திங்கள், 21 செப்டம்பர், 2020

ஆனேகுட்டே கோவில், கும்பாசி





ஆனேகுட்டே கோவில் 

மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். மூகாம்பிகை கோவில் போய்விட்டு வரும் வழியில் உள்ள  ஆனேகுட்டே விநாயகர் கோவில் போனோம்  , சிறிது தூரத்தில் இருந்த கடற்கரை போனோம்  அவை இங்கே இந்த பதிவில் காணலாம்.

கோவில் முன்பு  அரசமரத்தின்  கீழ்  விநாயகர் இருக்கிறார்  


கொல்லூரிலிருந்து 45 கிமீ, உடுப்பியிலிருந்து  31 கி.மீ தூரத்தில் உள்ள கும்பாசி  என்ற  ஊரில் இந்த ஆனேகுட்டே  விநாயகர் கோவில் இருக்கிறது. 

தல வரலாறு:-  ஒரு காலத்தில் இந்த இடம்  காட்டுப் பகுதியாக இருந்தது.  வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்பட்டதால் அவர்கள் அகத்திய முனிவரிடம்  சென்று  தங்களைக் காப்பாற்றும் படி கேட்டனர்.  அவர் வருண பகவானின் அருள் வேண்டி தவமிருந்தார்.  அப்போது கும்பாசுரன் என்ற  அசுரன்  தவம் செய்யவிடாமல்  தொந்திரவு செய்தான்.

 அகத்தியர்  விநாயகரை வேண்டினார் . அப்போது அவனை அழிக்கும் சக்தி அவனைப் போல சம பலம் உள்ள  பீமனால் மட்டும் முடியும் என்பதால்   பீமனைப் போரிடச் செய்ய விநாயகர் யானை வடிவில் ஆயுதத்துடன்   வந்தார். யானை ஒன்று ஆயுதத்துடன் வருவதைக் கண்டு பீமன்  ஆயுதத்தை   கைப்பற்றும் நோக்கத்துடன் அருகில் செல்ல  யானை ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு   ஓடிவிட்டது. பீமன் அந்த ஆயுதத்தால் கும்பாசுரனுடன் சண்டையிட்டு வென்றார்.

கும்பாசுரன் மனம் திருந்தினான். அந்த அசுரன் பெயரில் இந்த ஊர் அழைக்கப்பட்டது. யானை முகத்துடன்  நின்ற நிலையில் இங்கு சுயம்பாய் விநாயகர் காட்சி அளிக்கிறார்.  ஆனே என்றால்  யானை, குட்டே என்றால் குன்று, அதனால் இந்த இடத்திற்கு ஆனே குட்டே என்று பெயர்.  12 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன சுயம்பாய்த் தோன்றிய உருவம். 

நெற்றியில் நாமம் அணிந்து இருக்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்ய  பக்கத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள மகாலிங்கேஸ்வரர்  கோவிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறதாம்.

பக்தர்கள்  தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் தேங்காய் மாலை 125, 1008 என்று எண்ணிக்கையில் அலங்காரம் செய்வார்களாம். அப்புறம் "மூடுகணபதி  பூஜை, அரிசி கணபதி பூஜை " என்று 400 கிலோ அரிசியால் அலங்காரம் செய்வார்களாம்.

கார்த்திகை மாதம் பறவைகளைக் காலையில் எழுப்பவும், கால்நடைகள் பறவைகளுக்கு நோய் வராமல் இருக்கவும் " பட்சி சங்கர பூஜை" என்ற விசேஷ பூஜை   நடைபெறுமாம்.


 நாங்கள் போய் இருந்த போது வெள்ளிக் கவசத்தில் மிக அழகாய்க் காட்சி தந்தார். நன்றாக தரிசனம் செய்தோம்.


இப்படித்தான் மூலவர் காட்சி தந்தார் எங்களுக்கு


படம் கூகுள்- நன்றி


கோவில் வளாகத்தில் இருக்கும் மற்ற கோவில்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.  ஆனேகுட்டே மூலவரையும் தரிசனம் செய்யலாம்.

பிள்ளையார் கோவில் நுழைவாயில்

கைலாயக் காட்சி -சிவன், பார்வதி-  சிவன் மடியில் பிள்ளையார்

https://gaana.com/song/anegudde-kumbhasi இந்த விநாயகருக்குக் கன்னடத்தில்  பக்திப் பாடல் கேட்க நன்றாக இருக்கிறது. கேட்டுப் பாருங்கள். 

பிள்ளையார் கோவிலில் பார்க்க வேண்டிய இடங்கள்,  போகும் தூரம், போகும் வழி -வரைபடம் இருந்தது
பிள்ளையார் கோவில் இருக்கும் வளாகத்தில் ஐயப்பன் கோவில் இருந்தது
உள் பகுதியில்  ஐயப்பன் வரலாறு ஓவியங்களாக இருந்தது. உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை ;பாதியில் நின்று போனது.
சின்ன கோவில்கள் நிறைய இருந்தன. பார்க்க நேரமில்லை.திரும்பி விட்டோம்   கொஞ்ச தூரத்தில் கடற்கரையைப் பார்க்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். இருட்டி விடும் என்பதால் வந்து விட்டோம்.

தென்னைமரங்கள் நிறைய  இருந்தன, கடற்கரையில்
எங்களுடன் வந்த பெண்கள் கடலில் கால் நனைத்து மகிழ்கிறார்கள்.
கடலில் கால் நனைக்க  எல்லோருக்கும் ஆசைதான் 
ஐஸ் விற்பவர்கள் ,  படகு சவாரிக்கு அழைப்பவர்கள் என்று இருந்தார்கள்.
மோட்டார் படகுகளில் சிறிது தூரம் போய் வரலாம்

எங்களுடன் ஈரோடிலிருந்து   வந்தவர்கள் "கொங்கு நாட்டு வட்ட கும்மி " பாடலைப்  பாடிக் கும்மி கொட்டினார்கள்,கடற்கரையில் ,வாதாமரத்துநிழலில்
காணொளி எடுத்தேன்; அது கிடைக்கவில்லை. அருமையாகப் பாடினார்கள் மகிழ்ச்சியான பொழுது

கடற்கரையில் மகாத்மாகாந்தி அவர்கள் சிலை அழகாய்   (அவர் எப்போதும் அமரும்  நிலையில்)

                                   வழியில் ஒரு நீரோடையில் கொக்கு
                                  தன் முகபாவங்களை மாற்றிக் கொண்டே இருந்தது.


                                           மூன்றில் எது நன்றாக இருக்கிறது?

பாதையில் கண்ட மலர் 

அன்றைய பொழுது ஸ்ரீ மூகாம்பிகை கோவில் , ஆனே குட்டே விநாயகர் கோவில், கடற்கரை என்று  இனிமையாகப் போனது. இப்போதும் இனிமையான நினைவுகளை தந்தது. 


வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !


----------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. கோயிலில் தொடங்கி இயற்கைக்காட்சிகள், வர்ணனை என ரசித்தேன்.
    முதல் புகைப்படத்தில் ஆனேகுட்டே கோவில் கோபுரம் என்றுள்ளது. அது ஆனேகுட்டே விமானம் என்றிருக்கவேண்டும். கருவறையின்மேலுள்ள பகுதியைக் குறிக்கும் அவ்விடம் விமானம் ஆகும். தகவலுக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      கோயில் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்தமைக்கு நன்றி சார்.
      உங்கள் தகவலுக்கு நன்றி சார்.

      நீக்கு
  2. கொக்கு மூன்று படங்களுமே அழகு. ஆனே குட்டே கோவில் அழகு. தல வரலாறும் சிறப்பு. மிகச் சிறப்பான தகவல்கள். தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      கொக்கு மூன்றும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. ஆனேகுட்டா கோவிலும், படங்களும் அருமை. கொக்கு படங்களையும், பெண்கள் சுற்றிவந்து உற்சாகமாக இருப்பதையும் ரசித்தேன். சார், வயது குறைந்த பதின்ம வயதுப் பையன் ஃபீலிங்கில் அரை டிராயரோடு இருப்பதையும் ரசித்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      சார் அரை டிராயர் போடவில்லை. முழு கால்சட்டையை தண்னீரில் நனைந்து விடாமல் இருக்க சுருட்டி வைத்து இருக்கிறார்கள்.
      கடலில் அலையோடு விளையாடும் போது எல்லோரும் குழந்தைகள்தானே!

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. சட்னு பார்க்க பெர்முடாஸ் மாதிரி இருந்தது.

      பொதுவா கடலில் இறங்கும்போது, அதுவும் ஓரங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். சட் என்று காலின் கீழ் உள்ள மணலை, திரும்பும் அலை வாரிக்கொண்டு போய் நம்மைத் தடுமாற வைத்துவிடும்.

      நீக்கு
    3. சார் பெர்முடாஸ் போட மாட்டார்கள்.
      //சட் என்று காலின் கீழ் உள்ள மணலை, திரும்பும் அலை வாரிக்கொண்டு போய் நம்மைத் தடுமாற வைத்துவிடும்.//

      நீங்கள் சொல்வது சரிதான் கவனமாக இருக்க வேண்டும்.

      மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி, பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை போவோம். கடற்கரையில் நிற்கும் போது காலின் கீழ் மண் அரித்துக் கொண்டு போகும் நாம் காலை நன்றாக ஊன்றி நிற்க வேண்டும். கடல் அலை போகும் போது குழி பறித்து இருக்கும் பள்ளமாக நம் காலுக்கு கீழே . உடனே அடுத்த அலை வருவதற்குள் இடம் மாறி நிற்க வேண்டும்.

      நீங்கள் வந்து மீண்டும் கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. ஆனேகுட்டே விளக்கம் தந்தமைக்கு நன்றி.
    படங்கள் அனைத்துமே நேர்த்தியாக இருக்கிறது சகோ.

    வாழ்க வையகம் புராணக்கதையும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்
      ஆனேகுட்டே விளக்கம் படித்ததை பகிர்ந்து இருக்கிறேன்.
      உங்களுக்கு கன்னடம் தெரியுமே!

      புராணக்கதையும் படித்ததுதான். அதைதான் பகிர்ந்து இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி

      நீக்கு
  5. சிறப்பான படங்கள்... கொக்கு மூன்றுமே அழகு தான்...

    இனி பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. இந்த ஆனைமலைப் பிள்ளையார் படம் முன்பு ஒருமுற்சி எந்த விவரமும் இல்லாமல் Fb ல் வந்திருந்தது...

    தங்களால் விவரங்களுடன் இனிய தரிசனம்..

    கணேசரின் அருள் அனைவரையும் வாழ வைப்பதாக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்

      முன்பே பார்த்து விட்டீர்களா! இந்த பிள்ளையாரை.
      பிள்ளையார் முன்பே வந்து விட்டார், விவரம் பின்னால் வந்து விட்டது.
      கணேசரின் அருள் அனைவருக்கும் கிடைத்து எல்லோரும் நலமாக வளமாக வாழ உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அருமையான தரிசனம். ஆனேகுட்டாவும் நாங்க போகலை. அதைத் தாண்டிக் கொண்டு போனோம்! :( சில சமயங்களில் அப்படி நேர்ந்து விடுகிறது. குழுவாகப் போனால் சிலவற்றிற்கு நல்லது. தனியாகப் போனால் அது ஒரு விதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      எங்கள் பயணத்திட்டத்தில் ஆனேகுட்டே கோவில் கிடையாது. பயண அமைப்பாளர் போகும் வழியில் இருக்கிறது சீக்கீரம் பார்த்து விட்டு வந்து விடுங்கள் என்று சொன்னார்.

      குழுவாக போவதில் சில நன்மைகள் உண்டுதான்.

      நீக்கு
  8. கோவில், படங்கள், விபரங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நான் கடலைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விமானப் பயணத்தில் கீழே பார்க்கும் சமுத்திரம்/கடல் தான்! கடற்கரைக்குப் போகலை. கும்மி அடித்து விளையாடுவது நன்றாக இருக்கிறது. வீடியோ கிடைச்சிருக்கலாம். கிடைக்கையில் பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் படங்கள், சகோதரிகளின் கும்மி அடித்த படம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      சில நேரம் படங்கள் எடுக்க இடம் போதவில்லை என்றால் வீடியோவை அழித்து விடுவேன். மேமரி கார்ட், லேப்டாப் கொண்டு போகாத காரணத்தால் . அப்படி அழித்து விட்டேன் என்று நினைக்கிறேன். தேடி பார்த்தேன். கிடைத்தால் கண்டிப்பாய் போடுகிறேன்.

      நீக்கு
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் வாழ்த்து சொன்னீர்கள் நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. சற்றே தாமத்ச்ம் ஆனாலும்
    அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி ...

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு என்றே
    மங்கலம் மனையறம் கூடி வாழ்க..
    எல்லாம் இனிதுற இதயம் மகிழ்வுற
    மங்கல மீனாள் நல்லருள் புரிவாள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவணி மாதம் பிறந்தநாள் முடிந்து விட்டது. முகநூலுக்கு ஏதோ தேதி கொடுத்து விட்டார்கள் முகநூல் கணக்கு ஆரம்பித்து கொடுத்த என் குழந்தைகள்.

      உங்களிடம் எல்லாம் வாழ்த்து பெற வேண்டும் என்பதால்
      உங்கள் வாழ்த்து எனக்கும் மகிழ்ச்சி.


      நன்றி சகோ அழகான கவிதை
      மங்கல மீனாள் நல்லருள் போதுமே! அது கிடைத்தால் வேறு என்ன வேண்டும் வாழ்வில்.

      நீக்கு
  11. அன்பு கோமதி மா,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் வாழ்க்கை இனிமையுடன், மன சந்துஷ்டியுடன் இருக்க வேண்டும்.

    ஆனேகுட்டா பிள்ளையார்தான் எத்தனை அழகு. அவர் வந்த சரித்திரமும் நன்மை.

    ஈரோடு மகளிரின் கும்மி மன்சுக்கு ரொம்பப் பிடித்தது. அவர்கள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.
    காணொளியும் இருந்திருந்தால் இன்னும்
    அருமையாக இருந்திருக்கும்.

    கொக்கின் முன்று வகை போஸ் மிக அழகு.
    தவம் இருக்கும் சாமியார் போல:)
    கடற்கரை மணலும் ,அலைகளும் ஆனந்தம்.
    கடலைக் கண்டால் மகிழாதவர் யார்.

    இப்போது சிறைப்பட்டது போல் இருக்கும் நிலையில் உங்கள் புகைப்படங்கள் மிக மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
    உற்சாகமான பதிவு .மிக நன்றி அன்பு கோமதி.
    முக நூல் பக்கம் சில நாட்கள் போவதில்லை.

    அங்கே வந்திருந்தால் உங்கள் பிறந்த நாள் என்று தெரிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      இன்று முகநூல் போனாலும் தெரியாது பிறந்த நாளை எடுத்து விட்டேன்.
      ஆவணி மாதம் பிறந்தநாள் முடிந்து விட்டது.
      முகநூல் கணக்கு தொடங்கி கொடுத்த குழந்தைகள் தவறாக போட்ட தேதி.
      ஆனைகுட்டே கோவில் தற்செயலாக கிடைத்தது வழியில் பார்த்து போய் வாருங்கள் என்றார். எங்கள் பயண திட்டத்தில் அவர்கள் அழைத்து செல்வதாக சொல்லவில்லை.

      நம்ம ஊர் கற்பக விநாயகர் போல் அங்கு இருக்கும் மக்களுக்கு.

      அவர்கள் எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உறவு போல ஒரே ஊரில் இருப்பவர்கள் நாள் கிழமைகளில் கூடிக் கொள்வார்களாம். இந்த மாதிரி கும்மி விழாக்களில் கொட்டி மகிழ்வார்கள் போலும்.அவர்கள் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் அருமையானவார்கள்.

      கொக்கு தவம் செய்யும் சாமியார் போலதான் இருந்தது.


      கடற்கரை ஆனந்தம், மன ஆறுதல்தரும் இடம்.
      நானும் வீட்டில் இருப்பதால்தான் பழைய பயணங்களை எழுதி கொண்டு இருக்கிறேன்.
      இந்த கோவிலுக்கு போய் 5 வருடம் ஆச்சு. இப்போது பயணகட்டுரைக்கு மீண்டும் படங்கள் மூலமாய் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  12. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் தேங்காய் மாலை 125, 1008 என்று எண்ணிக்கையில் அலங்காரம் செய்வார்களாம். அப்புறம் "மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை " என்று 400 கிலோ அரிசியால் அலங்காரம் செய்வார்களாம்.////////மிக அருமையான பிரார்த்தனை.
    காணொளி இனிமை. நேரில் போய் பார்த்தது போல இருக்கிறது.
    நன்றி கோமதி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனை மிக அருமையாக இருந்ததால்தான் அதை இங்கே பகிர்ந்தேன்.
      கோவிலைப்பற்றி விவரம் விவரம் தெரியவில்லை ஆகையால் இணையத்தில் தேடியபோது கண்ட காணொளி அருமையாக விநாயகர் மூலவர் தரிசனம் .
      உங்களுக்கு காணொளி பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  13. படங்களும் பகிர்வும் அருமை
    காந்தி சிலை கவர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      படங்களை, பகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் முக நூலுக்கான வந்த பிறந்த நாள் என்றாலும், கடந்த மாதம் முடிந்த பிறந்த நாளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    இந்தக் கோவிலுக்கும் நாங்கள் சென்று வந்தோம். உங்கள் பதிவை பார்த்த பின்தான் கோவிலுக்குச் சென்றதே எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

    கோவில் படங்கள், விபரங்கள் அத்தனையும் தொகுத்து தந்தமைக்கு, பாராட்டுகளுடன் நன்றிகளும். ஒவ்வொன்றையும் அழகாக படமெடுத்து உள்ளீர்கள். உங்கள் பதிவு உங்களுடன் பயணித்த உணர்வை தருகிறது. அழகான விநாயகரை பனப்பூர்வமாக தரிசித்துக் கொண்டேன. உடன் வந்திருந்த பெண்களின் அந்த கும்மி பாட்டும், ஆட்டமும் பார்க்க நன்றாக இருந்தது. உங்களுக்கும் நேரடியாக பார்க்கும் போது உற்சாகமாக இருந்திருக்கும்.

    இயற்கை படங்கள் அழகு. கடலும், கடல் அலைகளும் கண்டு விட்டால், நாம் அனைவரும் சின்ன குழந்தைகளாக மாறி விடுவோம். விரட்டி விரட்டி வரும் அலைகளை பார்த்துக் கொண்டேயிருந்தால் மனக் கவலைகளும் காணாமல் போய் விடும்

    கொக்கு படங்கள் அழகாக உள்ளன.
    முதல் கொக்கு படத்தில் வாயில் ஆவலுடன் கவ்விய மீனை, இரண்டாவது படத்தில் அது தவற விட்ட மாதிரியும், மூன்றாவது படத்தில் அதனால் அது சோகமடைந்து மற்றொரு இரை வரும் வரை தலை குனிந்து அமைதியுடன் காத்திருப்பது போலும் நான் கற்பனை செய்து ரசித்தேன். அது மீனும் அல்ல.. வேறு ஏதோ இலைச்சருகு மாதிரி, அதன் வாய்க்கு நேராக வந்திருப்பதையும் அறிவேன். இருப்பினும், "நீங்கள் எடுத்திருக்கும் நுணுக்கமான போட்டோ கலையினால்" என் கற்பனைக்கு நல்லதொரு தீனி கிடைத்தது.

    பாதையில் பூத்திருக்கும் மலரும், பார்வையாக இருக்கும் மகாத்மா காந்தி சிலையும் அழகாக இருக்கிறது. பதிவினை நன்றாக ரசித்துப் பார்த்து பரவசமடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

    மனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி கமலா.
    நீங்கள் இந்த கோவிலை பார்த்து விட்டீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.
    சகோதரிகளின் கும்மி மனதுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது என்பது உண்மை.
    கடல் அலைகள் நம் காலகளை தழுவ வரும் போது ஓடுவதும் பின் அதை நோக்கி போவதும் என்று சிறு குழந்தையாக இருக்கும் போது ஆர்பரித்து கை கொட்டி சிரித்தவையும் நினைவுக்கு வரும். கடல் அலைகள் நம் கவலையை போக்கி மனது உற்சாகத்தை கொடுக்கும்.
    கடல்பற்றிய பதிவு போட்டு இருக்கிறேன் இரண்டு, மூன்று அதில் நீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கிறேன்.

    கொக்கு படங்களை ரசித்துப்பார்த்து கற்பனையில் தோன்றிய கருத்து சொன்னது என் மன நிலையை அப்படியே சொல்கிறது. நான் காமிராவழியே பார்க்கும் போது முதலில் மீனை வாயில் வைத்துக் கொண்டு இருப்பது போல் தான் தெரிந்தது, இரண்டாவது படம் தவறவிட்டது போல்தான், மூன்றாவது படம் சோகமாய் மீனுக்கு காத்து இருக்கும் தவ நிலைதான். மிக அழகாய் உங்கள் கருத்தைச் சொன்னது மகிழ்ச்சி.
    பதிவில் ஒன்றையும் விடாமல் பார்த்து ரசித்து அழகாய் கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி கமலா.

    பதிலளிநீக்கு
  16. ஒரு கராடகப் பயணபோது ஆனே குட்டா போய் இருந்தோ அது எந்த கடற்கரை

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
    நீங்கள் ஆனே குட்டா கோவில் போனது அறிந்து மகிழ்ச்சி.
    ஆனேகுட்டே ஊரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்தது பேர் தெரியாது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான தரிசனம் ஆனகுட்டே விநாயகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
      வெகு நாள் கழித்து உங்கள் வரவு.
      அதன் காரணம் எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருந்தீர்கள்,
      அதைப் படித்து மனது வேதனை அடைந்து விட்டது.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. தல வரலாறு, ஊரின் பெயர்க் காரணம், கோயில் பெயரின் அர்த்தம் ஆகியவற்றை அறிந்து கொண்டோம். படங்கள் அருமை. கோயில் கோபுரத்தின் அமைப்பு நான் சென்று வந்து பகிர்ந்த அனந்தபுரம் கோயிலை நினைவு படுத்தியது. சிறு கொக்கின் இரண்டாவது படம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அனந்தபுரம் கோயிலை நினைவு படுத்தியது//

      அது போலவே இருக்கிறதா?


      //சிறு கொக்கின் இரண்டாவது படம் சிறப்பு.//

      இரண்டாவது படத்தில் கொக்கின் கண் நன்றாக தெரிகிறது இல்லையா?
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  20. படங்களும், விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கின்றன. நாமம் அணிந்து வித்தியாசமாய் விநாயகர்! உங்களுக்கு காட்சி அளித்த கோலத்தில் பிள்ளையார் அமர்ந்து கொண்டுதானே இருக்கிறார்?முதலாவது கொக்கு என்னை கவர்ந்தது.மரத்தை சுற்றி கும்மி அடிக்கும் பெண்களை வீடியோவில் பார்த்தால் இன்னும் ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. கடற்கரை காட்சிகளை பார்க்கும் பொழுது நாமும் போய் கால் நனைக்கலாமா என்று தோன்றுகிறது. சுவாரஸ்யமான பதிவு.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      நான் வெள்ளி கவசம் அணிந்து நாங்கள் பார்த்த போது காட்சி அளித்தார் என்றேன் .

      நிற்கிற சாமியை கால் மடித்தும் அலங்காரம் செய்வார்கள்தானே! அப்படி செய்து இருக்கிறார்கள்.

      முதல் கொக்கு உங்களை கவர்ந்தது மகிழ்ச்சி.
      கும்மி வீடியோ கிடைத்தால் போடுகிறேன்.
      கடற்கரை எப்போதும் நதை கவரும்.
      பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு