சனி, 29 செப்டம்பர், 2018

காட்சி தந்த பெருமாள்


கன்னடிய பெருமாள்  திருக்கோவில் பழனியிலிருந்து தெற்குத் திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதைச் சிறு குன்று என்றும் சொல்லலாம்.

திருவிளையாடல் சினிமாவில் பார்வதி சிவன் விளையாடிய விளையாட்டை,
கோபித்துக் கொண்டு வந்த முருகனுக்குச் சொல்வார் , அதன் பின் முருகனைச் சமாதானம் செய்து அழைத்துப்  போவார். போகும் முன்  இனி
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார். அப்படிப் புகழ் பெற்ற பழனியில்  மாமன்   பெருமாளும்  இருக்கிறார்.அந்த இடம் தான் கன்னடிய பெருமாள் கோவில்

முற்காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்குச் சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர்த் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையைக் கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைக்காலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .
நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலைச் சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டுப் பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.


 ஆட்டோவில்   போகும்போது  பாதையில் தெரியும் இயற்கைக் காட்சிகளை என் கணவர் எடுத்த படங்கள். (அப்போது காமிராவை நான் கைப்பற்றிக் கொள்ளவில்லை)

அணைக்கட்டும்  வயல் வெளிகளும்  


இதுதான் கோவில்.   முன் பக்கம்   இரண்டு திண்ணை வைத்த வீடு மாதிரியான தோற்றத்தில் கோவில்.


                                                                இடும்பன் மலை

தூரத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும்



நாங்கள் வந்த ஆட்டோ நிற்கிறது  கீழே  மலை மேல் போகப் படி அமைப்பு கிடையாது







இந்த சிறிய கோவிலைக் கண்ணாடி பெருமாள் கோவில் என்றும் சிலர் கூறுகிறார்கள். கோவில் முன்னே நெடிய விளக்குத் தூணைக் கொண்ட மண்டபம் உள்ளது.கோவிலின் முகப்புப் பகுதி பழமையான ஓட்டுக் கட்டிடமாக இருக்கிறது. கோவில் முன் சுமைதூக்கும் சுமைதாங்கி  இருக்கிறது அதில் சங்கிலியில் பிணைக்கப் பட்ட விளக்குகள் தொங்குகிறது. சாமி விழாக்காலங்களில் தங்கும் விழாமண்டபம் இருக்கிறது.
துளசி மாடம்  இருக்கிறது. இவைகளைப் பார்த்து விட்டுக்  கோவில் உள் போனோம்.

உள்ளே சிறிய பிரகாரம் அமைந்துள்ளது.நடுவில் உயர்ந்த மேடையில் ஏறிச் சென்றால் ஒரு முன் மண்டபமும் உள்ளே கருவறையும் இருக்கிறது.மிகச் சிறிய வடிவில் பெருமாள் இருக்கிறார் அருள்பாலித்துக் கொண்டு.

இக் கோவில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்போடு இருந்தாக கூறப்படுகிறது.
தினமும் ஒரு வேளை பூசை நடைபெறுகிறதாம்.ஒரு பூசாரி சற்றுத் தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு உடனே போய்விடுகிறார்.சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பாக பூசை நடைபெறுகிறது. இக் கோவிலுக்கு சனிக் கிழமை காலை செல்வது தான் நல்லது.

நாங்கள் சென்றபோது பூசாரி இல்லை, இப்போது தான் பூசை முடித்து போனார்.என்று காரைக்காலிலிருந்து அடிக்கடி அந்தக் கோவிலுக்கு வரும் ஒரு அடியார் சொன்னார்.நாங்கள் வெளியூரிலிருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்த பெரியவர் கதவின் ஓட்டை வழியாகப் பாருங்கள் என்றார்.

நாங்கள் பார்த்தோம் வெறும் புகை மண்டலமாக இருந்தது இவ்வளவு தூரம் வந்து பெருமாளைத் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று பேசிக் கொண்டு
கவலை தோய்ந்த முகமாய் நாம் நிற்பதைப் பார்த்துக் கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவைத் திறக்க வைத்தார்.

பட்டர்  என்னிடம் சாவியைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்,என்று சொல்லி நீங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள் பெருமாளைப் பார்க்காமல் போக வேண்டாம் வாருங்கள் என்று திறந்தார்.(அப்போது நாங்கள் மயிலாடுதுறையில் இருந்தோம்.)

 சினிமாவில் சாமி காட்சி கொடுக்கும்போது முதலில் புகை மண்டலம் வந்து பின் சாமி காட்சி கொடுப்பது போல் வெண்புகையாய் இருந்தது.  பூசாரி  பூசைமுடிந்தபின் சாம்பிராணிப் புகைபோட்டுப் பின் கதவை மூடி விட்டுப்போவாராம். கொஞ்ச நேரம் புகை எல்லாம் அடங்கிய பின் பெருமாள் காட்சிக் கொடுத்தார். நல்ல தரிசனம் செய்து மனமகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.

 ஆகமத்தை கடுமையாகக் கடைபிடிக்கும் கோவில்களில் அடைத்தால் திறக்கக் கூடாது.
உச்சிக் காலத்து  பூஜை போல் திறந்து மீண்டும் மூடப் பட்டது.

நீங்கள் போவதாய் இருந்தால் போக வசதியாய் பூசாரியின் போன் நம்பர் வாங்கி வந்தேன்.

பாலசமுத்திரம் வீரமணி பூசாரி
செல் நம்பர்- 9965305724

பழனி சென்றால் போய் வாருங்கள் இயற்கையை ரசிக்கலாம்.பெருமாளை வணங்கலாம்.

குழந்தைகளுக்குப் பாறையில் (சாய்வாய் இருப்பதால்)ஏறி இறங்கப் பிடிக்கும்.
அவர்கள் ஓடி ஏறுவார்கள் கீழே ஓடி வருவார்கள் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.

35 கருத்துகள்:

  1. அழகிய காட்சிகள் சகோ
    குறித்துக் கொண்டேன் கொடைக்கானல் போகும்போது காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள் ஜி
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. தேடித்தேடி கோவில்களுக்குச் செல்கிறீர்கள். நான் கேள்விப்பட்டிராத கோவில். ஓ... மீள் பதிவா? கோவில் அருமையாக இருக்கிறது. பழமை மாறாத கோவில்கள் என்றால் பார்க்க விருப்பம். ஸ்தல வரலாறு எதுவும் கிடைக்கவில்லையா? கன்னடிய பெருமாள்... அவர் நம்மூரில் இருந்துமா காவிரி தண்ணீர் தரமாட்டேன் என்கிறார்கள்?!! சினிமாவில் வருவது போல புகைமூட்டம் விலகி காட்சியளித்த பெருமாள் என்பதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      சார் படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் சென்ற கோவில் பற்றி ஒரு சமயம் சொன்னார்கள். பழனி போன சமயம் அந்த கோவில் அழைத்து செல்லுங்களேன் என்று நான் கேட்டதற்கு அழைத்து சென்றார்கள்.
      நானும் தலவரலாறு தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.
      பூசாரியும் இல்லை சொல்ல, பார்த்துக் கொள்ளும் பெரியவர் சொன்ன தகவல்கள் இது.
      //கன்னடிய பெருமாள்... அவர் நம்மூரில் இருந்துமா காவிரி தண்ணீர் தரமாட்டேன் என்கிறார்கள்?!! //

      அது தானே? பெருமாள் யாரையும் கேட்காமல் மழையை கொடுத்து நீர்வளத்தை கொடுக்கட்டும்.
      காட்சி அளித்த பெருமாளை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. பெருமாள் மனது வைத்தால் தான் எதுவும் ஆகும்!...

    இத்தனை தூரம் சென்று விட்டு அவரைப் பார்க்காமல் ஏமாற்றமடைந்தால்
    பெருமாளுக்குத் தான் மனம் பொறுக்குமா!...

    பெருமாள் என்றைக்குமே பெருமாள் தான்!...

    பெருமாளே சரணம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
      பெருமாள் மனது வைத்தால் தான் எதுவும் நடக்கும் என்பது உண்மை.

      //இத்தனை தூரம் சென்று விட்டு அவரைப் பார்க்காமல் ஏமாற்றமடைந்தால்
      பெருமாளுக்குத் தான் மனம் பொறுக்குமா!..//
      அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்று மாணிக்க வாசகர் சொன்னது போல்

      பக்தர்களுக்கு இரங்கும் தயாளன் அருளால் அன்று தரிசனம் செய்து வந்தோம். மீண்டும் அழைக்கவும் அவர் அருள் வேண்டும்.

      பெருமாள் திருவடிகளே சரணம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. கேள்விப்படாத பெருமாள் கோயில், முன்னரே தெரிந்திருந்தால் இப்போப் பூம்பாறை போனப்போ இங்கேயும் போயிட்டு வந்திருக்கலாம். எங்களுக்குப் பழனியும் போக ஆசை தான்! ஆனால் உடனே திரும்பும் நிலைமை! :(பார்க்கலாம் இன்னொரு முறை பெருமாள் கூப்பிடுகிறாரா என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      பழனி போக வாய்ப்பு கிடைக்கும் போது பெருமாளையும் தரிசனம் செய்து வரலாம்.
      அந்த மலையைப் பார்த்தவுடன் நினைத்துக் கொண்டது குழந்தைகளுடன் வந்து இருக்க வேண்டிய இடம் என்று. குழந்தைகளுக்கு பிடித்த இடம்.

      கோவரத்தன மலையில் கண்ணன் விளையாடிய இடம் என்று சில இடங்களை பார்த்து இருப்பீர்கள், அவர் சறுக்கு விளையாடிய இடம் என்று. அது போல் குழந்தைகள் இந்த மலையில் சறுக்கு விளையாடலாம். பேத்திகள் வரும் போது அழைத்து செல்லுங்கள் ரசிப்பார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அழகிய இடம் மா..

    ஒரு புதிய ஸ்தலம் அறிந்துக் கொண்டேன்...அவன் அருள் கிடைத்தால் நேரில் சென்று பார்க்கலாம்..

    ஓம் நமோ நாராயணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி. அவன் அருள் உங்களுக்கு உண்டு , அவரைப் பற்றி சிந்தித்து போஸ்ட் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
      ஓம் நமோ நாராயணா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அழகாக இருக்கிறது இந்தக் கோவில். பழனிக்கு கல்லூரியில் படித்த காலத்தில் சென்றேன். ஆனால் கோவிலுக்குச் செல்லவில்லை. செல்ல வேண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
      இயற்கை காட்சிகள் நிறைந்த இடம் பார்க்கலாம், ஆனால் எட்டு வருடம் ஆகி விட்டது இப்போது எப்படி இருக்கோ தெரியவில்லை.

      நீக்கு
  8. தட்டித்தடவி வந்து சேரக் கொஞ்சம் லேட்டாகிப்போச்சு கோமதி அக்கா.. அது என்னமோ தெரியவில்லை.. சில வெள்ளி இரவு.. சனிக்கிழமைகளில் நேரமே கிடைப்பதில்லை.. ஒரு வரியில் பதில் போடுவதெனில் .. சைன் பண்ணி விட்டு ஓடிடலாம்.. எனக்குத்தான் அப்படி எழுதினால் பிடிக்காதேஎ:).. ஆற அமரப் படிச்சு எழுதினால்தான் நிம்மதி.. அதனாலேயே தாமதமாகி விட்டது மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      விடுமுறை நாளில் வருவது கஷ்டம் தான் அதிரா.
      சைன் செய்து விட்டு போக வேண்டாம், ஆற அமர படித்து கருத்து சொல்வதுதான் எனக்கும் பிடிக்கும் மகிழ்வேன். மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.

      நீக்கு
  9. //ஆட்டோவில் போகும்போது பாதையில் தெரியும் இயற்கைக் காட்சிகளை என் கணவர் எடுத்த படங்கள். //

    படங்களைப் பார்க்க ஸ்கொட்லாண்டைப்போல இருக்கே..

    கோயிலைப் பார்க்க பழைய நாச்சார் வீடுபோல இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஸ்கொட்லாண்டைப் போல இருக்கா?
      பழைய வீடு போல்தான் காட்சி அளித்தது.

      நீக்கு
  10. //தூரத்தில் பழனி மலையும், இடும்பன் மலையும்//

    ஓ பழனி முருகன் கோயில் இருக்கும் பழனி மலையோ.. இடும்பன் மலை முன்னமும் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன்ன்.. கீதா பக்கத்திலோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி மலை முருகன் இருக்கும் மலைதான்.
      இடும்பன் மலை பழனியில் தான் இருக்கிறது.
      கீதா பக்கத்தில் பர்வத மலை படித்து இருப்பீர்கள்.

      நீக்கு
  11. ஆஆஆஆஆஆ கோமதி அக்கா.. பெரிய திருநீற்றுப் பூச்சுடன்.. கோயிலுக்குப் போய் வந்தேன் என்பதற்கு ஆதாரத்துடன் நிரூபிக்கிறா:).

    ஹையோ பழனியாண்டவா.. ஏன் அந்த ஓட்டோ ட்றைவர் அப்படி வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறாரோ.. பெரிய வயசானவர் மாதிரியும் தெரியவில்லை ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  12. // இவ்வளவு தூரம் வந்து பெருமாளைத் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று பேசிக் கொண்டு
    கவலை தோய்ந்த முகமாய் நாம் நிற்பதைப் பார்த்துக் கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவைத் திறக்க வைத்தார்.//

    ஓ தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.. இல்லை எனில் ஏதோ ஒரு குறை போல மனதுக்குப் படும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.. இல்லை எனில் ஏதோ ஒரு குறை போல மனதுக்குப் படும்..//

      ஆமாம் அதிரா, உண்மைதான். மனதுக்கு குறையாகத்தான் இருந்து இருக்கும்.
      பெருமாள் கைவிடவில்லை.

      நீக்கு
  13. ///இது ஓரு மீள் பதிவு. 2010 ம் வருடம் நவம்பர் மாதம் போட்ட பதிவு.///

    ஆவ்வ்வ்வ்வ்வ் நான் இது நீங்க நேற்றுத்தான் போயிருக்கிறீங்க என நினைச்சேன்ன்.. அப்போ இப்போ ஐயரின் ஃபோன் நம்பர் மாத்திருப்பாரே ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, என்னை போன்றவராக இருந்தால் போன் நம்பர் மாற்றாமல் இருப்பார்.
      பார்ப்போம் யாராவது போன் செய்து பார்த்து விட்டு சொல்லட்டும்.
      நான் கூட கோவில் வரலாறு கேட்டு இருக்கலாம். போன் நம்பரையும் செக் செய்தத்து போல் இருந்து இருக்கும்.
      அதிராவின் மூளை மாதிரி அக்காவுக்கு வேலை செய்ய மாட்டேன் என்கிறது.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி, நன்றி அதிரா.

      நீக்கு
  14. துளசிதரன்: புதிய கோயில் அறிந்தோம். உங்கள் மூலம், சகோதரி கீதா, மற்றும் துரைசெல்வராஜு ஐயா மூலம் பல புதிய கோயில்கள் பற்றி அறிகிறோம். படங்களும் தகவல்களும் அருமை.

    கீதா: கோமதிக்கா நான் பதிவு வாசித்தேன் இன்னும் முழுக்க முடியவில்லை. முழுவதும் படித்துவிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்.
      நிறைய கோவில்கள் இருக்கிறது பார்க்கத்தான் நம் வாழ்நாள் போதாது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. இயற்கைக் காட்சிக்காகவாவது போகணும் என்று தோன்றுகிறது. என்ன அழகு சுற்றிலும். அக்கா அந்த ஓடையை ஏன் ஃபோட்டோ எடுக்கலை. அந்த ஓடையைப் பார்க்க ஆவலோடு ஃபோட்டோ தேடினேன்..

    கோயிலும் அழகான வீடு போல இருக்கிறதே!!!

    ஹை படிகள் இல்லையா சூப்பர். பாறையில் ஏறிப் போவது என்பது த்ரில்!!! எனக்கு ரொம்பப் பிடிக்கும் இப்படி நேச்சுரலாகப் போவது....சூப்பர் இடம் கோயில் எல்லாம் கோமதிக்கா...முதலில் அப்போது நாங்கள் மயிலாடுதுறையில் இருந்தோம் என்பதை வாசித்ததும் புரியவில்லை...அப்புறம் கீழே மீள் பதிவு என்று போட்டிருந்ததை வாசித்ததும் புரிந்தது அக்கா...படங்கள் வெகு அழகு!!! கண் குளிர்ந்தது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      படித்து விட்டீர்களா?
      இயற்கை காட்சிப் பார்க்க போகலாம்.
      ஓடையில் தண்ணீர் போகவில்லை அதனால் எடுக்கவில்லை.
      வீடு போன்ற அமைப்பில் தான் கோவில் இருக்கிறது.
      படிகள் கிடையாது.மலை மேல் அப்படியே ஏறி போக வேண்டியதுதான்.
      பர்வத மலை போனது போல் நிறைய பேருடன் போனால் மிக அருமையாக இருக்கும்.
      மயிலாடுதௌறையில் இருந்த போது போன கோவில்.
      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  16. செல்லும் வழியில் இயற்கைக் காட்சிகள் மிக அழகு. படங்கள் அருமை. தகவல்கள் பலருக்கும் பயனாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

      ஆமாம் , முடிந்தவர்கள் பார்க்கலாம் இல்லையா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. இயற்கை சூழல்களுள்குடிகொண்டிருக்கும் பெருமாள். கவர்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
      நலமா? உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.
      மகள் , மற்றும் வீட்டில் எல்லோரும் நலம் தானே?
      ஏதாவது எழுதி வருகிறீர்களா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      மீண்டும் வலைத்தளம் வாருங்கள் மாதேவி.

      நீக்கு