வியாழன், 26 செப்டம்பர், 2019

சக்கரபாணி திருக்கோயில்



24,8.2019 ல் குடந்தையில் பார்த்த கோவில்கள் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது. இன்று சக்கரபாணி கோவில். இந்த கோவில்  காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள கோவில். குடந்தை  பெரியகடைத்தெருவின் வட கோடியில் அமைந்து இருக்கிறது.
இந்த வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா இருக்கிறார் ஸ்ரீ சுதர்ஸனவல்லி,  ஸ்ரீ விஜயவல்லி தாயாருடன் இருக்கிறார்

நாங்கள்   காலை சீக்கீரம் வந்தோம். கடைகள் திறந்து விட்டால் காரை நிறுத்துவது கடினம் என்பதால் 7 மணிக்கே வந்து விட்டோம் கோவிலுக்கு.
இந்த நுழைவாயில் வழியாகக் கோவிலுக்குப் போனோம்.
உள்பக்கத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் - ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த கோலத்தில்


உள்ளே வலது பக்கத்தில் அழகிய தோட்டம் அமைத்து இருக்கிறார்கள். அந்தக்கால விளக்குத் தூண்களில்  பூத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
தோட்டத்தின் பக்கத்தில் இருந்து கோபுரத்தைப்  படம் எடுத்தேன் கோபுரத்தின் உள் புறத் தோற்றம் 
கோபுரத்தின் வெளிப்பக்கம்
கோபுரத்திற்கு எதிரில் அழகிய  மண்டபம். பெருமாள் கோவில்களில் இது போன்ற மண்டபங்கள் உண்டு.  ஏதோ மண்டபத்தில் வேலை நடக்குது சாரம் கட்டி இருக்கிறது.
கோபுர வாசலிருந்து ஒரு படம்
மண்டபத்தின்  ஒரு வாசல் வழியே  ஆலய வாசல்

அழகான மண்டபம்  கோவிலை உள்ளே பார்த்து விட்டு வந்து எடுத்த படம் 
மண்டபத்தில் அமர்ந்து  சற்று ஓய்வு

தங்கக் கொடிமரம்
 கோவிலுக்கு உள்ளே செல்லும் வழி- ஸ்ரீசக்கர ராஜாவைப் பார்க்கப் போகிறோம்

பூஜை நேரங்கள் பற்றிய அறிவிப்புப்பலகை .அதைத் தனியாக எடுக்க நினைத்து மறந்து விட்டேன்.  தண்ணீர்த் தொட்டிக்குப் பின் தெரியும் விமானம்- அனுமன் விமானம்.
பெரிய அனுமன் -ஆனால் பூஜை செய்த சுவடே இல்லை. வாசலில் பழைய  மேஜைகள் கிடந்தன.
கோவிலுக்குள் நுழையும் முன் தீர்த்தக்குளத்தைக் கம்பி கேட் வழியாகப் படம் எடுத்தேன் , அமிர்த புஷ்கரணித் திருக்குளம் -ஒரு சொட்டு நீர் இல்லாமல் இருக்கிறது.
ஸ்ரீசக்கரராஜாவைப் பார்க்கப் போகிறோம், போகும் வழியில்  இரண்டு தூண்களில் தேரில் உள்ள நான்கு குதிரைகள்  பக்கத்து இரண்டாக மூங்கில்கழியில்  கட்டி வைத்து இருக்கிறார்கள் -பார்க்க அழகு. அதை நேராக எடுத்தால் யாரும்  தடுப்பார்களோ என்ற பயத்தில்  வெளிப்பக்கம் இருந்து எடுத்தபடம்
காலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வணங்கி வருபவர்கள் இருக்கிறார்கள் அலை பேசியில் நாராயண மந்திரத்தை ஒலிக்க விட்டுத் தூணில் இருக்கும் இராமனையும் மறக்காமல் சுற்றுகிறார்கள்.

மூலவர் சக்கரபாணி உயரமான இடத்தில் இருக்கிறார்,  கட்டுமலை அமைப்பு என்கிறார்கள். அழகிய கைப்பிடி இருக்கிறது படிகளில் ஏற வசதியாக. 
இந்தக் கோவிலின் சிறப்பும், திருமழிசையாழ்வார் பாடிய பாடலும் இருக்கிறது வரலாறைப் படித்துப் பாடலையும் பாடிக் கொள்ளுங்கள். அந்த படத்தில் உள்ளது போன்ற தோற்றம் தான் மூலவர்.சக்கரமான தாமரைப் பூவில் எழுந்தருளியுள்ளதால்  இவர் சக்கரபாணி என்று போற்றப்படுகிறார். பிரம்மா சக்ராயுதத்தை வைத்து வணங்கியதால்  இத்தலத்து இறைவன் சக்கரபாணி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

சூரியன் வழிபட்டதால் பாஸ்கர ஷேத்திரம் என்றும்,  குடந்தையில் நாகேசுரரையும் சூரியன் வழிபட்டதால் அந்தக் கோவிலையும் பாஸ்கர ஷேத்திரம்  என்று அந்தக் கோவில் தலபுராணம் கூறுகிறது.

இப்பெருமாள் பெயரால் அமைந்த படித்துறை, சக்கரப்படித்துறை  என்று அழைக்கப்படுகிறது.
உள்ளே ஸ்ரீசக்கர ராஜாவைத் தரிசனம் செய்தவுடன் காலை சந்தி ஆகப் போகிறது திருச்சுற்றை முடித்து வாருங்கள் என்றார் பட்டர்.  சுற்றி வரும் போது    தாயார்  சன்னதி விமானம்  
தாயார் சன்னதியைச் சுற்றி வரும்போது சக்கரபாணி விமானம்
இந்த மாதிரி தான்  சக்கரபாணி சந்நதி போகும் படிக்கட்டுகளில் கைப்பிடி இருந்தது- வயதானவர்கள் ஏற வசதி
இருபக்க யானைகளை எடுக்கத் தாயார் சன்னதி எதிரில்  நிலவறை போல் இருந்த இடத்தில் இறங்கி எடுத்தேன், கீழே கட்டைகளும்  தேரின் பாகங்களும் கிடந்தன.
அழகிய ஆனை
தாயார் சன்னதி போகும்  படிகட்டுச் சுவற்றில் இந்த அழகிய சிற்பம் -
நடனம் ஆடும் பெண், வாத்தியம் இசைக்கும் பெண்.

தாயார் சன்னதி அருகில் துளசி மாடத்தில் நர்த்தன கண்ணன் இருந்தார் அவரை வணங்கிக் கொண்டோம் , அன்று கிருஷ்ண ஜெயந்தி.

கோவிலைத் தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் போது ஒரு அன்பர் பானகம் கொடுத்தார். கிருஷ்ண ஜெயந்திக்குப் பிரசாதம் கிடைத்த மகிழ்ச்சியில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வணங்கி வந்தோம்.
ஸ்ரீசக்கரபாணி கோவில் போகும் வழியில்  சாரங்கபாணி திருக்கோயில். கோபுரத்தைக் காரில் போகும்போது எடுத்த படம். 
கோபுர தரிசனம் செய்து கொள்ளுங்கள்! நான் இந்த கோவில் போகவில்லை.

அடுத்துக் காலை உணவை சண்முகபவன் ஓட்டலில் ஆளுக்கு ஒரு மாவு தோசை   சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. சாம்பார், தேங்காய் சட்னி,  கொத்தமல்லி சட்னி, மிளகாய்ப்பூண்டு சட்னி,  மிளகாய்ப் பொடி  எல்லாம் வைத்தார்கள் சிறு கிண்ணங்களில். போட்டோ  எடுக்க மறந்து விட்டேன்.

ஓட்டல் அமைந்து இருக்கும் இடம் வலையப்பட்டி அக்கிரஹாரம். ஓட்டலை ச்சரியாக எடுக்க வேண்டும் என்றால் எதிர் பக்கம் வீதியைக் கடந்து போக வேண்டும். காலை போக்குவரத்து அதிகமாக இருந்தது. அதனால் ஒரு  ஓரமாக நின்று பெயர் தெரிகிற மாதிரி எடுத்தேன்.

 நன்கு சுத்தமாக இருந்தது  , காலை நேரம் தெய்வப் படங்களுக்குப் பூஜை செய்த ஊதுபத்தியின் நறுமணம்  மூக்கை உறுத்தாமல் நன்றாக இருந்தது.


நெல்லைத்தமிழன்  அவர்கள் போன பதிவில் கேட்ட கேள்வி
//மங்கள விலாஸ் ஹோட்டலுக்கு (கும்பேஸ்வரர் கோவில் பக்கம்) போனீங்களோ?//


 அதற்கு அங்கு பதில் அளித்தேன் மங்கள விலாஸ் போகவில்லை சண்முகபவன் ஓட்டல் போனோம் என்று . அங்கு பார்த்தாரா என்று தெரியவில்லை அதனால் இங்கு  மீண்டும். 

அடுத்து சுவாமி மலை போனோம்.    சுவாமிமலை பதிவு நிறைய போட்டாச்சு , இருந்தாலும் படங்கள் புதிதாக எடுத்த படங்கள். பதிவு  நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்.

                                                        வாழ்க வளமுடன்.

60 கருத்துகள்:

  1. சக்கரபாணி கோவில் உள்ளே கருவறைக்குச் செல்லும் வாசல், அப்புறம் கருவறையின் முன் மண்டபத்தில் உள்ள அரசரின் சிலை (வெண்கலம்) படம் இதெல்லாம் எடுக்க விட்டுவிட்டீர்களே. நான் சில மாதங்கள் முன்பு சென்றுவந்தேன். திருமழிசை ஆழ்வார் பாடியபோதும் இது திவ்யதேசங்களில் ஒன்று அல்ல.

    சார்ங்கபாணி கோவில் - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய பெருமாள் கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //சக்கரபாணி கோவில் உள்ளே கருவறைக்குச் செல்லும் வாசல், அப்புறம் கருவறையின் முன் மண்டபத்தில் உள்ள அரசரின் சிலை (வெண்கலம்) படம் இதெல்லாம் எடுக்க விட்டுவிட்டீர்களே//

      முதலில் அங்கு சென்றாதால் படம் எடுக்க பயம் . திரை போட்டு விடுவார்களோ காலை சந்திக்கு என்று அவசரம் வேறு. அதனால் எடுக்க வில்லை.
      யாருமே இல்லாத இடத்தில்தான் படம் எடுத்து இருக்கிறேன், அங்கு படம் எடுக்க கூடாது, செல்போன் உபயோகப் படுத்தக் கூடாது என்று எல்லாம் போடவில்லை.

      சாரங்கபாணி கொவில்தான் மங்களா சாசனம் பெற்ற கோவில்.
      ஏழு ஆழவார்கள் பாடியது. முன்பு போய் இருக்கிறோம் அடிக்கடி.
      சக்கரபாணி கோவில் பார்த்து பல வருடம் ஆச்சு என்று போனோம்.






      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூ என ஓடி வந்தேனே:))

      நீக்கு
    3. வணக்கம் வெள்ளை மாளிகையில் அதிரா, வாழ்க வளமுடன்
      ஆஹா ! ஓடி வந்தேன் முதலில் என்று சொல்லமுடியாமல் இன்று நெல்லைத்தமிழன் வந்து விட்டார்.

      நீக்கு
  2. படங்களைப் பார்த்து கோவிலுக்குச் சென்ற நினைவு வந்துவிட்டது.

    இந்தப் பெருமாளுக்குத்தான் வேண்டிக்கொண்டு, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால் சில மாதங்களுக்குள் வேண்டிக்கொண்டபடி திருமணம் நடைபெற்றுவிடுமாம் (யாருக்காக வேண்டிக்கொண்டோமோ அவருக்கு).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாதங்களுக்கு முன் தான் நீங்கள் குடந்தை பக்கம் போய் வந்தீர்கள் மீண்டும் அவை எல்லாம் கண்களுக்குள் காட்சியாக விரிந்து இருக்கும்.
      நல்ல செய்தி திருமணத்திற்கு காத்து இருப்பவர்கள் வேண்டிக் கொள்ளலாம்.
      நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து நலமோடும் வளமோடும் வாழட்டும்.திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், நோய் நீங்கி நலவாழ்வு வாழலாம் .
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களூக்கும் நன்றி.

      நீக்கு
    2. /// (யாருக்காக வேண்டிக்கொண்டோமோ அவருக்கு)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பின்ன உங்களுக்கென்றோ நினைப்போம் நெல்லைத்தமிழன்:))

      நீக்கு
  3. அதே பெரியகடை வீதியில், இராமஸ்வாமி கோவில் செல்லும் திசையில், கடைத்தெரு ஆஞ்சநேயர் கோவில் (மிகச் சிறியது) இருக்கே.. போக விட்டுப்போய் விட்டதா? ரொம்பவும் சக்திவாய்ந்த ஆஞ்சநேயர் என்று சொல்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா கோவிலுக்கும் செல்லும் திட்டம் இல்லை நெல்லைத் தமிழன்.
      புத்தகவெளியீட்டால் கும்பகோணம் மறூபடி போகும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்றரை நாளில் பாக்க முடிந்ததை பார்த்து விட்டோம்.
      அடுத்த தடவை கும்பகோணம் போகும் வாய்ப்பு கிடைத்தால் ஆஞ்சநேயரை பார்க்க அவர் அருள் வேண்டும். சக்கரபாணி கோவிலில் சிறிய அனுமனுக்கு விஷேச அலங்காரம் இருக்கிறது.
      ஆனால் பெரிய அனுமனுக்கு தான் பூஜை , அலகாரம் இல்லாமல் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. 2,3 முறை போயிருக்கோம். நின்று நிதானமாக அனுபவித்துப் படங்களை எடுத்திருக்கிறீர்கள். நமக்கு எப்போவுமே அவசரம். அதிலும் நம்மவர் காலில் கஞ்சியைக் கொட்டிக்கொண்டு அவசரம் அவசரமாக இழுத்துக்கொண்டு வருவார். அந்த அவசரத்தில் தான் படங்களும் வரும்! :) எங்கே போனாலும் அப்படித்தான்! எல்லாப் படங்களுமே நன்றாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      பேத்தியுடன் விளையாடி கொண்டு இருப்பீர்கள்!

      இவர்களும் அப்படித்தான் திட்டமிட்டபடி போய் கொண்டு இருக்கவேண்டும். "போதும் போதும் வா" என்று தான் அழைப்பார்கள்.
      இப்படி அழைத்து போகிறார்களே ! என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டும்.
      படங்களை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
    2. அந்த ராமஸ்வாமி கோவிலில் ராமன் மிக அழகாய் இருப்பார்.  உள்ளே நுழைந்ததுமே நேரே இருப்பார்.   அதுதானே நெல்லை?

      நீக்கு
    3. ஸ்ரீராம், தூண் சிற்பங்கள் ராமஸ்வாமி கோவிலில் மிக சிறப்பு.
      ராமர் ,மறைந்து இருந்து அம்பு எய்தும் காட்சி இருக்கும் ராமன் கிட்டே இருந்து பார்த்தால் வாலி தெரிய மாட்டார். வாலி கிட்டே இருந்து பார்த்தால் ராமர் தெரியமாட்டார்.

      நீக்கு
    4. ராமசாமி கோயிலில் ஓவியங்களைப் படம் எடுத்து முன்னர் போட்டிருக்கேன். சுட்டி தேடிப் பார்க்கிறேன். மங்களவிலாஸ் போனால் சுத்தமெல்லாம் எதிர்பார்க்க முடியாது! ஆஸ்பெஸ்டாஸ் கூரை முன்னர். வேர்த்து ஊற்றும். முதலில் இருந்த இடத்தில் நடுவில் முற்றம். காற்றுக்காக ஒரு தரம் அங்கே உட்கார்ந்து விட்டு மழை ஊற்றித் தள்ளிவிட்டது. சாப்பிடவே இல்லை. அப்படியே வைத்துவிட்டு வந்தோம். அதில் ஏழு, எட்டுப் பேர்களுக்கு மேல் உட்கார முடியாது. அது இடிந்து போனப்புறமாத் தான் இப்போ இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். இன்னும் இரண்டு மங்கள பவன்/விலாஸ் இருக்கிறது. அதில் உயரமான படிக்கட்டுகளுடன் கூடிய மங்களவிலாஸ் பழைய உரிமையாளர்களின் சொந்தகாரர். ஆகவே அங்கேகொஞ்சம் பரவாயில்லை என்பார்கள். நாங்கள் சாப்பிட்டதில்லை. பொதுவாய்க் கும்பகோணம் போனால் சாப்பாடு சாப்பிடும்படியோ, டிஃபன் சாப்பிடும்படியோ தரமான ஓட்டல்கள் இல்லை. ஓட்டல் ராயாஸின் பின்புறம் சத்தார் ரெஸ்டாரன்ட் ஆர்டர் பண்ணி வாங்கிச் சாப்பிடலாம். தரம், சுத்தம் இரண்டுக்கும் உத்திரவாதம்.

      நீக்கு
    5. வாங்க கீதா, மீண்டும் வந்து கருத்து கூறியதற்கு நன்றி.
      ராமசாமி கோவில் ஓவியங்களை படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறீர்களா? மகிழ்ச்சி.

      குமபகோணம் மங்களபவன்/விலாஸ் பற்றி அறிந்து கொண்டேன்.
      நாங்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகும் போதும் எல்லாம் கையில் எடுத்து போவோம். இப்போது எங்களுக்கும் எல்லாம் கையில் கொண்டு தான் போகிறோம்.

      ஓட்டல் ராயாஸில் தங்கி இருந்தோம் மதிய சாப்பாடு அவர்களே அறைக்கு வாங்கி கொண்டு வந்து கொடுத்தார்கள், சாம்பார் சாதம், தயிர் சாதம், ஒரு காய், ஒரு கூட்டு, அப்பளம், மோர் மிளகாய் இருந்தது, நன்றாக இருந்தது . வயிற்றை கெடுக்கவில்லை.

      இரவு நாங்களே பக்கத்தில் இருந்த ஓட்டலில் போய் சாப்பிட்டோம் ஓட்டல் மிக அலங்காராமாய் இருந்தது, குழந்தைகளுக்கு விளையாட, தொலைக்காட்சியில் குழந்தைகள் விரும்பி பார்க்கும் சேனல் ஓடி கொண்டு இருந்தது. ஆனால் சப்பாத்தி சாப்பிட்டோம் மெது மெதுவாக இல்லை. அதனால் மறு நாள் காலை சண்முகபவனில் சாப்பிட்டோம், நன்றாக இருந்தது.

      நீக்கு
  5. கும்பேஸ்வரர் கோயில் கடை வீதியில் இருக்கும் மங்களவிலாஸ் ஓட்டல் முன்னால் இருந்த இடத்தில் வடக்கு ரத வீதியில் இருந்தப்போக் கொஞ்சம் சாப்பிடும்படி இருந்தது. அதன் பூர்விக உரிமையாளர்களால் இப்போது நடத்தப்படவில்லை. அவங்க பெயரை மட்டும் இப்போ உள்ளவங்க பயன்படுத்திக்கிறாங்க. அங்கே சாப்பிட்டால் எனக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. பூர்விக உரிமையாளர்களின் வாரிசு திரு சுப்பிரமணியம் பச்சையப்ப முதலித் தெருவில் சாப்பாடுக்கு மெஸ் வைத்து நடத்துகிறார். அநேகமாக அலுவலகம் செல்பவர்கள் காலை உணவு பழக்கம் உள்ளவர்கள் அங்கே போய்ச் சாப்பிடுகின்றனர். நாம முன்னாடியே சொல்லி வைக்கணும். அப்படியும் பதினோரு மணிக்குள் வரச் சொல்லி அவசரப்படுத்துவார்கள். சாப்பாடு பரவாயில்லை ரகம். மாலை 3 மணிக்கு பஜ்ஜி, பகோடா, போண்டா, வடை கிடைக்கும் எனக் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயவரத்திலிருந்து கும்கோணம் போகும் போது ஒரு மணி நேரம் தானே அநேகமாய் வீட்டுக்கு வந்து விடுவோம் சாப்பிட. உறவினர்களை அழைத்துக் கொண்டு போனால் காலை முதல் , மாலை வரை என்றால் சாப்பாடு கட்டிக் கொண்டு போவோம்.
      இப்போது தான் ஓட்டலில் சாப்பிடுகிறோம். அதனால் எனக்கு அந்த ஊர் அவ்வளவு பழக்கம் இல்லை.
      நீங்கள் சொல்லும் விவரங்கள் கும்பகோணத்தில் இருப்பவர்களுக்கு தெரியும், இனி போகிரவர்களுக்கு உதவியாக இருக்கும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. இப்போவும் நாங்க ஊருக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் சாப்பாடு கையில் கொண்டு போய்விடுகிறோம். இட்லி, தயிர்சாதம், காஃபி கொண்டு போயிடுவோம். சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தப்போப் பிரச்னையாக இருந்தது.

      நீக்கு
    3. சாப்பாடு கையில் கொண்டு போவது நல்லதுதான். தவிர்க்க முடியாத போதுதான் வெளியில் சாப்பிடுகிறோம். நமக்கு வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதை சாப்பிட்டு விட வேண்டியதுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சக்கிரபாணி கோவிலில் இரண்டு தாயார் சன்னிதி இருக்குமே.

    இரு பக்கமும் ஏறி இறங்கிய நினைவு. விஜயவல்லி என்கிற
    பெயர் நிறைய பெண்குழந்தைகளுக்கு வைப்பார்கள். படங்கள் எல்லாம் துல்லியமாக இருக்கின்றன.
    சாரங்கபாணி கோவிலில் குழந்தை வரம் வேண்டுபவர்கள்
    கையில் தவழும் கண்ணனைக் கொடுத்து வேண்டிக்கொள்ளச் சொல்வார்கள் என்று நினைவு.

    தீர்த்தம் இப்படி வரண்டு கிடக்கிறதே. செழுமையான
    ஆட்கள் இருக்கும் இடம் கும்பகோணம். கவனிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.

    மிக மிக நன்றி கோமதி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      இரண்டு தாயார்கள் பார்க்கவில்லை. ஒன்று தான் பார்த்தேன். மூலவர் சன்னதியில் இரண்டு தாயார்களும் இருக்கிறார்கள்.

      சாரங்கபாணி கோவிலில் குழந்த வரத்திற்கு சந்தானகோபாலனை கையில் கொடுத்து வாங்கி தொட்டிலில் போடுவார்கள். நிறைய பெருமாள் கோவில்களில் அந்த சடங்கு உண்டு.
      பெண் குழந்தைகளுக்கு விஜயவல்லி பெயர் வைப்பார்களா? தாயார் பெயர் வைத்த குழந்தைகள் நன்றாக இருக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.



      குளத்திற்கு நீர் வரும் வழிகள் இல்லையென்றாலும் சில் கோவில்களில் பம்பு செட் போட்டு தீர்த்த குளத்தில் நீர் இருப்பு வைத்து இருப்பார்கள் , இங்கு இல்லை.
      படங்களை பற்றி சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் நினைவுகளை மீட்டெடுத்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு பழைய நினைவுகள் மீட்டப்பட்டதா மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. கோயில் கோபுரம் அழகு.. கோயில் என்றாலே அழகுதான் என எண்ணத் தோணுது.. விளக்குப் போஸ்ட்டில் பூச்சாடியும் அழகு.

    கோபுரத்துக்கும் மூலஸ்தானத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது போலும்.. மண்டபம் கட்டி மூடாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, கோபுரம் அழகாய் இருக்கும். கோவில் என்றாலே அழகுதான் என்பதும் சரிதான்.
      பூச்சாடி பிடிச்சிருக்கா?
      கோபுரத்திற்கும் மூலஸ்தானத்திற்கும் இடைவெளி என்று நீங்கல் சொல்வது உள் பிரகாரம் அது வழியாக வெளி பிரகாரம் போகலாம்.

      நீக்கு
  9. கோயில் கோபுர எதிரிருக்கும் மண்டபத்து மேலே தெரிவது வாகை மரம் போல இருக்கே...

    மாமா ஸ்டைலாக ஓய்வு எடுக்கிறார். கோயிலைச் சுற்றி சுற்றிப் படமெடுக்க அனுமதி உள்ளது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயில் கோபுர எதிரிருக்கும் மண்டபத்து மேலே தெரிவது வாகை மரம் போல இருக்கே....//

      வாத நாராயண மரம் தான்.

      மாமாவிடம் சொல்லி விட்டேன் நீங்கள் சொன்னதை.
      யாரும் தடுக்க வில்லை. உள்ளே பயம் வெளியே பயமில்லாமல் எடுத்தேன். எல்லாம் அலைபேசியில் தான் காமிராவை கைபையிலிருந்து எடுக்கவே இல்லை.

      நீக்கு
  10. அது உண்மையில் தங்கம்தானோ இல்ல, தங்கக் கலரோ?

    ஆஞ்சநேயர் அழகாக அமர்ந்திருக்கிறார்.

    ஓ அது குளமோ.. அப்படி வறண்டிருக்கே... நான் வாசல் நிலமும் படிக்கட்டும் என நினைச்சேன், சொல்லாட்டில் தெரிஞ்சிருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமரம் எல்லாம் உள்ளே மரம் மேலே தங்க தகடு கொண்டு மூடுவார்கள் உண்மையான தங்க தகடுதான்.
      மேலே இருக்கும் ஆஞ்சநேயரை நீங்களும் ரசித்து விட்டீர்கள்.
      வேலியை சேர்த்து ஒரு படம் எடுத்தேன் தேடினேன் காணவில்லை. வேலி தடுப்பு வழியாக குளத்தை எடுத்தது இந்த படம்.

      நீக்கு
  11. கோயில் உள்புறம் பார்க்க இருட்டறைபோல பயமாக இருக்கே..

    //இந்த மாதிரி தான் சக்கரபாணி சந்நதி போகும் படிக்கட்டுகளில் கைப்பிடி இருந்தது- வயதானவர்கள் ஏற வசதி//

    ஆயிரங்கால் மண்டபம் போல் அழகாக இருக்கு.

    நானும் ஒரு கோயில் யானை வாகனம் படமெடுத்து வந்திருக்கிறேனே:))

    சங்கரபாணி சுவாமிக் கோபுர தரிசனம் எனக்கும் கிடைச்சிட்டுது.. அப்போ கோடி புண்ணியமும் கிடைக்கும்தானே கோமதி அக்கா?:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க தான் இருட்டு , பயம் இல்லை, காலை நேரம் மக்கள் சுற்றி சுற்றி வணங்கி கொண்டு இருந்தார்கள் .

      நீங்கள் எடுத்த யானை வாகன படம் போடுங்கள் பார்க்கிறோம்.

      கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று தான் சொல்வார்கள். உங்களுக்கு இல்லாமலா?
      கோடி கோடி புண்ணியம் தான் அதிராவுக்கு.

      நீக்கு
  12. //சாம்பார், தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, மிளகாய்ப்பூண்டு சட்னி, மிளகாய்ப் பொடி எல்லாம் வைத்தார்கள் சிறு கிண்ணங்களில். //
    ஒரு தோசைக்கு இவ்ளோ ஐட்டங்களோ அவ்வ்வ்வ்வ்:))

    சரவணபவன் போல சண்முகபவன் அழகு..

    அனைத்துப் படங்களும் விளக்கங்களும் அழகு.... இங்கு வருகை தரும் அனைவருக்கும் கோயில் புண்ணியம் கிடைக்க வாழ்த்துக்கள்.. எனக்கும்தேன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒறு தோசைக்கு இத்தனை தொட்டுக் கொள்ள நமக்கு தான் அவ்வளவு வேண்டி இருக்கவில்லை. எல்லா கிண்ணங்க்களிலும் மீதி இருந்தது.

      பேரை நானும் ரசித்தேன் அதிரா.

      நம் அனைவருக்கும் கோவில் புண்ணியம் கிடைக்கட்டும். இறைவன் அமைதி, ஆனந்தம் , உடல் நலம் தரட்டும்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  13. சக்கரபாணி திருக்கோயில்..அருமையான படங்களுடன் இனிய தரிசனம் மா ...

    பார்க்க வேண்டும் என்னும் ஆசை கொண்டுள்ள கோவில் ...வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் ...


    துளசி தளத்தில் அறிந்துக் கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று ...

    கோபுர வாசலிருந்து எடுத்த படம் மிக அழகு ..


    நீர் இல்லா அமிர்த புஷ்கரணித் திருக்குளம் ...விரைவில் நிறையட்டும்

    யானை படமும் நன்றாக இருக்கிறது மா ..அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் .
      துளசி கோபால் அழகாய் கோவில் சென்று வந்த விவரம் எழுதுவார்கள். படங்களும் நன்றாக இருக்கும்.
      அமிர்த புஷ்கரணித் திருக்குளம் நிறைய வேண்டும் அதுவே எல்லோர் ஆசையும்.

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. வழக்கம்போல விவரணை அருமையாக சொல்லி வந்தீர்கள். படங்கள் அழகு தெளிவும்கூட...

    //அலை பேசியில் நாராயண மந்திரத்தை ஒலிக்க விட்டுத் தூணில் இருக்கும் இராமனையும் மறக்காமல் சுற்றுகிறார்கள்//

    விஞ்ஞான வளர்ச்சி மட்டும் காரணமல்ல! இன்று பலருக்கும் மந்திரங்கள் தெரியாது என்று மட்டுமல்ல சலிப்பும், அலுப்பும்கூட...

    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      படங்களை, பதிவை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.

      மந்திரங்களை சொல்ல தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அந்த பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு நல்ல அலை இயக்கத்தை உண்டு பண்ணுங்கள் என்று சொல்கிறார்கள்.

      விஞ்ஞான வளர்ச்சியால் நன்மையும் இருக்கிறது. அலுப்பும், சலிப்பும் இருக்கும் போது தெயவம் தான் துணை.

      தெய்வீக பாடல்களை பாட தெரிந்தவர்கள் பாடி கொண்டே வேலை செய்வார்கள் வீட்டில்.

      இசையால் மனதை அமைதி படுத்தலாம் தானே!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. சென்ற வருடம் நான் சென்று வந்தேன்.  நிறையவே படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.  நான் இவ்வளவு படம் எடுக்கவில்லை.  படங்கள் எல்லாமே அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      சென்ற வருடம் சென்றீர்களா?
      நிறைய எடுத்து இருக்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள், நெல்லை இன்னும் இரண்டு படங்களை விட்டு விட்டேன் என்று சொல்கிறார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    சக்ரபாணி கோவில் பதிவு மிகவும் அருமையாய் உள்ளது. எல்லா படங்களும் துல்லியமாக நன்றாக எடுத்திருக்கிறீர்கள். கோபுரங்கள் மிக அழகாக உள்ளது. நீங்கள் ஒவ்வொன்றையும் படமெடுத்த முறை மிகவும் அழகாக கண்களுக்கு நிறைவாய் உள்ளது. உண்மையிலேயே எதை பாராட்டுவது எனத் தெரியவில்லை.

    நான் இந்தப் பக்கமெல்லாம் அதிகம் போனதில்லை. ஒரு தடவை உறவுகளுடன் (ஏழெட்டு வருடங்களுக்கு முன்னரே என நினைக்கிறேன்.) கும்பகோணம் நவகிரக கோவில்களுக்கு மட்டும் சென்று வந்தோம். வேறு எந்த கோவிலுக்கும் செல்ல நீண்ட நாட்கள் ஆங்காங்கே தங்குவதற்கும், குழந்தைகளுக்கு ஆபீஸ் விடுமுறைகள் அதிகம் எடுக்கவும் இயலாததால் செல்ல இயலவில்லை.

    தங்கள் பதிவை படித்ததும், அழகான இந்த கோவில்களுக்கெல்லாம் சென்று தரிசித்த திருப்தி வருகிறது. மீண்டும் சொல்கிறேன். அழகான படங்கள் அருமையான தெளிவான விமர்சனங்கள். இனியொரு முறை நாங்கள் அங்கு வந்தால், உங்கள் பதிவும் எங்களுடன் துணையாக வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      நவக்கிரககோவில்கள் பார்க்கவே நேரம் சரியாகி விடும்.
      நீங்கள் சொல்வது போல் இரண்டு மூன்று நாள் தங்கினால்தான் பார்க்க முடியும்.

      நாங்கள் மாயவரத்தில் இருந்ததால் அடிக்கடி குமபகோணம் போக முடிந்தது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோவில் பார்ப்போம்.

      அப்போது பஸ்ஸில் போவோம். அப்புறம் கார் வைத்துக் கொண்டு உறவினர்களை அழைத்துக் கொண்டு போவோம். ஆடுதுறை பக்கம் திருமங்கலகுடிக்கு மாட்டு வண்டியில் போவோம், அங்கு சென்று விட்டுதான் சூரியனார் கோவில் போக வேண்டும் என்பார்கள்.

      பஸ் வசதி இல்லாத கோவில்களுக்கு இரு சக்கர வாகனத்தில், சைக்கிள் முன்பு அப்புறம் டிவிஸ் 50 என்று பயணித்து அப்புறம் கார் என்று பயணம் செய்து வணங்க முடிந்தது. மாயவரத்தில் இருந்ததால் தான் நிறைய கோவில் பார்க்க முடிந்தது.


      எல்லோருக்கும் வசதி படும் போது போய் வாருங்கள்.
      உங்கள் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  17. ஆகா... அருமையான தரிசனம்...

    அற்புதமான கோயில்.. கட்டுமலை... விஷயம் அறிந்தோர் தவிர அதிகம் பேர் வருவதில்லை..

    மகாமக சமயத்தில் தரிசித்திருக்கின்றோம்...

    அப்போது எடுக்கப்பட்ட படங்களை மகாமகப் பதிவுகளில் தந்திருக்கின்றேன்...

    தூய்மையோக மாயினாய் துழாயலங்கல் மாலையாய்
    ஆமையாகி யாழ்கடல் துயின்ற ஆதிதேவநின்
    நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்
    சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே..

    திருமழிசையாழ்வாரின் திருப்பாசுரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      ஆமாம், நீங்கள் சொல்வது போல அற்புதமான கோவில்தான்.

      உங்கள் பதிவை பார்த்து இருப்பேன்.
      இந்த பாசுரம் தான் அறிவிப்பு பலகையில் உள்ளது.
      பாடலை பாடி, உங்கள் கருத்தை அழகாய் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  18. ஊர் கோவில்களை ஞாபகப்படுத்திறீங்க. இப்பவெல்லாம் கோவிலுக்கு போய் அமைதியா கொஞ்ச நேரம் இருந்திட்டு வரனும் போல இருக்கு.. ஆனா அங்கும் அமைதி இல்லை. இங்கு கோவில்கள் தூரதூர இருக்கு. நினைச்சவுடனே போகமுடியாது.
    அழகான கோவில்,கோபுரம். முதல் படம் அழகு. உங்களுக்கும் கோபுரம் மீது ஆசை போல. முகப்பு படமா கோபுர படம் போட்டிருக்கிறீங்க. அது எந்த கோவில் கோபுரம் அக்கா. அதுவும் அழகு.
    கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இப்படி நல்ல தரிசனம் செய்யுங்க அக்கா. எங்களையும் நினைச்சு வேண்டிங்கோங்க. நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான். கோவிலில் அமைதி தேடி போக வேண்டும் என்றால் பண்டிகை, விழா சமயம் போக கூடாது. மற்ற நாள் போனால் அமைதியாக தரிசனம் செய்யலாம்.

      முகப்பு கோபுரம் மீனாட்சி அம்மன் கோவில் படம். இந்த ஊருக்கு வந்த புதிதில் எடுத்தேன் படம். இப்போது காமிரா,அலை பேசியை கோவிலுக்குள் கொண்டு போக கூடாது. எங்கள் வீட்டிலிருந்து மீனாட்சி அம்மன் தூரம் தான் அடிக்கடி போக முடிவது இல்லை.

      கிடைக்கும் போது தரிசனம் செய்ய வேண்டும். கண்டிப்பாய் எல்லோருக்கும் வேண்டி வருவேன் பிரியசகி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. கோவில் படங்கள் அனைத்தும் அழகு. இங்கே எல்லாம் செல்ல வாய்ப்பு அமைய வேண்டும்....விரைவில் அமைந்தால் நல்லது.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      விரைவில் அமையும் இறைவன் அருள்வார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இந்த மாதிரிப் பழமை வாய்ந்த பல கோயில்களும் மாடக்கோயில்கள். மதுரையில் நான் பார்த்தவரை திருவேடகம் கோயில் தான் மாடக்கோயில் என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. அம்மன் சன்னதி முன்பாக உள்ள யானைகள்,சக்கரங்கள், பிடிமானங்கள் போன்றவை அண்மைக்காலத்தில் வைக்கப்பட்டவை. 1970கள் தொடங்கி நாங்கள் சென்றுவரும் கோயில்களில் இதுவும் ஒன்று. கும்பகோணத்தில் எங்கள் வீட்டிலிருந்து நடந்தே சென்றுவிடும் தூரமே. வெளித்திருச்சுற்றினைச் சுற்றி வரும்போது வரும் மலர்களின் நறுமணத்தினை கட்டுரையைப் படித்தபோது உணர்ந்தேன்.

      நீக்கு
    4. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      ஆமாம், சார், இப்போது தான் புதிதாக படி கைபிடிகள். கூடல் அழகர் கோவிலில், இப்போது தான் வைத்து இருக்கிறார்கள்.
      ஓ! உங்கள் வீட்டு பக்கமா? அடிக்கடி போய் பார்த்த கோவிலை பார்க்கும் போது மனதுக்கு நெருக்கமாக ஆகிவிடும். அதனால் தான் வெளித்திருச்சுற்றை சுற்றி வரும் போது மலர்களின் நறுமணத்தை உணர முடிகிறது.
      உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. தூய்மையோக மாயினாய் துழாயலங்கல் மாலையாய்
    ஆமையாகி யாழ்கடல் துயின்ற ஆதிதேவநின்
    நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்
    சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே..

    திருமழிசையாழ்வாரின் திருப்பாசுரம்…

    இன்று காலை ஜி எம் பி அவர்களின் வலைக்குச் சென்று அதன் வழியே தங்கள் வலைக்கு வந்தால் 
    இங்கே திரு சக்கரபாணி தரிசனம். 
    அழகான இத்திருத்தலத்தின் பாடலை பாடாது செல்ல இயலுமோ ?
    இந்தோள ராகத்தில் பாடினேன். குரல் வளம் இல்லை.
    என்றோ சென்றுவிட்டது.
    மால் மருகனை பாடிடவோ
    மனம் மறக்கவில்லை. 
    நன்றி. 
    சுப்பு தாத்தா. 

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
    நலமா சார், மீனாட்சி அம்மா எப்படி இருக்கிறார்கள்?
    இந்தோள ராகத்தில் பாடியது மகிழ்ச்சி.
    குரல்வளத்தை பார்க்க மாட்டார்கள், அன்பு ,பக்தியை, நெகிழ்வைதான் மாலும், மால் மருகனும் பார்ப்பார்கள். பாடுங்கள் பாடிக் கொண்டே இருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி . நீங்கள் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னது உங்கள் ஆசீர்வாதம் பெற்றது போல் நினைக்கிறேன். உங்கள் இருவருக்கும் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  22. சக்கரபாணி சந்நிதி யானைகள் நன்றாக இருக்கின்றன.உங்கள் தரிசனத்தால் நாங்களும் பல கோவில்கள் தரிசிக்கிறோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  23. புகைப்படங்களும் விபரங்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  24. தஞ்சையிலிருந்து வரும்போது குடந்தை உள்ளே செல்லாமல் பைபாஸ் ரோடு வழியே குடந்தை-மயிலாடுதுரை சாலையில் நுழைந்ததும் இடது பக்கம் சில கடைகள் கடந்ததும் ' கணேஷ் பவன்' என்றொரு உணவகம் வரும். அங்கு தான் சில வருடங்களாக பயணம் செய்கையில் சாப்பிடுகிறோம். காலை, மாலை டிபன், மதியம் சாப்பாடு எல்லாமே மிகவும் தரமாக, சுத்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  25. 'கணேஷ் பவன்' உணவகம் இருப்பிடம் குறிப்பிட்டது மகிழ்ச்சி.
    இன்னொரு முறை போகும் போது அங்கு சாப்பிட்ட வேண்டும்.
    உங்கள் தகவல், மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  26. படங்கள் எல்லாம் துல்லியம். ஒரு முறை ராமசாமி கோவிலில் தூண்களில் இருக்கும் சிற்பங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது ஒருவர் வந்து,"என்ன இவங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு படம் எடுக்கறாங்க, பார்த்துகிட்டே இருக்க?" என்று அங்கிருந்த வாட்ச்மேனை ஏதோ நான் அவருடைய உடைமையை அவர் அனுமதி இல்லாமல் படம் எடுப்பது போல் சத்தம் போட்டார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.

      //"என்ன இவங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு படம் எடுக்கறாங்க, பார்த்துகிட்டே இருக்க?" என்று அங்கிருந்த வாட்ச்மேனை ஏதோ நான் அவருடைய உடைமையை அவர் அனுமதி இல்லாமல் படம் எடுப்பது போல் சத்தம் போட்டார். //

      நாம் எடுத்தால் சத்தம் போடுவார்கள். தொலைக்காட்சி சேனல்கள் கேட்டால் கருவறை வரை படம் எடுக்க அனுமதி செய்வார்கள்.
      உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு