செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இடங்கழி நாயனார் கோவில்

                      

                    
நாங்கள் சென்றவாரம் சனிக்கிழமை கொடும்பாளூரிலே உள்ள இடங்கழிநாயனார் கோவில் சென்று இருந்தோம். நல்ல அமைதியான  இடம், மரங்கள் சூழ்ந்து  பறவைகளின் பலதர்ப்பட்டஓசை நிறைந்த இடமாய் இருந்தது.

ஆடு மேய்க்கும் ஒரு அம்மா, நந்தியெம்பெருமானை சுற்றி வணங்கி கொண்டு இருந்த ஒருவர், விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள், மற்றும்  நாங்கள் இருவர்  மட்டுமே அந்த வளாகத்தில்.

இடங்கழிநாயனார் வரலாறு:-

கொடும்பாளூரிலே வேளிர் குலத்தில் பிறந்த மன்னர்  இடங்கழியார். அவர் ஆட்சியில் சைவம் தழைத்தோங்கியது.திருக்கோவில்களில் பூஜை சிறப்பாக நடந்தது.

அவ் ஊரில் ஒரு சிவனடியார்  இருந்தார் அவர் நாள்தோறும் அடியார்களுக்கு மாகேசுரபூஜை(அமுதுபடைத்தல்)செய்வதை நித்திய கடனாய் செய்து வந்தார்.  அப்படி செய்து வரும் போது அவருக்குப்  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு அச்செயலைத் தொடரமுடியவில்லை அன்று இரவே   இடங்கழியாருடைய மாளிகைக்குச் சென்று , நெற்குதிரில் இருந்த நெல்லை எடுத்து வந்தார். அப்போது காவலர்கள் அவரைக் கைது செய்து மன்னர் இடங்கழியார் முன் நிறுத்தினர், ஏன் திருடினீர் ? என்று  அரசர்  சிவனடியாரைப் பார்த்து கேட்ட போது, அடியார்களுக்கு  நாள் தோறும் அமுதுசெய்வித்து வந்தேன். பணத்தட்டுப்பாட்டால்  செய்யமுடியவில்லை ,  அந்த செயல் தடை படக்கூடாது என்று திருடினேன் என்றார் சிவனடியார்  , இதைக் கேட்டவுடன் மனமிரங்கி  நெற்களஞ்சியத்தை திறந்து அனைத்தையும் எடுத்து கொள்ளச் சொன்னார், மன்னர். பொருள் உதவிகளும் செய்தார்.  நீண்டகாலம் நல்லாட்சி செய்து சிவனடி சேர்ந்தார் அரசர். இடங்கழிநாயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.


                      
எங்கு நிதி பெற்று கோவில் கட்டப்பட்டது என்ற விபரம்


இடங்கழிநாயனார் பற்றிய பெரியபுராண பாடல்கள் அடங்கிய கல்வெட்டுக்கள்.


நல்ல உயரம் நந்தி, சுற்றி வரும் பக்தரை விட உயரம் தானே!
நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்



அன்னதான மண்டபமாய் இருந்திருக்கலாம்,  இப்போது உபயோகத்தில் இல்லை போலும் இந்த வீட்டைச்சுற்றி புதர்மண்டி கிடந்தது.

இடங்கழி நாயனார் கோவிலின் பக்கம் இந்த  சத்திரம் போன்ற வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 


அங்கு மண்டி போய் இருந்த  புதர்ச்செடி ,கொடிகளை விலக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் நல்ல வெயில் ஒவ்வொருவர் கையிலும், கம்பு, செங்கல் இருந்தது. என்ன தேடுகிறீர்கள் ? புதர்களுக்கு இடையில் என்று கேட்டால் அடித்த ஓணானை என்று பெருமையாக காட்டுகிறார்கள்.அய்யோ ! பாவம் அடிக்கலாமா? என்றால் இது கெட்டது அடிக்கலாம் என்கிறார்கள் வீட்டில் திட்ட மாட்டார்களா? என்று கேட்டால் அவர்கள் வேலைக்கு போய் இருக்கிறார்கள் வீட்டில் யாரும் இல்லை, அவர்களுக்கு தெரியாது ஆன்ட்டி என்றார்கள். சனிக்கிழமை என்பதால் இவர்களுக்கு விடுமுறை.

இளங்கன்று பயம் தெரியாது என்பதை உறுதி படுத்துவது போல்  இருந்ததுஅவர்கள் செயல்.ஏரிக்கரை, புதர்கள் ஆலமரத்தின் விழுதுகளில் ஆட்டம், என்று இருந்தது.

நம் குழந்தைகளை வெயிலில் போகாதே, அங்கே, போகாதே, இங்கே போகாதே என்று வளர்க்கிறோம், இவர்கள் வெயிலோடு விளையாடி, மகிழ்ச்சியாக ஆரோக்கியமாய் இருக்கிறார்கள்.

ஆன்ட்டி வருகிறீர்களா? அங்கு ஒரு குகை இருக்கு, பெருமாள் கோவில் இருக்கிறது என்றார்கள் என் கண்வர் வேண்டாம் இன்னொரு முறை பார்ப்போம், நேரம் ஆகி விட்டது என்றார்கள்.

அந்தக் காலத்தில் ஓணானை அடித்தால் காசு கிடைக்கும் என்பார்கள் நம்ப மாட்டேன்.
நாங்கள் காரில் ஏறும் போது இந்த சிறுவர்கள் காசு கொடுங்க ஆன்டி ஏதாவது வாங்கி
 சாப்பிடுகிறோம் என்று கேட்டார்கள் நாங்கள் கொடுத்தோம் அந்தக் காலத்தில் சொன்னது போல் ஓணானை அடித்த்வுடன் காசு கிடைத்து விட்டதோ என்று நினைப்பு வராமல் இல்லை.

இவர்கள் பெரியவர்கள் ஆனதும் தங்கள் நண்பர்களுடன் சிறுவயதில் ஆடி களித்த நாட்களை சொல்லி மகிழவார்கள். அவர்களை ஒற்றுமையாய் இணை பிரியாமல் இருக்க வாழ்த்தி வந்தோம்.

                                                       வாழ்க வளமுடன்!


திங்கள், 20 ஜூலை, 2015

குறிஞ்சி ஆண்டவர் கோயில்


குறிஞ்சி ஆண்டவர் கோவில்
    கொடைக்கானலில் பூக்கும் அழகிய மலர்களால் ஆன அர்ச்சனைக்கூடைகள் 
வெளிச்சுற்று கோபுர சுவர் அழகுபடுத்தப்படுகிறது
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள்  பூக்கும், இந்த குறிஞ்சி ஆண்டவர் கோவில் கொண்டுள்ள பகுதியில். குறிஞ்சிப் பூ பூக்கும் சமயம் குறிஞ்சி ஆண்டவருக்கு சமர்ப்பிக்கப்படும்.

சிறு வயதில் பள்ளியிலிருந்து சுற்றுலா வந்தோம், குறிஞ்சி பூ பூக்கும் சமயம் .அந்தப் பூக்களைப் பத்திரமாய் அட்டையில் ஒட்டி அதன் மேல் கண்ணாடி கவர் ஒட்டி பள்ளியில்  சுற்றுலா வராதவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தது  நினைவுக்கு வந்தது.

                                            குறிஞ்சிப் பூ- படம், (நன்றி - கூகுள் )
குறிஞ்சி முருகன் கோவிலை லீலாவதி என்பவர் கட்டி இருக்கிறார், இப்போது பழனி கோவிலின் உப கோவிலாக பராமரிக்கப்படுகிறது.
மிகவும் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் குருக்கள் , பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. 

 கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை , அதனால்  கோவிலிருந்து தூரத்தில் தெரியும் பழனி மலையின் அழகிய காட்சி, கோவில் வாசலில் இருக்கும் கடைகள் , நம் ஊர் பக்கம் பார்க்க முடியாத  சிட்டுக்குருவி, அங்கு மரத்தில் படர்ந்த கொடியில் வித்தியாசமான காய் இவற்றை இங்கு காட்சி ஆக்கி இருக்கிறேன்.
யானை யானை! அம்பாரி யானை!
வெட்டி வேர் யானை முகன்
மரத்தில் செய்த அழகிய   கலைப் பொருட்கள்
பளிங்குச் சிலைகள்
வீட்டில் தொங்க விட  சரவிளக்குகள், ஊதுபத்தி ஸ்டாண்டு, அழகிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள்.

சிரிக்கும் புத்தர்
வித்தியாசமான காய்
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவியின் மஞ்சள் மூக்கு தெரியுதா?
தூரத்தில் இருக்கும் இரண்டு  மலைகள் - பழனி மலை, இடும்பன் மலை.
                                             பனி மூட்டத்தில் எடுத்தது.

                                                             வாழ்க வளமுடன்.
                                                              =================

வியாழன், 16 ஜூலை, 2015

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்




கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற  முருகன் தலம் . இந்த ஊரே பாறையின் மீது அமைந்து உள்ளதாம். நாங்கள் போனமாதம் போய் இருந்தோம்.


”கோவில் போகும் வழி எல்லாம் பாதை கொஞ்சம் மோசமாக இருக்கும் மரங்கள் அவ்வப்போது விழும் ஆனால் உடனே அப்புறப்படுத்தி
விடுவார்கள் ” என்றார் எங்கள்  டிரைவர். சில இடங்களில் அவர் சொன்னது போல் வழியில் சில இடங்களில்  மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கோவில் குருக்கள் கொடைக்கானலில் இருந்து தான் வருகிறார். 

நாங்கள் போனபோது குருக்கள் கோயிலில் இருந்தார்,  குழந்தை வேலப்பரை மிக அழகாய்  விபூதி அலங்காரம் செய்து இருந்தார்.  அன்று சஷ்டி என்றும் மாலை சஷ்டி பூஜை செய்யும் குழுவினர் வருவார்கள்  என்றும் அபிஷேகம் நடக்கும் என்றும் குருக்கள் சொன்னார். ஆஹா! நம்மை சஷ்டி அன்று முருகன் அழைத்து இருக்கிறாரே! என்று  சொல்லிக்கொண்டு இருந்த போது அதைக் கேட்ட குருக்கள் ,”ஆமாம் இந்த  முருகன் நினைத்தால் தான் இங்கு வர முடியும்” இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம்  என்றார்.   ”கோவில் வாசல் வரை வந்தாலும்  தண்ணீர் குடித்து வரலாம், சாமான்கள் வாங்கி வரலாம் என்று போய் விடுவார்கள்  அவர்கள் திரும்பி வரும் போது நடை சாத்திய நிகழ்வுகள் உண்டு” என்றார். உடனே நாங்கள் நம்மை  அன்றே அவரை வணங்க அனுமதித்ததற்கு நன்றி கூறி  மீண்டும் மனம் மகிழ்ந்து வணங்கினோம். மூன்று நாட்களாக ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தபோதும் இன்வெர்ட்டர் போட்டு நாங்கள் பார்க்கும்படி ஒளியேற்றினார்.

 பழனி மலை  முருகன் போல இவரும் நவபாஷணத்தால் செய்யப்பட்ட சிலை. போகரால் செய்யப்பட்டது என்றும் சொன்னார். தீர்த்தம் கொடுத்தார்கள் பால் என்று நினைத்து குடித்தால்  பஞ்சாமிர்த தீர்த்தம் மிக ருசியாக இருந்தது. இது தான் கோவில் சிறப்பாம்.   முருகனுக்குச் செய்திருந்த அந்த ராஜ அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்  போன்று இருந்தது. ”அலங்காரம் மாலை கலைக்கப்படும், மீண்டும் அபிஷேகம்” என்று அவர் கூறியபோது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. மீண்டும் அழகாய் அலங்காரம் செய்வார்- இருந்தாலும் இந்த மனது இருக்கிறதே! அப்படியே இருக்கக்கூடாதா  என்று நினைக்கத்தான் செய்தது.
அருள்மிகு குழந்தை வேலப்பர் என்பது இத் தலத்தின் இறைவன் பெயர்அலங்கார வளைவு நேரே இருக்கும் வாசல்
குழந்தை வேலப்பர் சன்னதி முன் கொடி மரத்தோடு மற்றொரு வாயில் ,அதன் அருகில் பிள்ளையார் சன்னதி

தம்பி போய் வந்து அனுப்பிய படத்தில்  கொடிமரம் புதிதாக  இருந்தது அதனால் அதையும் இதில்  சேர்த்து விட்டேன்.( 21-5- 2025 )

வேலப்பர் சன்னதி விமானம்
இடும்பன் சன்னதி மற்றும் , சிவன் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிகள் உள்ளன

அருணகிரிநாதர்  திருப்புகழ் பாடல்

வெகு சுத்தமாய் பராமரிக்கப்படுகிறது

சிவன் சன்னதி

இடும்பன், அருணகிரிநாதர், சிவன் சன்னதிகள் 
மரத்தடியில் நாகர் 
நுழைவு வாயில்
கோவிலின் முன்புறம் அழகிய சிறு தேர்
ஊரின் அழகிய தோற்றம்

கோவிலுக்கு கொடைக்கானலில் இருந்து பேரூந்து வசதி உண்டு. 

வாழ்க வளமுடன். 
------------------

சனி, 7 மார்ச், 2015

பெண்மையைப் போற்றுவோம் !

நாளை  சர்வதேச மகளிர் தினம்:-

//பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.

அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.//

நன்றி- தினகரன்.

மகளிர்தினத்தை சிறப்பு செய்யும் விதமாய் நான் சந்தித்த, படித்த சில பகிர்வுகள் இங்கு:-

போன மாதம் மதுரை போய் இருந்தேன் அப்போது  பள்ளி அருகில்  கடைவிரித்திருந்த அம்மாவை பார்த்தவுடன் என் இளமைக்கால நினைவுகள் வந்தன. அவர்களுடன் பேசியபோது  கிடைத்த சில செய்திகள் :-





பள்ளிப் பருவத்தில் குழந்தைகளுக்கு வீட்டில் எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தாலும் பள்ளி அருகில் விற்பதை வாங்கித் தின்றால் தான் மகிழ்ச்சி , திருப்தி ஏற்படும்.
பள்ளி அருகில் தான் முன்பு எவ்வளவு விற்பனைக்குக் காத்திருக்கும் ! ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூப் போல் துருவி குச்சியில் வைத்து (கலர் கலராக பாட்டில்களில் இருக்கும் கலர்களை)நாம் கேட்கும் கலர்களை அதன்மேல் ஸ்பிரே செய்து தருவார்கள். கமர்கட், தேங்காய்பர்பி, கடலைமிட்டாய், மாங்காய், நெல்லிக்காய், தேன்மிட்டாய், இலந்தவடை, குச்சிமிட்டாய், பென்சில் மிட்டாய் , சேமியா ஐஸ், பால் ஐஸ், இன்னும் எத்தனை எத்தனை வகை ஐஸ்கள்.
இப்போது சுத்தம் சுகாதாரம் என்று பள்ளி அருகில் எதுவும் விற்கக் கூடாது என்று  சொன்னதால் குழந்தைகளை இடைவேளையின் போதும் வெளியில் விடுவது இல்லை.
பள்ளியின் வாசலில் சுத்தமாக பாட்டில்களில் மிட்டாய், பொரிஉருண்டை, மற்றும் பாக்கெட்களில் உள்ள தின்பண்டங்களை வைத்துக் கடைவிரித்து இருந்த அம்மாவிடம் பள்ளி பிள்ளைகள் வாங்கத் தடை உள்ளதே ! நீங்கள் இங்கு கடை போட்டு இருக்கிறீர்களே விற்குமா? என்று கேட்டால் பள்ளிக்கு கொண்டுவந்து விடும் பெற்றோர்களுடன் வரும் பிள்ளைகள் கேட்கும் , அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள். என் பேரப் பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்குக் காவலாக இங்கு இருக்கிறேன். தினம் 10 ரூபாய் விற்றால் போதும் அம்மா இங்கு, அப்புறம் பள்ளிவிட்ட பின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு பார்க் போய் விற்பேன் என்றார்கள்.
வயதான காலத்தில் தன் மகளுக்குப் பாரமாய் இருக்கக் கூடாது . அவளுக்கு உதவியாய் ஏதாவது சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

லட்சிய பெண்மணியைப் போற்றுவோம்.

இப்படி மகிழ்ச்சியுடன் குடும்பத்திற்கு உழைக்கும் பெண்மணியைப் போற்றுவோம்,

 வயது முதிர்ந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்கமல் தன்னால் முடிந்த உதவிகளை வீட்டுக்கு  செய்ய பனங்கிழங்கு விற்கும்  வயதான தாயை வணங்குவோம். 

கட்டிடத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு அம்மா - (என் போட்டோ வேண்டாம் தாயி என்று சொல்லி விட்டார்கள். )கொஞ்சம் சாமான்களை வைத்துக் கொண்டு நளபாகம் செய்து கொள்ளும் அம்மா வியக்க வைத்தார்.கட்டிடம் முடிவடைந்து விட்டது அதனால் வெளியில் சமைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்களாம். கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு  காவலுக்குப் படுத்துக் கொள்ளும் அம்மாவின்  கஷ்டங்கள் விலகி நன்றாக இருக்க வேண்டும்.

இந்தப் படம்  ’அமுதசுரபி’ இதழ் பொன்விழா ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற  ’விதைநெல்’- நாவலின் அட்டைப்படம். வயதானலும்  சுறு சுறுப்பாய் வேலை செய்யும் மூதாட்டி என்னை கவர்ந்தார்.

நம்பிக்கைக்குரிய சாதனை :_

//அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர்கள் அரிதாகி வரும் காலம் இது. அவரவர் வாழ்க்கையைப் பார்க்கவே நேரம் போதவில்லை என அலுத்துக்கொள்பவர்களும் அதிகம். இவர்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களுக்கு மரியாதை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திரிபுரா ஃபவுண்டேஷன். ஆபத்தான சூழ்நிலையில் துணிச்சலாக இறங்கி பிறரைக் காப்பாற்றிய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘ஹோப் ஹீரோ’ விருதுதான் அது. இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் குக்கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும் உண்டு! சாகச சந்தானலட்சுமி!

திருச்சி மாவட்டம், ஆதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆற்றில் மூழ்கப் போன இரண்டு தோழிகளைத் துணிச்சலாக ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இருக்கிறார்! 

‘‘அன்னிக்கு ஆத்துல அதிக தண்ணி போயிட்டு இருந்துச்சு. ரெண்டு புள்ளைகள் திடீர்னு ‘காப்பாத்துங்க’ன்னு கத்துனாங்க. ஒரு புள்ள காலு சேத்துக்குள்ள சிக்கிருச்சு... இன்னொரு புள்ள அதோட தோள் மேல உட்கார்ந்துருக்கு. அங்க நல்லா நீச்சல் தெரிஞ்சவ நான்தான். யோசிக்காம குதிச்சேன். எவ்வளவு இழுத்தும் ரெண்டு புள்ளைகளாலயும் வெளிய வர முடியல... வேற வழியில்லாம, ஆழமா நீந்திப் போய் சேத்து மண்ணை விலக்கிவிட்டேன். அஞ்சு நிமிசம் அப்படி செஞ்ச பிறகுதான் கால் ரெண்டும் வெளிய வந்துச்சு. அப்படியே தூக்கிவிட்டேன்’’ என துணிச்சல் சம்பவம் குறித்து விவரிக்கும் சந்தானலட்சுமியின் ஆசை - ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரி ஆகி சேவை செய்வது!

‘‘இன்னிக்கு நாட்டுல நிறைய வன்முறை நடக்குது. கொலை, கொள்ளை அதிகமாகிடுச்சு. இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்னா நான் போலீசாகணும்’’ என உறுதிபட பேசும் சந்தானலட்சுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகள். நீச்சல், மரம் ஏறுதல், யோகா உள்பட பன்முகத் திறமைகள் கொண்ட சிறுமியாக இவர் இருப்பதில் அம்மா பெரியநாச்சிக்குப் பெருமை... ‘‘சின்ன வயசுல இருந்தே பொறுப்பா வளர்ந்துட்டா. அடுத்தவங்களுக்கு ஏதாவது உதவின்னா முத ஆளா நிப்பா... இந்த விருது அவளுக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்’’ என்கிறார் அம்மா.

பொறுப்புள்ள புவனேஸ்வரி! :=

திருவள்ளூர் மாவட்டம், முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவரது அத்தை மகள் சுஜாதா மனவளர்ச்சி குன்றியவர். தனியாக எந்த ஒரு அன்றாடச் செயலையும் செய்ய இயலாது. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் அவளது பெற்றோர் புவனேஸ்வரியின் வீட்டில் படிப்பதற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த நாள் முதல் சுஜாதாவின் பெறாத தாயாகவே மாறி கவனித்து வருகிறார் புவனேஸ்வரி. பேச்சு, விளையாட்டு, உணவு என எல்லாச் செயல்பாடுகளுக்கும் புவனேஸ்வரி கூடவே இருந்து கவனித்து வருகிறாள். சுஜாதாவை குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, சீருடை அணிவித்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். எந்தக் கட்டாயமும் இன்றி, மனம் விரும்பியே இத்தனை  உதவிகளையும் சுஜாதாவுக்குச் செய்கிறார். 

பள்ளியிலும் கழிப்பறைக்கு கூட்டிச் செல்வது தொடங்கி அனைத்து உதவிகளையும் செய்கிறார். ‘‘அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயல் வேலைக்கு கூலியா போறாங்க. சின்ன வயசுல இருந்து சுஜாதாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன். எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியலை. அடுத்தவங்களுக்கு உதவி பண்றத என்னிக்கும் என் லட்சியமா வைச்சுருக்கேன். அவளுக்கு இன்னும் தனியா சாப்பிடத் தெரியாது. வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாது. நான் தினமும் சொல்லிக் கொடுப்பேன். இப்ப ‘அப்பா, அம்மா’ன்னு சொல்றா! நாம பேசறது அவளுக்கு புரியுது. 

பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டாங்கன்னா, இவளையும் கூட்டிக்கிட்டு பக்கத்து கிராமமான தாழ்வீடுக்கு மல்லிகைப்பூ பறிக்க போவேன். அதுக்குக் கிடைக்கிற கூலி எங்களுக்கு உதவியா இருக்கும். இந்த விருது கிடைச்சதுக்கு எங்க ஊர்ல எல்லாம் பாராட்டினாங்க...’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசும் புவனேஸ்வரியின் லட்சியம், ‘டாக்டராகி எல்லோருக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும். சாதி, மத வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்க உழைக்க  வேண்டும்’ என்பதே! //

நன்றி - தின்கரன் நாளிதழ்

உலக அமைதி ஏற்படவும், பசுமைபுரட்சியை வலியுறுத்தியும்  இவர் வரைந்த ஓவியத்திற்கு  கல்வி அமைச்சரிடம் பரிசும் பாராட்டும் பெற்றார்.

--நன்றி தினமலர்.



இப்படி நம்பிக்கைகளுடன் வாழும் குழந்தைகளையும் முதியவர்களையும் நல்ல பெண்மணிகளையும் வாழ்த்தி மகிழ்வோம். மகளிர் தினத்தில். மகளிர்தின வாழ்த்துக்கள்.


வாழ்க வளமுடன்.