திருவேடகம் செல்லும் பாதையில் இருந்த கோவில்
முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம், நட்சத்திரத்தை வைத்து கடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.
முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும். சூரபன்மனைச் சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.
இன்று கந்த சஷ்டி தொடக்க நாள். கந்தன் பெருமைகளை, பாடல்களைப் பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்னே சஷ்டி விழா வந்து விடும்.
தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு கந்தனை நினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.
ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர். ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள் உண்டு, அவர்கள் காலையும், மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.