உணவு ஊட்டும் காணொளியை ப் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
எங்கள் குடியிருப்பில் குருவி கூடு கட்டி இருக்கிறது. காலை முதல் மாலை வரை அதன் கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருக்கும். கூட்டிலிருந்து குஞ்சுகள் வெளி வந்த உடன் தாய், தந்தை குருவிகள் மாற்றி மாற்றி உணவை கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிய வண்ணம் இருக்கும்.
நான் ஜன்னலில் வைக்கும் சாதத்தை ஒவ்வொரு பருக்கையாக அலகில் கொத்தி எடுத்து வந்து ஊட்டுவதே அழகு. சின்னதாக இருந்தவரை கூட்டுக்குள் இருந்து உணவை வாங்கிய குஞ்சுகள் கொஞ்சம் பெரிதானவுடன் வெளியே வந்து வாங்க ஆரம்பித்து விட்டது.
முண்டி அடித்து முதலில் நிறைய உணவை சாப்பிடும் குஞ்சு முதலில் பறக்க தயார் ஆகி விடுகிறது.. ஓரமாய் அம்மா உள்ளே வந்து கொடுக்கட்டும் என்று இருக்கும் சோம்பல் குஞ்சு மெதுவாய் பறக்கும் போல!
அம்மா ! அம்மா எனக்கு
அம்மா! ஆ ஊட்டு!
அம்மா ! அம்மா வா பக்கத்தில்
குஞ்சு இறக்கையை விரித்துக் கொண்டு உணவை வாங்கும் அழகே ! அழகு!
சமத்தாய் உள்ளே இருங்கள் அம்மா வந்து விடுகிறேன்
யாராவது பார்க்கிறார்களா? என்ற கவனிப்பு
அம்மா எங்கே காணோம்!
மெல்ல கீழே இறங்கிக் கவனிக்கிறது ஒரு குஞ்சு
அடப் போக்கிரிக் குட்டி ! உன்னைக் கீழே வராதே! என்று சொல்லிப் போனேன் அல்லவா? . உன் உடன்பிறந்த இரண்டு பேரும் சமத்தாய் அம்மா பேச்சைக் கேட்டு உள்ளேயே இருக்கிறார்கள் அல்லவா? ( மூன்று குஞ்சுகள்)
உனக்கு இறக்கை முளைத்து விட்டது என் பேச்சை எங்கே கவனிக்கப் போகிறாய். இனி கவனமாய் இரு. இன்னும் கொஞ்ச நாளில் என்னைப் போல் நன்றாகப் பறக்கலாம். இனி நீயே உன் உணவைத் தேடிச் செல்லலாம். இடையூறுகளிலிருந்து தப்பிக்கச் சொல்லித் தருகிறேன் அதுவரை பொறுமையாக இரு கண்ணு.
வாழ்க வளமுடன்.