உறவோடு மகிழதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவோடு மகிழதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 மே, 2012

மனசுக்குள்ளே வந்த மாயம் என்ன?




தலைப்பை பார்த்து என்ன இது  ஐம்பதை கடந்த அம்மா 60 நெருங்க சில காலங்களே இருக்கும் மாது எழுத வைக்கும் தலைப்பா இது என்று நினைப்பவர்களுக்கு என் பதில் இருபதோ ,அறுபதோ மனது எல்லோருக்கும் இருக்கே!

மனது சிலநேரங்களில் மகிழ்ச்சியாய் , சில நேரங்களில் சோகமாய் . சிலநேரங்களில் தெம்பாய், சிலநேரங்களில் சலிப்பாய் தோன்றுவது சகஜம் தானே! இப்போது எனக்கு மகிழ்ச்சியாய், தெம்பாய் உள்ளது. வசந்த காலம் போல் உள்ளது . பேரன் பேத்தி . மகள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு, அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி பார்த்தல். என்று பொழுது ஓடுகிறது. தெம்பு இல்லாதது போல் இருந்த உடம்பில் புது தெம்பு வந்து விட்டது. அது தான் அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.

பதிவுகள் படித்து கருத்திடுவது, பதிவுகள் எழுதுவது எல்லாம் சில நாட்களுக்கு  முடிந்த போது. இந்த மாதம் ஆரம்பத்தில் நாங்கள் சென்ற ஆன்மீக சுற்றுலாப் பற்றிய செய்திகளை உங்களுடன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பதிவுகளையும் படித்து கருத்திட வேண்டும்.

இன்னும் என் பயணம் முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் புது வரவாய் இளந்தளிர் ஒன்று வந்து இருக்கிறது. அந்த புது  வசந்தத்திற்கு பெயர் சூட்டுவிழாவிற்கு போக வேண்டும்.(கொழுந்தன் அவர்களுக்கு பேரன் பிறந்து இருக்கிறான்)

வீட்டில் டெல்லி பேரன் இந்தி கலந்த தமிழ் பேசுவதை கேட்டு மகிழ்தல், பேத்தியின் கர்நாடக இசை பயிற்சி பாடலை கேட்டல்., பேரன் மிருதங்க பயிற்சி செய்வதை கேட்பது என பொழுது இனிதாக கழிகிறது.

பேரனுக்காக சர்க்கஸ் சென்று வந்தோம். பேரனுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். சர்க்கஸில் யானைஅவனுக்கு பிடித்த  கிரிக்கெட் விளையாடியது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. கற்பனையில் கிரிக்கெட் விளையாடுவான் அவனே சிறிது நேரம் பவுலிங் ,செய்வான், அவனே பேட்டிங் செய்வான். தாத்தாவுடன் விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டாக்காரராய் மாறி விளையாடுவான். தாத்தாவிடம் சொல்லி பேட் வாங்கி வந்து எப்போதும் கையில் வைத்துக் கொண்டு,  படுக்கும் போதும் தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு மகிழ்கிறான்.
   


இன்னும் கடற்கரை செல்லவேண்டும். தாத்தாவிற்கு ஐபாட் டச்சில்  வெயிலுக்கு ஏற்ற உடை அணிந்து ஊஞ்சலில் அமர்ந்து  தாத்தாவும் பேரனும் விளையாடுகிறார்கள்.இவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள் என்று என் மகனின் மகன் நானும் இங்கு வருகிறேன் என்கிறான். எல்லோருடனும் ஸ்கைப்பில் உரையாடுகிறான். செம்டம்பர் மாதம் வருகிறோம் விடுமுறை கிடைத்தால் என்கிறார்கள். இறைவன் அருளால் எல்லாம் நலமாய் வரவேண்டும்.

குழந்தைகள் வெளிநாட்டில், வெளியூரிலில் இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் வரும் நாள் தானே வசந்த காலம்! எல்லா பெற்றோர்களுக்கும் அந்த வசந்தகாலம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ அது போல் உறவுகளை மறக்காமல், இருக்க பாசம் என்னும் நூல் கயிறு அறுந்து போகாமல் இருக்க உறவுகளின் சந்திப்பு அவசியம். வான் மழையை எதிர்பார்த்து இருக்கும் சாதகப் பறவைகள் பெற்றோர்கள்.

எங்கள் மாமனார், மாமியார் நாங்கள் ஊருக்கு போகும் போது மகிழ்வதும் திரும்பி வரும் போது அவர்கள் முகம் வாடிவிடுவதைப பார்க்கும் போது நாமும் அந்த நிலையில் தானே இருக்கிறோம் என்ற எண்ணம்  வரும்.  இத்தனை வயதிலும் என் அத்தை , மாமா அவர்கள்  மகிழ்ந்து இருப்பது ஆலமரத்தின் விழுதுகள் போன்ற தங்கள் குழந்தைகளின் அன்பால் தான். நாங்கள் நலமாய் இருப்பது ஆலமரத்தின்  நிழலால். விழுதுகளின் அன்பால்.

பதிவுகளே வெளிவரவில்லையே நல்மாக இருக்கிறீர்களா ? என வலையுலக அன்பர்கள் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்வின் பின் பகுதியில் கிடைத்த இந்த புது வசந்தத்தால் வாழ்வு மேலும் இனிமையாக இருக்கிறது.

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.
நலமாக இருக்கிறேன்.  ஊர்ப்பயணங்கள் முடிந்து வந்து உங்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.









செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

நானும் என் கணவரும் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக மதுரை போய் இருந்தோம்.
திருமண வீட்டில் மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்ய அழகான குங்குமச் சிமிழில் அட்சதை அரிசியை போட்டு தந்தார்கள். இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல் தான் விழும். மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்திவரலாம்.இன்னொரு வீட்டுக் கல்யாணத்தில் எல்லோரும்’அப்படியே இருங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மணமக்கள் வருவார்கள் அப்போது அட்சதைப் போட்டு ஆசிர்வாதம் செய்யுங்கள்’ என்றார்கள். இது நல்ல யோசனையாக இருந்தது. வயதானவர்கள் படி ஏறி கூட்டத்தில் இடித்துக் கொண்டு போகாமல் இருந்த இடத்தில் வாழ்த்த முடியும்.

திருமண வீட்டில் வெகு நாள் பார்க்காத உறவுகள், நண்பர்களைப் பார்த்து அன்பை பரிமாறி கொண்டபின் ’ஒரு வாரம் நீ இருந்து வா நான் அடுத்த ஞாயிறு வந்து அழைத்துப் போகிறேன்’ என்று என் தங்கை வீட்டில் விட்டு விட்டுப் ஊருக்கு போய்விட்டார்கள். எல்லோரும் 'மதுரைக்கு நல்ல மழை தான்' என்றார்கள். பின்ன, எப்போதும் விசேஷத்திற்கு வந்துவிட்டு ஒடினால், இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரி நல்ல மழை தான் பெய்தது. தல்லா குளப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆகி மண்டல பூஜை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்கள். திருவிழா வேறு நடக்கிறது இன்று கருட வாகனம் என்றார்கள், அதற்குப் போனோம்.
மாலை 4.30க்கு போனதால் கூட்டம் இல்லை. கருட வாகனத்தில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் பார்க்க முடியாத படி சுற்றிலும் திரைச்சீலையால் மறைத்து விட்டார்கள்.

உள்ளே பெருமாளை பார்த்து விட்டு வரும் போது என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. தங்கைகளும் நானும் அம்மாவுடன் மார்கழி மாதம் காலை 4.30க்கு பசுவும் கன்றும் வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவைத் திறக்கும் போது சென்று வணங்கிய நினைவு வந்தது. சுடச் சுட வெண்பொங்கல் பெரிய நெல்லிக்காய் அளவுதான் தருவார்கள். வாங்கி உண்டு விட்டு அடுத்த கோவிலுக்கு அம்மாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டு போவதைப்பற்றி பேசிக் கொண்டே ஆட்டோவில் ஏறினோம். அப்போது நரிமேட்டிலிருந்து நாங்கள் அம்மா,பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பேசிக்கொண்டே நடந்தே போவோம். இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.

அடுத்து நாங்கள் சென்ற கோயில் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் ஆகும்.
அந்த கோவிலில் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் .
கோவில் பக்கத்தில் உள்ள பழைய போலீஸ் ஓட்டுக் குடியிருப்புகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாய் மாறிவருகிறது. ஒரு சில பழைய வீடுகள் இன்னும் இருக்கின்றன. அதை அப்புறம் கட்டுவார்கள் என நினைக்கிறேன்.பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில்
மார்கழி மாதம் போகும் போது காலை போலீஸ் மார்ச்பாஸ்ட் நடக்கும்,வாத்தியங்கள்(பியூகிள்) வாசித்துக் கொண்டு இருப்பார்கள். போலீஸ் பாரேட் நடப்பதைப், பார்க்க அழகாய் இருக்கும்.
மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு சிறப்பாய் நடந்ததாம் என் தங்கை சொன்னாள்.
தினம் அன்னதானம் நடக்கிறது .

அழகர் பூ பல்லாக்குப் பார்க்க மாரியம்மன் கோவில்தான் வருவோம். அழகான பூப் பல்லாக்கு கோவில் பக்கம் வரும் போது வாடிவிடும். தல்லாகுள பெருமாள் கோவில் அருகில் எதிர் சேவையின் போது வாணவேடிக்கை மிகவும் நன்றாக இருக்கும்.வித,விதமாய் வெகு நேரம் வாணவேடிக்கை நடக்கும்.

ஒவ்வொரு முறை போகும் போதும் நேரம் இருந்தால் மதுரை மீனாட்சியைப் பார்க்க போவோம்.கும்பாபிஷேகம் ஆனபின் போக முடியவில்லை.ஒரு முறை போனபோது முதல் ராஜகோபுர வாசலிருந்து கூட்டம். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று போனால் பொற்றாமரைக் குளம் வரைதான் போக முடிந்தது. அதன் பின் தடுப்பு மூங்கில்கழியை தாண்டி
காவலுக்கு நின்ற பெண் போலீஸ் அதிகாரியிடம் சொல்லிவிட்டு ‘சுவாமியைப் பார்க்க போகிறோம் மீனாட்சியை பார்க்க முடியாது ஒரே கூட்டமாய் இருக்கிறது’ என்றோம் அந்த பெண் போலீஸ் ’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.

இந்தமுறை எனக்கு இரண்டு முறை மீனாட்சிஅம்மனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்து.
புதன்கிழமை,சனிக்கிழமை என்று ஒரே வாரத்தில் இரண்டு முறை பார்த்து விட்டேன்.

என் தங்கையின் பெண் ’செவ்வாய்,வெள்ளி,கூட்டமாய் இருக்கும் அப்போது போககூடாது பெரியம்மா! புதன்கிழமை போகலாம்.’ என்றாள். எனக்கும் அன்று பிறந்தநாள். அம்மாவிடம் ஆசி பெற்று வரலாம் என்று போனோம். இலவசமாய் செருப்பு பாதுகாக்க அழகான கட்டிடங்கள் உள்ளது. நான்கு வீதிகளிலும் சுற்றிவந்து கோபுரங்களைத் தரிசிக்க பேட்டரி கார் வசதி உள்ளது.வேறு வாகனக்களுக்கு அங்கு அனுமதி இல்லை.

அம்மன் சன்னதிக்கு முதலில் போனோம். ஊஞ்சல் பக்கம் அம்மனின் சேலைகள் ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ஏலத்தில் பத்து பத்து ரூபாயாகத்தான் ஏற்ற வேண்டுமாம். அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று? எல்லாம் பாலியஸ்டர் பட்டு புடவைகள். ஒரு புடவைக்கும் அடுத்தபுடவைக்கும் ஏலம் விட நேரம் ஆனது. கூடி இருப்பவர்கள் சீக்கிரம் ஏலம் விட சொன்னார்கள். மடி கணினியை வைத்துக் கொண்டு புடவையின் எண், விலை பார்த்து ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். நேரம் ஆகிவிட்டதால் ஒரு அம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் போலும் ஏலம் விடுபவர் மைக்கில் கன்னத்தில் இருந்து கையை எடுங்கள் அல்லது இடத்தைவிட்டு நகருங்கள் என்று அதட்டிக்கொண்டு இருந்தார்.

பிள்ளையாருக்குப் பக்கத்திலிருந்து வரிசை ஆரம்பித்து விடுகிறது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. விறு,விறு என்று நகர்ந்து விட்டது கூட்டம்,15ரூபாய் கட்டணம் ஒரு பக்கம்,இலவச வரிசை ஒரு பக்கம் என்று போனதால் நெரிசல் இல்லாமல் பார்க்க முடிகிறது. உள்ளே போகும் அர்ச்சகர் கொஞ்சம் விலகி நின்றால் இன்னும் சீக்கிரம் பார்க்கலாம். அம்மன் சன்னதியை விட்டு வெளியே வந்தால் என் தங்கை பெண், 'பெரியம்மா சுழலும் லிங்கம் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டாள். ’பார்த்தது இல்லையே எங்கு இருக்கு’ என்று கேட்டேன் ’மேலே அப்படியே விதானத்தை பாருங்கள்’ என்றாள். அண்ணாந்து பார்த்தால் லிங்கம் நம்மை நோக்கி உள்ளது .நாம் எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஆவுடையாரின் அபிஷேகத்தண்ணீர் விழும் பகுதி நம் பக்கம் நேராய்த் தோன்றுவதைப்போல் அற்புதமாய் வரைந்த அந்த ஒவியர் பாராட்டப்பட வேண்டியவரே.

அடுத்து சோமசுந்தரரைப் பார்த்தோம். நல்ல அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள், சரவிளக்கு வரிசையாக ஜெகசோதியாக பிரகாசமாய் இருந்தது. அம்மன் சன்னதியிலும் இப்படி பிரகாசமாய் விளக்கு இருந்தால் அம்மனை இன்னும் திருப்தியாய்ப் பார்த்து மக்கள் விரைவாய்க் கண்டு களித்துச் செல்வார்கள்.

புது மண்டபத்தில் எங்கள் வீட்டுக் கொலுவிற்காகச் சில அழகு பொருட்கள் வாங்கி வீடு வந்தோம், புரட்டாசி முதல் சனிக்கிழமை என் கணவர் ஊரிலிருந்து வந்தவுடன்,
’ நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேனே கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்தேன்’ என்றவுடன் அவர்களும் இன்று போகலாம் கூடல் நகர் பெருமாள் கோவிலில் தான் இன்று கூட்டம் இருக்கும்’ என்று சொன்னார்கள். கிளம்பினால் நல்ல மழை! ஆட்டோவில் போனாலும் தண்ணீர்! வண்டிக்குள்ளும்! மதுரையில் மழைபெய்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கீழவாசல் எல்லாம் தண்ணீர்! வண்டிகள் தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டு பரிதாபமாய் நின்று கொண்டு இருந்தன. அம்மன் சன்னதிவாசலிலும் தண்ணீர் நின்றது. மழை நீர் வடிகால் வசதி சரியில்லை.

எனக்கு, கணவருக்கு சீக்கிரம் சுழலும் லிங்கத்தை காட்ட ஆசை. 15 ரூபாய் டிக்கட் எடுத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து சுழலும் லிங்கத்தைக் காட்டினேன் அவர்களும் ஆச்சிரியப்பட்டு ஓவியரைப் பாரட்டினார்கள். பின் சுவாமி சன்னதிக்கு வந்தால் என் கணவர் மேலே பார்! என்று எனக்கு சுழலும் லிங்கம் காட்டினார்கள்.சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள். நாங்கள் அண்ணாந்து பார்ப்பதைப் பார்த்து வெளியூர்களில் வந்த அன்பர்களும் என்ன? என்ன ?என்று கேட்டு எல்லோரும் பார்த்து பரவசப் பட்டார்கள்.

போனமுறை பார்க்க முடியவில்லை. வர வர மீனாட்சி அம்மன் கோவிலும் திருப்பதி பெருமாள்கோயில் மாதிரி ஆகிவிட்டது என்று புலம்பிக் கொண்டு இருந்தது சொக்கன், சொக்கி காதில் விழுந்து இந்த முறை நல்ல காட்சி தந்தார்கள் சொக்கனும் சொக்கியும்.

மதுரையில் தண்ணீர் கஷ்டம் உள்ளது. குடி தண்ணீருக்கு சில வீடுகளில் மோட்டார் போட்டு பிடிப்பதால் சில வீடுகளுக்கு தண்ணீர் வருவது இல்லை.புகார் செய்தால் எடுப்பது போல் எடுத்து விட்டு மறுபடியும் போட்டு கொள்கிறார்கள் என்ன செய்வது! அவர்களாய் திருந்தினால் தான் உண்டு.

இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.

கோவில்பட்டியில் சித்தப்பாவீட்டிற்கு தங்கை,தம்பியோடு போய்வந்தேன்.சித்தப்பா வீட்டீல் துக்கம் நிகழ்ந்து இருந்தாலும்,அதை மறந்து அண்ணன் குழந்தைகளை அன்போடு உபசரித்தார்கள். சித்தப்பாவின் உருவில் என் அப்பாவை கண்டேன்.

நான் ஒரு வாரமும் அன்பு மழையில் நனைந்து வந்தேன். தம்பி, தங்கைகள்வீடு, மாமாபெண் வீடு, தங்கை மகள் வீடு, என் மகனுக்கு பெண் எடுத்த வீடு என்று போய் புது தெம்பைப் பெற்று வந்துள்ளேன். இப்போது
’பெரியம்மா!’,’அத்தை!’ என்று குழந்தைகளின் அன்புக் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.