வியாழன், 8 மார்ச், 2018

மகளிர் தின வாழ்த்துக்கள்.!


//பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.
அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.//



நன்றி- தினகரன்.

மகளிர்தினத்தைச் சிறப்புச் செய்யும் விதமாய் நான் சந்தித்த, படித்த சில பகிர்வுகள் இங்கு:-

சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி அவர்களை சந்தித்த வேளை ஏற்பட்ட மகிழ்ச்சி.
இவரைப் பாராட்டி 2013 ல்  மகளிர் தினத்தில் போட்ட பதிவு.
//நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.//

மதுரையில்  ஒரு   பள்ளி அருகில்  கடைவிரித்திருந்த அம்மாவைப் பார்த்தவுடன் என் இளமைக்கால நினைவுகள் வந்தன. அவர்களுடன் பேசியபோது  கிடைத்த சில செய்திகள் :-



பள்ளிப் பருவத்தில் குழந்தைகளுக்கு வீட்டில் எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தாலும் பள்ளி அருகில் விற்பதை வாங்கித் தின்றால் தான் மகிழ்ச்சி , திருப்தி ஏற்படும்.

பள்ளி அருகில் தான் முன்பு எவ்வளவு விற்பனைக்குக் காத்திருக்கும் ! ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூப் போல் துருவி குச்சியில் வைத்து (கலர் கலராக பாட்டில்களில் இருக்கும் கலர்களை)நாம் கேட்கும் கலர்களை அதன்மேல் ஸ்பிரே செய்து தருவார்கள். கமர்கட், தேங்காய்பர்பி, கடலைமிட்டாய், மாங்காய், நெல்லிக்காய், தேன்மிட்டாய், இலந்தவடை, குச்சிமிட்டாய், பென்சில் மிட்டாய் , சேமியா ஐஸ், பால் ஐஸ், இன்னும் எத்தனை எத்தனை வகை ஐஸ்கள்.

இப்போது சுத்தம் சுகாதாரம் என்று பள்ளி அருகில் எதுவும் விற்கக் கூடாது என்று  சொன்னதால் குழந்தைகளை இடைவேளையின் போதும் வெளியில் விடுவது இல்லை.

பள்ளியின் வாசலில் சுத்தமாக பாட்டில்களில் மிட்டாய், பொரிஉருண்டை, மற்றும் பாக்கெட்களில் உள்ள தின்பண்டங்களை வைத்துக் கடைவிரித்து இருந்த அம்மாவிடம் பள்ளிப் பிள்ளைகள் வாங்கத் தடை உள்ளதே ! நீங்கள் இங்கு கடை போட்டு இருக்கிறீர்களே விற்குமா? என்று கேட்டால் பள்ளிக்கு கொண்டுவந்து விடும் பெற்றோர்களுடன் வரும் பிள்ளைகள் கேட்கும் , அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள்.


 என் பேரப் பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்குக் காவலாக இங்கு இருக்கிறேன். தினம் 10 ரூபாய் விற்றால் போதும் அம்மா இங்கு, அப்புறம் பள்ளிவிட்ட பின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு பார்க் போய் விற்பேன் என்றார்கள்.

வயதான காலத்தில் தன் மகளுக்குப் பாரமாய் இருக்கக் கூடாது . அவளுக்கு உதவியாய் ஏதாவது சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

லட்சிய பெண்மணியைப் போற்றுவோம்.


இப்படி மகிழ்ச்சியுடன் குடும்பத்திற்கு உழைக்கும் பெண்மணியைப் போற்றுவோம்,

 வயது முதிர்ந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்கமல் தன்னால் முடிந்த உதவிகளை வீட்டுக்கு  செய்ய பனங்கிழங்கு விற்கும்  வயதான தாயை வணங்குவோம். 
கட்டிடத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு அம்மா - (என் போட்டோ வேண்டாம் தாயி என்று சொல்லி விட்டார்கள். )கொஞ்சம் சாமான்களை வைத்துக் கொண்டு நளபாகம் செய்து கொள்ளும் அம்மா வியக்க வைத்தார்.கட்டிடம் முடிவடைந்து விட்டது அதனால் வெளியில் சமைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்களாம். கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு  காவலுக்குப் படுத்துக் கொள்ளும் அம்மாவின்  கஷ்டங்கள் விலகி நன்றாக இருக்க வேண்டும்.
இந்தப் படம்  ’அமுதசுரபி’ இதழ் பொன்விழா ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற  ’விதைநெல்’- நாவலின் அட்டைப்படம். வயதானலும்  சுறு சுறுப்பாய் வேலை செய்யும் மூதாட்டி என்னை கவர்ந்தார்.
வயதான காலத்தில் குப்பைகளை அள்ளி  சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் அம்மாவுக்கு வாழ்த்துக்கள். 

மூவர் கோவில் போய் இருந்த போது   அந்த கோவில் புற்களை சுத்தம் செய்தும் , வேப்பம் முத்துக்களை சேகரித்து வித்தும் பிழைப்பவர் .. முதுமையிலும் 
ஏழ்மையிலும் யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ்கிறார். அவரையும் வாழ்த்தி வணங்க வேண்டும்.

இப்படி வயதான காலத்தில் பூ விற்று பிழைப்பவர். பெங்களூர் போய் இருந்த போது இவர்களைப் பார்த்தேன் இரவு குளிரில்  ஒடுங்கி அமர்ந்து பூ விற்றுக் கொண்டு இருந்தார்கள். இந்த வயதிலும்  இப்படி உழைத்து  வாழ்பவரை வாழ்த்தி வணங்குவோம்.

நம்பிக்கைக்குரிய சாதனை :_

//அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர்கள் அரிதாகி வரும் காலம் இது. அவரவர் வாழ்க்கையைப் பார்க்கவே நேரம் போதவில்லை என அலுத்துக்கொள்பவர்களும் அதிகம். இவர்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களுக்கு மரியாதை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திரிபுரா ஃபவுண்டேஷன். ஆபத்தான சூழ்நிலையில் துணிச்சலாக இறங்கி பிறரைக் காப்பாற்றிய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘ஹோப் ஹீரோ’ விருதுதான் அது. இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் குக்கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும் உண்டு! சாகச சந்தானலட்சுமி!

திருச்சி மாவட்டம், ஆதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆற்றில் மூழ்கப் போன இரண்டு தோழிகளைத் துணிச்சலாக ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இருக்கிறார்! 

‘‘அன்னிக்கு ஆத்துல அதிக தண்ணி போயிட்டு இருந்துச்சு. ரெண்டு புள்ளைகள் திடீர்னு ‘காப்பாத்துங்க’ன்னு கத்துனாங்க. ஒரு புள்ள காலு சேத்துக்குள்ள சிக்கிருச்சு... இன்னொரு புள்ள அதோட தோள் மேல உட்கார்ந்துருக்கு. அங்க நல்லா நீச்சல் தெரிஞ்சவ நான்தான். யோசிக்காம குதிச்சேன். எவ்வளவு இழுத்தும் ரெண்டு புள்ளைகளாலயும் வெளிய வர முடியல... வேற வழியில்லாம, ஆழமா நீந்திப் போய் சேத்து மண்ணை விலக்கிவிட்டேன். அஞ்சு நிமிசம் அப்படி செஞ்ச பிறகுதான் கால் ரெண்டும் வெளிய வந்துச்சு. அப்படியே தூக்கிவிட்டேன்’’ என துணிச்சல் சம்பவம் குறித்து விவரிக்கும் சந்தானலட்சுமியின் ஆசை - ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரி ஆகி சேவை செய்வது!

‘‘இன்னிக்கு நாட்டுல நிறைய வன்முறை நடக்குது. கொலை, கொள்ளை அதிகமாகிடுச்சு. இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்னா நான் போலீசாகணும்’’ என உறுதிபட பேசும் சந்தானலட்சுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகள். நீச்சல், மரம் ஏறுதல், யோகா உள்பட பன்முகத் திறமைகள் கொண்ட சிறுமியாக இவர் இருப்பதில் அம்மா பெரியநாச்சிக்குப் பெருமை... ‘‘சின்ன வயசுல இருந்தே பொறுப்பா வளர்ந்துட்டா. அடுத்தவங்களுக்கு ஏதாவது உதவின்னா முத ஆளா நிப்பா... இந்த விருது அவளுக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்’’ என்கிறார் அம்மா.

பொறுப்புள்ள புவனேஸ்வரி! :=

திருவள்ளூர் மாவட்டம், முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவரது அத்தை மகள் சுஜாதா மனவளர்ச்சி குன்றியவர். தனியாக எந்த ஒரு அன்றாடச் செயலையும் செய்ய இயலாது. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் அவளது பெற்றோர் புவனேஸ்வரியின் வீட்டில் படிப்பதற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த நாள் முதல் சுஜாதாவின் பெறாத தாயாகவே மாறி கவனித்து வருகிறார் புவனேஸ்வரி. பேச்சு, விளையாட்டு, உணவு என எல்லாச் செயல்பாடுகளுக்கும் புவனேஸ்வரி கூடவே இருந்து கவனித்து வருகிறாள். சுஜாதாவை குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, சீருடை அணிவித்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். எந்தக் கட்டாயமும் இன்றி, மனம் விரும்பியே இத்தனை  உதவிகளையும் சுஜாதாவுக்குச் செய்கிறார். 

பள்ளியிலும் கழிப்பறைக்கு கூட்டிச் செல்வது தொடங்கி அனைத்து உதவிகளையும் செய்கிறார். ‘‘அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயல் வேலைக்கு கூலியா போறாங்க. சின்ன வயசுல இருந்து சுஜாதாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன். எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியலை. அடுத்தவங்களுக்கு உதவி பண்றத என்னிக்கும் என் லட்சியமா வைச்சுருக்கேன். அவளுக்கு இன்னும் தனியா சாப்பிடத் தெரியாது. வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாது. நான் தினமும் சொல்லிக் கொடுப்பேன். இப்ப ‘அப்பா, அம்மா’ன்னு சொல்றா! நாம பேசறது அவளுக்கு புரியுது. 

பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டாங்கன்னா, இவளையும் கூட்டிக்கிட்டு பக்கத்து கிராமமான தாழ்வீடுக்கு மல்லிகைப்பூ பறிக்க போவேன். அதுக்குக் கிடைக்கிற கூலி எங்களுக்கு உதவியா இருக்கும். இந்த விருது கிடைச்சதுக்கு எங்க ஊர்ல எல்லாம் பாராட்டினாங்க...’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசும் புவனேஸ்வரியின் லட்சியம், ‘டாக்டராகி எல்லோருக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும். சாதி, மத வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்க உழைக்க  வேண்டும்’ என்பதே! //

நன்றி - தின்கரன் நாளிதழ்

உலக அமைதி ஏற்படவும், பசுமைபுரட்சியை வலியுறுத்தியும்  இவர் வரைந்த ஓவியத்திற்கு  கல்வி அமைச்சரிடம் பரிசும் பாராட்டும் பெற்றார்.

--நன்றி தினமலர்.

இப்படி நம்பிக்கைகளுடன் வாழும் குழந்தைகளையும் முதியவர்களையும் நல்ல பெண்மணிகளையும் வாழ்த்தி மகிழ்வோம். மகளிர் தினத்தில். 

இந்த பதிவு  2015ல் எழுதிய பெண்மையைப் போற்றுவோம் பதிவு தான் இப்போது புதிதாக சில படங்கள் சேர்த்து இருக்கிறேன்.

மகளிர்தின வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

34 கருத்துகள்:

  1. இந்த வருட இந்த மகளிர் தினத்திற்கு இதுவரை இந்த மாதிரி ஒரு சிறப்பான பதிவை படிக்கவில்லை.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான கருத்துக்கு மகிழ்ச்சி, நன்றி.. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணம்மாள் போற்றுதலுக்குரியவர் .
    கட்டிடத்தில் இருப்பதை வைத்து நளபாகம் செய்யும் மூதாட்டிக்கு நல்ல காலம் பிறக்கட்டும்
    மேலும் பல போற்றுதலுக்குரிய பெண்களைப்பற்றி பகிர்ந்திருக்கிறீர்கள் நல்லதொரு பதிவு .
    // பள்ளிப் பருவத்தில் குழந்தைகளுக்கு வீட்டில் எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தாலும் பள்ளி அருகில் விற்பதை வாங்கித் தின்றால் தான் மகிழ்ச்சி , திருப்தி ஏற்படும்.//
    உண்மைதான்க்கா அதுவும் நாம் வீட்டில் செய்யும் மிளகாய்த்தூள் உப்பு மிக்சிங்கை விட அவங்க செய்றதுதான் சூப்பர் சுவை :)

    தள்ளாத வயதிலும் வயது தடையில்லை என சாதிக்கும் பெரியோர் வாழ்க .

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

    திருமதி . கிருஷ்ணம்மாள் அவர்கள் போற்றுதலுக்குக்குரியவர்தான் ஏஞ்சல்.

    //உண்மைதான்க்கா அதுவும் நாம் வீட்டில் செய்யும் மிளகாய்த்தூள் உப்பு மிக்சிங்கை விட அவங்க செய்றதுதான் சூப்பர் சுவை :)//

    ஆமாம் ஏஞ்சல், அந்த பக்குவம் நமக்கு வரமாட்டேன் என்கிறது.
    மாங்காய், நெல்லிக்காய்க்கு அவர்கள் மிளகாய்த்தூள் நன்றாக இருக்கும்.

    தள்ளாத வயதிலும் தங்கள் காலில் நின்று தன்ன்ம்பிக்கையுடன் வாழ்வது வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்தான்.

    ஆனால் மனதில் அவர்களுக்கு ஆதரவு இல்லையே! என்ற வருத்தமும் இருக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லுகிறது..

    யாரும் மனம் சளைக்காமல் குடும்பத்தையும், சிலர் உலகையும் உயர்த்தவே பாடுபடுகின்றனர்..

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    ஓவ்வொரு படமும் கதை சொல்வது என்பது உண்மையே!
    தங்கள் குடும்பத்தை அல்லது தங்களை பார்த்து கொள்ள உழைப்பவர்கள்தான்.
    சிலர் நம்மால் இந்த நாட்டுக்கு , உலகுக்கு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்து செயல்பட்டவர்கள்தான்.

    பூ விற்கும் பாட்டியிடம் சிலர் பூ வாங்கி ஆசீர்வாதம் வாங்கி சென்றார்கள். சிலர் பூ வாங்காமல் காசு கொடுத்த போது வாங்கி கொள்ள மறுத்து அவர்கள் கையில் பூவை திணித்தார்.
    சுயமரியாதை, தன்னாம்பிக்கை உள்ள அவர்களை வணங்கி நானும் பூ வாங்கி கொண்டேன்.

    அருமையான கருத்துக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. படத்தில் இலந்தைப் பழம் கண்ணைப்பறிக்கிறது,

    மிக வித்தியாசமாக, அழகாக மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மகளிர் தின வாழ்த்துகள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மகளிர் தினத்துக்கு ஏற்ற நல்லதோர் செய்தி தொகுப்பு அருமை.
    வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தள்ளாத வயதிலும் உழைத்து வாழ்பவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு...

    அவரகளுக்கு இந்த சமுதாயம் தலைவணங்க வேண்டும்...

    அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

    தலைவணங்க வேண்டியவர்கள்தான் இந்த முதியவர்கள்.
    உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரி

    தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்..தள்ளாத வயதிலும் தன் உழைப்பில் வாழ்ந்து அனைவருக்கும் உதவ வேண்டுமென செயல்படுபவர்களுக்கும், சிறுவயதிலேயே தன்னம்பிக்கையுடன் விருதுகள் பெறும் வகையில் உயர்ந்தவர்களுக்கும் பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கள்.மகளிர்தின பதிவை சிறப்பாகத் தொகுத்து பகிர்ந்தளித்த தங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கமலா ஹரஹரன், வாழ்க வளமுடன்.

    உங்கள் வருகைக்கும், அனபான கருத்துக்கும் மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அருமையான பெண்ணியல் எண்ணங்கள்

    பதிலளிநீக்கு
  19. முந்தைய பதிவுகள் நினைவில் உள்ளன. பெண்மையைப் போற்றும் பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி. மகளிர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. எளிய குடும்பத்தில் பிறந்த அதே சமயம் போற்றுதலுக்கு உரிய பெண்கள். இப்படி தான் பலரும் குடத்தில் இட்ட விளக்காக ஒளிர்கின்றனர். அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான். குடத்திலிட்ட விளக்காய் சிலர் குடுமபத்தை கண்ணுக்கு கண்ணாய் பார்த்துக் கொள்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. மகளிர்தின நல்வாழ்த்துக்கள் அக்கா. இதில் நீங்கள் அடையாளம் காட்டிய அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள் அக்கா. பாட்டியை பார்க்க மனம் கனத்துவிட்டது ஆனாலும் அவரின் தன்னம்பிக்கைக்கு சல்யூட்.
    பள்ளிநாட்களில் வாங்கி சாப்பிடும் தின்பண்டம் மறக்கமுடியாதவை அக்கா. நான் இதில் சிலது ஏற்கனவே படித்திருக்கேன். கருதிட்டேனா தெரியல.
    மொத்ததில் மகளிர்தினத்திற்கு ஏற்ற சரியான பதிவு.

    பதிலளிநீக்கு
  25. வணக்க்ம பிரியசகி அம்மு.
    பாட்டியைப் பார்த்து என் மனமும் கனத்து விட்டது தான்.
    ஆனால் அவர்களின் மன உறுதி அவர்களை வணங்க வைக்கிறது.
    உங்கள் தொடர் வருகைக்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  26. மிக சிறப்பான படைப்பு...அம்மா


    நம்மை சுற்றி உள்ள இந்த உயர்ந்த மக்களை தான் நாம் போற்ற வேண்டும்...எத்துணை நேர்மறை எண்ணங்கள் இவர்களுக்கு...

    இவர்கள் அனைவருமே சாதனை பெண்கள் தான்...

    மிக மகிழ்ச்சி அம்மா..

    பதிலளிநீக்கு
  27. மிக சிறப்பான படைப்பு...அம்மா


    நம்மை சுற்றி உள்ள இந்த உயர்ந்த மக்களை தான் நாம் போற்ற வேண்டும்...எத்துணை நேர்மறை எண்ணங்கள் இவர்களுக்கு...

    இவர்கள் அனைவருமே சாதனை பெண்கள் தான்...

    மிக மகிழ்ச்சி அம்மா..

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.

    //எத்துணை நேர்மறை எண்ணங்கள் இவர்களுக்கு...//

    நேர்மறை எண்ணங்கள் தான் அவர்களை வாழ வைக்கிறது அனு.
    சாதனை பெண்கள்தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வெகு சிறப்பான வித்தியாசமான மகளிர் தின பதிவு!! அக்கா....

    பள்ளி அருகில் தான் முன்பு எவ்வளவு விற்பனைக்குக் காத்திருக்கும் ! ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூப் போல் துருவி குச்சியில் வைத்து (கலர் கலராக பாட்டில்களில் இருக்கும் கலர்களை)நாம் கேட்கும் கலர்களை அதன்மேல் ஸ்பிரே செய்து தருவார்கள்//

    இப்போது இது பெரிய கடைகளில் கோலா என்று வந்துவிட்டது. இப்படி வித விதமாகத் தரும் ஒரு கடை கோவை ஆர் எஸ் புரத்தில் இருக்கிறது. சிறிய கடைதான் ஆனால் வியாபாரம் அள்ளுகிறது...

    இதோ அடுத்து வருகிறேன்....டிஃபன் டைம்..மாமியாருக்கு... செய்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  30. இப்பெண்கள் தான் மகளிர் தின வாழ்த்துக்கு உரியவர்கள்....கட்டிடம் பார்த்து நளபாகம் செய்யும் மூதாட்டியின் கஷ்டங்கள் விலகிட பிரார்த்திப்போம். சேவை செய்யும் விருது வாங்கும் பெண்களும் எத்தனை போற்றுதலுக்குரியவர்களோ அஅதைப் போன்று இவர்கள், சாதாரண நிலையில் எந்தவித வசதிகளும் இல்லாத நிலையிலும் கூடத் தங்கள் சுயமரியாதையை இழ்கக்காமல் வாழ்கிறார்கள் பாருங்கள்!! இவர்கள் தான் உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர்கள்.

    அருமையான பெண்களைக் குறித்த சிறப்பான பதிவு அக்கா...பெருமை கொள்வோம் நாம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    இப்போது இது பெரிய கடைகளில் கோலா என்று வந்துவிட்டது. இப்படி வித விதமாகத் தரும் ஒரு கடை கோவை ஆர் எஸ் புரத்தில் இருக்கிறது. சிறிய கடைதான் ஆனால் வியாபாரம் அள்ளுகிறது.//

    ஓ ! தெரியதே! கோவை போனால் சாப்பிட்டுப் பார்க்க வேண்டியதுதான்.
    அத்தையை கவனித்துக் கொள்ளும் போதும் வந்து பின்னூட்டம் அளித்து விட்டு போவது மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
  32. கீதா மீண்டும் வந்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.

    //சாதாரண நிலையில் எந்தவித வசதிகளும் இல்லாத நிலையிலும் கூடத் தங்கள் சுயமரியாதையை இழ்கக்காமல் வாழ்கிறார்கள் பாருங்கள்!! இவர்கள் தான் உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர்கள்//

    ஆம் கீதா, போற்றுதலுக்குக்குரியவர்கள்தான் இந்த மூதாட்டிகள்.

    உங்கள் தொடர் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு