காஞ்சி விநாயகர் விமானம்
கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பழைய கோவில்களைப் பழமை மாறாமல் கும்பாபிஷேகம் செய்யலாம். அப்படி ஒரு சில கோவில்கள் தான் பழமை மாறாமல் இருக்கிறது.
நம் வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளை அடித்து பழுது அடைந்தவைகளை சரி செய்வது போல் கோவில்களுக்கும் 12 ஆண்டுக்கு ஒருமுறை தெய்வசிலைகளுக்கு கீழ் உள்ள மருந்துகளைப் புதிதாக வைத்து, கலசங்களில் உள்ள தானியங்களை மாற்றி, கோபுரங்களில் உள்ள புல், செடிகளை களைந்து சுத்தம் செய்து மீண்டும் தெய்வங்களுக்கு ஹோமம் எல்லாம் செய்து, சக்தியை மேம்படுத்துவது என்பார்கள் கும்பாபிஷேகத்தை.
எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காஞ்சி விநாயகருக்கு 9 ம் தேதி கும்பாபிஷேகம் ஆனது. 6 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, , கணபதி ஹோமம், நவகிரஹக ஹோமம்,கோபூஜை, கஜபூஜை, தன் பூஜை எல்லாம் நடைபெற்றது. 7 -ம் தேதி , 8 -தேதிகளில் தினம் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று 9-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் ஆனது.
யாகசாலையில்தங்ககவசத்தில்காஞ்சிவிநாயகரின் கடம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
யாகசாலை
யாகசாலையில் பூஜை
மருந்து வெண்ணெயுடன் சேர்த்து இடிக்கப்படுகிறது.
யாகசாலையிலிருந்து மூலஸ்தான விநாயகருக்கு சக்தி ஊட்டப்படுகிறது.
யாகசாலை பூஜை நிறைவு பெறுகிறது
விநாயகமூர்த்தி கடத்திற்கு பூஜை நடக்கிறது.
கடம் புறப்பாடு
விநாயகர் விமானகலசத்திற்கு அபிஷேகம்
முன் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம்
கோவில் வரலாறு:
முன்பு ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் சைவ மரபில் தோன்றிய சாலிய பெருமக்கள் நெசவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வணிகம் செய்து வளமுடன் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் அவ்வூரை ஆண்ட மன்னனின் தீய எண்ணங்கண்டு , படையெடுப்புக்கு அஞ்சிய சாலிய மக்கள் ஒன்று கூடி காஞ்சிபுரத்தை விட்டு வேளியேற என்னும் போது அவர்கள் வணங்கி வந்த விநாயகர் பெருமான் தன்னையும் தங்களோடு அழைத்து செல்லுமாறு அவர்கள் கனவில் தோன்றி அசரீரி கூற்று மூலம் கூறவே அவர்களும் அவ்வூரைவிட்டு கிளம்பும் போது அவ்விநாயகர் பெருமானையும் தலையில் சுமந்து கொண்டு வந்தனர். வரும் வழியில் ஒருநாள் ஓரிடத்தில் இரவு விநாயகரை இறக்கி வைத்து விட்டுத் தங்கி மறுநாள் புறப்படும்போது விநாயகரை தூக்க முயன்ற போது அவ்விநாயகரை அசைக்க முடியவில்லை. விநாயகப்பெருமானே தமக்கென்று அவ்விடத்தைத் தேர்வு செய்து கொண்டு ஸ்தாபிதம் ஆகி விட்டார். அந்த இடத்திலேயே சாலியப்பெருமக்கள் ஒன்று கூடி விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வந்தனர். (அந்த இடம் தான் தற்போது மயிலாடுதுறை , கூறைநாடு பெரியசாலிய தெருவில் உள்ள ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம் ஆகும்,)
சாலிய பெருமக்கள் ஆலயத்தை சுற்றிலும் தங்களுக்கு வீடு அமைத்துக் கொண்டு குடி அமர்ந்தனர். அந்த இடத்திலேயே சாலியபெருமக்கள் குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து கூறைச் சேலைகளை உருவாக்கி வணிகம் செய்து பொருள் ஈட்டி சிறப்புடன் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான சிவநேசநாயனார் என்பவர் சாலிய குலத்திலே தோன்றியவர். இவர் சிரத்தையுடன் சிவத்தொண்டு புரிந்தவர். இவர் வழியில் வந்த சாலிய சமூகத்தினர்களுக்குச் சொந்தமான இவ் விநாயகர் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து கோயில் கொண்டுள்ளதால் ஸ்ரீ காஞ்சி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
-இதற்கு முன்பு நான் பகிர்ந்து கொண்ட
’விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை’ என்ற பதிவில் இட்சதீபம் நடந்த புனுகீஸ்வரர் கோவிலைப் பற்றி சொன்னேன் அல்லவா? அதுவும் இவர்கள் கோயில் தான். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் 1883 -ம் வருடம் சிவநேசநாயனார் மரபு வழி வந்த கூறைநாடு சாலிய மகா சமூகத்தால் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது என்று புனுகீஸ்வரர் கோவிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் காம்பீலி வட்டம் காம்பீலி நகரத்தில் தோன்றிய நேசநாயனார் சாலிய மரபில் வந்தவர். சிவனையும் சிவ அடியார்களை நேசித்தபடியால் இவர் சிவநேசநாயனார் என்று அழைக்கப்பட்டார். அவர் புனுகீஸ்வரர் கோவிலில் காம்பீலியிலிருந்து எடுத்து வந்த விநாயகரையும், தண்டாயுதபாணியையும் பிரதிட்டை செய்தார் என சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்கு இவர்கள் சிறப்பாக் குருபூஜை செய்கிறார்கள்.
சாலியர்களுக்கு சொந்தமான கோவில்கள்:
1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்
2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்
3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்
4செங்கழுநீர் விநாயகர் ஆலயம்
5.ஸ்ரீ வெள்ளதாங்கி அய்யனார் ஆலயம்
6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)
8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்
9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்
10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.
ஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.
காஞ்சி விநாயகர் கோவில் உட் பிரகாரத்தில் வரையப் பட்ட படங்கள்.
சிவக்குடும்பம்
வியாசபாரதம் எழுதும் பிள்ளையார்
அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்க்கும் காக்கைப் பிள்ளையார்
ஒளவையிடம் மெதுவாய் நிதானமாய் பூஜை செய், உன்னைக் கயிலைக்கு என் துதிக்கையில் கொண்டு விடுகிறேன் என்று சொல்லும் பிள்ளையார்.
ஒளவையார் அருளிய அகவல்
கோயிலுக்குள் மேல் கூரையில் 63 நாயன்மார்கள் ஓவியம்.
மூன்று நாட்களும் தேவார இன்னிசைக் கச்சேரி சிறப்பாக நடந்தது. சிவக்குமார் ஓதுவார் குழுவினரால்.
மயிலாடுதுறை வந்ததிலிருந்து இந்த கோவில்களும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களும் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாய் விட்டனர். எங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் பேரக்குழந்தைகளுக்கு என்று மூன்று தலைமுறை தொடர்ந்து இவர்களின் நட்பு நீடிக்கிறது.
வாழ்க வளமுடன்!



















