எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 செப்டம்பர், 2016

நூற்றாண்டு கடந்த தமிழ்ப்பாடப்புத்தகம்

எங்கள் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் உள்ள பழமையான புத்தகம் !
.
சென்னைப் பல்கலைக்கழக மெட்ரிகுலேஷன் வகுப்பிற்குரிய தமிழ்ப்பாடப் புத்தகம்.
1893 ஆம் வருஷம் வெளியிடப்பட்ட புத்தகம்.
(அச்சிட்டு 123 ஆண்டுகள் ஆகிவிட்டன)
என் கணவரின் உறவினரின் முன்னோர், திரு.ஐ.பி தெய்வநாயகம் அவர்கள் படித்த புத்தகம்.
விலை 12 அணா. மொத்தப் பக்கங்கள் 114.
மவுண்ட் ரோடு ,அடிசன் கம்பெனியில் அச்சிடப்பட்டுள்ளது
மகாபாரத விராடபருவம், (உரைநடை) ,
அரிச்சந்திர புராணம், (செய்யுள்) ஆகியவை அடங்கி உள்ளன. படிக்கலாம் என்றால் கிழிந்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது.
மின் விசிறியைப் போடாமல் பத்திரமாய் படம் எடுத்து இருக்கிறேன்.
காற்றில் அலை பாய்ந்தாலே கிழிந்து விடும் நிலையில் உள்ளது.

நிறைய பேர் இந்த புத்தகத்தை படித்து இருக்கிறார்கள்.  பக்கங்களில் அவர்கள் பெயரை எழுதி வைத்து இருக்கிறார்கள்.


 அரிச்சந்திர புராணம்
மஹாபாரதம் (விராடபர்வம்)


இந்த இரண்டு கதையிலும்  அரிச்சந்திரன்  நாட்டை இழந்து கஷ்டப்பட்டதும், பாண்டவர்கள் நாட்டை இழந்து கஷ்டப்பட்டதும்    இருக்கிறது.

இரண்டுமே சூதாட்டத்தால்  நாட்டை இழந்த கதை.    அரிச்சந்திரன் எத்தனை சோதனை வந்த போதும்   பொய்  சொல்லாமல் கடைசியில் வென்றதும், பாண்டவர்கள் ஐந்து பேர் 100 கெளரவர்களை வென்றதும்   படிப்பினை அனைவருக்கும்.

அரிச்சந்திர புராணத்தில்   கடைசியில்  வரும் ஒரு காட்சி”-

//அரிச்சந்திரனும், சந்திரமதியும் புடத்தால் மாற்றுயர்ந்த பொன்போல் விளங்கினார்கள். அப்பொழுது வஸிஷ்ட முனிவரும் கெளசிக முனிவரும் திருமூர்த்திகளும், விநாயகரும் முருகக்கடவுளும், இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும் அவ்விடம் வந்தார்கள். அரசன் அவ்ர்களெல்லாரையும் வணங்கித்துதித்தான். சந்திரமதி உமாதேவியை வந்தித்தாள். முருகக் கடவுளழைக்க தேவதாசனும், காசிராஜன் பிள்ளையும் துயிலுணர்ந்தவர்கள் போல் உயிர்பெற்றெழுந்தார்கள்.

பின்பு பரமசிவன் கெளசிகமுனிவரைப் பார்த்து “ உங்களில் வென்றோர் யாவர்  தோற்றோர் யாவர்” என்று கேட்பக் கெளசிக முனிவர் :-

”கோதிலாக் குணத்தோ னீதியு நெறியுங்
         குறியுமியா  னறிகிலா திகழ்ந்தேன்
ஆதலால்  வென்றோன் வசிட்டனே தோற்றோ
        னடியனே”

என்கிறார்.

பின்னர் பரமசிவன் அரிச்சந்திரனைப்பார்த்து நீ அயோத்தியையடைந்து அரசாட்சி செய்துவிட்டுப் பின்பு நமது பதவியை யடைவாய் என்று சொல்கிறார்.

பரமசிவன் இந்திரனைப் பார்த்து நீ  அரிச்சந்திரனோடு அயோத்தி சென்று அரிச்சந்திரனுக்கு முடிசூட்டிவிட்டு அப்பால் உன் நகரமடைக” என்று கட்டளையிட  

அரிச்சந்திர புராணம் சுபமாய் முற்றுப் பெறுகிறது.


அது போல்  மஹாபாரதக் கதையில்  இந்த விராடபர்வம்  கடைசியில்  வரும் சில காட்சி:-

 //வீமன்   கீசகனுடைய தம்பிகள் முதலான பந்துக்களை யெல்லாம் த்வம்சஞ் செய்து சுடுகாட்டை நிரப்பி கழுகு நரி பேய் முதலானவைகளுக்கு விருந்து செய்வித்துத் திரெளபதியைக்  கைகளாலணைத்துக் கொண்டு நகரத்திற்குத் திரும்பி வருமளவில் அவளுக்கு ஆறுதலாக சில கதைகளை சொல்லி, 
கேட்டாயோ பெண்ணே! நல்லவர்களுக்கு மகா ஸெளக்கியங்கள் வருவதற்கு முன் அடையாளமாக ஆபத்துக்கள் வரும்.    ஆதலால் நேரிட்டிருக்கிற கஷ்டங்களுக்கு நீ வ்யசனப் படாதே” என்று சொல்லிய வீமன் பேச்சைக் கேட்டுத் திரெளபதி  சந்தோஷமாய் கூடப்போனாள்.//

அந்தக்காலத்தில் அரிச்சந்திரன் நாடகம் பார்த்து பொய் சொல்வதை விட்டுவிட்டதாக  மகாத்மா காந்தி ’சத்தியசோதனை’யில் சொன்னார்.

நமக்கு கஷ்டங்கள் வரும் போது இறைவனை நிந்திக்கிறோம்.  அப்படி இல்லாமல் இறைவனை நம்பி சரணடைந்தால் நல்லது செய்வார்.
துன்பங்களை கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிகையுடன் எதிர் கொண்டால் துன்பங்களிலிருந்து மீளலாம்.  என்பதை சின்ன வயதில் பாடமாய் படித்தவர்கள் பாக்கியசாலிகள்.


                                                                    வாழ்க வளமுடன்.



===============================================================================