ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்





பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை    இன்று..

பல வருடங்களாய் பார்க்க நினைத்த விழாவை போன வருடம் பார்க்கும் நல் சந்தர்ப்பம் கிடைத்தது.

உறவினர்களுடன் சென்று வந்தேன். நிறைய கூட்டம், பிட்டுக்கு மண் சுமந்த கதை சொல்லப்படுகிறது., அது போல் நடித்துக் காட்டப்படுகிறது.
மண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.

வேலை செய்யாமல் சுகவாசியாய் பிட்டை சாப்பிட்டு விட்டு தூங்கும் காட்சி, அரசர் வந்து பிரம்பால் அடிப்பது, சகலமானவர்கள் மேலேயும் அடி விழுவதை வேதபாடசாலை மாணவர்கள் முதுகில் அடிப்பட்டதுபோல் நடித்துக் காட்டுவதும், சுவாமி தன்பங்காய் மண்ணைப் போட்டு வெள்ளத்தை தடை செய்வதும் மேடையில் நடித்துக் காட்டப்படுகிறது.

அந்த காட்சிகளும், கதையும் கீழே:-


வைகை வெள்ளம்  அடைக்க  ”அவர்வர் பங்குகளை  அடையுங்கள்” என்று பறைசாற்றி அழைத்தனர் .

மண்ணை படைத்தவன் மண் சுமந்தான் கரையடைப்பானாக!

                                                
 இறைவனை கூலியாளாக பெற்ற  பிட்டு விற்கும் முதியவள் தனக்கென்று விடப்பட்ட பகுதியை அடைப்பதற்குக் கூலியாள் கிடைக்காமல் பெரிதும் வருந்திய வந்தி  சோமசுந்தரப் பெருமானை நினைத்து  “ ஆலவாய் அண்ணலே! பிட்டு விற்றுப் பிழைக்கும் ஏழை, நானோ அனாதை  எனக்கு கூலியாள் கிடைக்க மாட்டானா என்று அழுது வருத்தினார்.

வந்தியின் சோகக்குரலுக்கு செவிசாய்த்து கூலியாளாக வந்தார் .
“கூலி தந்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்பவர் உண்டா?” என்று கூவிக் கொண்டே வந்தார். கூலியின் குரலைக் கேட்டு மகிழ்ந்த வந்தி “எனது பங்குக்கு விடப்பட்டகரையை அடைத்து தருவாயா? என்று கேட்டார். அடைத்து தருகிறேன் எனக்கு கூலி என்ன தருவாய் ?என்று பெருமான் கேட்டார்.

நான் விற்கும் பிட்டை தருகிறேன் என்றார் வந்தி. எனக்கு மிகுந்த பசியாக இருக்கு உதிர்ந்தபிட்டை கொடு உண்டு இளைப்பாறி உன் பங்கு இடத்தை அடைக்கிறேன் என்றார்.

ஆனால் சிறுபிள்ளை போல் கொஞ்சம் மண்ணைகூடையில் எடுத்து போடுவதும், கூடையை தண்ணீரில் போடுவதும் பின் எடுப்பதும் என்று விளையாடி அதில் களைத்து வந்தி கொடுத்த பிட்டை தின்று நீர் அருந்தி பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பிட்டை பகிர்ந்து அளித்தும் விளையாடினார்.

 வேலை வாங்குவோர் கையில் பிரம்புடன்  வந்து உன் பங்கு மட்டும் அடைபடாமல் இருக்கே என்று  கேட்டனர் அவர் அழகில் மயங்கி அடிக்க மனம் இல்லாமல் இவன் பித்தனா? எத்தனா? சித்தனா?
மன்னரிடம் சொல்வதே முறை என மன்னரிடம் கூறினர்.

அழகில் சிறந்த இந்த கூலியாள் பகுதி மட்டும் அடைபடவில்லை, ஆடியும் ஓடியும் களித்துக் கொண்டு இருக்கிறான் என்றனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு  கோபம் வந்து கரையடைப்பானை அழைத்து  பொற்பிரம்பால் ஓங்கி அடித்தான்.

உடனே கூலியாக வந்த சோமசுந்தரப் பெருமான் கூடையுடன் மண்ணை கரையில் கொட்டி மறைந்தருளினார்.

இறைவன் முதுகில் பட்ட அடி  அனைத்து ஜீவராசிகள் மேலும் ஈரேழு புவனங்கள் மீதும் பட்டது..

வானத்தில் காட்சி அளித்து “செங்கோற் பாண்டியா!  உன் பொருள்கனைத்தும் அறவழியிலே தொகுப்பட்டுத் தூய்மையாக விளங்கியவை. அவையனைத்தும் நமக்கும் நம்முடைய மெய்யடியார்களுக்கும்  திருவாதவூரன்  பக்தியுடன் கொடுத்தான்,  அவனை துன்ப படுத்தினாய்.  அதனால் நரியை பரிகளாக்கினோம், பரிகளை மீண்டும் நரிகளாக்கினோம்.; மறுதினமும் கொடுமை படுத்தினாய் அதனால் வைகையில் வெள்ளம் பெருக செய்தோம்,  வந்தியின் துயர் நீக்க கூலிக்காரனாக வந்தோம்,  பிட்டுண்டோம், உம்மிடம் பிரம்படி பட்டோம். வாதவூரானை அவனது விருபத்தின்படியே  விட்டுவிடுக. நீயும்  கனமதுர நீள் செளக்ய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு  வாழ்ந்திருபாயாக !” என்று   கூறினார்.

விண்ணிலிருந்து வந்த தெய்வதிருமொழி கேட்டு  மாணிக்கவாசக பெருமானை கண்டு அவர் அடிகளில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.

பலதிருபணிகள் செய்து பூஜை, திருவிழாக்கள் செய்வித்து அன்பும் அருளும் இன்பமும் நிரம்பிய  நல்லாட்சி  செய்து நற்புதல்வனை பெற்று  உரிய காலத்தில்  திருக்குமரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து சிவபதவி அடைந்தார்.


தங்ககூடை, தங்க மண்வெட்டியுடன்


கூடையை தலையில் வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் வேடிக்கைப் பார்க்கும்  வந்தியின் கூலி ஆளாய்.




சிவனுக்கு அணியபட்ட நகைகள் போலவே இவரும் அணிந்து, உடல் முழுவதும் விபூதி பூசி இருக்கிறார்.


வில்வ இலையை தலையில் சூடி வந்து வந்தியிடம் உதிர்ந்த பிட்டு வாங்குகிறார்.

வந்தி அம்மையார்

மன்னர் வருவதை அறிவிக்கும் முரசுகளுடன் காளை



கரை அடைபட்டதா என்று பார்க்க வந்தார்  மன்னர்

யார் பாகம் அடைக்கபடாமல் இருக்கிறது என்று கோபமாய் கேட்டு வருகிறார்.

மன்னர்  கோபமாய்



மன்னர் வருகிறார் தங்கபிரம்பு எடுத்துக் கொண்டு.

யார் அடைக்காமல் விளையாடி கொண்டு இருந்தது என்று கேட்கிறார்



வைகை ஆறாக அமைக்கப்பட்ட   தண்ணீர் தொட்டி, அதில் தான் கூடையில் மண் எடுத்து கொட்டி இருக்கிறார்.

வகைகரையில் தான் சிவன் என்பதை காட்டி அருளியது

சாமி எழுந்தருளிய மண்டபம். 

நன்றி கூகுள்



பிட்டு விற்கப்படுகிறது. இடிந்த பிட்டு மட்டும் தான் உனக்கு என்று சிவனிடம் வந்தி பாட்டி  சொல்லி விட்டதால் உதிர் பிட்டு தான் விற்கப்படுகிறது.


மன்னர்   வரும் பட்டத்து  யானையாக அலங்கரிக்கப்படும் முன்


                                                                        வாழ்க வளமுடன்.
========================================================================
=
                       

29 கருத்துகள்:

  1. "இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை" பாடலிலிருந்து "பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டபின்னும்" என்ற வரிகளை நினைவுகூர வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஐயனின் திருவிளையாடலுக்கு அருமையான நேர்முகம்..

    அழகிய படங்கள்.. திருவிழாவினைக் கண்டேன்.. மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

  3. @ வேலைசெய்யாதவனுக்கு விழுந்த அடி அடித்தவருக்குக் கிடைத்திருக்கலாம் எல்லோருக்கும் என்பது நியாயமா . கதைதானே பரவாயில்லை

    பதிலளிநீக்கு
  4. ‘ மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான் ‘ – பொருத்தமான தலைப்பு. எளிமையான நடையில், ஈசன் பிட்டுக்கு மண் சுமந்த கதையை, சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாகவே சொல்லி விட்டீர்கள்.

    “ ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ! “

    பதிலளிநீக்கு
  5. மதுரை வந்து தூள் கிளப்புகிறீர்கள். நல்ல விவரங்கள், அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    எனக்கும் டி.ஆர், மாகாலிங்கம் அவர்கள் பாட்டு கணீர் என்று ஒலித்தது.
    இந்த பதிவு எழுதும் போது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    தண்டித்தவருக்கும் மட்டும் அடி விழுந்தால் எப்படி இறைவனின் திருவிளையாடல் எல்லோருக்கும் தெரியும்?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
    சூலமங்கல சகோதரிகள் பாடிய ஒரு பாடலில் எடுத்த தலைப்பு(ஆடுகின்றானடி தில்லையிலே என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும். மண்ணை சுமந்தவன் மண் சுமந்தான் அது மதுரையில் ஆடிய ஆட்டமன்றோ!)

    “ ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ! “

    எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் பாடலை மறக்க முடியுமா?
    அருமையான பாடல்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்ணைப் படைத்தவன் மண் சுமத்தான் . என்று வரும் பாடலில்

      நீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    மதுரை மீனாட்சி கோவில் அருகில் இருந்தால் தினம் போய் திருவிழா பார்க்கலாம்.
    நாளை விறகு விற்கும் படலம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. திருவிளையாடலைப் படித்துள்ளேன், கேட்டுள்ளேன், பார்த்ததில்லை. தங்களது பதிவின் மூலமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    தங்களின் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அழகிய படங்கள். தகவல்களும் தெரிந்து கொண்டேன். நன்றிம்மா..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பதிவும் படங்களும் அருமை அக்கா. திருவிழாவை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. புகைப்படங்களும் கதை சொல்லிய விதமும் மிக‌வும் அழகு!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம், சகோ சாரதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பிட்டுக்கு மண் சுமந்த கதையை அப்படியே இன்றும் காட்சிகளாய் விரிக்கும் நிகழ்வைத் தங்கள் புகைப்படங்கள் மூலம் கண்டோம். நேரில் கண்டதில்லை. மிக அருமையான காட்சிகள்!! மிக்க நன்றி சகோதரி/அக்கா

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  22. எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியே காட்சிகளும் தத்ரூபமாக இருக்கிறது. சிரமம் பாராட்டாமல் படங்களைத் தொகுத்து இருப்பதும் வெகு அழகு. ப்ளாகில் ஓரளவிற்குமேல் வராமல் திரும்பத் திரும்ப ரிபிட் ஆகிக்கொண்டே இருந்தது. இன்றுதான் எப்படி ஒழுங்கு படுத்துவது என்பதும் தெரிந்தது. பிட்டுக்கு மண் சுமந்த பெம்மானடி பணிவோம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. அழகிய தத்ரூபமானபதிவு. ஒரு பின்னூட்டம் என்ன ஆனதென்று தெரியவில்லை. உள்ளே நுழைய முடிந்ததற்கே மிக்க ஸந்தோஷம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. மிகவும் பயனுள்ள பதிவு.அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
    உங்கள் மூன்று பின்னூட்டங்களும் வ்அந்து விட்டன.
    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.
    என தளத்துக்கு வர கஷ்டமாய் இருந்தும் வந்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  26. சிரமம் பாராமல் சிறப்பாகப் படங்களை எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள். நிகழ்வைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு