செவ்வாய், 21 நவம்பர், 2017

மனமகிழ் விழா





அரிசோனா தமிழ்ச் சங்கத்தில் "தீபாவளி விழா"  போனவாரம்  நடந்தது. அந்த விழா நடத்திய நாடகத்தில் பேரன் கவின் ஓநாய் வேடத்தில் நடித்தான். நாங்கள் கலந்து கொண்டோம்.

                                       பேரன்


கதை எழுதி இயக்கியவர் ரத்னா பாலாஜி அவர்கள்.. இரண்டு மாதங்களாய் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தார். பெற்றோர்கள் ஒத்திகையை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வாரம் வைத்துக் கொண்டனர்.  ஓரு தடவை மேடை ஒத்திகை அரிசோனா யுனிவர்சிட்டி அரங்கத்தில்  நடந்தது.

நாடகத்தின் பெயர் :-
"யாரு அடுத்த தலைவர் ?'
காட்டில் காட்டு ராஜாவிற்கு. தானே காட்டை ஆள்வது அலுத்துப் விட்டது அதனால் தேர்தல் நடத்துகிறார். 

ஓவ்வொரு விலங்கும் தன் தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கிறது.
இறுதியில்  காட்டு ராஜா  தன் முடிவை சொல்கிறார்

அதில் ஊர்வன எண்ணிக்கை அதிகமாய் இருப்பதால் காட்டு ராஜா முடிவுக்கு வருகிறார் . நந்தைதான் அடுத்த ராஜா என்று,  நத்தையை ராஜா ஆக்குகிறார்.

நத்தையார் அடுத்த தலைவர் 


அரிசோனா தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சேர்ந்து நடித்த நாடகம்.
குழந்தைகளின் ஆடல் பாடல், மற்றும் பெரியவரின் ஆடல், பாடல் என்று விழா இனிதாக நடந்தது.

https://youtu.be/r08COqZv3bg நாடகம் பார்க்க சுட்டி.

நாடகத்தில் நடித்த குழந்தைகளும்  ஆசிரியர் ரத்னா அவர்களும்.
வாய்ப்புக்கு நன்றி சொல்லும் குழந்தைகள்.


தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து   நாடகம்.
 தமிழைக் கற்க விருப்பப்படும் அயல் நாட்டுக் குழந்தையைப் பற்றிய கதை.
இக் கதைக்கு என் கணவர்   தமிழ் பகுதிக்கு வசனம்  எழுதித் தந்தார்கள்.


அரிசோனாவிற்குத்  தமிழ் பரப்ப வந்த அகத்தியர்


அரிசோனாவில் இரண்டு குடும்பம்  ,  அரிசோனா  தமிழ்ப் பள்ளியில் படிக்கும்  பெண் குழந்தை உள்ள குடும்பம்.  தமிழ் பேசத் தெரியாத ஆண் குழந்தை உள்ள குடும்பம்
கும்பகோணத்தில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் ஸ்கைப்பில் ஆங்கிலத்தில் உரையாடுகிறான் அவர்கள் வருத்தப் படுகிறார்கள் தமிழில் பேசக்கூடாதா என்று கேட்கிறார்கள். 


விடுமுறைக்கு  கும்பகோணத்திற்கு பாட்டி வீட்டுக்கு வந்தனர்.  தமிழ் தெரியாத காரணத்தால் மற்ற குழந்தைகள் அவர்களை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றனர்., "குலை குலையாய் முந்திரிக்காய்" பாட்டுப்பாடி விளையாடுகிறார்கள்  அயல் நாட்டில் வாழும் பையனுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் விளையாட்டு புரியவில்லை.

ஊர் திரும்பிய பின் தமிழ் கற்ற பெண்ணின் அம்மா , அப்பா அரிசோனா பள்ளியில் உங்கள் மகனைச் சேர்த்து விடுங்கள் அவனும் எங்கள் பெண் பொன்னி போல் நன்கு படிப்பான் தமிழ் என்கிறார்கள். அடுத்த முறை கும்பகோணத்திற்கு போனால் தாத்தா , பாட்டியிடம் பேசவும், தோழர்களுடன் விளையாடவும் தமிழ் கற்றுக் கொள்ள சம்மதிக்கிறான் .



நாடகத்தை இயக்கிய ஆசிரியரும் ,  நடித்த  குழந்தைகளும்.

அப்பா என்னை அழைத்து சென்றார் மிருகக்காட்சி சாலை பாட்டுக்கு வனவிலங்குகள் வேடத்தில் குழந்தைகள்.


தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் நாடகம் :- மூன்று குழந்தைகளும் தண்ணீர்  சிக்கனத்தை பற்றியும், எப்படி எல்லாம் ஆறு குளம் இருந்தன இப்போது நீர் இல்லா ஆறு குளங்களைப் பற்றிப் பேசினார்கள். கறுப்பு உடை போட்ட குழந்தைகள் பல்தேய்க்கும் போது, பாத்திரம் துலக்கும் போது அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போதும் தண்ணீரை திறந்து விட்டதை மறந்து விடுவதையும், தொலைக்காட்சி நாடகம் பார்த்து பெண்கள் கண்ணீர் வழிய தன்னை மறந்து இருப்பதையும் வருங்காலத்தில் தண்ணீருக்காக சகல உயிர்களும் கஷ்டபடுவதையும்  அழகாய் நடித்துக் காட்டினார்கள். நாடகத்தை எழுதி இயக்கியவர் சந்தியா அவர்கள்.

"வாழ்க தமிழ்" பாடல் 
                                                                       சினிமா பாடல்.

பல சினிமா பாடல் தொகுப்புக்கு ஆடல்

சினிமா பாடல்
வாத்திய இசை

"கல்யாணம் கல்யாணம்" பாட்டுக்குப் பெரியவர்கள் நடத்திய நாட்டிய நாடகம்

பரதநாட்டியம்


தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழுவினர்இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் எல்லோரையும் எடுப்பதற்குள்   நகர்ந்து விட்டார்கள். மருமகளும்  ஆசிரியர் பணியில் இருக்கிறார்.

ஆசிரியர்கள் எல்லாம் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.  அவர்களுக்குக் கிடைக்கும் வார இறுதி நாளில் தமிழ்ப்பள்ளி சேவைக்காக ஒதுக்கி சேவை செய்வது பாராட்டப்பட வேண்டியது.

பெண்கள் இரட்டை பாரம் சுமப்பவர்கள். வீட்டு வேலை அலுவலகப் பணி அதனுடன் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறார்கள்.

அரைமணி நேரம், ஒருமணி நேரம் எல்லாம் காரில் பயணித்து வந்து கற்பிக்கிறார்கள்.குழந்தைகளை அழைத்து கொண்டு விடுவது கூட்டிச் செல்வது என்று பெற்றோர்களும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள ஆவலாகச் செயல்படுகிறார்கள்.
ஆடல், பாடல், கொண்டாட்டத்துடன் சுவையான உணவைச் செட்டிநாட்டு உணவகத்தில் ஏற்பாடு செய்து அனைவருக்கும் வழங்கினார்கள்..

வரவேற்பு உரையிலும், நன்றி உரையிலும் இந்தியாவிலிருந்து   வந்து இருக்கும்  தாத்தா, பாட்டிகளை  வரவேற்று இறுதி வரை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்ததை பாராட்டியும் பேசினார்கள். (விழா மதியம் மூன்று மணி முதல் எட்டு மணி வரை நடந்தது. ) சிலரிடம் விழாவைப்பற்றி கருத்தும் கேட்டார்கள்.
சொன்னவர்கள் எல்லாம் சிறப்பாக நடந்ததையும், மேலும் சிறப்பாய் அடுத்த ஆண்டு நடக்கவும் வாழ்த்தினார்கள்.

அனைவரும்  இந்தியாவில் குடும்பத்தினருடன் கொண்டாட முடியாத விழாவை இங்கு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஏதாவது காரணம் வைத்துக் கொண்டு நண்பர்கள் ஒவ்வொரு வீடுகளில் நண்பர்கள் சந்திப்பு வைத்துக் கொண்டு  பேசிமகிழ்கிறார்கள்.

என் கணவர் வசனம் எழுதி கொடுத்த  நாடகக் குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு,, அவர்களை இயக்கிய ஆசிரியர்களில் ஒருவரான லலிதா அவர்கள் தமது வீட்டில் விருந்து தந்தார்கள். குழந்தைகள் அவர்கள் பெற்றோர் , மற்றும் எங்களையும் அழைத்து இருந்தார்கள்.

ஒவ்வொருவரும்  வீட்டிலிருந்து  சுவையான உணவு கொண்டு வந்து இருந்தார்கள்.
நாங்கள் காலை விரதம் என்பதால் மதியம் உணவுக்கு வருவதாய் சொன்னதால் விரதம் இருப்பவர்கள் முதலில் ஆரம்பித்து வையுங்கள் அப்புறம் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று அன்புடன் சொன்னார்கள். அப்பா, அம்மா, என்று அன்புடன் எங்களை அழைத்துப்பேசி மகிழ்ந்தார்கள். எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். 





அன்பென்ற மழையில் நனைந்த தருணம்!

      வாழ்கவையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. குழந்தைகள் நாடகம் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும்.
    சுட்டிகளுக்கு பிறகு கணினியில் செல்வேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. >>> அன்பெனும் மழையில் நனைந்த தருணம்..<<<

    உண்மை.. நானும் உங்களால் நனைந்தேன்..

    விழாவினை நேரில் கண்டது போல இருந்தது..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. ஆவ்வ்வ் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊ..

    ஹலவீன் ஹொஸ்ரியூம்... போட்ட குழந்தைகள் அழகு.. பேரன் bunny ஆ போட்டிருக்கிறார். வெளிநாட்டில் மிக அழகாகவும் அக்கறையோடும் தமிழ் வளர்க்கிறார்கள் குழந்தைகள்.. சினிமாப் பாடல் உடைகள் மிக அழகு... அரியோனா அகத்தியர் ரொம்ப அழகு ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யம்தான். உங்கள் பேரனுக்கு எங்கள் வாழ்த்துகள். ஸார் வசனம் எழுதிக் கொடுத்தாரா? எங்கள் வாழ்த்துகளை ஸாருக்கும் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. அயல்நாடுகளில் குழந்தைகள் தமிழில் பேசாததால் வருந்தும் ஒருவர் பற்றிய ஒரு குறும்படம் பதிவிட்டிருந்தேன்

    பதிலளிநீக்கு
  6. துளசி: அருமையான நிகழ்வைச் சுவைபடச் சொன்னது அருமை! படங்களும் அருமை. தங்கள் பேரனுக்கு வாழ்த்துகள்! அமெரிக்காவிலும் தமிழ்! தேமதுரத் தமிழ்!! ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    கீதா: கோமதிக்கா முதல் படத்திலேயே தங்கள் பேரனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது!! அங்கு நம் தமிழ் மக்கள் தமிழைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் தமிழை நன்றாகப் பேசவும் எழுதவும் கூடச் செய்கிறார்கள். எனக்கென்னவோ இங்கு விட அங்கு இது போன்ற நல்ல கலை நிகழ்ச்சிகள் தமிழில் நடப்பது போலவே தோன்றுகிறது. விலங்குகள், இயற்கை என்று...

    தங்கள் கணவர் வசனம் எழுதிக் கொடுத்தமைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை அவரிடமும் தெரிவிக்கவும். தங்கள் மருமகளுக்கும் வாழ்த்துகள்! தமிழ்ப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுப்பதற்கு.

    குழந்தைகள் நிகழ்வு என்றாலே ஆனந்தம்தான்...

    பதிலளிநீக்கு
  7. சந்தோஷமான தருணங்கள் இவை அக்கா .
    பேரன் அழகா சின்ன ஓநாய் உடையில் கியூட்ட இருக்கார் .
    எல்லா பிள்ளைகளுக்கும் தன்னலமின்றி சேவை செய்யும் தமிழ் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
    வெளிநாட்டில் தமிழ் கற்று பேசும் பிள்ளைகளின் கலப்படமில்லா உச்சரிப்பு நம்ம ஊரில் வளரும் பிள்ளைகளைவிட தெளிவாக இருக்குக்கா ..இந்த சிறுவர் சிறுமியர் நாளை அவர்களின் சந்ததிக்கு இதை எடுத்து செல்வார்கள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    குழந்தைகள் அழகாய் தமிழில் வசனம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
    விழா அரங்கம் முழுவதும் தமிழ் பேச்சு ஒலித்துக் கொண்டு இருந்தது, அயல்நாட்டில் இருக்கும் உணர்வே இல்லை தமிழ் நாட்டில் இருக்கும் உணர்வுதான் இருந்தது.
    மெதுவாக பாருங்கள் நாடகங்களை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் அந்த விழாவில் மகிழ்ந்து இருந்தார்கள்.
    நாடகம் ஒத்திக்கை பார்க்க என்று இரண்டு மூன்று மாதங்களாக எல்லோரும் அடிக்கடி பார்த்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியும் இனி எப்போது சந்திப்பது என்ற வருத்தமும் இருந்தது.

    மகள் வீட்டுக்கு வந்து இருக்கும் ஒரு பெற்றோர் எங்களுடன் மிகவும் நட்பாய் பேசினார்கள். சேலத்தை சேர்ந்தவர். நவராத்திரிக்கு அவர்கள் வீட்டுக்கு போனோம்.
    எங்கள் மகன் வீட்டு நவராத்திரிக்கு வந்தார்கள். அடுத்தடுத்து எல்லா விழாக்களில் அவர்களை கண்டு பேசுவோம்.நட்பு இன்னும் அதிகமானது.

    எங்களை ஒவ்வொருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அன்பு அழைப்புகள் கொடுத்தார்கள்.
    உலகம் அன்புமயமானது .

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் கவிப்புயல் அதிரா, வாழ்க வளமுடன்.

    ஹலவீன் ஹொஸ்ரியூம்... போட்ட குழந்தைகள் அழகு..//

    நாடககதாபாத்திரத்திற்கு ஏற்ற உடைகள் கடை கடையாக அழைந்து வாங்கிய உடைகள் அதிரா, வாங்கி மேலும் சில வேலைப்பாடுகளை தைத்து அழகு படுத்தினாள் மருமகள்.
    மற்றவர்களும் அப்படித்தான்.

    சினிமா பாடல்களுக்கு உடைகளும் அப்படித்தான் வரைந்து கொடுத்து தைக்க சொல்லி பெற்றோர்கள் உழைப்பு வியக்க வைக்கும். குழந்தைகள் ஆடி, பாடும் போது அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி !

    குறுமுனி கொஞ்சம் உயரமாய் ! அருமையாக பேசினான் குழ்ந்தை.

    உங்கள் மகிழ்ச்சியான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ///எங்களை ஒவ்வொருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அன்பு அழைப்புகள் கொடுத்தார்கள்.
    உலகம் அன்புமயமானது .///

    எதை விதைக்கிறோமோ.. அதைத்தானே அறுவடை செய்வோம்ம் கோமதி அக்கா... அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறுவோம்ம்.. மரியாதையும் அப்படித்தான்.. நாம் மற்றவர்களை மதித்து நடக்கும்போது அவர்களும் நம்மை மதிப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நேரமும் பொழுதும் சுவாரஸ்யம்தான் போய்க்கொண்டு இருக்கிறது.
    சார் நாடகத்தில் வரும் தமிழ் வசனம் மட்டும் எழுதி கொடுத்தார்கள்.
    சாரிடம் வாழ்த்தை சொல்லிவிட்டேன் மகிழ்ந்து நன்றி சொல்ல சொன்னார்கள்.
    அந்த காணொளி சுட்டி பிறகு ஒரு பதிவில் வரும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நான் பார்த்து கருத்து கொடுத்து இருக்கிறேன் அந்த குறுபடத்திற்கு.
    வீட்டில் தமிழ் பேசினால் தமிழ் மறக்காது குழந்தைகளுக்கு.
    இங்கு பல மொழி பேசும் குழந்தைகளும் தமிழ் கற்றுக் கொள்வது சிறப்பு. அதை பாராட்ட, வாழ்த்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் துளசிதரன், வாழ்கவளமுடன்.
    அமெரிக்காவிலும் தமிழ் ! தேமதுரத் தமிழ்! அருமை இதைக்கூட தலைப்பாய் வைத்து இருக்கலாம் போல!

    பேரனையும், ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்தியதற்கு நன்றி.

    வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மையே ! இங்கு குழந்தைகள் பேசவும் எழுதவும் தான் கற்றுக் கொள்கிறார்கள். வீட்டில் வேறு மொழி பேசும் குழந்தைகளும் தமிழ் கற்பது மேலும் மகிழ்ச்சி.

    நம் ஊரில் ஒப்பனை கலைஞரை வைத்து உடைகள் மற்றும் ஒப்பனை செய்கிறார்கள்.
    இங்கு பெற்றோர்களே செய்து விடுகிறார்கள்.

    பாரதியார் பாடலை குழந்தைகள் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    மகன் நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்தான். மருமகள், கணவர், பேரன், மகன் எல்லலோரும் விழாவில் பங்கு கொண்டார்கள், நான் என் பங்கிற்கு விழாவை படம் எடுத்து உங்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தேன்.

    உங்கள் இருவர் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    பேரனை பற்றி சொன்னதற்கு நன்றி.
    தமிழ் பெற்றோர்களை வேறு மொழி பேசும் பெற்றோர்களும் சேவையில் பங்கு இருக்கிறது.
    சிறுத்தையாக நடித்த பெண் வீட்டில் செளராஷ்டிர மொழி பேசும் பெண், மலையாளம், தெலுங்கு பேசும் குழந்தைகளும் இருக்கிறார்கள். நடனத்தில் அயல் நாட்டு குழந்தை ஒன்றும் ஆடியது. தமிழ்பெண் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குழந்தை நடன பயிற்சி பெற்று ஆடியது , ஜிமிக்கு கம்மல் என்ற புதிய சினிமா பாடலுக்கு.

    //வெளிநாட்டில் தமிழ் கற்று பேசும் பிள்ளைகளின் கலப்படமில்லா உச்சரிப்பு நம்ம ஊரில் வளரும் பிள்ளைகளைவிட தெளிவாக இருக்குக்கா ..இந்த சிறுவர் சிறுமியர் நாளை அவர்களின் சந்ததிக்கு இதை எடுத்து செல்வார்கள்//

    நீங்கள் சொல்வது போல் நடந்தால் மகிழ்ச்சிதான்.

    கத்தோலிக்க அன்பர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீட்டுக்கு போய் குளிருக்கு இதமாய் பஜ்ஜி, டீ குடித்தோம். எனக்கு இருமல் இருந்தது குளிரில் அவர்கள் வீட்டுத்தோட்டம் பெரிது அனைத்து செடிகளும் வைத்து இருந்தார்கள். ஒமவல்லி இருந்தது என் மகன் என் அம்மா ஓமவல்லி இலை பஜ்ஜி போடுவார்கள் என்றான், உடனே நானும் போடுவேன் என்று வாழைக்காய், வெங்காய பஜ்ஜியுடன் ஓமவல்லி இலை பஜ்ஜியும் போட்டு தந்தார்கள்.

    அதனுடன் பழைய கிறித்துவ பாடல்களைபற்றியும் என் குழந்தைகள், நான் எல்லாம் கிறித்துவ பள்ளியில் படித்த அனுபவங்களை பேசி மகிழ்ந்தோம்.
    அவர்களை பாட சொன்னேன். இனிமையாக பாடி மகிழ்வித்தார்கள்.
    குழந்தைகள் தோத்திரம் சொல்லி ஆசிர்வாதம் செய்ய சொன்னார்கள்.

    அவர்களின் அன்பு மழையில் நனைந்தோம்.

    வீட்டுக்கு போகும் போது அவர்கள் வீட்டில் காய்த்த முருங்கைகாய், கத்திரிக்காய், கஷாயம் வைத்து குடிக்க முசு முசுக்கை, துளசி, ஓமவல்லி இலை கொடுத்தார்கள்.
    இரண்டு நாட்களாய் அந்த கஷாயம் சாப்பிட்டு சளி போய்விட்டது.


    நம்நாட்டு உபசரிப்பையும் மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.



    பதிலளிநீக்கு
  16. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //எதை விதைக்கிறோமோ.. அதைத்தானே அறுவடை செய்வோம்ம் கோமதி அக்கா... அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறுவோம்ம்.. மரியாதையும் அப்படித்தான்.. நாம் மற்றவர்களை மதித்து நடக்கும்போது அவர்களும் நம்மை மதிப்பார்கள்...//

    உண்மைதான்.

    ஏஞ்சலின் கொடுத்த கருத்துக்கு ஒரு அன்பரின் அன்பு மழையில் நனைத்த விவரம் எழுதி இருக்கிறேன் பாருங்கள்.

    நீங்கள் கொடுத்த பின்னூட்டத்திற்கு பொருத்தமாய் இருக்கும்.

    நண்பர் அருள் வீட்டில் நடந்த அன்பு உரையாடல் பற்றி .

    மீள் வருகைக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அருமை. குழந்தைகளின் திறன் வியக்க வைக்குது

    பதிலளிநீக்கு
  18. இங்கே விட வெளிநாட்டில் இருக்கும் போது தேசப்பற்றும் மொழி பற்றும் அதிகமாகிவிடும் என்று சொல்வார்கள் கலாச்சார விழாவை நடத்தும் போது மிக நயத்துடன் நடத்த படுகிறது போல் அருமை எல்லா படங்களும் உங்கள் பேரனுடன்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
    ஆமாம், நீங்கள் சொல்வது போல் கலாச்சார விழாவை சிறப்பாக நடத்துகிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ராஜி , வாழ்க வளமுடன் .

    சிறு குழந்தைகளின் திறமை வியக்க வைத்தது தான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. படங்கள் ஒவ்வொன்றும் அழகு
    குழந்தைகள் போற்றுதலுக்கு உரியவர்கள்
    நன்றி சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. உண்மையில்...


    மனம் மகிழும் விழா தான் அம்மா...

    அழகிய படங்களுடன் மகிழ்வாக உள்ளது....

    பதிலளிநீக்கு
  24. உலகம் அன்புமயமானது என்பதை பதிவும் நிரூபிக்கிறது. அயல் நாட்டிலிருந்தாலும் தாய்மொழியை தம் பிள்ளைகள் கற்கவும், தம் கலாச்சாரப் பெருமைகளை அவர்கள் உணரவும் கடைபிடிக்கவும் அவர்களுடன் தங்கள் கணவர், மருமகள், மகன், பேரன் மற்றும் தங்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது சகோ.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன். குழந்தைகள் மழலை மொழியில் பேசியது , ஆடியது எல்லாம மனதை மகிழ செய்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் நிலாமகள், வாழ்க வளமுடன்.
    தாய் மொழி கல்வி கற்பது மிகவும் மகிழ்ச்சி எங்களை போன்ற பெரியவர்களுக்கு.
    எல்லோரும் தங்கள் பொழுதுகளை பயனுள்ளதாக கழித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. 'நிகழ்ச்சியும், சொன்ன விதமும் படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University has left a new comment on your post "மனமகிழ் விழா":

    குழந்தைகளையும், அவர்களுடைய திறமைகளையும் பார்க்கும்போது வியப்பா உள்ளது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    குழந்தைகள் மறக்காமல் ஒவ்வொரு நிகழ்ச்சிகளில் தங்கள்
    திறமையைக் காட்டியது மகிழ்ச்சியாக இருந்தது சார்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


















    பதிலளிநீக்கு