மலர்வதை எல்லாம் ரசிக்க வைக்கலாம்,.

நாங்கள் படிக்கும் போது பள்ளி விட்ட பின் பள்ளித் தோட்டத்திற்குத் தண்ணீர் விடும் பொறுப்பு உண்டு.  குழுவாய்ப் பிரித்து இருப்பார்கள், தோட்டவேலை , கரும்பலகைக்கு  ஊமத்தை இலையும், அடுப்புக் கரியும் அரைத்து பூசுதல், மண்பானையில் தண்ணீர் எடுத்துவைத்தல்  எல்லாம் செய்வோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோரு குழு செய்யும்.
கழுகுமலை ஊரில் தேரடித் தெருவில் குழந்தைகளின்  பம்பர விளையாட்டு


கலர் கலராய் அழகாய் மரத்தால் செய்த பம்பரங்கள்  முன்பு    இப்போது  பிளாஸ்டிக்  பம்பரம்.
குத்து வாங்காத பம்பரம் இருக்காது, அபீட் எடுத்தால் தான் பம்பரம் விடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தப் பையனை சுற்றி நின்று பார்க்கப் பார்வையாளர் கூட்டம் இருக்கும்.
அபீட்
டாஸ் போட்டுப் பார்க்கிறார்கள் யார் முதலில்   விளையாடுவது என்று. பெரியவர்கள் விளையாட்டுக்கு ஈடாக விளையாடுகிறார்கள். நிழல் தேடி இவர்கள் விளையாட்டு இடம்பெயர்ந்து கொண்டெ இருக்கும். பெற்றோர்கள் கட்டளை வெயிலில் விளையாட கூடாது என்று. வெயிலில் விளையாடினால் டீ விட்டமின் கிடைக்கும். "வெயிலோடு விளையாடி வெயிலோடு விளையாடி " பாடல் நினைவுக்கு வருதா?

அடிக்கும் வெயில் எல்லாம் உங்கள் தலையில் தான் என்று அம்மா சொல்வது காதில் கேட்குது.
வெயில், மழை, எல்லாம் தெரியாது அடுத்து என்ன விளையாடலாம் என்ற நினைப்பு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பால்கனி அருகில் நின்று குழந்தைகள் தன் சகாக்களை விளையாட அழைப்பதே பார்க்கப் பரவசமாய் இருக்கிருது..


மழையில் தான் நனைய விட மாட்டேன் என்கிறார்கள், மழை தண்ணீரிலாவது விளையாடுவோம். என்று மழைத்தண்ணீரில் விளையாடும் குழந்தைகள். முன்பு முற்றத்தில்  விழும் தண்ணீரை அண்டாக்களில் பிடித்து வைப்பார்கள் அதில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்வோம். அம்மா கத்திக் கப்பல் செய்து  தருவார்கள்.
.
தாத்தாவும் பேரனும் மரவீடு செய்து விளையாடுகிறார்கள்.

வித விதமாய்க்  கட்டடங்கள்  கட்டி விளையாடுகிறான்  பேரன்

அவன் வைத்து இருக்கும் விலங்குகள்   பண்ணையில் அவைகளுக்கு உணவு அளிக்கிறான்.


பக்கத்தில் உள்ள  கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது அதில் குழந்தைகள் விளையாட கார், கொடைராட்டினம் எல்லாம்  இருந்தது.  பெரிய பெரிய தீம் பார்க்கில்  மின்சாரத்தில் சுற்றுவதில் சுற்றினாலும் பழமையை நினைவூட்ட இது போன்ற கையால் சுற்றும்  விளையாட்டு சாதனங்களும் மறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள் இன்னும் இரண்டு  குழந்தைகள் வரட்டும்.

கொடை ராட்டினம், கார் விளையாட்டு எல்லாம் விடியோ எடுத்தேன் ஆனால் இங்கு பகிர்ந்தால் சிலருக்குத் தெரிகிறது, சிலர் தெரியவில்லை என்கிறார்கள்.


எங்கள் குடியிருப்புப் பகுதியில் காலை முதல் இரவுவரை  குழந்தைகள் விளையாடும் உற்சாகக் கூக்குரல் கேட்கிறது . இந்தக் கால குழந்தைகள்  விளையாடுவது  இல்லை  எப்போதும்  வீடியோ கேம்,  ஐபேட்,  செல்போன் கேம் தான்  விளையாடுகிறார்கள் என்பது மறைந்து குழந்தைகளை விளையாட வைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. உடலின் உறுதி செய்வது விளையாட்டு தானே!

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல்உதவி செய்யும் குணம், எல்லாம் தானாக வரும். நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.

பள்ளி விடுமுறை முடிந்ததும் இருக்கவே இருக்கிறது  வீட்டுப்பாடம்.

காலமிது காலமிது  விளையாடு  கண்ணே, காலமிதைத் தவறவிட்டால் கிடைக்காது இது போல் பொன்னாள். 

ஓடி விளையாடு பாப்பா   முன்பு எழுதிய  பழைய பதிவைப் படிக்கலாம் முன்பு விளையாடிய விளையாட்டுகளின் பேர் எல்லாம் இருக்கும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைப்புலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு, கால்களுக்கு நல்ல பயிற்சி தரும். பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

துள்ளித் திரிந்த காலம் நினைவுக்கு வருகிறதா?



                                                                வாழ்க வளமுடன்.


46 கருத்துகள்:

  1. படங்களும், பதிவும், சொல்லியுள்ள ஒவ்வொரு விஷயங்களும் அருமையோ அருமை.

    நம் குழந்தைப் பருவங்களை இவ்வாறெல்லாம்தான் நினைத்துப் பார்த்து மகிழ வேண்டியதாக உள்ளது.

    இந்தக்காலக் குழந்தைகள் பெற்றுள்ள நவீன வசதிகள் பல இருப்பினும், அவர்கள் இழந்துள்ளவைகளும் ஏராளம் ... ஏராளம்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //இன்று "குழந்தைகளை மரம் நட வைக்க வேண்டும் அதைப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் மரத்தை வெட்டும்போது அவர்கள் வெட்டக் கூடாது என்பார்கள்' என்றார்கள், தொலைக்காட்சியில். மரத்தின் நன்மைகளைக் குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்றார்கள். பிஞ்சுக் கைகளால் செடி , மரம் நட வைத்து அவர்களே தண்ணீர் தண்ணீர் ஊற்ற வைத்து துளிர்ப்பதை, மொட்டுவிடுவதை, மலர்வதை எல்லாம் ரசிக்க வைக்கலாம்//

    இது மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மட்டுமே மிக நல்லதொரு முயற்சியாக இருக்கவும் முடியும். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. விளையாட்டாய் ஒரு பதிவு!!! விளையாடும் குழந்தைகளை பார்த்தால் பொறாமையாய்த்தான் இருக்கிறது. நாமெல்லோரும் அந்தக் காலத்தில் விளையாடியது போல இந்தக் கால குழந்தைகளுக்கு விளையாட பொழுதில்லை, இடமில்லை, வாய்ப்பில்லை, சமயமில்லை!

    நானும் கூட சமீப காலமாய் வெவ்வேறு வயதில் சிறுவர்களும், வாலிபர்களும் தோளில் கைபோட்டுக் கொண்டு நடப்பதை பார்த்து இலேசாக ஏங்கியிருக்கிறேன். அந்தக் காலம் நினைவுக்கு வந்தது!

    அழகிய படங்கள். தம வழக்கம்போல +1

    பதிலளிநீக்கு
  4. இழப்புகளின் ஆதங்கத்தை அழகிய படங்களுடன் சொன்னவிதம் அருமை சகோ
    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
  5. அழகான நினைவுகள் கோமதி அக்கா. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விளையாட்டு.. படங்கள் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. இப்பவும் கிராமங்களில் வளரும் குழந்தைகள் இவற்றை ரசித்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள்தான்.. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காது.. சிற்றி வாழ்க்கையில் ஒரு சுகம் எனில் கிராம வாழ்க்கையில் ஒரு சுகம்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் புளொக் எனக்கு ஒழுங்காக படிக்க விடுவதே இல்லை.. ஆடிக்கொண்டே இருக்கும், மிகவும் கஸ்டப்பட்டே படித்து முடித்து விடுவேன்.

    சின்ன வயதில் எனக்கு பிளேன் ரீ, நிறைய சாயம் நிறைய சீனி போட்டது பிடிக்கும். மில்க் ரீ பிடிக்காது. பின்னேரங்களில் பயங்கரமாக ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருப்போம்..

    அப்போ அம்மா பிளேன் ரீ யை ஊத்தி நன்கு ஆத்தி விட்டுக் கூப்பிடுவா.. அப்படியே வேர்வை வழிய வழிய ஓடிவந்து மடமட வெனக் குடிக்கும்போது தேனாமிர்தமாக இருக்கும்.. அது. இப்போ நினைத்தாலும் வாய் இனிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. எனது பால்ய நினைவுகளை
    மீண்டும் பசுமையாக்கிப் போனது
    தங்களின் அற்புதமானப் படங்களுடன்
    கூடிய இந்தப் பதிவு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கலியபெருமாள் புதுச்சேரி has left a new comment on your post "ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதி":

    நம் குழந்தைகளை தைரியமாக விளையாட அனுப்ப முடியவில்லையே இன்று...நம்மைச் சுற்றி காமவெறி பிடித்த வெறிநாய்கள் அலைகின்றனவே.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //நம் குழந்தைப் பருவங்களை இவ்வாறெல்லாம்தான் நினைத்துப் பார்த்து மகிழ வேண்டியதாக உள்ளது.

    இந்தக்காலக் குழந்தைகள் பெற்றுள்ள நவீன வசதிகள் பல இருப்பினும், அவர்கள் இழந்துள்ளவைகளும் ஏராளம் ... ஏராளம்.//

    உண்மைதான் சார், குழந்தைகள் விளையாடும் போதும் அவர்கள் அம்மாக்கள் விளையாடியது போதும்
    வா என்று கூப்பிடும் போதும் என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வருது.

    அவர்கள் இழப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களிடம் பெற்றோர்களிடம் பெற்றது ஏராளம்.
    நாம் ஒரு விளையாட்டு சாமான் வாங்க கெஞ்சி, கொஞ்சி வாங்க வேண்டும் , இப்போது அளவில்லாமல் கிடைக்கிறது குழந்தைகளுக்கு. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வாங்கி தருகிறார்கள்.

    //இது மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மட்டுமே மிக நல்லதொரு முயற்சியாக இருக்கவும் முடியும். பகிர்வுக்கு நன்றிகள்//

    குழந்தைகள் செடி, மரம் வைக்கும் முயற்சி வெற்றி பெற்றால் நாடு சோலைவனமாய் மாறி விடும்.
    பசுமை எங்ககும் ஆட்சி செய்யும்.

    சத்தமில்லாமல் நிறைய பேர் மரம் நட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சேவை பாராட்டப்பட வேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.




    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //இந்தக் கால குழந்தைகளுக்கு விளையாட பொழுதில்லை, இடமில்லை, வாய்ப்பில்லை, சமயமில்லை!//

    நீங்கள் சொல்வது போல் பாடசுமையால் விளையாட பொழுதில்லை என்பது உண்மைதான். விடுமுறை நாளும் பெற்றோற்கள் கோடை வகுப்புகளில் போட்டு விடுகிறார்கள். அதையெல்லாம் தாண்டி குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது.
    பழைய பதிவை நீங்கள் படித்து பார்த்து இருக்கலாம். அம்மா பாடும் பாண்டி பாடல் இருக்கிறது.



    உங்கள் அந்தக் காலம் நினைவு வந்தது மகிழ்ச்சி.
    கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
    குழந்தைகள் விளையாடுவதைப்பார்த்ததும் இப்போதும் பழைய விளையாட்டுக்கள் விளையாடுகிறார்கள் என்பதை பதிவாக்கினேன்.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விளையாட்டு.. படங்கள் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. இப்பவும் கிராமங்களில் வளரும் குழந்தைகள் இவற்றை ரசித்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள்தான்.. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காது.. சிற்றி வாழ்க்கையில் ஒரு சுகம் எனில் கிராம வாழ்க்கையில் ஒரு சுகம்.//

    நீங்கள் சொல்வது உண்மைதான் அதிரா, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காது. வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அக்கம் பக்கம் குழந்தைகளுடன் விளையாட முடியவில்லை. விடுமுறை நாளில் நட்புகளின் குழந்தைகள் வரும் போதுதான் விளையாட்டு. அவர்கள் தனியாக விளையாட வேண்டி
    உள்ளது.

    இங்கும்,கிராம குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் நகர குழந்தைகளுக்கு இல்லை.


    //உங்கள் புளொக் எனக்கு ஒழுங்காக படிக்க விடுவதே இல்லை.. ஆடிக்கொண்டே இருக்கும், மிகவும் கஸ்டப்பட்டே படித்து முடித்து விடுவேன்.//

    என் புளொக்குடன் ஓடிபிடித்து விளையாடி படித்து விடுகிறீர்கள் வெற்றிகரமாய் நன்றி.

    //சின்ன வயதில் எனக்கு பிளேன் ரீ, நிறைய சாயம் நிறைய சீனி போட்டது பிடிக்கும். மில்க் ரீ பிடிக்காது. பின்னேரங்களில் பயங்கரமாக ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருப்போம்..

    அப்போ அம்மா பிளேன் ரீ யை ஊத்தி நன்கு ஆத்தி விட்டுக் கூப்பிடுவா.. அப்படியே வேர்வை வழிய வழிய ஓடிவந்து மடமட வெனக் குடிக்கும்போது தேனாமிர்தமாக இருக்கும்.. அது. இப்போ நினைத்தாலும் வாய் இனிக்கிறது.//

    பழைய நினைவுகள் இனிமையானது என்று இதிலிருந்து தெரிகிறது அதிரா. அருமையான நினைவலை.

    உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.

    //எனது பால்ய நினைவுகளை
    மீண்டும் பசுமையாக்கிப் போனது
    தங்களின் அற்புதமானப் படங்களுடன்
    கூடிய இந்தப் பதிவு//

    உங்கள் பால்ய நினைவுகள் மீண்டும் பசுமையாக நினைவில் வந்ததா?
    மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. //கலியபெருமாள் புதுச்சேரி has left a new comment on your post "ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதி":

    நம் குழந்தைகளை தைரியமாக விளையாட அனுப்ப முடியவில்லையே இன்று...நம்மைச் சுற்றி காமவெறி பிடித்த வெறிநாய்கள் அலைகின்றனவே. //

    வணக்கம் கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்தை படித்து விட்டு பப்ளிஷ் செய்ய மறந்து விட்டதால்

    The comment doesn't exist or no longer exists. என்று வந்து விட்டது மன்னிக்கவும் .

    என்ன செய்வது ஒரு சிலர் செய்யும் தப்பால் குழந்தைகளை விளையாட விடுவது பயமாய் இருக்கிறது. இந்த நிலை கவலை அளிக்கிறது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பல இனிய நினைவுகள் மனதில் வந்து போனது...

    காணொளிகளை முதலில் youtube-ல் ஏற்றி விட்டு, அதன் இணைப்பை இங்கு சேருங்கள்...

    விளக்கமாக : http://www.tamilvaasi.com/2013/04/blog-tips-tamil-part-eight-8.html

    பதிலளிநீக்கு
  16. தெருவில் விளையாடுகிற பிள்ளைகளைக்காண்பது அரிதாகிவிட்டது சகோதரியாரே
    சிறு வயது நினைவுகள் மனதில் வலம்வருகின்றன

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    //காணொளிகளை முதலில் youtube-ல் ஏற்றி விட்டு, அதன் இணைப்பை இங்கு சேருங்கள்...//

    நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன் . நீங்கள் கொடுத்த லிங்கைப் பார்க்கிறேன்.
    உங்கள் கருத்துக்கும், உதவிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    //தெருவில் விளையாடுகிற பிள்ளைகளைக்காண்பது அரிதாகிவிட்டது சகோதரியாரே
    சிறு வயது நினைவுகள் மனதில் வலம்வருகின்றன//


    உண்மைதான் கிராமத்துகுழந்தைகள் தெருவில் விளையாடுகிறார்கள், நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் அடுக்கு மாடி வளாகத்தில் தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. படிக்கவேண்டிய பதிவு மட்டுமல்ல. பாதுகாத்து வைக்கப்படவேண்டியதும்கூட. அந்த நாள்கள் நினைவிற்கு வந்துவிட்டன. படித்துக்கொண்டிருக்கும்போதே வெளியில் ஓடி விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  20. //ஆற்று மணலை இப்போதும் வீடு கட்ட அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - நிஜ வீடு கட்ட.//
    சுடும் உண்மை :(

    //சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்
    //
    உண்மையான வார்த்தைகள் அக்கா .இப்போல்லாம் அந்த செயலை காண்பதரிது .
    நானும் பம்பரம் கில்லி அஞ்சாங்கல் எல்லாம் விளையாடியிருக்கோம் .மரக்கட்டை பம்பரம் தான் ஒவ்வொரு சைசில் இருக்கும் ..காத்தாடி மட்டும் விட வில்லை :) பாண்டி ஏரோபிளேன் பாண்டி விளையாடியிருக்கோம் .ஏறாத மரமில்லை :)
    குட்டி பானையில் கூட்டாஞ்சோறும் செஞ்சிருக்கோம் ஓடி ஆடி விளையாடிய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  21. அப்படியே 30 வருடத்துக்கு முன்னால் அழைத்துச் சென்றுவிட்டீர்கள். மீள முடியவில்லை

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

    //படிக்கவேண்டிய பதிவு மட்டுமல்ல. பாதுகாத்து வைக்கப்படவேண்டியதும்கூட. அந்த நாள்கள் நினைவிற்கு வந்துவிட்டன. படித்துக்கொண்டிருக்கும்போதே வெளியில் ஓடி விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. //

    உற்சாகம் தரும் பின்னூட்டம்.
    எவ்வளவு விளையாட்டுக்கள் ! பேரனுடன் விளையாடலாம் சார். குழந்தைகளுக்கு பல விளையாட்டுக்களை சொல்லித்தரலாம். அவர்களுக்கு பிடித்து இருந்தால் விளையாடலாம்.
    என் பேரனுடன் சங்கு, சக்கரம் இந்து, நாகம் பால், ஒத்தையா, இரட்டையா? பல்லாங்குழி, ஏழாம் கல்
    பிஸ்கட் பிஸ்கட் ஜம் பிஸ்கட் எல்லாம் விளையாடுவேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.

    //உண்மையான வார்த்தைகள் அக்கா .இப்போல்லாம் அந்த செயலை காண்பதரிது .
    நானும் பம்பரம் கில்லி அஞ்சாங்கல் எல்லாம் விளையாடியிருக்கோம் .மரக்கட்டை பம்பரம் தான் ஒவ்வொரு சைசில் இருக்கும் ..காத்தாடி மட்டும் விட வில்லை :) பாண்டி ஏரோபிளேன் பாண்டி விளையாடியிருக்கோம் .ஏறாத மரமில்லை :)
    குட்டி பானையில் கூட்டாஞ்சோறும் செஞ்சிருக்கோம் ஓடி ஆடி விளையாடிய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள் அக்கா //


    அருமையான நினைவலைகள்.
    நானும் ,என் குழந்தைகளும் இந்த விளையாட்டு எல்லாம் விளையாடி இருக்கிறோம்.
    என் பேரன் கற்பனையாக சமைத்து தர அதை சாப்பிடுவேன் இன்பமாய்.
    நினைவுகள் இனிமை.
    அருமையான கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  24. உங்க குட்டி பேரன் சின்ன சொப்பு பாத்திரத்தட்டுகளில் பொம்மை விலங்குகளுக்கு நீர் உணவு வைக்கும் படம் மற்றும் அவனது அன்பு சிந்தனை குணம் அப்படியே உங்களை உரித்து வைத்திருக்கிறான் அக்கா

    பதிலளிநீக்கு
  25. ஏஞ்சலின் வாழ்க வளமுடன். மீண்டும் வந்து பேரனைப் பற்றி சொன்ன
    கருத்துக்கு நன்றி.

    அந்த விலங்குகள் பள்ளி போகும், பாடம் படிக்கும் திரும்பி வந்து கொஞ்சம் தூங்கும், அப்புறம் அவன் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடும். கற்பனை விளையாட்டில் நம்மையும் சேர்த்துக் கொள்வான்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சிவக்குமாரன் வாழ்க வளமுடன்.
    பழைய நினைவுகள் வந்து விட்டதா மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  27. ஆடிக்களைத்து வீட்டுக்கு வந்து தூங்கி விடுவேன் இரவு உணவுக்கு எழுப்பினால் உடனே எழுந்து பலீஞ் சடுகுடு என்று ஆடத்துவங்கி விடுவேன்

    பதிலளிநீக்கு
  28. நான் கூட நம்முடைய இளைமை கால விளையாட்டுகளை பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.


    //ஆடிக்களைத்து வீட்டுக்கு வந்து தூங்கி விடுவேன் இரவு உணவுக்கு எழுப்பினால் உடனே எழுந்து பலீஞ் சடுகுடு என்று ஆடத்துவங்கி விடுவேன்//

    தூக்கத்திலிருந்து எழுப்பினாலும் விளையாட்டு நினைவு !அருமையான மலரும் நினைவு.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.

    //நான் கூட நம்முடைய இளைமை கால விளையாட்டுகளை பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சுவாரஸ்யமான பதிவு//

    எழுங்கள் உங்கள் பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. >>> ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம், குலை குலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்தி வா.. என்று பாட்டுப் பாடி <<<

    மாலை முழுதும் விளையாட்டு என்றிருந்த காலம் எப்படிக் காணாமற்போயிற்று?..
    அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போயினவே!..

    பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டால் மனதை ஏதோ அழுத்துகின்றது..

    நல்லதொரு பதிவுக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    //மாலை முழுதும் விளையாட்டு என்றிருந்த காலம் எப்படிக் காணாமற்போயிற்று?..
    அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போயினவே!..

    பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டால் மனதை ஏதோ அழுத்துகின்றது..//

    முன்பு அளவு விலளையாடவில்லை என்றாலும் இப்போதும் குழந்தைகள் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நனறி.

    பதிலளிநீக்கு
  33. இப்போது எல்லாம் பிளே ஸ்கூலில் சேர்த்து விடுகிறார்கள் குழந்தைகளை. நம்கூட விளையாட நேரம் எங்கே கிடைக்கிறது. பழைய நினைவுகளை நினைத்து மகிழும்படியாக ஆகிவிட்டது. கிடைக்கும் சிறிய நேரங்களிலும் அவர்களைப் பார்த்து மனமகிழும்படியாக ஆகிவிட்டது. உங்கள் பதிவு மிக்க நன்றாக உள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் குழந்தைகளை விடுமுறையில் நிறைய சிறப்பு வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள்,
    விளையாட நேரம் இல்லைதான். பள்ளி திறந்து விட்டது இங்கு எங்க்கள் வளாகத்தில் இப்போது அமைதியாக இருக்கிறது. பழைய நினைவுகள் மனமகிழ்ச்சியை தருகிறது என்பது உண்மையே!
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  35. நவீனம் எல்லாவற்றையுமாய் விழுங்கி விட்டது/

    பதிலளிநீக்கு
  36. பார்க்கவும், வாசிக்கவும், நினைக்கவும் ....தெவிட்டாத பதிவு...


    படங்களும்,,வரிகளும் அற்புதம் அம்மா...

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான். நவீனம் எல்லாவற்றையும் விழுங்கிதான் விட்டது.
    கிராமத்து குழந்தைகள் பழைய விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. ஆஹா. அந்த நாட்களை மறக்க முடியுமா? எத்தனை எத்தனை விளையாட்டுகள்! அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  40. முதலாம் பாகம் முன்னரே ரசித்து வாசித்திருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    ஆமாம் , எத்தனை எத்தனை விளையாட்டு! எவ்வளவு

    விளையாடினாலும் அலுக்காத விளையாட்டு.
    முதல் பாகம் பின்னூட்டங்கள் மறக்க முடியுமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வெளியே போய் விளையாடியதெல்லாம் பாட்டி வீட்டிற்கு விடுமுறையில் போனப்போ தான். இங்கே அப்பா கண்டிப்பு என்பதால் வெளியே போய் என்ன வீட்டுக்குள்ளேயே விளையாட முடியாது. அப்படியே விளையாடினாலும் தாயம், பரமபதம் மட்டுமே! :) என்றாலும் கல்லாட்டம், பாண்டி ஆட்டம், சீட்டுக்கட்டில் செட் சேர்ப்பது, ட்ரேட் போன்றவைகள் மாமா, சித்தி, பெரியம்மா குழந்தைகளுடன் பாட்டி வீட்டில் விளையாடி இருக்கேன். சொட்டாங்கல் தூக்கிப் போட்டுப் பிடிப்பது முதலில் சரியாக வரலை! அப்புறமாக் கற்றுக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    நேரம் கிடைக்கும் போது அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
    உங்கள் விளையாட்டு அனுபவங்களை(மலரும் நினைவுகள்) பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    சொட்டாங்கல் இப்போதும் சேகரித்து வைத்து இருக்கிறேன், குழந்தைகள் வீட்டுக்கு வந்தால் இங்க்த விளையாட்டு தெரியுமா? விளையாடி பார்க்கிறீர்களா என்று விளையாட வைத்து ம்கிழ்வேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  44. துள்ளித் திரிந்த காலத்தை மலரும் நினைவுகளை நன்றாகவே தூண்டி விட்டது தங்கள் பதிவு...

    கீதா: இப்போதான் அக்கா தங்கள் பதிவுகளை எல்லாம் வாசிக்கின்றோம். நானும் சிறிய வயதில் டயர், கோலி, கிட்டிம்புல் பாண்டி, சொட்டாங்கல், சோழி, பல்லாங்குழி, ஐஸ்ஃபை என்று பல விளையாட்டுகள் விளையாடிய நினைவுகள்...கவுண் எறிதல் கூட...அருமையான பதிவு அக்கா...ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வாசித்து கருத்து சொல்லுங்கள்.
    பதிவை ரசித்து கருத்து சொன்னத்ற்கும், உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு