திங்கள், 14 மார்ச், 2016

அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்,திருவெண்காடு.

                    


            
                              முன் கோபுர வாசல்.


 கொடி மரமும் நந்தியும் முன் பக்கம் சிறு மண்டபத்தில் 


கொடி பிள்ளையார்

கொடி மரத்திற்கு பக்கத்தில் அக்கினி தீர்த்தம்
அக்கினி தீர்த்தம் அருகில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம்

சூரிய தீர்த்தம் அருகில் என் கணவர்
 கொடிமரம், நநதி,  கல்யாணமண்டபம்,  சுவாமி சன்னதிக்கு போகும் வழி



உள் கோபுர வாசல்

அம்மன் சன்னதி கோவில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. புதன் சன்னதியும் இங்கு இருக்கிறது

                     அகோரமூர்த்தி சன்னதிக்கு போகும் வழி

                                                உள் புறம்



நடராஜர் இருக்கும் சபை



அகோரமூர்த்தி உற்சவர் இருக்கும்   மண்டபம்.
                             
அகோரமூர்த்தி உற்சவர்


அகோரமூர்த்தி மாசி மாதம் பூரநட்சத்திரத்தன்று  தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவார். இந்த முறை குடமுழுக்கு  வேலைகள் நடப்பதால் திருவிழா இல்லை அவர் படி இறங்கவில்லை இருப்பிடத்திலேயே பூஜை. 


 சந்திர தீர்த்தம் அருகில் கொன்றை மரமும் ஒரு தலவிருட்சம்


நந்தி, அகோரமூர்த்தி, மருத்துவாசுரன், பிரம்மா தன் இரு துணையுடன்


திருவிழா சமயத்தில் இந்த மண்டபங்களில் கட்டளைக்காரார்கள் கூட்டமாய் பிரசாதம்,மற்றும்  பட்டு சாற்றுவதற்கு  தட்டு சாமான்களுடன் கூடி நிற்பார்கள்.  இங்கு நந்நீர் கிணறும், பிள்ளையாரும் கணபதியும் உள்ளனர் (காசி துண்டி விநாயகர் என்று பெயர்)இவர்களை வணங்கினால் காசியை  கும்பிட்ட பலனை விட வீசை பலன் அதிகம் கிடைக்குமாம். துர்க்கை அம்மன் சன்னதியும் உள்ளது. துர்க்கை பக்கத்தில் உள்ள மண்டபத்தில் நவக்கிரங்கள் ஒரே திசையில் பார்த்து இருக்கும்.
எதிரில் ஆதிசிவன், சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது



 அம்மன் சன்னதி முன்பு இருக்கும் சந்திரதீர்த்தம்
எதிரில் இருக்கும்  ஆலமரம் அதன் பக்கத்தில்  , ருத்திரபாதமும்  இருக்கிறது.
                                                         

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருவெண்காடு அருள்தரும் பிர்மவித்யாம்பிகை உடனுறை அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில் .

திருவெண்காடு  இத் தலம் சோழவள நாட்டில் காவிரிக்கு வடகரையில்  அமைந்த பதினோராவது தலமாகும்.  காசிக்கு சமமான ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று.

ஆதி சிதம்பரம் என்றும் சொல்லுவார்கள். சிதம்பரத்தில் அம்மனை தரிசிக்க கஷ்டப்பட வேண்டும் இங்கு அம்மனையும்  நடராஜரையும் அழகாய் பார்க்கலாம். சிதம்பரரகசியத்தையும் பூஜையின் போது சிரமப்படாமல் பார்க்கலாம்.

சிதம்பர நடராஜரையும், திருவெண்காடு நடராஜரையும் செய்தவர்  ஒருவரே என்பார்கள்.  சிதம்பரத்தில் நடராஜர் சபை பொன்னால் வேயப்பட்டு இருக்கும் இங்கு செம்பால் வேயப்பட்டு இருக்கும்.

சந்திர தீர்த்தம், சூரியதீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற மூன்று குளங்கள்,  அழகாய் அமைந்து இருக்கிறது.

சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி என்ற மூன்று மூர்த்திகளை கொண்டது.
நால்வரால் பாடப்பெற்ற தலம்.

சுவேதாரண்யேசுவர சுவாமி முன் இருக்கும் நந்திக்கு உடம்பில்  நிறைய  இடங்களில் வெட்டுப்பட்ட அடையாளங்கள் இருக்கும் , மருத்துவர் என்ற அசுரனுடன் நந்தி போரிடச்சென்ற போது  ஏற்பட்ட காயங்கள் என்பார்கள். அப்புறம் தான் சுவாமி அகோரமூர்த்தி வடிவம் எடுத்து  மருத்துவனை அழித்தார் என்பது புராணம் கூறும் வரலாறு.

அகோரமூர்த்தி கம்பீரமாய் பெரிய தோற்றத்துடன் காணப்படுவார். அவர் எதிரில் உள்ள மண்டபத்தில் மருத்துவ சம்ஹார கதை  சித்திரமாய் தீட்டப்பட்டு இருக்கும். சரஸ்வதி, இலக்குமி, பாலமுருகன் இருக்கிறார்கள்., மஹாலட்சுமி சுதைவடிவில் பெரிய தோற்றத்துடன் இருப்பார்.

அகோரமூர்த்திக்கு எதிரில் காளி நிறைய கைகளுடன் காட்சி அளிப்பார்..
அருகில் இருக்கும் மண்டபத்தில் நால்வர், அங்காளபரமேஸ்வரி, சுவேதவனப்பெருமாள் ஆகியோர் இருப்பார்கள்.


அம்மன் பிர்மவித்யாம்பிகை சகல நன்மைகளையும் அருளும் தாய். அம்மனை வேண்டிக் கொண்டு முக்குளத்தில் நீராடி வேண்டிக் கொண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் சன்னதியில் இரட்டை பிள்ளையார், பிள்ளை இடுக்கி அம்மன் , ஆடிப்பூர அம்மன், பைரவர் இருக்கிறார்கள்.

அம்மன் சன்னதிக்கு பக்கத்தில் புதனுக்கு தனி சன்னதி உண்டு. திருவெண்காடு கோவில், அகோரமூர்த்தி கோவில், சுவேதாரண்யேஸ்வர் கோவில் என்று முன்பு அழைத்தார்கள் இப்போது புதன் கோவில் என்று அழைக்கிறார்கள் மக்கள். நவக்கிரக தலத்தில் ஒன்றாகி விட்டது.  புதன் சன்னதி அருகில் பிரம்மசமாதி  உள்ளது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை சமயம் காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் சங்கமத்தில் குளித்து விட்டு, திருவெண்காடு முக்குளத்திலும்  குளிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாய் வருவார்கள்.

பட்டினத்தார் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.  பட்டினத்தார்க்குத் திருமணப் பேச்சுவார்த்தை இக் கோவிலில் நகரத்தார் சமூத்தினர்களால் இன்றும் நடத்திக் காட்டப்படும். பட்டினத்தாரை, முக்குளம் நீராடிப் பெற்றதாய் தாலாட்டுப்  பாடல் பாடுவார்கள்.  பட்டினத்தார் சிவதீட்சைஇங்குதான் பெற்றாராம்.

மெய்கண்டார் இங்குதான் அவதரித்தார். சைவசித்தந்த முதல்நூலை எழுதியவர்.

சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்ட பரஞ்சோதியாரின்  மனைவியார் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத்தாதியும் இங்குதான் பிறந்தார்கள்.
திருவெண்காட்டுக்கு வட எல்லையில் அமைந்து இருக்கும் மணிகர்ணிகா நதிக்கரையில்  ஸ்ரீபரமசிவேந்திரசரஸ்வதி சுவாமிகளின் சமாதி உள்ளது.

இந்திரன், ஐராவதம், சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்ட சிறப்பு உண்டு இக் கோவிலுக்கு.


திருவெண்காட்டு தலபுராணம் எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர். அவர் எழுதிய பாடல் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பாடப்படும்.

கருநிறமும் மணிமாலை புனையழகும்
வளையெயிறும் கவினைச் செய்ய
எரிசிகையும் நுதல்விழியும் நடைக்கோல
இணையடியும் இலக எட்டுக்
கரநிலவ மணிபலகை  வெண்டலைவாள்
கடிதுடியேர் சூல மேற்று
வெருமருத் துவனையடர் அகோரசிவன்
துணைப்பதச் சீர் விளம்புவாமே.

முன்பு நாங்கள் அங்கு இருந்த போது ஞாயிறு இரவு 7.30க்கு பூஜை நடக்கும்.அப்போது நடக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை.

தலவிருட்சமும் மூன்று இங்கு உள்ளது. ஒரு தல ஆலமரத்தின் கீழே ருத்திரபாதம் இருக்கிறது.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி மாதம், 28- ஆம் தேதி (11.4.2016)
திங்கட்கிழமை  காலை மணி 9.50க்கு மேல், 10.30க்குள் திருக்குடமுழுக்கு நடக்கப்போகிறது. முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம்.

நாங்கள் போனமாதம் போன போது குடமுழுக்கு வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. குருக்கள் பத்திரிக்கை அனுப்புவதாய் சொன்னார், இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்தார். அதனால் இந்த பதிவு.


                                                    வாழ்க வளமுடன்


29 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பதிவு. ஏராளமான படங்கள். படங்களில் பலவும் மிக அழகாக உள்ளன.பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்வேதா என்றால் வெண்மை என்று அர்த்தம் இல்லையா?.. கோயில் மண்டபத்தில் அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் சிற்[பக்கலையின் உச்சம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    சுவேதாரண்யம் என்றால் வெண்மையானகாடு .
    அதுதான் தமிழில் திருவெண்காடு. உங்களுக்கு தான் தெரியுமே.
    துர்க்கை, காளி, அகோரமூர்த்தி எல்லாம் சிற்பகலைக்கு சான்றுகள் சார்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. 2015 மாசி இந்தியா வருகை தந்த போது நான் நேரில் பார்வையிட்ட கோவில்.
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  7. கோயில் உலாவின்போது நாங்கள் பார்க்கவுள்ள கோயில். அதற்குமுன்பாக உங்கள் பதிவு மூலம் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்கள்... அருமையான பகிர்வு அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் காசிராஜாலிங்கம்,வாழ்க வளமுடன்.
    உங்கள் வ்ரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    பார்த்து வாருங்கள் அருமையான அழகான கோவில்.
    ஊரை விட்டு பிரியமனம் இல்லாமல் வந்தேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. >>> திருவெண்காடு கோவில், அகோரமூர்த்தி கோவில், சுவேதாரண்யேஸ்வர் கோவில் என்று முன்பு அழைத்தார்கள் இப்போது புதன் கோவில் என்று அழைக்கிறார்கள் மக்கள்.<<<

    மக்களை இந்த மாதிரி சொல்ல வைத்தவர்கள் மலிவான ஆன்மீக ஊடக வியாபாரிகள்...

    கொஞ்சமும் தயக்கமின்றி சனீஸ்வரன் கோயில், குரு கோயில் என்றெல்லாம் சொல்லப்படுவதைக் கேட்கும்போது நெஞ்சம் நடுங்குகின்றது..

    அருள்தரும் வைத்தீஸ்வரன் திருக்கோயில் ஆதீனத்தின் மேலாண்மைக்கு உட்பட்டது..

    அங்கேயும் வாசலில் செவ்வாய் கோயில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்..

    இந்த பெரும்பாவத்தை எங்கு சென்று நீக்குவது!..

    இப்படியான அழகிய படங்களுடன் தங்களுடைய பதிவைக் கண்டு வெகுநாட்களாகின்றன..

    மிகவும் மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் மக்களை புதன் கோவில் என்று சொல்லவைத்தவர்கள்
    ஆன்மீக ஊடக வியாபாரிகள் தான். நாங்கள் அங்கு இருந்த போது (1973 லிருந்து 1980 வரை)
    கோவில் மிக அமைதியாக ஆரவாரம் இல்லாமல் இருந்தது. புதன் பரிகார ஸ்தலம் என்று விளம்பரம் செய்தபின் தான் புதன் கோவில் ஆச்சு. புதனை தரிசிக்க வருபவர்கள் புதனை மட்டும் தரிசித்து விட்டு போகும் காலமும் ஆகி விட்டது.
    சில பல காரணங்களால் வலை பக்கம் வர இயலவில்லை. இனி முடிந்த போது வருவேன்.
    உங்கள் விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ச்வேதாரண்யம் என்பதை முதல் தடவை படிக்கும்போது வேதாரண்யம் என்று படித்து விட்டு, என்னது, நான் வேலை பார்த்து வந்த ஊர் வேதாரண்யத்தில் இது போன்ற கோவில் இல்லயே என்று நினைத்தேன்.

    மறுமுறை படித்தபின் தான் ஸ்வேதா ரன்ய ஸ்தல வர்ணனை என்று தெரிந்தது.

    பதிவில் உள்ள எல்லா படங்களும் அருமையாக இருக்கின்றன.
    புதன் க்ஷேத்திரத்திற்கு சென்று வந்த மன நிலை ஏற்பட்டது.

    மீனாக்ஷி பாட்டி.
    subbu thatha

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சூரி சார் மீனாக்ஷி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தெளிவான, அழகிய புகைப்படங்கள். இந்த ஊரைச் சேர்ந்த ஜெயாமன் எனும் பாடகர் ரொம்ப ஃபேமஸ்! திருவெண்காடு ஜெயராமன்.

    பதிலளிநீக்கு
  17. படமும், பகிர்வும் அருமை நன்றி

    பதிலளிநீக்கு
  18. வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீளப்பதிவு வாழ்த்துக்கள் தொடர.

    பதிலளிநீக்கு
  19. 10 வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். பட்டிணத்தார் பிறந்த ஊரல்லவா இது!
    புகைப்படங்களும் தகவல்களும் அருமை! அதுவும் முன் கோபுர வாசல் மிக அழகு!திருவெண்காடு நான் பிறந்த ஊர் என்பதால் இந்த ஊரில் சற்று ஈடுபாடு அதிகம்!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் இசை பிரியர் ,
    திருவெண்காடு ஜெயராமனை மறப்பீர்களா?

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் உமையாள் வாழ்க வளமுடன்.
    நலமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    பலவித காரணத்தால் வலைத்தளம் பக்கம் வர இயலவில்லை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் பிறந்த ஊரா? மிகவும் நல்ல ஊரில் பிறந்து இருக்கிறீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. Anuradha Prem has left a new comment on your post "அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்,திருவெண்க...":

    அழகான அருமையான கோவில்...தகவல்களுக்கு நன்றி ...

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    போனில் உங்கள் கருத்தைப் படித்து விட்டு பப்ளிஸ் செய்ய மறந்து விட்டேன்
    அப்புறம் செய்தால் பப்ளிஸ் ஆக மறுக்கிறது. அதனால் காப்பி செய்து பேஸ்ட் செய்து இருக்கிறேன் மன்னிக்கவும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அழகானகோயில் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள். மிக்க நன்றி பகிர்விற்கு சகோ..

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு