சனி, 25 செப்டம்பர், 2021

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்


காளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று புரட்டாசி  இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது
103 வது திவ்ய தேசம்.  திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.


காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்கீரம் போனால் கூட்டம் இருக்காது என்று  சொல்வார்கள். 


வாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து  விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள்  இவ்வளவு உயரமா? நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)  

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.

சுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.
                               
                           காளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்
தாயார் மோகனவல்லி  சன்னதி  விமானம்

பெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .

 தாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில்   ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  

                                                   
                               சக்கரத்தாழ்வார் சன்னதி தங்கக்கோபுரம் 

நரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம்.  சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால்  எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
                                                         
                    சிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி                                          
சிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர்  உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி  நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர். 

அழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை  வர்ணம் பூசி இருக்கிறார்கள் .அதில் நடந்தால் சுடவில்லை.

கோடியில் இருக்கும் பெரிய கிணறு  இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.


சிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது. 

உள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால்  வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.


 அவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். வாதாம், தென்னை, மாமரம் இருந்தன.


தென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்

                      மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.

அதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த  கிணறு
குப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம்,  கீற்றுடன் தென்னைமரம்
                        
 அடுத்து சதுரக் கல்லில்  சுற்றிவர சின்ன சின்ன  உருவங்கள் நடுவில்  சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.



தரையிலும்  மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்
அந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும்   வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.


பிரகாரம் சுற்றி  கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல்  பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.


சன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.

அவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல்  உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன்  சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )

 /செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!//
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.

அடியவர்களின்  பாதம் அந்த உருவங்களின் மேல்

உள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.

 நாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு  திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து  பின்  உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.

இங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன்   திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.

சிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.



ஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்
  
அங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன்  குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.




ஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.
ஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு!



இப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.


                                           ஆலமரத்தடியில் நாகர்கள்.
இந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே!
இப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும்  தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.

குளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,
 புற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும்  அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.

கருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

----------

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயகுமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திவ்ய தரிசனம்.. புண்ணியம் கோடி.. அழகான படங்களுடன் பதிவு அருமை..

    நாராயண.. நாராயண..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே

      நீக்கு
  3. அற்புத தரிசனம் மா ...

    நாங்கள் ஒரு முறை மாலை நேரத்தில் சென்றோம் ..யாரும் இல்லாமல் ஏகாந்த சேவை கிடைத்தது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //யாரும் இல்லாமல் ஏகாந்த சேவை கிடைத்தது ..//

      அருமை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அன்பின் கோமதி
    வாழ்க வளமுடன்.
    திருமோகூர் என்றதும் அந்தத் தாமரைக் குளம் தான்
    நினைவுக்கு வந்தது.

    2003 இல் சென்ற போது அது தாமரைக்காடாக இருந்தது. இப்போது
    பார்க்கவே மனம் சலனப்பட்டது.
    அந்தக் குளத்தில் மூழ்கி தாமரை எடுத்து சக்கரத்தாழ்வாருக்கும்
    படைத்துக் கொண்டிருந்தார்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      2003 ல் தரிசனம் செய்து இருக்கிறீர்களா? நான் 2016ல்
      அதற்கு முன் நிறைய தடவை போய் இருக்கிறேன். வருடம் நினைவில் இல்லை. 2016ல்
      போய் வந்த பதிவுதான் இது.

      தாமரை குளம் நீர் நிலை வற்றும் போது இப்படி காட்சி அளிக்கும் நீர் வரத்து இருக்கும் போது நன்றாக இருக்கும்.


      //குளத்தில் மூழ்கி தாமரை எடுத்து சக்கரத்தாழ்வாருக்கும்
      படைத்துக் கொண்டிருந்தார்கள்!!!//


      ஓ அப்படியா! அங்கு வாங்கிதான் எல்லோரும் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  5. அன்பின் கோமதிமா,
    அருமையான காளமேகப் பெருமாள் தரிசனம்
    கோபுர தரிசனம் ஆயிற்று இன்று.

    2003 இல் ஒரு தடவையும்,
    1995 இல் ஒரு தடவையும் போயிருக்கிறோம்.
    மகள் திருமணம் நடக்க அறுபடை வீட்டு முருகனைத் தரிசனம்
    செய்யச் சொல்லி ,பழமுதிர்ச்சோலை முருகன், அழகர் கோயில் சுந்தர பாஹுப் பெருமாள்,
    அங்கிருந்த பதினெட்டாம்படி கருப்பன், ஆபத்சகாயர்,வழித்துணை பெருமாள்,
    மற்றும் காளமேகப் பெருமாள், திருப்பரங்குன்ற முருகன்
    என்று நாலு நாட்கள் சரியான சுற்று!!
    அங்கு போய் வந்த ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயம்:)
    இன்னும் மிச்சம் இருக்கும் படைவீடுகள் செல்லவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //அருமையான காளமேகப் பெருமாள் தரிசனம்
      கோபுர தரிசனம் ஆயிற்று இன்று.///
      நானும் பழைய பதிவை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.

      பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      மகள் குடும்பத்தினர் வாழ்க பல்லாண்டு.

      நீக்கு
  6. நாங்கள் சென்றது ஒரு ஐப்பசி மாதம்.
    கண்ணுக்கெட்டிய தூரம் வரை தாமரை,தாமரை ,தாமரை:)
    தமிழ் நாட்டின் மிகச் சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வார்கள்
    என்று சொல்லப்படும், ஸ்ரீவில்லிபுத்தூர் , காஞ்சீபுரம், திருமோகூர்

    மிக முக்கியமானவை.
    நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களையும்
    அழிக்கவும் வரும் ஆயுதம் சக்ராயுதம்.

    முருகன் கை வேல் போல!!
    அருமையான படங்கள்,
    தூளிக் குழந்தை, தாய், தாயின் கையில் குழந்தை
    மிக அற்புதம் அம்மா.
    அந்த நாட்களுக்காக மனம் அசை போடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாங்கள் சென்றது ஒரு ஐப்பசி மாதம்.
      கண்ணுக்கெட்டிய தூரம் வரை தாமரை,தாமரை ,தாமரை:)//

      பார்க்க அற்புதமாக இருந்து இருக்கும்.


      //தமிழ் நாட்டின் மிகச் சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வார்கள்
      என்று சொல்லப்படும், ஸ்ரீவில்லிபுத்தூர் , காஞ்சீபுரம், திருமோகூர்//

      சக்கரத்தாழவார் அனைவரையும் காக்கட்டும்.

      //தூளிக் குழந்தை, தாய், தாயின் கையில் குழந்தை
      மிக அற்புதம் அம்மா.
      அந்த நாட்களுக்காக மனம் அசை போடுகிறது.//

      ஆமாம், நாம் குழந்தையாக இருந்தது, நம் குழந்தைகள் , பேரகுழந்தைகள் என்று மனம் அசை போடும் இல்லையா!





      நீக்கு
  7. நீல வானமும், விமானங்களும், படித்துறையும்
    மிகச் சிறப்பு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு முழுவதும் ரசித்து படித்து அருமையன பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  8. நிறைய படங்கள்.  அற்புத கரிசனம்,.  ஒவ்வொரு இடமாக வரிசைக்கிரமமாக நாங்களும் சுற்றிப்பார்த்த உணர்வு.  2014 வாக்கில் ஒருமுறை சென்றிருப்பதாய் நினைவு.  சரியாய் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நிறைய படங்கள். அற்புத கரிசனம்,. ஒவ்வொரு இடமாக வரிசைக்கிரமமாக நாங்களும் சுற்றிப்பார்த்த உணர்வு.//

      நன்றி.

      தரிசனம் செய்து விட்டீர்கள். பழைய பதிவில் தரிசனம் செய்த விவரம் சொல்லி இருந்தீர்கள்.

      நீக்கு
  9. மேலே சென்று படங்கள் எடுக்கவில்லையா?  அங்கிருந்தும் அற்புதமான காட்சிகள் கிடைத்திருக்கும்.  தூளியில் இருக்கும் குழந்தையை தாய் கொஞ்சும் படம் பார்த்ததும் மனதில் "சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி.. " என்கிற பாடல் ஓடியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபுரத்தின் மீது உங்களை ஒருவர் அழைத்து சென்று தரிசனம் செய்து வந்த விவரம் பழைய பதிவில் சொன்ன நினைவு இருக்கிறது.

      நாங்கள் போகவில்லை. அனுமதி உண்டு மேலே போய் பார்க்க என்று தெரியாது.


      //தூளியில் இருக்கும் குழந்தையை தாய் கொஞ்சும் படம் பார்த்ததும் மனதில் "சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி.. " என்கிற பாடல் ஓடியது!//

      நினைவுக்கு வந்த பாடல் நல்ல பாட்டு . எனக்கும் பிடிக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளின் கோவில் கோபுரங்களுடன், கோவிலின் அற்புத விபரங்களுடன் தரிசனங்கள் கிடைத்தது. படங்கள் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லிச் சென்ற விபரங்களுடன் பதிவை படிக்கும் போது உங்களுடன் நானும் கூட வந்திருந்து கோவிலைப் சுற்றிப் பார்த்து பெருமாளை தரிசித்த திருப்தி கிடைத்தது. பதிவு கொஞ்சம் நீளவாக்கில் இருந்ததினால் என் கைபேசியில் கடைசி வரை படிக்க முடியவில்லையோ என்ற சந்தேகம் இருந்தது. மதுரைக்கு அருகிலேயே இருந்தும் கூட இந்த கோவில் நாங்கள் இதுவரை சென்றதில்லை. கோவில் பெரிதாக அழகாக உள்ளது.

    சக்கரத்தாழ்வார் தங்க கோபுர அழகாக உள்ளது. தரிசித்துக் கொண்டேன். உங்கள் கேமிராவில் சிக்கிய பிற காட்சிகளும், அழகாக உள்ளது. குழந்தையை அப்படி தூளியோடு சேர்த்து அணைத்து கொஞ்சும் போது ஒரு தாயின் மனம் பாசத்தில் கனிந்துதான் போகும். அந்த நிலையில் உள்ள படத்தை நன்றாக எடுத்துள்ளீர்கள். தாமரைக்குளத்தில் தண்ணீரே இல்லை போலிருக்கிறது. ஆனால் திருக்குளத்தில் தண்ணீர் நிறைய உள்ளது போலிருக்கிறது. அதன் அருகில்தான் இந்த தாமரைக்குளமா? சிறுவர்கள் குளத்து தண்ணீரில் குளித்து நீச்சலடிப்பதாக எழுதியிருக்கிறீர்களே..! குளத்து நீரின் குளுமையும் அருகில் ஆலமர நிழலின் தன்மையுமாக அந்த இடம் கோவிலை சுற்றிப்பார்த்த பின் சற்று இளைப்பாற நன்றாக இருந்திருக்கும் இல்லையா? பதிவு அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அருமையாக உள்ளது.//

      நன்றி.

      //பதிவு கொஞ்சம் நீளவாக்கில் இருந்ததினால் என் கைபேசியில் கடைசி வரை படிக்க முடியவில்லையோ என்ற சந்தேகம் இருந்தது.//

      மீள்பதிவு சில பதிவுகள் அப்படித்தான் கைபேசியில் அடங்கவில்லை.

      ஆனால் கடைசி வரை படித்து இருக்கிறீர்கள்.


      கோவில் பெரிதாக அழகாய் இருக்கும்.

      //குழந்தையை அப்படி தூளியோடு சேர்த்து அணைத்து கொஞ்சும் போது ஒரு தாயின் மனம் பாசத்தில் கனிந்துதான் போகும்.//

      ஆமாம். படத்தை ரசித்துபார்த்து அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி.

      தாமரைக்குளம் வேறு இடத்தில் இருக்கிறது. திருக்குளத்தை சுற்றி அழகான மதில் சுவர் படித்துறை இருக்கிறது. அங்கு இருந்து கொஞ்ச தூரத்தில் தாமரை குளம் இருந்தாக நினைவு.


      //கோவிலை சுற்றிப்பார்த்த பின் சற்று இளைப்பாற நன்றாக இருந்திருக்கும் இல்லையா?//

      ஆமாம். ஆலமரத்தின் காற்று, அன்பர்களை பார்ப்பது என்று நன்றாக இருந்தது.

      நினைவுகள் தரும் இனிமையை அனுபவித்தேன்.

      உங்கள் கருத்துக்க்கு நன்றி கமலா.













      நீக்கு
  11. எங்களையும் திருமோகூர் அழைத்து சென்று விட்டீர்கள்... படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. கோமதிக்கா திருமோகூர் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன்.

    படங்களும் விவரமும் செம கோமதிக்கா வழக்கம்போல.

    திருக்குளம் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      நீங்கள் இந்த கோயில் தரிசனம் செய்து இருப்பது மகிழ்ச்சி.

      //படங்களும் விவரமும் செம கோமதிக்கா வழக்கம்போல.//

      நன்றி.

      திருக்குளம் அழகுதான்.

      நீக்கு
  13. உங்களுக்கும் தெரிந்திருக்குமே கோமதிக்கா.....தும்பிக்கை ஆழ்வார் என்று பிள்ளையாரைத்தான் வைணவக் கோயில்களில் வைணவர்கள் சொல்வது.

    தூளிகட்டி குழந்தை தூங்கும் படம்

    திருக்குளம் படங்கள் எல்லாம் அழகு

    கோயில் தரிசனத்திற்கு மிக்க நன்றி கோமதிக்கா

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களுக்கும் தெரிந்திருக்குமே கோமதிக்கா.....தும்பிக்கை ஆழ்வார் என்று பிள்ளையாரைத்தான் வைணவக் கோயில்களில் வைணவர்கள் சொல்வது.//

      ஆமாம், தெரியும்.


      திருக்குளத்தில் கால்களை கழுவி, தும்பிக்கை ஆழ்வாரை வணங்கி, சன்னதிக்குள் சென்று கருடழ்வாரை வணங்கி பெருமாளை வணங்குவோம்.

      படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  14. கோயில் படங்களும் விவரங்களும் அருமை. மதுரையில் இருந்த போதும் இக்கோயிலுக்குச் சென்றதில்லை

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //மதுரையில் இருந்த போதும் இக்கோயிலுக்குச் சென்றதில்லை//

      வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கலாம்.

      //கோயில் படங்களும் விவரங்களும் அருமை.//
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. கோவில் படங்கள் அருமை.

    மீள் பதிவா? முன்பு படித்ததுபோல தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், மீள்பதிவுதான்.
      நான் இப்போது அமெரிக்காவில் அல்லவா இருக்கிறேன்.
      பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு