திங்கள், 11 ஜனவரி, 2016

ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவில்

பெரியாழ்வார் கட்டிய 11 நிலைக் கோபுரம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரம்  நம் அரசின் அடையாள சின்னம்.

மார்கழி என்றாலே பாவை நோன்பும், திருப்பாவையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் எல்லோருக்கும் நினைவில் வரும் இல்லையா?


கோதை பிறந்த ஊர் கோவிந்தன்  வாழும் ஊர் என்று சொல்லப்படுகிற ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு போய் இருந்தோம் போன மாதம்.  சிவகாசியில் அப்பா பணி புரிந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் ஆண்டாள் தரிசனம் செய்யப்  போவோம். பல வருடங்கள் கழித்து மீண்டும் தரிசனம். மலரும் நினைவுகள்  வந்து சென்றது. 

கோவிலில் பல மாற்றங்கள். வழி எல்லாம் பால்கோவா கடைகள்,(அம்மனுக்குத் திரட்டுப்பால்தான் பிரசாதம்) துளசி மாலை வாங்கச் சொல்லி துரத்திக் கொண்டே வரும் பெண்கள், ஆண்கள்.  முதலில் எங்கு போகவேண்டும் எப்படித் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். 

         
                     



                                                       ஆடிப்பூரக் கொட்டகை  
 நன்றி - பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்

 முதலில் ஆண்டாள் சன்னதி. ”நாச்சியார் திருமாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அவள் சிறுவயதில் ஆடி, ஓடிக்களித்த இடமே இப்போது ஆண்டாள் சன்னதி. துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் பிரகாரத்தில்  லட்சுமிஹயக்கீரவர் . அங்குள்ள பட்டர் வாங்க பெரியாழ்வார் கும்பிட்ட ஸ்வாமி முதலில் இவரை வணங்கி விட்டு போங்கள் என்கிறார்.

அப்புறம் ஆண்டாள் தரிசனம். 

ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள்.  மூலவர்கள் போலவே  மூன்று உற்சவ மூர்த்திகளும்  முன்புறம் உள்ளனர், இவர்கள்  இருக்கும்  இடம்   முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு   சுருக்கமாய்த் தலவரலாறு  சொல்கிறார்.

  உற்சவர்கள்  பின்புறம் இருக்கும்   மூலவர்களை மறைக்கிறார்கள். உற்று உற்றுத் தான் பார்க்கவேண்டும் மூலவர்களை. முதலில் ஆண்டாளைப் பார்த்தேன்,  ஆண்டாள் கையில் கிளி இருக்கிறதா என்று? ஏன் என்றால்    தினம் தினம் புதிதாக இலைகளால் செய்யப்பட்ட கிளி , மாலையில் சார்த்தப்பட்டுக் காலை வரைதான் இருக்குமாம் ஆண்டாள் கைகளில் , அப்புறம் பக்தர்களுக்குக்  கொடுத்து விடுவார்களாம். 
                              
               முன்பு ஆனந்தவிகடனில் வந்த படத்தைக் கிழித்து வைத்து இருந்தேன்.

                      நமது வேண்டுதலைக் கண்ணனிடம் சேர்க்கும் கிளி

 நாம் கொடுக்கும் துளசி மாலையை ஸ்வாமிக்குப் போட்டு விட்டு  ஆரத்தி காட்டி விட்டுத் துளசி மாலையை எடுத்து  கொடுத்தவர் கழுத்தில் போட்டு விடுகிறார்கள்.  அதைப் போட்டுக் கொண்டே கண்ணாடிக் கிணறுக்கு போகிறார்கள். பெண்கள் மாலையைப் போட்டுக் கொண்டு சுற்றி வந்தால் கல்யாணம் ஆகுமாம். 

அடுத்த தரிசனம்  ஆண்டாள் ஸ்வாமிக்கு பெரியாழ்வார் தொடுத்த மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு. இப்போது கண்ணாடிமூடியால் மூடி ஒரு உண்டியல் பெட்டியாக மாறி விட்டது . நான்கு பக்கம் வாசல் வைத்து அதன் வழியாகப் பணம் போடப்படுகிறது , டாலர் எல்லாம் அதில் இருந்தது. (பணம் தண்ணீரில் விழாது.  அது போன்று அமைத்து இருக்கிறார்கள்). கிணற்றைப் பார்க்க முடியவில்லை. சின்ன சதுரமாய்த் தெரிகிறது கிணறு  மிக கவனமாய்ப் பார்த்தாலும் தண்ணீர் தெரியவில்லை. அடுத்து கண்ணாடி அறை நடுவில்  ஆண்டாள் படம்  வைத்து இருந்தார்கள்.சுற்றி வர கண்ணாடி  வைத்து இருந்தார்கள். கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு சுற்றி வந்து வணங்கி வெளியில் வந்தோம். இங்கும் கட்டணம் உண்டு.

பின் ஆண்டாள் சன்னதி சுற்றி வரும் போது உள்ளே உள்ள உற்சவர்கள் போலவே சுவற்றில் திருவுருவங்கள் இருக்கிறது- ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார். அதன் பக்கத்தில் உள்ள வயதான பட்டர் நமக்குக் கதை சொல்கிறார்,  கோதை பிறந்த கதை, விஷ்ணு சித்தர் கருடாழ்வாராக அவதாரம் எடுத்தகதை , மற்ற கோவில்களில் எதிரில் இருக்கும் கருடன்  இங்குமட்டும் தான் உடன் இருக்கிறார்.  அதற்குக் காரணம் ரங்கமன்னாருக்கு அவர் மாமனார் என்பதாலாம்.  மூவரும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாம். ஆண்டாள் சன்னதி பிரணவ மந்திர  அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறதாம். ஆண்டாள் சன்னதியில் 108 திவ்ய தேசங்களின் படம் வரையப் பட்டு இருக்கிறது -அழகாய். இருக்கிறது.
                     
                                         ஆண்டாள் அவதரித்த துளசி வனம்.

அடுத்து ஆண்டாள் பிறந்த துளசிவனம். பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் அழகாய் இருக்கிறது. ஒரு தொட்டியில் துளசிச்செடி முன்புறம்  வைத்து இருந்தார்கள். பின் புறம் ஆண்டாள் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்,  பட்டர் ஆரத்தி காட்டினார்.

 சன்னதியைச் சுற்றி அழகிய துளசிச் செடிகளும் மரங்களுமாகிய அழகிய தோட்டம்.


                                           
அழகிய துளசி வனம்
ஆண்டாள் கோவில் யானை -பெயர் தெரியவில்லை

 வடபத்திரசாயி ரங்கமன்னாருக்குத் தான் கோபுரம் பெரிதாக இருக்கிறது.   மூலவரைப் பார்க்கப் போக ஒரு பத்துபடி ஏறிப்போக வேண்டும்., பிடித்துக் கொண்டு ஏற  வசதியாக  கைப்பிடி இருக்கிறது.  பெருமாள் சயனகோலத்தில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய்க்  காட்சி அளிக்கிறார்.  பின்புறம் உள்ளே இருக்கும் மற்ற தெய்வங்கள் அழகிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.  பட்டர் பெரிய மூங்கில் தட்டில் துளசியை வைத்துக் கொண்டு வரும் பக்தர்களுக்கு  கொடுத்தார்.  ஆரத்தி காட்டவில்லை.

பெருமாள் சன்னதி எதிரில்  உள்ள (கோபாலவிலாசம்)  மண்டபத்தில் அழகிய மரவேலைப்பாட்டுக் கூரை,  
வடபத்திரசாயி சன்னதி செல்லும் வழி
உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதிக்காக புதிய இடம் கட்டி வருகிறார்கள் 
வாசல் முகப்பு
உள் பிரகாரம், நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டிட அமைப்பு
ஆண்டாளின்  வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளது விமானத்தில்

பெருமாள் சன்னதியிலிருந்து கோபுர தரிசனம்.
மரவேலைப்பாடு போல் கல்லில் அழகாய்ச் செய்த வேலைப்பாடு.   இருபுறமும் கடைகள் உள்ளன.


ஜனவரி 20 (2016) ஆம் தேதி  இக் கோவிலுக்கு கும்பாபிஷேகம்  நடைபெறப்போகிறது.  16ம் தேதி யாகசாலை பூஜைகள் துவக்கம். அம்மன் சன்னதி விமானத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி உள்ளனர். வாய்ப்பு இருப்பவர்கள் கண்டு களிக்கலாம்.
                                                         -----------------------------------------

பொங்கலுக்கு ஊருக்குப் போவதால்  முன்பே  பொங்கல் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன் எல்லோருக்கும். 


நான் வரைந்த கோலங்கள்.

காணும்பொங்கல் அன்று நாங்கள் செய்யும் சிறுவீட்டுப்பொங்கல் 


அனைவருக்கும்   பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள்  வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
----------------------------


47 கருத்துகள்:

  1. மிகவும் அழகழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு.

    மனதுக்கு மிகவும் இதமாகவும் இன்பமாகவும் உள்ளது.

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கங்களுடன் புகைப்படங்கள் அருமை நான் 1983 ஆம் ஆண்டு போனது பிறகு ஆண்டாள் என்னை அழைக்கவில்லை பொங்கல் வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அம்மா
    பார்க்க முடியாத ஆலயத்தை அழகிய படங்களுடன் அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்கவளமுடன்.
    பலவருடங்களுக்கு முன்பு பார்த்தீர்களா? இப்போது நிறைய மாறுதல்கள்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ரூபன், வாழ்கவளமுடன்.
    தமிழ்நாட்டுக்கு வரும் போது பார்க்கலாம்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பல வருடங்களுக்கு முன்பு சென்றது. பிரகாரத்தைச் சுற்றி வரையப் பட்ட அற்புதமான ஓவியங்கள் நினைவில் பதிந்திருக்கின்றன.

    மறக்காமல் தமிழக அரசின் இலச்சினையை நினைவு கொண்டீர்கள். கோபுரத்தின் எழில் கண்ணைக் கவர்ந்தது. அதுவும் அந்த யானை?.. முன்னம்பக்க வலது காலுக்கும் இடது காலுக்கும் உள்ள இடைவெளி அது உள் நுழையும் வேகத்தைச் சொன்னது.

    பின்னால் வரப்போகும் கீதாம்மாவுக்கு பதிவிலேயே ஒரு கேள்வி வைத்திருக்கிறீர்களே? "கீதாம்மா! மதுரை கோயில் யானை பேரும் ஸ்ரீரங்கம் கோயில் யானை பேரும் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானையின் திருப்பெயர் என்னங்க?"

    மர வேலைப்பாடு கண்ணைக் கவர்ந்தது. வழக்கம் போல புகைப்படங்கள் ஜோர்.

    கடைசி வரை வாசித்தவர்கள், உங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல மறந்திருக்க மாட்டார்கள் என்பது உளவியல் கணிப்பு. I think me the first!

    உங்களுக்கு, அரசு சாருக்கு, மற்ற உங்கள் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள், கோமதிம்மா!

    பதிலளிநீக்கு
  8. எப்படி இவ்வளவு நீளமாக எழுதத் துணிகிறீர்கள்.
    இரண்டு அங்கமாக்கினால் நல்லது போல எனக்குத் தோன்றுகிறது.
    வாசிப்பதைப் பாதியல் நிறுத்தி விடுவேன் நான்.
    நல்ல படங்கள் .
    இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  9. அழகிய படங்கள். 89 இல் நான் அங்கு வேலை பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன! பால் கோவா வாங்கினீர்களா!

    :))))

    பதிலளிநீக்கு
  10. பேரருள் பெறத் தக்க பதிவு!
    சூடிக் கொடுத்தாளின் சுடர் ஒளியை
    சுபம் தரும் வகையில் தந்தமைக்கு
    அடியேனின் அன்பின் நன்றி சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  11. பேரருள் பெறத் தக்க பதிவு!
    சூடிக் கொடுத்தாளின் சுடர் ஒளியை
    சுபம் தரும் வகையில் தந்தமைக்கு
    அடியேனின் அன்பின் நன்றி சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  12. படங்களும் பதிவும் அருமை கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  13. இனிய பதிவு. பொங்கல் வாழ்த்துகள் கோமதி மேம் :)

    பதிலளிநீக்கு
  14. இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் கோபால விலாசம் எனப்படுகின்ற மரவேலைப்பாடமைந்த மண்டபத்தை அதிகம் ரசித்துப் பார்ப்பேன். நன்றி. சற்றொப்ப இதனைப்போல ஒரு மண்டபத்தை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நன்றாக கவனித்து இருக்கிறீர்கள் படத்தை, கோவில் யானை படு வேகமாய் தான் வந்தது.
    நாங்கள் வேகமாய் நகர்ந்தோம், அதனால் அதன் பேர் கேட்க மறந்து விட்டது.
    முன்பே எழுதி வைத்த பதிவு. ஊருக்கு போக வேண்டி இருப்பதால் அந்த பதிவில் என் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன். கில்லர்ஜி சொன்னார் வாழ்த்து.
    உங்கள் கருத்துக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வேதா. இலங்காதிலகம்,வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துப்படி பகுதி பகுதியாக கொடுக்க முயல்கிறேன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அங்கு வேலைப் பார்த்தீர்களா?
    பக்கத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் பார்த்தீர்களா?
    பால்கோவா வாங்கி சுவைத்தோம்.
    உறவினர்கள் வீட்டுக்கும் வாங்கி சென்றோம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் யாதவன்நம்பி, வாழ்கவளமுடன்.
    நீங்களும் திருப்பாவையை தொடர்ந்து வழங்கி வருவதை படித்து வருகிறேன்
    உங்கள் சிறந்த பணிக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சாந்தி மாரியப்பன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்கவளமுடன்.
    திருநெல்வேலி செப்பறை கோவில், நெல்லை காந்திமதி அம்மன்
    கோவிலில் நடராஜர் சன்னதி, குற்றாலத்தில் சித்திரசபையில் எல்லாம் அழகான மரவேலைப்பாடு இருக்கும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாடங்கள்... கோயிலுக்கு சென்று வந்த உணர்வு அம்மா...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளையும் - ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோயிலையும் மறக்க முடியுமா!.
    அங்கே உள்ள சக்ரத்தாழ்வார் சந்நிதியை தரிசித்தீர்களா?...

    அருமையான தரிசனம்.. இனிய பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.
    சக்கரத்தாழவார் பஞ்சலோகத்தில் அழகாய் இருந்தார். தரிசனம் செய்தேன். மிகவும் பெருமை வாய்ந்தவர் என்றார் பட்டர், சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி.
    கோவிலின் ஒவ்வொரு பெருமைகளையும் குறிப்பிட்டு பதிவுகள் நிறைய போடலாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்.
    உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அழகான படங்களுடன் திருத்தலம் பற்றிய தகவல்கள் சிறப்பு. ஆண்டாள் கிளி குறித்து ஆனந்தவிகடனில் வந்தத் தகவலை இன்றும் பத்திரமாய் வைத்திருப்பது வியப்பு. பொங்கல் கோலங்கள் அழகு கைவண்ணம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  27. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  28. அன்பினும் இனிய சகோ
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  29. படங்கள் அற்புதம் அம்மா...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். கோவிலில் கொடுக்கப்படும் கிளியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது என்று போட்டு இருந்தது.
    அதனால் இந்த படத்தை கிழித்து பத்திரபடுத்தி வைத்துக் கொண்டேன்.
    கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி. .

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
    உங்கள் நல்வாழத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. தாமதமாகப் பார்க்கிறேன். அருமையான விபரங்களுடன் கூடிய பதிவு. ஆண்டாளின் உற்சவ விக்ரஹத்துக்குத் தான் கிளி சார்த்துவாங்க என்று எண்ணுகிறேன். அந்த அர்ச்சாவதாரம் தான் ஶ்ரீராமாநுஜர் வந்தப்போ அவரை, "என் அண்ணாரே!" என அழைத்ததாகச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.நீங்கள் சொன்ன விபரங்களை மீண்டும் அங்கு போனால் விசாரிக்க வேண்டும். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அண்மையில் நானும் சென்று வந்தேன். இரண்டு நாட்கள் திருப்பாவையின் வரிகளும் வார்ப்பும் மனதில் சுழன்றபடி இருந்தது. நல்ல படங்களுடனும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் மோகன்ஜி வாழ்க வளமுடன்.
    திருப்பாவை பாடலும் அதை அளித்த கோதையை மறக்கமுடியுமா?

    உங்கள் வர்வுக்கும் கருத்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. கோயிலுக்கு நேராக போய்வந்த உணர்வு.நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் விமலன் , வாழ்க வளமுடன்.
    உங்கள வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. மதுரையில் இருந்த பொழுது திருவில்லிப்புத்தூர் சென்றிருக்கிறேன். மறுபடியும் சென்றுவந்த அனுபவம் கிடைத்தது. நன்றி

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சிவகுமாரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. எப்படி இந்தக் கோயிலை மிஸ் செய்தோம்?!! அழகான கோயில் சென்றிருக்கிறோம் பல வருடங்களுக்கு முன். உங்கள் பதிவும் படங்களும் அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. கோவிலின் படங்களை மீண்டும் ஒருமுறை கண்டுகளித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம் மீண்டும் படங்களை கண்டு களித்தமைக்கு.

      நீக்கு
  45. தகவல்களுடன் மிக அருமையான படங்கள்! செல்லும் ஆவல் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    ஆமாம் ராமலக்ஷ்மி , ஸ்ரீவில்லிப்புத்தூர்
    கோயில் எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோன்றும் கோயில்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு