திங்கள், 29 ஏப்ரல், 2019

ஜன்னல் வழியே


முதுகு காட்டி நின்றாலும் தலை திருப்பி  என்ன பார்வை!

ஜன்னல் வழியே என்ற என் முகநூல் பதிவை   சேமிப்பாய் இங்கு.
 இந்த முறை புல் புல் பறவைகள் .







இதுதான் பொம்மி  நைட்டியா?

சாப்பிட வராமல் அங்கு என்ன நைட்டி ஆராய்ச்சி ?

பிஸ்கட் கொஞ்சம் தான் இருக்கிறது வாங்களேன் !





நீ சாப்பிடு , நான்  வேறு யாரும் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.

இன்னொரு நாள் எடுத்த படங்கள்:- 

மக்காசோள ரவை உப்புமா "இது குஞ்சுகளுக்கு ஒத்துக் கொள்ளுமா ?" என்ற யோசனை

பார்ப்போம்  சாப்பிட்டுப் பார்த்தால் தானே பிடிக்குமா, பிடிக்காதா, ஒத்துக் கொள்ளுமா, ஒத்துக் கொள்ளாதா என்று தெரியும் .

எங்க குழந்தைக்கு எடுத்து போகிறேன். வாழ்த்துங்கள் எங்கள் குழந்தைகளை நலமாக இருக்க வேண்டும் என்று.

அவைகள் நலமாக இருந்தால் நாமும் நலமாக இருப்போம். வாழ்த்துவோம் வாழ்க வளமுடன் என்று.


இன்று புல் புல் பறவைகளை பற்றி ஏதாவது  தெரிந்து கொண்டு எழுதலாம் என்று பார்த்தால் புல் புல் பறவை பற்றி நான் எழுதிய பதிவு "பாடி பறந்த பறவை " வருது, நான் எடுத்து பகிர்ந்த   புல் புல் பறவைகள் படம் வருது.

 கூகுளில் தேடிய போது படித்த செய்தி பறவைகள்  நம்மை மகிழ்விக்க மட்டும் இல்லை என்ற அருமையான கட்டுரை. படித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.

நீங்களும் அறிந்து இருப்பீர்கள், படித்து இருப்பீர்கள், இருந்தாலும் இன்னொரு முறை படிக்கலாம் தானே!.

தாவரப்பெருக்கத்திற்கும்,காடுவளர்ப்பிற்கும் காரணமாகயுள்ள பறவைகளை "ஆதிவிவசாயி "என்கிறார்கள் இயற்கையாளர்கள் .
நகர்மயம், நவீனவாழ்வும் நம்மை எந்திரங்களாக்கி விட்டன. வண்ணப்பறவைகளைக் கண்டு மனதில் மகிழ்ச்சி கொள்ளும் சூழல் இன்றில்லை!
வாழ்விட தகர்ப்பு, உணவின்மை, இரசாயப் பயன்பாடு போன்ற காரணங்களால் நம்மோடு காலகாலமாக வாழும் ஊர்ப்புறத்துப் பறவைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகின்றன.
         பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன.
2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன.
3, விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை மலர்த்து கின்றன.
4,வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன.
5, இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
             இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்!
நாகணவாய் (மைனா) இல்லாது போனால் வெட்டுக்கிளிகள் பெருகும்.
ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம்.
கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் .
பறவைகளை,
ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி "காக்கை குருவி எங்கள் சாதி " என்று பாடியிருப்பார் போலும்...

மனிதர்கள்,
கிளிப்பேச்சு கேட்கவும்
குயிலிசையில் கிறங்கவும்
மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை!
பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச்சங்கிலி ஊடாடுவதை உணர்வதும், உணர்த்துவதுமே "சூழலியல் "
பறவைகள் உண்டு எச்சத்தின் வழியே வெளியேறும் விதைகள்தாம் முளைக்கும். பறவைகள் அழிந்தால் தாவரங்களும் அழியும்!
மனிதர்களால் மரங்களை நட்டு வளர்க்க முடியும்!
மகரந்த சேர்க்கை செய்ய முடியாது..!
பூஞ்சை, புல், பூண்டு, செடி, மரம் என்று தாவரத்தொகுதியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவை பறவைகள்.
"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது " என்று ஐம்பது வருட ஆய்விற்குப் பிறகு நமக்கு அறிவுறுத்தினார் " சாலிம் அலி "
பசுமையைப் போல பறவைகளையும் பரவச் செய்வோம்!
குளிரூட்டப் பட்ட அறைகளை விடவும் ... தென்றல் உலாவும் தெருக்களை நமது குழந்தைகளுக்கு விட்டு வைப்போம்!

இப்படி சொல்பவர் சமூக சேவகர் ச. ஆசை தமிழ்  அவர்கள். அவர்களுக்கு நன்றி.

                                                                  வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. //மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது " என்று ஐம்பது வருட ஆய்விற்குப் பிறகு நமக்கு அறிவுறுத்தினார் " சாலிம் அலி "//

    ஆம் இது நிதர்சனமான உண்மை சகோ. அனைத்து உயிர்களுக்கும் இவ்வையகத்தில் வாழ்வதற்கு உரிமை உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

      //அனைத்து உயிர்களுக்கும் இவ்வையகத்தில் வாழ்வதற்கு உரிமை உண்டு.//

      ஆமாம் , நீங்கள் சொல்வது சரி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. சிறப்பான பதிவு....

    பறவைகள் சகஜமாகப் புழங்க ஆரம்பித்த விட்டன - தங்கள் வீட்டில்!...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      பறவைகள் உணவு எடுப்பது எங்கள் பின்புறத்து வீடு.
      எங்கள் வளாகத்தில் சகஜமாய் வலம் வருகின்றன.
      கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. எங்க வீட்டிலும் ஜன்னலில் குருவி கூடு கட்டி இருக்கு. பொழுது விடியுறதே அவங்க கூச்சலில்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
      அவர்கள் வீட்டில் இருக்கும் போது அவர்களின் கீச் கீச் ஓலியும் , குஞ்சுகளின் சத்தம் கொலுசு சதங்கை சத்தம் போல் இருக்கும். மகிழ்ச்சியான பொழுதுகள் உங்களுக்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. நல்ல பதிவு. அந்தக் காலத்தில் தண்ணீர் உணவுன்னு இதுகளுக்கு நாம் மெனெக்கிட வேண்டாம். எல்லாமே அவைகளுக்குக் கிடைத்துவிடும். ஆனா நகர கான்க்ரீட் காடுகளில் பாவம் அதுகளும்தான் உணவுக்கும் தண்ணீருக்கும் என்ன செய்யும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன். வாழ்க வளமுடன்.

      நீங்கள் சொல்வது போல் அந்தக் காலம் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைத்தது.நாம் மெனெக்கிட வேண்டாம் தான்.

      //நகர கான்க்ரீட் காடுகளில் பாவம் அதுகளும்தான் உணவுக்கும் தண்ணீருக்கும் என்ன செய்யும்?//

      காங்கீரீட் காடுகளில் வசிக்கும் நாம் அதற்கு உணவு வைக்க கடமை பட்டு இருக்கிறோம். அதன் வீடுகளையும், அதன் நீர் ஆதாரங்களையும் அழித்த நாம் தான் அதற்கு உணவு வைக்க வேண்டும்.

      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. பறவைகளின் படங்கள் மட்டுமல்ல, அவற்றிற்கான கேப்ஷன்களும் பிரமாதம். அதோடு பறவைகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்னும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. தங்கள் அன்பு சர்வ உலகத்தையும் கவர்ந்து

    உங்கள் வளாகத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டன
    கோமதி. என்றும் இந்த ஈகை வாழ்க.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    நான் மட்டும் உணவு வைக்கவில்லை அக்கா.
    வளாகத்தில் நிறைய பேர் வைக்கிறார்கள். உலகமே அன்புமயமாய்
    மாறி விட்டால் நல்லதுதானே!
    உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ​பறவைகள் படங்கள் அருமை. இன்று சென்னை வெயிலைப் பார்க்கும்போது நாமே இப்படிக்கு கஷ்டப்படுகிறோமே, அவைகள் என்ன பாடுபடும் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      சென்னையில் இன்று இரவு மழை உண்டு என்று சொன்னார்கள், மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்றார்களே செய்தியில்.
      இங்கு அரை மணி நேரம் நல்ல மழை. இடி, மின்னல் அதிகமாய் இருக்கிறது.

      இன்று இங்கு பெய்த மழை நன்றாக இருக்கும் அவைகளுக்கு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  9. படங்களும் அதற்கான வாசகங்களையும் ரசித்தேன். பறவையின் குழந்தை நலமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும், வாசகங்களையும் ரசித்தமைக்கு நன்றி.
      பறவைகளின் குழந்தைகள் நலமாக இருக்க வாழ்த்தியது மகிழ்ச்சி.
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இங்கு பறவைகள் பற்றி மட்டும் நீங்கள் சொல்லி இருந்தாலும் இந்த உலகம் மனிதனுக்கானது மட்டும் அல்ல. ஆனால் அவன் அப்படித்தான் நினைக்கிறான். எல்லா உயிர்களுக்குமான இந்த உலகத்தைப் பாதுகாக்க, அதை இயங்க வைக்க, ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சங்கிலி அறுபடும்போது அப்போது அந்த உயிரினமும், பின்னர் மனிதர் உட்பட மற்ற உயிரினங்களும் அழிய ஆரம்பிக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உலகம் அனைத்து உயிரனங்களுக்கும் உரியதுதான்.
      வீட்டில் பல்லி பூச்சியை பிடித்தால் விரட்டுவேன் சின்ன வயதில் .அப்போது அப்பா சொல்வார்கள் பல்லிக்கு உணவு அதுதான். ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்றை படைத்து இருக்கிறான் இறைவன் என்று.
      முதலில் வந்து தேவகோட்டை ஜியும் சொன்னது அதுதான், அனைத்து உயிர்களுக்கும் இவ்வையகத்தில் வாழ்வதற்கு உரிமை உண்டு என்று.

      மனிதன் தனக்கு மட்டுமே இந்த உலகம் நினைக்கிறான். உலகம் பிறந்தது எனக்காக என்ற பாடல்தான் நினைவுக்கு வருது.

      //ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சங்கிலி அறுபடும்போது அப்போது அந்த உயிரினமும், பின்னர் மனிதர் உட்பட மற்ற உயிரினங்களும் அழிய ஆரம்பிக்கும்!//

      உண்மைதான். உணர்ந்து நடந்து கொண்டால் உலகம் நீடிக்கும்.
      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. புல் புல் பறவை - பெயர்க் காரணாம் என்ன?

    புல் புல் என்பது உருது வார்த்தையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      புல் புல் பறவை பெயர்க்காரணம் தெரியவில்லை.
      புள் என்றால் பறவைகள் அது மட்டும் தான் தெரியும்.
      புல் புல் உருது வார்த்தையா என்றால் தெரியாது.

      நீக்கு
  12. உலகம் பிறந்தது எனக்காக .. என்ற வரி தனக்காக (மற்றவர்களுக்காக அல்ல) என்று அர்த்தம் இல்லை..
    அந்த 'எனக்காக' அந்த இடத்தில் சந்தோஷத்தின் குறியீடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் பிறந்தது எனக்காக என்ற வரி பலகாலம் ஜெயிலில் அடைபட்டு வெளியே வரும் ஒருவர் உலகத்தை பார்க்கிறார், சுதந்திரமாக பறந்து செல்லும் பறவையை பார்க்கிறார், ஓடும் நதியை பார்க்கிறார் மகிழ்ச்சியில் பாடுகிறார்." எனக்காக" இந்த பாடலில் மகிழ்ச்சியின் குறியீடு என்றும் தெரியும் சார்.

      புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
      பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
      கல்லாய் மனிதராய்ப் என்ற பாட்டில் வருவது போல் கடைசியில் வந்த மனிதன் தனக்கு மட்டுமே இந்த உலகம் என்று நினைப்பதால் வந்த அழிவு இயற்கை சீரழிவு என்ற கருத்தில் இங்கு சொல்லபட்டது. மற்ற உயிரினங்கல் இயற்கையை அழிக்காமல் இருந்தது மனிதன் அழிக்கிறான் என்று சொல்ல பாடல் பொருத்தம் என்றேன் ஸ்ரீராம் பின்னூட்டத்திற்கு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் பதிவில் வந்த படங்கள், செய்திகள் எப்படி என்று கருத்து சொல்லவில்லையே!

      நீக்கு
  13. நேற்று முகநூலிலும் பார்த்தேன். இவை இங்கேயும் வருகின்றன ஆனால் எங்கள் பால்கனிக்கு வருவதில்லை. பறவைகள் இல்லாமல், மிருகங்கள் இல்லாமல் மனிதன்மட்டும் இவ்வுலகில் வாழ முடியுமா? இப்போது பெருகி வரும் கான்க்ரீட் காடுகளால் பறவையினங்கள் அருகி வருவது கவலைக்குரியதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      முகநூலில் போட்ட படங்களை இங்கு ஒரு சேமிப்பாய் பகிர்கிறேன்.
      பறவைகள், விலங்குகள் இல்லாமல் மனிதன் மட்டும் இவ்வுலகில் வாழமுடியாது என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவு.
      விளைநிலங்கள், காடுகள் என்று குறைவில்லாமல் இருந்தால்தான் நமக்கு நல்லது.
      காட்டை, அழித்து, விளைநிலங்களை அழித்து என்று மனிதன் போய் கொண்டே இருந்தால் நிலமை மோசம்தான்.

      நீக்கு
  14. பறவைகள் உணவை உண்ணும்போது இப்படித் தான் பேசிக் கொள்ளும் எனச் சொல்வது போல் தான் படங்களும் அமைந்துள்ளன. பறவைகளின் மொழி நாளாக ஆக உங்களுக்கும் பழகி விடும் என நினைக்கிறேன். பொருத்தமான தலைப்புக்களுடன் கூடிய படங்கள். படங்களில் பார்க்கவே மகிழும் மனம் நேரில் பார்த்தால் இன்னமும் மகிழும். பறவை இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும், எழுதிய வாசகங்களை ரசித்து நீங்கள் சொன்ன கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. பறவைகளின் மொழி பழகி வருவது உண்மைதான். ஆனால் நான் எழுதியது போல் நினைக்குமா என்று தெரியவில்லை.

      கூப்பிடுகிறதே உணவுக்கு. நேரம் ஆகிவிட்டால் கொஞ்சம் கோபபடுது. எங்கும் உணவு இல்லையென்றால் பால்கனியில் நம் கண் பார்வை படுவது போல் நின்று கொண்டு கூப்பிடுகிறது.

      பறவைகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் என்றுதான் இந்த பகிர்வு.(எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது)
      உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது மேலும் மகிழ்ச்சி.
      அருமையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. தாங்கள் எடுத்த படங்கள் மிக அழகாக இருக்கின்றன. இரு பறவைகளில் ஒன்று நைட்டியை ஆராய்ந்தபடி சாப்பிடாமல் அமர்ந்துள்ளதா? ஒரு வேளை அது பெண் பறவையாய் இருக்குமோ? இல்லை.. இந்த சாப்பிடும் பறவை "சாப்பிட வாங்களேன்" என்றழைப்பதை பார்த்தால், அந்த நைட்டியை ரசிக்கும் பறவை "இவை தன் இணைக்கு பொருத்தமாக இருக்குமோ" என்ற அலசலில் ரசித்து கொண்டுள்ளதோ?
    நல்ல அழகான கற்பனை உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள். படங்களையும் அதற்கேற்ற வாசகங்களையும் மிகவும் ரசித்தேன்.

    பறவையினங்கள் எவ்வளவு முக்கியம் என்ற கட்டுரை மிகவும் சிறப்பு. படித்து ரசித்தேன். அனைத்து உயிர்களுக்குந்தான் இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்த பாரதியின் வரிகள் மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //இரு பறவைகளில் ஒன்று நைட்டியை ஆராய்ந்தபடி சாப்பிடாமல் அமர்ந்துள்ளதா? ஒரு வேளை அது பெண் பறவையாய் இருக்குமோ? இல்லை.. இந்த சாப்பிடும் பறவை "சாப்பிட வாங்களேன்" என்றழைப்பதை பார்த்தால், அந்த நைட்டியை ரசிக்கும் பறவை "இவை தன் இணைக்கு பொருத்தமாக இருக்குமோ" என்ற அலசலில் ரசித்து கொண்டுள்ளதோ?//

      ஆண் பறவைதான் நைட்டியை ரசிக்கிறது.

      தக்குடு என்ற வலைபதிவர் நைட்டியை (பொம்மி)தேசீய உடையாக அறிவித்து விட வேண்டும் என்று முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இரவு அணியும் உடை இப்போது வசதி காரணமாய் இரவும் அணியபடுகிறது அதனுடன் பெண்கள், கடைத்தெரு, பள்ளி என்று வருகிறார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

      அதுதான் இந்த பறவை நைட்டிகளை கண்டதும் இதுதான் பொம்மி நைட்டியா? என்று கேட்பது போல் எழுதி இருந்தேன்.

      படங்களையும் வாசகங்களையும் ரசித்தமைக்கு நன்றி.

      கட்டுரை எழுதியவருக்கு நன்றி அருமையான கட்டுரை இல்லையா?

      உங்கள் காலை நேர பணிகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  16. மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது " என்று ஐம்பது வருட ஆய்விற்குப் பிறகு நமக்கு அறிவுறுத்தினார் " சாலிம் அலி "

    பறவைகள் போற்றுவோம்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. அருமையான படங்களும் வாசகங்களும். பறவைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து சலீம் அலி சொன்னவையும் சூழலியல் குறித்து சமூக சேவகர் ச. ஆசை தமிழ் அவர்கள் வலியுறுத்திய கருத்துகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  18. கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு...

    படங்கள் ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. பறவைகளுக்கும் விவசாயத்திற்கும் மிகப்பெரிய தொடர்பே உண்டு! இலவசமாய் வெளிகள் தோறும் விதைவித்தைத்துச் செல்பவன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் தொண்டு சிறப்பானது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. படங்கள் எல்லாம் அருமை. அதன் தலைப்புகளும். ஜீவராசிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. மனிதன் இல்லாமல் அவை எல்லாமும் வாழ்ந்துவிட முடியும் என்பது மிக மிக உண்மை.

    துளசிதரன், கீதா

    கீதா: கோமதிக்கா புல் புல் சூப்பரா இருக்கு. படங்கள் எல்லாமும் அவை பேசுவது போல அதற்கேற்ற உங்கள் தலைப்பும் செம. ரொம்ப ரசித்தேன்.

    விவசாயம், காடுகள் வளர என்று பலதுக்கும் பறவைகள் மிக மிக அவசியம். நல்ல பதிவு.

    நானும் படங்கள் வைத்திருந்தும் ஏனோ ரொம்பவே சுணக்கம் பதிவு போடுவதில். என்ன காரணம் என்று தெரியவில்லை. நேர மேலாண்மை செய்யத் தெரியவில்லை. மனமும் ப்ரீ ஆக்குபைட் வித் நிறைய விஷயங்கள் என்பதாலோ என்னவோ ஸ்லோவாகி விட்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      படங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      நல்ல மனநிலை , நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்கள்.
      எனக்கும் உடல் சோர்வு, மனசோர்வு எல்லாம் இருக்கிறது.
      சில நேரம் ஏதுவுமே செய்ய பிடிப்பதில்லைதான். வலுவில் சிலவற்றை செய்து உற்சாகத்தை வரவழைத்துக் கொள்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு