' பன்னிரு மாதங்களும் நான்மாடக்கூடலிலே
அன்னை மீனாட்சிக்கு அழகான திருவிழா! அழகான திருவிழா! '
என்று காலையில் வாணி ஜெயராம் அவர்கள் தன் இனிமையான குரலில் பாடினார்கள் ரேடியோ மிர்ச்சியில்.
'மண்செய்த புண்ணியம் அன்னையின் திக் விஜயம்,
பட்டாபிஷேகம், திருக்கல்யாணம்'
என்று பாடினார்.
இந்தப் பாடலில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன திருவிழா வரும் என்று பாடினார்.
வைகாசியில்- வசந்தவிழா
.
ஆனியில்- ஊஞ்சல் விழா.
ஆடி மாதம் - முளைக்கொட்டு திருவிழா ( அம்மனுக்கு மட்டும் நடக்கும் திருவிழா)
ஆவணியில்- மூலம் விழா, சுந்தரர் பட்டாபிஷேகம், திருவிளையாடல் புராண விழா. விழாவை கண் முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தும்
ஆனந்தத் திருவிழா.
புரட்டாசியில்- அம்மன் கொலு மண்டபத்தில் கொலுவீற்றிருக்கும் திருவிழா.
ஐப்பசியில் - கோலாட்ட விழா.
கார்த்திகையில் - தீபத்திருவிழா.
மார்கழியில் - எண்ணெய்க் காப்புத் திருவிழா.
தையில்- தெப்பத் திருவிழா.
மாசியில் - மகத்திருவிழா.
பங்குனியில்- கோடை வசந்த விழா
என்று அழகாய்ப் பாடினார் திருவிழாக்களைப் பற்றி வாணி ஜெயராம். நீங்களும் அந்தப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.
உடனே நேற்று பார்த்து வந்த சித்திரைத் திருவிழாவின் படங்களை வலையேற்ற ஆசை வந்து விட்டது.
ஐந்தாம் நாள் திருவிழா.
சுவாமியும் பிரியாவிடையும்
சுவாமியின் வலது பக்கம் நான் நின்றேன், அதனால் அம்மன் தெரியவில்லை
அம்மனின் சடை அழகு இரண்டு ஜடை பட்டி அலங்காரம்
மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மனின் ஜடை அலங்காரம்
விநாயகர்
சண்டேஸ்வரர்
தந்தையின் தோளில் திருவிழா பார்ப்பது மகனுக்கு ஆனந்தம், அப்பாவிற்கு சுகமான சுமை.
சுவாமியும், பிரியாவிடையும் தங்கக் குதிரையில் பவனி வரும் காட்சி
திருவிழா வந்து விட்டுப் போகும் போது பலூன் இல்லாமலா?
சுவாமி வரும் முன் கட்டியம் கூறி வந்த காளை மாடு
அதற்கு அடுத்து வந்த ஒட்டகம்
அடுத்து வந்த கோவில் யானை
கோலாட்டம் ஆடி வந்த சிறுமிகள்
மீனாட்சியாக வேடமிட்ட சிறுமிகள்.
கருப்பசாமி வேடமிட்டு ஆடி வந்த சிறுவர்கள்.
பஞ்சு மிட்டாய் -கலர் கலராய்
முன்பு மணி அடித்துக் கொண்டு பஞ்சு மிட்டாய் பஞ்சுமிட்டாய் என்று கூவிக் கொண்டு வருவார்கள், கண்ணாடி ஜாடிக்குள் வைத்துக் கொண்டு குழந்தைகள் ஓடி வருவார்கள் காகிதப் பொட்டலத்தில் பூ போல எடுத்து வைத்துக் கொடுப்பார், பஞ்சுமிட்டாய்க்காரர். குழந்தைகளும் பொட்டலத்தை அமுக்காமல் கொண்டு வருவார்கள் அமுக்கி விட்டால் அவ்வளவு தான்! நன்றாக இருக்காது, பூப் போல வாயில் போட்டுச் சுவைக்க வேண்டும். இப்போது அதையும் பாலித்தீன் கவரில் அடைத்து விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஜவ்வுமிட்டாய் ! ஜவ்வு மிட்டாய்! சிறு வயதில் அந்த ரோஸ் கலர் மிட்டாய் சாப்பிட்டு உதடு, நாக்கு எல்லாம் ரோஸ் கலர் ஆக்கிக் கொண்டு திரிந்த காலங்கள் இப்போது கலர் இல்லாத மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டேன். முன்பு இருந்த சுவை இல்லை.
பருத்திப்பால் பி காம்ப்ளக்ஸ் சத்து இருக்கிறதாம், பசி உணர்வைக் கட்டுப்படுத்தும், நெஞ்சு சளியைக் குறைக்குமாம், அதிகமாய்ப் பளு தூக்குபவர்களுக்கு வரும் நெஞ்சுவலியைக் கட்டுப்படுத்தும் என்று சொல்கிறார்கள்.
- பருத்திக் கொட்டை - 100 கிராம்
- பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
- வெல்லம் - 300 கிராம்
- சுக்கு - சிறிது அளவு
- தேங்காய் துருவல் - தேவையான அளவு
- பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
- பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- வெல்லம் முழுதும் கரைந்தவுடன் சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
வெயில் காலத்தில், குடை, விசிறி தானம் செய்யலாம் என்கிறார்கள்.
மீனாட்சி கோவில் வாகனம் நிறுத்தும் இடத்தில் குடை தானம் அளித்து பக்தர்களுக்கு நிழல் தந்து இருக்கிறார்கள். குடை கொடுத்த கொடையாளி வாழ்க!
வாழ்க வளமுடன்!
----------------