சனி, 13 செப்டம்பர், 2025

சென்னி ஆண்டவர் கோயில்



ஜூலை எட்டாம் தேதி கோவை போய் இருந்தோம், நானும் மகனும். அப்போது  கணவரின் தம்பி குடும்பத்தினருடன் இந்த முருகன் கோயில் போய் வந்தோம்.

விராலிக்காடு , கருமத்தம்பட்டி  எனும் இடத்தில் உள்ளது இந்த சென்னி ஆண்டவர் கோயில். சூலூர் வட்டம்,  கோவை மாவட்டத்தில் உள்ளது. அங்கு எடுத்த படங்கள் இந்த  பதிவில் இடம் பெறுகிறது.

கோயில் வாசலில் இந்த  அறிவுப்பு பலகை இருந்தது.   ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு  1000 மூத்த குடிமக்களை அழைத்து செல்வதாக சொல்கிறது. கட்டணம் இல்லா ஆன்மீக பயணம் அழைத்து செல்கிறார்கள்.

 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டுமாம். 11 நிபந்தனைகள் இருக்கிறது. நிபந்தனைகளை படித்து பாருங்களேன். இதர விவரங்கள் கோயில் அலுவலகத்தில் நேரில் தெரிந்து கொள்ள வேண்டுமாம். 

1000 பேர்களும்  தரிசனம் செய்து வந்து இருப்பார்கள் இறை அருளால்.

திருப்பணி நடக்கிறது.



யாகசாலை

கோயில் மிக சுத்தமாக சாணி பெளடர் போட்டு மெழுகி இருக்கிறது.

மூலவர் முன் இருக்கும் கொடிமரம்








மூலவர் முருகன் இருக்கும்  கருவரை விமானத்தில் அழகான சிற்பங்கள், தென்னைமர பின்னணியில் பார்க்க அழகு


மாணிக்க வாசகர், நடராஜர், சிவகாமி


வெளி பிராகரத்தில் விநாயகர் மற்றும் நிறைய சுவாமி சன்னதிகள் இருக்கிறது

நடக்கும் போது வெப்பம்  தெரியாமல் இருக்க தரையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது 


அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையா

நரசிம்மர்

காற்றில் ஆடும் தென்னைமரங்கள் அழகு

நிறைய தூண்களுடன்  பார்க்க அழகாய் இருக்கிறது

இரண்டு படங்களும் ஒரே மாதிரி என்றாலும் சில வித்தியாசங்கள் கண்டு பிடிக்கலாம். நான் எடுத்ததும், மகன் எடுத்த படங்களும் இந்த பதிவில் இடம் பெற்று இருக்கிறது.

இந்த முறை கையில் ஊன்று கோலுடன் நடந்து சென்றதால்  நிறைய நடந்து படங்கள் எடுக்க முடியவில்லை.

மகனுடன் கங்கா மருத்துவமனை சென்று கால்வலிக்கு  மருந்துகள் வாங்கி வந்தேன். மகன் முன்பே பதிவு செய்து விட்டதால் எளிதாக இருந்தது, அவ்வளவு கூட்டம் மருத்துவமனையில்.



இரண்டு டாக்டர்கள் பார்த்தார்கள், இடுப்பு, மூட்டு சம்பந்த பட்ட  மருத்துவர்கள்.  மூன்று மாதம் மாத்திரைகள், வலிக்கு தடவி கொள்ள மருந்து, மற்றும் பிசியோதெரபியில் உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. வலியை குறைத்து நம் இயக்கத்தை சீர் செய்யும் பயிற்சிகள் .

நடக்க வைத்து பார்த்தார்கள் இடுப்பிலா?  முட்டியிலா ? என்று

எனக்கு எம்,ஆர் ஐ ஸ்கேன்,  எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

இடுப்பில் தான் பிரச்சனை  அது காலை பாதிக்கிறது என்றார்கள். முட்டியிலும் தேய்மானம் தெரிகிறது என்றார்கள்.

நடை கொஞ்சம் சாய்ந்து விட்டது, சாய்ந்து நடக்கும் முன்னரே மருத்துவரை பார்த்து இருக்க வேன்டும் என்றார்கள். அவர்களிடம் சொல்ல முடியுமா எத்தனை மருத்தவர்கள், எத்தனை எகஸ்ரேக்கள்   எத்த்னை பிசியோ தெரபிகள் என்று.

நான் ஏற்கனவே செய்து கொண்டு இருக்கும் 5 பயிற்சிகளை  அவர்களும் கற்று தந்தார்கள், நான் அறிவாளி படத்தில்  முத்துலெட்சுமி சொல்வது போல "அதுதான் எனக்கு தெரியுமே" என்றேன், எங்கே அடுத்த பயிற்சியை செய்யுங்கள் என்றார்கள் முத்துலெட்சுமி போல அதானே தெரியவில்லை என்று சொல்லாமல் அடுத்த அடுத்த பயிற்சிகளை செய்து காட்டியதும் மகிழ்ந்து தட்டி கொடுத்தார், தொடர்ந்து செய்யுங்கள் சரியாகி விடும் இல்லையென்றால் அறுவை சிகிட்சைதான் நிவாரணம் என்றார். இறையருளால் சரியாகிவிட வேண்டும்.  

அங்கு போன பின் தெரிந்து கொண்டது என்னை விட துன்பபடுபவர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை     நிறைய  பேர் இருந்தார்கள். 




கங்கா மருத்துவமனையில் உள் நுழைந்தவுடன் வழிபட்டு செல்ல  பிள்ளையார், அம்மன், முருகன். தன்வந்திரியும் இருந்தார் அவரை எடுக்க மறந்து விட்டது.  எனக்காவும், வந்து இருப்போர் அனைவர் உடல் நலத்துக்கும்  வேண்டி வந்தேன்.

சென்னி ஆண்டவரிடமும்  வலியிலிருந்து  மீண்டு வர   வேண்டி வந்தேன்.


அன்னதான கூடம், சிறிய விழாக்கள் நடத்தலாம்.   திரைக்கு பின்னால் உடை மாற்ற இடம் எல்லாம் இருக்கிறது.








 
எல்லா வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுமாம், ஓர்படி சொன்னார்


 துரத்திலிருந்து எடுத்த படம்  குருக்கள் உள்ளே இருந்தார்கள்.  அதனால் அவசரமாக ஒரு படம்., பார்த்து கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு முருகன். 

எத்தனையோ நாட்கள் ஆனது இந்த   பதிவு எழுதி வைத்து  கார்த்திகையும் சஷ்டி விரதமும் உள்ள நாளில் முருகன் பதிவு இடம்பெற்று இருக்கிறது இதுவும் அவன் விருப்பமே!



\


முகநூல் அன்பர் ஒருவர் போட்டு இருந்த பதிவிலிருந்து எடுத்த படம் அவருக்கு நன்றி.



இந்த முருகனை தரிசனம் செய்து விட்டு ,
அருகில் இருக்கும்  சோழீஸ்வரம் சிவன் கோயிலையும் பார்த்து வந்தோம், அந்த கோயில் அடுத்த  பதிவில் .

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------


56 கருத்துகள்:

  1. இன்றைய முருகன் தரிசனம் அருமை

    சென்னியாண்டவர் கோயில் படங்கள் அனைத்தும் தெளிவாக வந்திருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //இன்றைய முருகன் தரிசனம் அருமை

      சென்னியாண்டவர் கோயில் படங்கள் அனைத்தும் தெளிவாக வந்திருக்கின்றன//

      நன்றி.

      நீக்கு
  2. இடுப்பு, முட்டி வலியால் நடை சாய்கிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

    நீங்களே தினமும் உடற்பயிற்சி செய்துவருவது நன்று. ஆர்வத்துடன் படங்களுடன் பதிவு வெளியிட்டிருப்பதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இடுப்பு, முட்டி வலியால் நடை சாய்கிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது.//

      அடிக்கடி இடது கால் மடங்கி விழுந்து இருக்கிறேன், இடுப்பில் அடி பட்டதால் இடுப்புவலி.

      //நீங்களே தினமும் உடற்பயிற்சி செய்துவருவது நன்று. ஆர்வத்துடன் படங்களுடன் பதிவு வெளியிட்டிருப்பதற்குப் பாராட்டுகள். //

      தினம் உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.


      நீக்கு
  3. உடற்பயிற்சிகள் என்றதும் கீதா ரங்கன் நினைவுக்கு வருகிறார். நிறைய தகவல்கள் தெரிந்தவர்.

    தினமும் நடைப்பயிற்சி செய்தால் முட்டி தேய்தல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்குமா என அவரிடம் கேட்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உடற்பயிற்சிகள் என்றதும் கீதா ரங்கன் நினைவுக்கு வருகிறார். நிறைய தகவல்கள் தெரிந்தவர்.//

      ஆமாம். நானும் அவரும் பேசும் போது நிறைய உடற்பயிற்சிகள் பற்றி பேசுவோம்.


      நான் உடற்பயிற்சி 40 வயதிலிருந்தே செய்து வருகிறேன் , கற்பிக்கும் ஆசிரியராக பல ஆண்டுகள் சர்வீஸ் செய்து இருக்கிறேன்.
      தினப்படி எளிய முறை உட்ற்பயிற்சிகள் செய்து வந்தாலும் அந்த அந்த உடல் துன்பங்களுக்கு சிறப்பு உடற்பயிற்சிகளும் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். இப்போது அதைதான் செய்து வருகிறேன்.

      //தினமும் நடைப்பயிற்சி செய்தால் முட்டி தேய்தல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்குமா என அவரிடம் கேட்கணும்.//

      நடைபயிற்சி நல்லதுதான். எல்லாம் அளவுடன் இருப்பது நல்லது.
      வலி இருந்தால் சிலர் நடக்க சொல்கிறார்கள், சிலர் நடக்க வேண்டாம் என் கிறார்கள். நம் உடம்பு சொல்வதை சில நேரம் கேட்க வேண்டும்.

      எனக்கு காலுக்கு முட்டிக்கு ஒரு பெல்ட் கொடுத்து இருக்கிறார்கள், இடுப்புக்கு ஒரு பெல்ட். ஓட்டியாணம் போல அவற்றை அணிந்து கொண்டு நடந்து வருகிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமை. சென்னிமலை குமரன் கோவிலை தரிசித்துக் கொண்டேன். கோபுர அழகும், கோவிலின் அழகும் மனதை கவர்கிறது. சென்னிமலை குமரனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு. இன்று காலை எழுந்தவுடன் முருகனின் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    நீங்கள் தங்கள் மகனுடன் மருத்துவமனை சென்று வந்த விபரங்களை படித்தறிந்து கொண்டேன் படிக்கவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது இப்போது தங்கள் உடல்நிலை எவ்வாறுள்ளது? கால்வலிகள் குறைந்துள்ளதா? உதவிக்கு உங்கள் உறவினர்கள் அவ்வப்போது வந்து உதவுவார்களா ? இறைவன் உங்களுக்கு துணையாக இருந்து, உங்களுக்கு கால் வலிகளை முழுவதும் குணமாக்கி, நல்ல ஆரோக்கியத்தை தர வேண்டிக் கொள்கிறேன்.

    கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. "சென்னி மலைக்குமரா, சித்தர்க்கு அருள்வோனே." என்ற கந்தகுரு கவச பாடலை பாடிக் கொண்டேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமா?//

      நலம்.
      //பதிவு அருமை.//

      நன்றி.

      //சென்னிமலை குமரன் கோவிலை தரிசித்துக் கொண்டேன். கோபுர அழகும், கோவிலின் அழகும் மனதை கவர்கிறது. சென்னிமலை குமரனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு. இன்று காலை எழுந்தவுடன் முருகனின் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.//

      சென்னிமலைக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு கீழே ஒரு சென்னி ஆண்டவர் கோயில் என்று கட்டி விட்டார்கள். கோவையில் நிறைய முருகன் கோயில்கள் இருக்கிறது ஒவ்வொரு முருகனும் ஒவ்வொரு விதமான அழகு.

      //நீங்கள் தங்கள் மகனுடன் மருத்துவமனை சென்று வந்த விபரங்களை படித்தறிந்து கொண்டேன் படிக்கவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது இப்போது தங்கள் உடல்நிலை எவ்வாறுள்ளது? கால்வலிகள் குறைந்துள்ளதா? உதவிக்கு உங்கள் உறவினர்கள் அவ்வப்போது வந்து உதவுவார்களா ? இறைவன் உங்களுக்கு துணையாக இருந்து, உங்களுக்கு கால் வலிகளை முழுவதும் குணமாக்கி, நல்ல ஆரோக்கியத்தை தர வேண்டிக் கொள்கிறேன்.//

      உங்கள் அக்கறையான விசாரிப்புக்கு நன்றி. உறவினர்கள் வருவார்கள் அவ்வப்போது வந்து உதவுவார்கள்.
      இடது பக்கம் இடுப்பிலிருந்து கால் பெருவிரல் வரை வலி . இப்போது குறைந்து வருகிறது. உங்கள் பிராத்தனைக்கு நன்றி.



      நீக்கு
  5. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 1000 பெரு அல்லது அதறகும் மேல் சுற்றுலா சென்று அம்மன் கோவில் தரிசனங்கள் செய்து வந்திருப்பார்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஆன்மீக பயணம் ஆகஸ்ட் 15 வரை போட்டு இருக்கிறது. நாளை வரை இருக்கிறது பயணம்.
      பகதர்களுக்கு உடல் தகுதி தேவை என்று சொல்கிறார்கள் பயணம் செய்ய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே முடியும்.

      நீக்கு
    2. ஆனால் அக்கா.. இது செப்டம்பர் இல்லையோ?

      நீக்கு
    3. ஆமாம், இது செப்டம்பர் ஏதோ நினைவில் ஆகஸ்ட் என்று சொல்லி விட்டேன்.
      போன மாதம் கோவை மறுபடியும் போய் வந்த நினைவு. முதலில் மகனுடன் போனேன். மருத்துவரிடம் காட்டி விட்டு அவன் சித்தப்பா, பெரியப்பாக்களை பார்த்தான் மகன்.

      அடுத்த மாதம் கொழுந்தனும், ஓர்படியும் வந்து கூட்டி போனார்கள் பேத்தியின் பிறந்த நாள், காது குத்து மொட்டை விழாவிற்கு.
      பழனியில் வேண்டாம் எல்லோரும் வயதானவர்களாக இருக்கிறார்கள் அதனால் இந்த முருகன் கோயிலில் மொட்டை, மற்றும் காது குத்துவதை வைத்து கொள்ளலாம் என்று பார்த்தோம். விழாவை அப்புறம் நீலி கோணாம் பாளையத்தில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது அங்கு வைத்து கொண்டோம் அந்த முருகனும் அழகாய் இருப்பார் அது இன்னொரு பதிவில் வரும்.

      நீக்கு
  6. "சென்னிமலை மன்னவா வேதம் நீ அல்லவா" என்று ஒரு பழைய பாடலின் முதல் வார்த்தையை மட்டும் மாற்றி பாடிக்கொண்டேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்னிமலை மன்னவா வேதம் நீ அல்லவா" என்று ஒரு பழைய பாடலின் முதல் வார்த்தையை மட்டும் மாற்றி பாடிக்கொண்டேன்!!//

      வெள்ளி மலை மன்னவா? பாடல் போல அருமை.
      ஆனால் இவர் சென்னிமலை முருகன் இல்லை
      அவர் மலை மேல் இருப்பார்.
      இவருக்கு குறிஞ்சி ஆண்டவர் போல சென்னி ஆண்டவர் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  7. கோவில் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்று தெரிகிறது.  அழகாக இருக்கிறது.   அங்கு ஒரு குருக்கள் நின்று நீங்கள் படமெடுப்பதைப் பார்த்தவாறு நின்றிருக்கிறார், போஸ் கொடுக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்று தெரிகிறது. அழகாக இருக்கிறது. அங்கு ஒரு குருக்கள் நின்று நீங்கள் படமெடுப்பதைப் பார்த்தவாறு நின்றிருக்கிறார், போஸ் கொடுக்கிறார்!//

      ஆமாம், கோயில் முழுவதும் சுத்தமாக இருக்கிறது.
      கூட்டம் இல்லை கோயிலில். நாங்கள் போன போது 10 மணிக்கு மேல் உச்சிகால பூஜைக்கு நேரம் இருக்கிறது அதனால் அவர்கள் ஓய்வு.

      நீக்கு
  8. ஆகாயப் பின்னணியில் கோபுரங்கள் எப்போதுமே அழகு.  அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையாவுக்கு தொப்பை இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆகாயப் பின்னணியில் கோபுரங்கள் எப்போதுமே அழகு. அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையாவுக்கு தொப்பை இருக்கிறது!//

      ஆமாம். நீங்கள் சொன்னதும் சுப்பையாவின் தொப்பையை கவனித்தேன் சவலை பிள்ளைக்கு வயிறு இருப்பது போல இருக்கிறது.

      நீக்கு
  9. இரண்டு ஒரே மாதிரி படங்களில் ஒரு படம் இந்தப் பக்கமும், இன்னொரு படம் அந்தப் பக்கத்திலும் சற்றுத் தள்ளி எடுக்கப்பட்டிருப்பதால் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா காட்சிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு ஒரே மாதிரி படங்களில் ஒரு படம் இந்தப் பக்கமும், இன்னொரு படம் அந்தப் பக்கத்திலும் சற்றுத் தள்ளி எடுக்கப்பட்டிருப்பதால் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா காட்சிகள்...//

      பத்திரிக்கையில் ஆறு வித்தியாசங்கள் பார்ப்பது போல பார்த்து விட்டீர்கள்.

      நீக்கு
  10. முன்பதிவு செய்து வைத்ததன் பலன் கிடைத்தது மகிழ்ச்சி.  காத்திருப்பது போல பொறுமையை சோதிக்கும் விஷயம் வேறில்லை.  அதுவும் மருத்துவமனைகளில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முன்பதிவு செய்து வைத்ததன் பலன் கிடைத்தது மகிழ்ச்சி. காத்திருப்பது போல பொறுமையை சோதிக்கும் விஷயம் வேறில்லை. அதுவும் மருத்துவமனைகளில்!//

      அப்படியும் காலை போய் மதியம் தான் வந்தோம். எல்லா டெஸ்ட்கள் எடுத்து மருத்துவரை பார்க்க , மருந்து வாங்க என்று நேரம் ஓடி விடுகிறது.
      நோயாளிகளை விட உடன் வந்து இருக்கும் கூட்டம் அதிகம்.
      இருக்கை இல்லாமல் நோயாளிகள் கஷ்டப்பட்டார்கள்.
      நோயாளி யார் உடன் வந்து இருப்பவர்கள் யார் என்று தெரிய போனவுடன் கைகளில் ஒட்டி விடுகிறார்கள் அடையாள் அட்டை.
      அதை பார்த்து வந்து இருப்பவர்கள் எழுந்து கொள்ள சொல்லி நோயாளிகளை அமர வைக்கிறார்கள்.

      நடமாடும் காப்பி, டீ, தின்பண்டங்கள், சாப்பாடு என 11.30க்கு தள்ளு வண்டி கடைகள் வருகிறது, அந்த விற்பனையும் ஜே ஜே என்று நடக்கிறது.

      நீக்கு
  11. ஆம், இப்போதெல்லாம் இளையவர்கள் கூட முட்டி வலிகளால் அவஸ்தைப் படுகிறார்கள்.  இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்...   இரண்டு முட்டியும் வலி..  தொடர்ந்து நடக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆம், இப்போதெல்லாம் இளையவர்கள் கூட முட்டி வலிகளால் அவஸ்தைப் படுகிறார்கள். இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்... இரண்டு முட்டியும் வலி.. தொடர்ந்து நடக்க முடியவில்லை.//

      ஆஹா! நான் சொன்ன இளையவர்கள் 20 , 30 வயது

      பணி ஓய்வு பெற்ற இளையவரும் அந்த லிஸ்டில் இடம் பிடித்து விட்டீர்க்ளே !

      நீங்களும் கவனித்து கொள்ளுங்கள் உடம்பை.

      நீக்கு
  12. அறிவாளி முத்துலட்சுமி உதாரணம் சிரிக்க வைத்தது.  ஆனால் "அதானே எனக்குத் தெரியாது" என்று சொல்லாமல் அடுத்தடுத்து விடைகளை  சொன்னது பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறிவாளி முத்துலட்சுமி உதாரணம் சிரிக்க வைத்தது. ஆனால் "அதானே எனக்குத் தெரியாது" என்று சொல்லாமல் அடுத்தடுத்து விடைகளை சொன்னது பிரமாதம்.//

      நீங்கள் ரசித்துப்படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      நான் போன பிசியோதெரபிகளிடம் எல்லாம் எங்கள் உடற்பயிற்சி புத்தகத்தை அன்ப்பளிபாக கொடுத்து வருவேன் மாயவரத்தில்.

      நானும் உடற்பயிற்சி ஆசிரியர் என்று தம்பட்டம் அடித்து வருவேன்.

      நீக்கு
  13. உங்கள் புண்ணியத்தில் முருகனையும் - அழகாக இருக்கிறான் - அதிகாலை நானும் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் புண்ணியத்தில் முருகனையும் - அழகாக இருக்கிறான் - அதிகாலை நானும் தரிசனம் செய்து கொண்டேன்.//

      அவன் அருள்.முருக பக்தனுக்கு தரிசனம் கொடுத்தார்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    நானும் இது போல் இங்குள்ள ஒரு முருகன் கோவில் பதிவு சென்ற மாதம் போட்டிருந்தேன். அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படித்தால் மகிழ்வடைவேன். ஆனால், அதற்கு வந்த நம் நட்புகளின் கருத்துகளுக்கு இன்னமும் நான் பதில் தரவில்லை. அதற்குள் வீட்டில் பல வேலைகள், உடல்நல குறைவுகள் என பல தடங்கல்கள் வந்து விட்டன. பிறகு நிலைமை எல்லாம் சீரடைந்ததும் தருகிறேன். அனைவரும் மன்னிக்கவும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன் கமலா
      நான் பார்க்க தவறி இருக்கிறேன். போன மாதம் ஊரில் இல்லை 10 நாட்கள் அப்போது போட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      படிக்கிறேன்.
      உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது பார்த்து கொள்ளுங்கள். பேத்தியின் கை சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
      மன்னிப்பு எல்லாம் வேண்டாம் கமலா. நேரம் கிடைக்கும் போது பதில் தரலாம்.

      நீக்கு
  15. சென்னிமலை முருகன் கோவில் அழகு. ரொம்ப வருடங்களுக்கு முன் சென்றது. படங்கள் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //சென்னிமலை முருகன் கோவில் அழகு. ரொம்ப வருடங்களுக்கு முன் சென்றது. படங்கள் சூப்பர்.//

      கீதா, நீங்கள் போனது சென்னி மலை, இது சென்னி ஆண்டவர் கோயில்.

      நீக்கு
  16. வயதானவர்களுக்கான கோவில் பயணம் விதிமுறைகளைப் பார்த்தேன், கோமதிக்கா. ஆன்லைன் சமாச்சாரங்கள் எல்லாம் எல்லாருக்கும் செய்ய முடியுமா? இதுக்கும் ஏஜண்டுகள் இருப்பாங்களோ செய்து கொடுக்க? ஆதாருக்கு எல்லாம் இருக்காங்களே அது போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வயதானவர்களுக்கான கோவில் பயணம் விதிமுறைகளைப் பார்த்தேன், கோமதிக்கா. ஆன்லைன் சமாச்சாரங்கள் எல்லாம் எல்லாருக்கும் செய்ய முடியுமா? இதுக்கும் ஏஜண்டுகள் இருப்பாங்களோ செய்து கொடுக்க? ஆதாருக்கு எல்லாம் இருக்காங்களே அது போல.//

      வயதானவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் செய்து கொடுக்கலாம் இல்லையா கீதா.

      நீக்கு
  17. கோயில் ரொம்ப சுத்தமாக இருக்கு. பார்க்கவே அது மனதிற்கு இதம்.

    கோபுரச் சிற்பங்கள் க்ளோசப் நல்ல தெளிவாக அழகாக இருக்கின்றன.

    சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வார் பாடல் நினைவுக்கு வந்தது. மாணிக்க வாசகர், நடராஜர், சிவகாமி படம் பார்த்ததும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் ரொம்ப சுத்தமாக இருக்கு. பார்க்கவே அது மனதிற்கு இதம்.

      //கோபுரச் சிற்பங்கள் க்ளோசப் நல்ல தெளிவாக அழகாக இருக்கின்றன.

      சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வார் பாடல் நினைவுக்கு வந்தது. மாணிக்க வாசகர், நடராஜர், சிவகாமி படம் பார்த்ததும்.//

      நானும், மகனும் அலைபேசியில் தான் எடுத்தோம்.
      உங்களுக்கு பாட்டு நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி. பாட்டும் , பரதமும் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

      நீக்கு
  18. அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையா//

    இந்தப் படம் அட்டகாசம். எடுத்த கோணம், மேலி வானம் இந்தச் சிற்பங்கள் மட்டும் என்று செமையா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையா

      இந்தப் படம் அட்டகாசம். எடுத்த கோணம், மேலி வானம் இந்தச் சிற்பங்கள் மட்டும் என்று செமையா இருக்கு//

      நான் கால்வலிக்கிறது என்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு மகனை எடுக்க சொன்னேன் மகன் எடுத்த படம்.

      நீக்கு
  19. படங்களில் தெய்வ லோகம் காட்டுறப்ப தெய்வங்கள் உட்கார்ந்திருப்பது
    பறப்பதுநடப்பது போறும் வருமே அப்படி அழகாக வந்திருக்கு படம். ரொம்ப ரசித்தேன் இந்தப் படத்தை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களில் தெய்வ லோகம் காட்டுறப்ப தெய்வங்கள் உட்கார்ந்திருப்பது
      பறப்பதுநடப்பது போறும் வருமே அப்படி அழகாக வந்திருக்கு படம். ரொம்ப ரசித்தேன் இந்தப் படத்தை//

      ஆமாம், ஏ.பி நாகராஜன் படத்தில் வரும் தெயவங்கள் போல. நீல வானமும், சிலைகளும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன.

      வாருங்கள் காலை நேரத்தில் இத்தனை கருத்துரை கொடுத்தது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  20. காற்றில் ஆடும் தென்னை மரம் படம், நிறைய தூண்கள் உள்ள படம் நல்ல ஷாட்ஸ்.

    பின்னர் வருகிறேன் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ​விவரங்களும் படங்களும் அழகாக உள்ளன. சென்னி ஆண்டவர் கோயில் சென்னி மலையில் இருப்பதா?

    ​அம்மியே 60 வருடங்களில் தேய்ந்து போகிறபோது முட்டி எலும்புகள் தேய்வதை தடுக்க முடியாது, மனைவிக்கும் பிரச்சினை உண்டு. முட்டி வலி பொதுவாக பெண்களுக்கு தான் அதிகம் காணப்படுகிறது. மனைவி knee cap என்ற உரை அணிந்து நடப்பார். மேலும் சாதாரண நடை அல்லாமல் கால்களை அகட்டி ஆனை போல் ஆடி ஆடி நடப்பார். இவ்வாறு நடப்பதன் மூலம் வலி உணர்வு குறைகிறது.
    அமெரிக்காவில் இருந்து Bengay கொண்டு வரவில்லையா? தாற்காலிக நிவாரணம் கிடைக்குமே. திருப்திக்கு வேண்டுமானால் கொட்டன் சுக்காதி எண்ணெய், தென்னை மரக்குடி எண்ணெய், மெழு தைலம் போன்ற ஆயர்வேத தைலங்கள் உபயோகிக்கலாம். ஆபரேஷன் செய்யாதீர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //விவரங்களும் படங்களும் அழகாக உள்ளன. சென்னி ஆண்டவர் கோயில் சென்னி மலையில் இருப்பதா?//

      சென்னிமலை கோயில் இல்லை. அது மலை மேல் நிறைய படிகளுடன் இருக்கும் கோயில். இது தரை தளத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்ட கோயில். 1970 ல் ஆரம்பித்து, 1972 ல் குடமுழுக்கு செய்யப்பட்டு இருக்கிறது.

      //அம்மியே 60 வருடங்களில் தேய்ந்து போகிறபோது முட்டி எலும்புகள் தேய்வதை தடுக்க முடியாது,//

      வயதாகும் போது வரும் பிரச்சனை தான் என்றாலும் முன்பு கீழே விழுந்து அடிபட்டதின் பாதிப்பு வயதான பின் வருகிறது என்கிறார்கள்.

      //மனைவிக்கும் பிரச்சினை உண்டு. முட்டி வலி பொதுவாக பெண்களுக்கு தான் அதிகம் காணப்படுகிறது. மனைவி knee cap என்ற உரை அணிந்து நடப்பார். //

      ஆமாம், பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது என்கிறார்கள்

      நானும் உங்கள் மனைவி போல உரை அணிந்து இருந்தேன் இப்போது கொடுத்து இருப்பது இடது காலுக்கு மட்டும் கம்பிகள் கொடுத்து கால்கள் சாயாமல் இருக்க சப்போர்ட் பெல்ட் கட்டிக் கொள்ள வேண்டும். ஊன்று கோலும் இருப்பதால் சாயாமல் நிமிர்ந்து நடக்க முடிகிறது.

      //அமெரிக்காவில் இருந்து Bengay கொண்டு வரவில்லையா? தாற்காலிக நிவாரணம் கிடைக்குமே.//

      முன்பு அதுதான் வாங்கி வருவோம் நான் கீழே விழுந்து எந்திரிக்கும் போது எல்லாம் அதுதான் கை கொடுத்தது. இப்போதும் வேறு மருந்து வாங்கி கொடுத்து இருக்கிறான் அது தடவினால் வலி குறையும்.

      //திருப்திக்கு வேண்டுமானால் கொட்டன் சுக்காதி எண்ணெய், தென்னை மரக்குடி எண்ணெய், மெழு தைலம் போன்ற ஆயர்வேத தைலங்கள் உபயோகிக்கலாம். ஆபரேஷன் செய்யாதீர்கள்.//

      மாயவரத்தில் தென்னைமரக்குடி எண்ணெய் தான் வாங்கி தேய்ப்பேன். ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மருந்து பரிந்துரைப்பதை வாங்கி வைத்து இருக்கிறேன்.
      ஏதாவது சில நேரம் கை கொடுக்கும்.
      ஆப்ரேஷன் செய்ய வேண்டாம் என்பதுதான் என் எண்ணமும்.
      உங்கள் வரவுக்கும் உடல் நல அக்கறையான கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  22. முத்துலட்சுமி உதாரணம் நீங்க நினைத்தது சிரிப்பு வந்துவிட்டது. அதான் தெரியுமே என்று போய் அதானே தெரியாது என இல்லாமல் நீங்க அடுத்தடுத்த பயிற்சிகளைச் சொல்லியது சூப்பர் அக்கா. நீங்கதான் செய்து கொண்டு இருக்கீங்களெ. அதானால்தான் இந்த அளவாவது இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம்.

    சரியாகிவிடும் அக்கா, அறுவைசிகிச்சை எல்லாம் போகாமல் சரியாகிவிடும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முத்துலட்சுமி உதாரணம் நீங்க நினைத்தது சிரிப்பு வந்துவிட்டது. அதான் தெரியுமே என்று போய் அதானே தெரியாது என இல்லாமல் நீங்க அடுத்தடுத்த பயிற்சிகளைச் சொல்லியது சூப்பர் அக்கா. நீங்கதான் செய்து கொண்டு இருக்கீங்களெ. அதானால்தான் இந்த அளவாவது இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம்.

      சரியாகிவிடும் அக்கா, அறுவைசிகிச்சை எல்லாம் போகாமல் சரியாகிவிடும்//

      ஆமாம், உடற்பயிற்சிகளை செய்து கொண்டு இருப்பாதல் இந்த அளவில் இருக்கிறது.

      மீண்டும் வந்து ரசித்து படித்து கருத்து சொன்னதற்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  23. தங்கள் கால்வலிப் பிரச்சனை வருத்தம் அளிக்கிறது. பயிற்சிகளை செய்து வர விரைவில் குணமாகும். எனது பிரார்த்தனைகள்.

    சமீபத்தில் ஒரு பாதத்தில் ஏற்பட்ட வலியினால் நடைப் பயிற்சி செய்யவே இயலாத நிலையிலிருந்து பயிற்சிகளால் மீண்டு விட்டேன். அந்தப் பயிற்சிகளை தினசரி உடற்பயிற்சிகளோடு சேர்த்துக் கொண்டும் விட்டேன். நீங்கள் எதையும் முறையாகக் கடைப்பிடிக்கிறவர். அறுவை சிகிச்சை அளவுக்கு செல்ல வேண்டியிருக்காது. தைரியமாக இருங்கள்.

    --

    படங்களும் பகிர்வும் அருமை. மூத்த குடிமக்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்வது பாராட்டுக்குரியது. அமைதியான அழகான கோயில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தங்கள் கால்வலிப் பிரச்சனை வருத்தம் அளிக்கிறது. பயிற்சிகளை செய்து வர விரைவில் குணமாகும். எனது பிரார்த்தனைகள்.//

      உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      //சமீபத்தில் ஒரு பாதத்தில் ஏற்பட்ட வலியினால் நடைப் பயிற்சி செய்யவே இயலாத நிலையிலிருந்து பயிற்சிகளால் மீண்டு விட்டேன். அந்தப் பயிற்சிகளை தினசரி உடற்பயிற்சிகளோடு சேர்த்துக் கொண்டும் விட்டேன்.//

      நல்லது ராமலக்ஷ்மி. தொடர்ந்து உடற்பயிற்சி, நடைபயிற்சியை செய்து வாருங்கள்.

      பிள்ளைகள் இருவருக்கும் அம்மா பழைய மாதிரி நடக்க வேண்டும் என்று ஆசை. அவர்கள் தான் கங்கா மருத்துவமனைக்கு போக சொன்னவர்கள். நான் போகவில்லை. அதனால் இந்த முறை மகன் வந்தவன் அழைத்து சென்று விட்டான்.

      கங்கா மருத்துவமனையில் என் தோழி, மற்றும் உறவினர்கள் இருவர் அறுவை சிகிட்சை செய்து கொண்டு இருக்கிறார்கள். எனக்கு செய்ய சொல்லி விடுவார்கள் என்று நினைத்தார்கள் .

      அவர்கள் மூன்று மாதம் டைம் கொடுத்து இருக்கிறார்கள். இப்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. சரியாகி விடும் என்ற நம்பிக்கையை மனதில் ஊட்டிக் கொண்டு இருக்கிறேன் . பயிற்சிகளை செய்து வருகிறேன்.
      தைரியமாக இருக்கிறேன் ராமலக்ஷ்மி.

      முன்பு பல வருடங்களுக்கு முன் கழுத்து எலும்பு தேய்ந்து இருப்பதாய் சொன்னார்கள் இடது பக்கம் தோள்பட்டை வலியின் போது பிஸியோதெரபி பயிற்சிகள் செய்து அதிலிருந்து மீண்டேன்.

      கீழே விழுந்து இடுப்பில் அடிபட்ட போதும் அப்படித்தான் பிஸியோ எடுத்து கொண்டு இடுப்புக்கு உள்ள பயிற்சிகள் செய்து மீண்டேன் அது போல இதிலிருந்தும் மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன்.

      யாரையும் தொந்திரவு செய்யாமல் என் கடமைகளை நான் செய்து கொள்ள வேண்டும் அதற்கு இறைவன் அருள் புரியவேண்டும்.


      //படங்களும் பகிர்வும் அருமை. மூத்த குடிமக்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்வது பாராட்டுக்குரியது. அமைதியான அழகான கோயில்.//

      ஆமாம், பாராட்ட வேண்டும் தான். எத்தனை பெரியவர்கள் கோயில்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பு இருக்கும் அழைத்து செல்ல ஆள் இருக்காது, பணவசதி இருக்காது. இவர்களால் அவர்களின் ஆசை நிறைவேற்ற முடிவது மகிழ்ச்சிதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.


      நீக்கு
  24. கோமடி அக்கா படங்கள் கோயில் சுற்றுப்புறம் எல்லாமே அழகும் மனதுக்கு அமைதியைத் தருவது போலவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      என் பேரை மாற்றி விட்டீர்களே!

      //கோமடி அக்கா படங்கள் கோயில் சுற்றுப்புறம் எல்லாமே அழகும் மனதுக்கு அமைதியைத் தருவது போலவும் இருக்கு.//

      ஆமாம், சுற்றுப்புறமும் அழகு, மனதுக்கு அமைதி தரும் இடம் தான்.

      நீக்கு
    2. ஆஆஆ கோமதி அக்கா என் கொம்பியூட்டர் படுத்தும் பாடு அது:)..
      நான் கொப்பி பேஸ்ட் பண்ணுவதில்லை, தமிழ் பொண்ட் இறக்கி வைத்து நேராகவே ரைப் பண்ணுவேன். அப்போ எப்பவும் த நாவுக்கு tha .எனத்தான் ரைப் பண்ணோனும், நான் பெரும்பாலும் எழுத்தைப் பார்ப்ப்து குறைவு கை ஸ்பீட்டாக ரைப் அடிக்கும், இப்போ கொஞ்ச நாட்களாக ஏதோ கோளாறாகி, த நாவுக்கு ta என மட்டுமே அடிக்கோணும் எனச் சொல்லிச்சுது, சரி என அதைப் பாடமாக்கி அப்படியே அடிச்சு வந்தேன், திடீரென நேற்று என் ஜி மெயில் லொக் அவுட்டாகி மீண்டும் சைன் இன் பண்ணி வந்த பின் பார்த்தால் பழைய படி த நாவுக்கு.. ரி ஏஹ் ஏ போடச் சொல்லுது, அதனாலதான் இக்குழப்பம் ஹா ஹா ஹா

      நீக்கு
    3. பரவாயில்லை அதிரா , கணினி தப்புதான் என்று தெரியும் சும்மா கேட்டேன்

      நீக்கு
  25. சென்னி ஆண்டவர் என்றத்தும் "சென்னி" எனும் பெயர் இப்போதான் கேள்விப்படுகிறேன் அதனால சிவன் கோயிலாக இருக்கும் என நினைச்சேன்.. ஆனா முருகன் கோயில்தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்னி ஆண்டவர் என்றத்தும் "சென்னி" எனும் பெயர் இப்போதான் கேள்விப்படுகிறேன் அதனால சிவன் கோயிலாக இருக்கும் என நினைச்சேன்.. ஆனா முருகன் கோயில்தானே.//

      முருகன் கோயில்தான். சென்னிமலை முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. அது பல படிகள் ஏறி முருகனை தரிசனம் செய்ய வேண்டும். அங்கு போக முடிய்தாவர்கள் இங்கு வழி பட்டு கொள்கிறார்கள்.

      நீக்கு
  26. இப்பதிவின் மூலம் தான் தெரிகிறது உங்களுக்குக் காலில் பிரச்சனை அதிகமாகியிருப்பது. முன்பு முட்டி வலி எனச் சொல்லியிருக்கிறீங்கள் அது சுகமாகியிருக்கும் என நினைச்சேன்.

    நான் ஒன்று சொல்கிறேன், மகனுடன் பேசி, பிடித்துக்கொண்டால் அங்கு போய் வைத்தியம் செய்யுங்கோ. உங்கள் வயசுக்கு நீங்கள் இப்படி நடக்கக் கஸ்டப்படக்கூடாது, இலகுவாக மாத்தலாம்.

    கேரளா கொச்சின் இல், "அமலா மருத்துவமனை" என ஆயுர்வேதிக் ஹொஸ்பிட்டல் இருக்கு. கனடா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகம்பேர் போகின்றனர்.

    பணம் கட்டுவதைப் பொறுத்து விதம் விதமான றூம் வசதிகள் உண்டு.

    நாங்கள் போயிருந்தோம், என் அக்காவுக்கும் இடைக்கிடை மூட்டுக்களில் பிடிப்புப்போல வரும், அதற்காக போய் விசாரித்து ஹொஸ்பிட்டலையும் சுற்றிப் பார்த்து, சில மருந்துகள் குளிசைகள் எண்ணெய் எனவும் வாங்கி வந்தோம்.

    அங்கு போய் தங்கி வைத்தியம் பார்க்கோணும், தமிழ் தெரிந்தவர்களும் இருக்கின்றனர் அதனால பயப்பட தேவையில்லை... பலரும் சொல்லித்தான் நாங்கள் அங்கு போனோம், கூகிளில் தேடினாலே விபரம் கிடைக்கும்.

    ஒரு மாதம் போயிருந்து வாங்கோ, மகனோடு பேசுங்கோ, பெரிய கட்டணம் எல்லாம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்பதிவின் மூலம் தான் தெரிகிறது உங்களுக்குக் காலில் பிரச்சனை அதிகமாகியிருப்பது. முன்பு முட்டி வலி எனச் சொல்லியிருக்கிறீங்கள் அது சுகமாகியிருக்கும் என நினைச்சேன்.//

      நன்றாகத்தான் இருந்தேன், கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகமாகி விட்டது . நடக்காமல் இருந்தால் வலி அவ்வளவாக இல்லை. நடந்தால்தான் வலி அதிகமாகி விடுகிறது.

      //நான் ஒன்று சொல்கிறேன், மகனுடன் பேசி, பிடித்துக்கொண்டால் அங்கு போய் வைத்தியம் செய்யுங்கோ. உங்கள் வயசுக்கு நீங்கள் இப்படி நடக்கக் கஸ்டப்படக்கூடாது, இலகுவாக மாத்தலாம்.

      கேரளா கொச்சின் இல், "அமலா மருத்துவமனை" என ஆயுர்வேதிக் ஹொஸ்பிட்டல் இருக்கு. கனடா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகம்பேர் போகின்றனர்.//

      ஒ சரி அதிரா, உங்கள் அக்கறையான விவரத்திற்கு நன்றி, மகிழ்ச்சி.


      //பணம் கட்டுவதைப் பொறுத்து விதம் விதமான றூம் வசதிகள் உண்டு.

      நாங்கள் போயிருந்தோம், என் அக்காவுக்கும் இடைக்கிடை மூட்டுக்களில் பிடிப்புப்போல வரும், அதற்காக போய் விசாரித்து ஹொஸ்பிட்டலையும் சுற்றிப் பார்த்து, சில மருந்துகள் குளிசைகள் எண்ணெய் எனவும் வாங்கி வந்தோம்.

      அங்கு போய் தங்கி வைத்தியம் பார்க்கோணும், தமிழ் தெரிந்தவர்களும் இருக்கின்றனர் அதனால பயப்பட தேவையில்லை... பலரும் சொல்லித்தான் நாங்கள் அங்கு போனோம், கூகிளில் தேடினாலே விபரம் கிடைக்கும்.

      ஒரு மாதம் போயிருந்து வாங்கோ, மகனோடு பேசுங்கோ, பெரிய கட்டணம் எல்லாம் வராது.//

      எண்ணெய் வைத்தியங்கள் வீட்டில் நானே செய்து கொள்கிறேன்.
      நீங்கள் சொல்வதை பார்க்கிறேன். மூன்று மாதம் வாங்கிய மருந்துகளை சாப்பிட்டு முடித்தவுடன் பார்க்கலாம்.
      அமலா மருத்துவமனையை கூகுளில் பார்க்கிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  27. அமலா மருத்துவமனையை கூகுளில் பார்த்தேன் அதிரா
    நன்றி.

    பதிலளிநீக்கு