ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

மலர் வழிபாடு


இறைவனை மலர் தூவி வழிபாடு செய்வது மகிழ்ச்சி தரும், அதிலும் நம் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர் கொண்டு பூஜிப்பது மேலும் மகிழ்ச்சியை தரும்.

இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்தில்(அரிசோனா) பூத்த மலர்கள் படம் இடம் பெறுகிறது.



நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறை கொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டைறையுஞ் செங்காட்டங்குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
- திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை


கோடை காலம் ஆனதால் பூக்கள் நிறைய பூக்கவில்லை.
பூத்தாலும் அரளி பூக்கள்    மலராமல் மொட்டாக இருந்தது .


கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள்

முப்போது முடி சாய்ந்துத் தொழ நின்ற முதல்வன 

அப்போது மலர் தூவி  ஐம்புலனும் அகத்தடக்கி

எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே.

=திருநாவுக்கரசர்  அருளிய நாலாம் திருமுறை தேவார பாடல்.


மல்லிகை மற்றும் மாதுளை இலைகள்.

மல்லிகை மலர்களும் மல்லிகை இலைகளும்


மல்லிகை மலர்களும் அரளி இலைகளும் 


மலர்கள் குறைவாக இருக்கும் போதும் மலர்களே கிடைக்கவில்லை என்றாலும் பத்திரம்  என்று சொல்வார்கள் இலைகளை அவைகளை வைத்து வழிபடலாம்.
என் மாமனார் அவர்கள் ஊர்களுக்கு போகும் போது பன்னீர் பத்திரங்களை(இலைகள்) பறித்து  எடுத்து செல்வார்கள்.  மாயவரத்தில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பன்னீர் மரம் இருந்தது. நானும் உதிரி பூக்கள், மற்றும் தோட்டத்தில் பூத்த மலர்களை  சேகரித்து சிவபூஜைக்கு கொடுப்பேன்.

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் 
இப்படி சொல்கிறார்.

யாவருக்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை
யாவருக்குமாம் பசுவுக்கு  ஒரு வாயுறை
யாவருக்குமாம்  உண்ணும் போதொரு கைப்பிடி 
யாவருக்குமாம்  பிறர்க்கு இன்னுரை தானே!

மலர்களை தூவி  வழிபட மல்லிகை

பூவார் மலர் கொண்டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள்  செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந்தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே

- திருஞானசம்பந்தர் தேவாரம்





திருவருள் படத்தில் இறைவனுக்கு பூமாலைகள், பூக்கள்  விற்பவர் பாடும் பாடலாக வரும்.  எத்தனை விதமான மாலைகளை பற்றி பி.சுசீலா அவர்கள் பாடுகிறார் ! கேட்டு இருப்பீர்கள் மீண்டும் கேட்கலாம் இனிமையான பாடல்.


மல்லிகை பூக்கள் ஒரளவு பூத்தது.

ஓதிமா மலர்கள் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும்  எண்டோள் 
சுடர் மழுப்படையினானே 
ஆதியே அமரர் கோவே
அணியாணா மலையுளானே
நீதியால் நின்னையல்லால்
நினையுமா நினைவிலேனே

- திருநாவுக்கரசர்  நான்காம் திருமுறை .


ரோஜா செடியில் சிறு ரோஜா மலர்கள் மொட்டு விடுவதிலிருந்து  மலர்வதை  தினம் தினம் பார்ப்பது மகிழ்ச்சி தரும் எனக்கு வெயில் தாங்காமல் வாடினாலும் மலர்களை  தந்து கொண்டு இருந்தது. 


மறையின் நாண்மலர் கொண்டாடி வானவர் 
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன் எம்பெருமான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே

- திருநாவுக்கரசர்  ஐந்தாம் திருமுறை





மல்லிகை மொட்டு மலரும்.

விரிந்த மலர் கொண்டு இறைவனை தொழ சொல்லும் தேவார  பாடல்

விண்ட மாமலர்  கொண்டு விரைந்து நீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே

- சேக்கிழார் பெரிய புராண பாடல் 

-










வாழ்த்த வாயும், 
நினைக்க மட நெஞ்சும் ,
தாழ்த்தச் சென்னியும், 
தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் 
தூவித் துதியாதே
வீத்தா வாவினை
யேன் நெடுங் காலமே!

- திருநாவுக்கரசர்  ஐந்தாம் திருமுறை



கடையில் மலர் செண்டாக  விற்பதை வாங்கி வந்து அதை இறைவனுக்கு வைப்பாள் மருமகள் ஆடி அமாவாசை அன்று இந்த பூக்களை வாங்கி வந்தாள், இறைவனுக்கு வைத்து விட்டு சிலவற்றை இப்படி பூக்கிண்ணத்தில் நீரில் போட்டு இறைவன் முன் வைத்தாள்.


ஒரு வீட்டில் சாய் பஜனைக்கு அழைத்து இருந்தார்கள் அப்போது அவர்கள் வீட்டில் பூத்த மல்லிகை மலரை மாலையாக தொடுத்து சாய்பாபா படத்திற்கு போட்டு இருந்தார்கள். மரும்கள் எங்கள்  வீட்டில் பூத்த மல்லிகையை   கட்டி எடுத்து சென்று கொடுத்தாள்  கீழே இருக்கும் சின்ன சாய்க்கு அணிவித்தார்கள்.

எல்லா இறைவன் மேலும் பஜனை பாடல்கள் பாடினார்கள், நாமும் கூட பாடியது மிகவும்  நன்றாக இருந்தது,  நேரம் போனதே தெரியவில்லை.  அப்புறம் பிரசாதங்கள் கொடுத்தார்கள். மனமும் வயிரும் நிறைந்தது.



 வியாழன் அன்று  மகன் வீட்டில் இருக்கும் சாய்க்கு  மல்லிகை மாலை . மருமகளின் அம்மா  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமிக்கு  மல்லிகை பூவை கட்டி  அணிவித்தார்கள்.

அன்பு எனும் ஆறு கரை  அது புரள 
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் 
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள் தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை  அரசே போற்றி

மாணிக்கவாசகர் - திருவாசகம் போற்றித்திருஅகவல்

மலர்கள் இல்லையென்றாலும்  நம் கரங்களை குவித்து மலராக்கி இதய தாமரையில் உள்ள  இறைவனை  வணங்கி வழிபடலாம் நாளும். 
 
வாழ்க  வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக