செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில் ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள் கோவில்
நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள். தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால் இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும் கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.
மிகவும் அழகிய கோவில். இரண்டு பக்கமும் குடியிருப்புகள், நெருக்கடியான இடம் ஆனால் கோவில் உள்ளே நல்ல விஸ்தாரமாய் நிறைய மூர்த்திகளை கொண்டு இருக்கிறது.
‘உள்ளே போனவுடன் பிள்ளையார் வெள்ளிக்கவசம் சார்த்தி அழகாய் இருந்தார். பெரிய அனுமன் முத்தங்கி சார்த்தி வெகு அழகாய்க் காட்சி தந்தார்.
கடந்து உள்ளே போனால் பன்னிரு ஆழ்வார்கள் வெள்ளிக் கவசத்தில் அழகாய், அதற்கு அடுத்து செளராஷ்டிர மக்கள் குருவாய் ஏற்றுக் கொண்டுள்ள நடனகோபால சுவாமிகள். அவருக்கும் வெள்ளி கவசம்.
நடுவில் மூலவர் ஸ்ரீ பிரசன்ன வெங்டேசபெருமாள், முத்தங்கியால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாய் காட்சி தந்தார். ஆரத்தி, தீர்த்தம், சடாரி, துளசி பிரசாதம் பெற்றுக் கொண்டு கண்குளிர , மனம் குளிர பார்த்துக் கொண்டோம், நகரு, வாங்க வாங்க என்ற ஓலி இல்லாமல் பெருமாளை நின்று நிதானமாய் வணங்க முடிந்தது தான் ஆச்சரியம்.
அலமேலு தாயாரும் முத்தங்கி அணிந்து, தாமரை மலர் சூடி அழகாய் காட்சி தந்தார். ஆரத்தியும், குங்கும பிரசாதமும் கிடைத்தது.
அடுத்து ஹயக்கிரீவர், பூவராகப்பெருமாள், யோகநரசிம்ம பெருமாள், ராமர். பள்ளி கொண்ட பெருமாள் (சிறிய மூர்த்தியாக) அனைவரும் வெள்ளி , தங்கம் ஆகிய கவசங்கள் சார்த்தப்பட்டு அழகாய் இருந்தார்கள்.
தனிச் தன்னதியில் ஆண்டாள் முத்தங்கி சார்த்தி, மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் வெகு அழகாய் இருந்தனர்.
சிலபடிகள் கீழே இறங்கி வந்தால் பசுமாடுகள், அகத்திகீரை விற்கிறார்கள் பசு மாட்டுக்குக் கொடுக்க.
வெளியே போகும் வாசல் பக்கம் பளிங்கு ராதா கிருஷ்ணர் அழகாய்.
அழகிய கோவில் தள்ளு, முள்ளு இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் செய்தது இதுவே முதல் முறை.
கருடசேவையும் கிடைத்தது. கோவிந்தன் அருள்தான்.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கி விட்டுப் பக்கத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் போய் வணங்கி விட்டு வெளியே வந்தோம்.அப்போது வீதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உலா வந்து கொண்டு இருந்தார். முரசு முன்னே சென்று விட்டது. சிறுவர்கள் கோவிந்தன் புகழ் பாடிக் கொண்டு போனார்கள்.
கோபுரவாசலில் ஒருபுறம் சக்கரத்தாழ்வார் மறுபுறம் கருப்பண்ணசாமி
உள்ளே போனவுடன் கருடன்மேல் பெருமாள் காட்சி தந்தார்
வாசலில் பெருமாள் வீதிவலம் வருவதை முரசு அறைந்து சொல்லிப்போக தயாராக இருக்கும் முரசு
இதோ கிளம்பிவிட்டார் !
துளசி பிரசாதம் தர, குட்டிக் கண்ணன்
தருகிறார் துளசி, சின்னக் கண்ணன்
பத்து மணிக்கே வெயில் கொளுத்துகிறது
புரட்டாசி மாதம் ஒவ்வொரு கனிக்கிழமையும் கெருட சேவை நடக்கும் என்றார்கள். இந்த முறை ஐந்து சனிக்கிழமை வருகிறது.
கோவிலின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கும்.
வாழ்க வளமுடன்.