புதன், 6 ஆகஸ்ட், 2014

வீரநாராயண ஏரியும் பறவைகளும்

ஆடிப்பெருக்குக்கு நாங்கள் வீரநாராயணபுர ஏரிக்குச் சென்றோம்.அங்கு  செல்ல கொள்ளிட ஆற்றின் தெற்கு ”லைன் கரை” வழியாக சென்றபோது இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே சென்றோம். இருபுறமும் அழகான மரம்,செடிகொடிகள்  இருந்தன.  கீழே இறங்கிப்  படம் எடுக்க முடியாது. பாதை மிகவும் குறுகலாக இருந்தது. பாதையின் ஒருபுறம் கொள்ளிடம்; இன்னொரு புறம் கொள்ளிட வாய்க்கால். எதிரில்  வேறு வாகனம் வந்தால் ஒதுங்க இடம் கிடையாது. 15கி.மீ தூரத்திற்கு அணைக்கரை வரை இப்படியாக பாதை இருந்தது.   
                     ஒருபுறம் கொள்ளிடம் வாய்க்கால் தூர் வாரப்படுகிறது.
                                                       மறுபுறம் கொள்ளிடம் 



 அப்படி இந்த பாதையில் போகும் போது என் கணவர், "அந்த பனைமரத்தை பார் !" என்றார்கள் பார்த்தால் அழகாய் தூக்கணாங்குருவி கூடு நிறைய தொங்கிக் கொண்டு இருந்தது. "கொஞ்சம் நிறுத்துங்களேன், கொஞ்சம் போட்டோ எடுத்துக் கொள்கிறேன்" என்றேன். "சீக்கிரம் எடு! கீழே இறங்காமல்.  எதிரில் வண்டி வருமுன் இந்த பாதையை கடக்க வேண்டும்" என்று அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவசரம் அவசரமாய் போட்டோ எடுத்தேன். காற்றில் கூடுகள் பறந்து கொண்டே (ஊஞ்சல் ஆடுவது போல்) இருந்தது. போட்டோ எடுப்பது சிரமமாய் இருந்தது. குருவியும்  இந்த மரத்தில் இருந்தால் என்று நினைக்கும் போது ஒரு குருவி கூட்டிலிருந்து வேகமாய் பறந்து வந்து பனைமரத்தின் உச்சிக் கிளையில் நுனியில் அமர்ந்தது. அதுவும் காற்றில் ஊஞ்சல்  ஆடியது.


இந்தபடத்தில் முதலில் இருக்கும்கூடு முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தகூடு ஒரு அறை முடிந்து இருக்கிறது , அடுத்தகூடு இரண்டாவது அறைகட்டிக் கொண்டு இருக்கிறது.

பச்சைப்புற்களால் கட்டிய கூடு - இரண்டு வாசல் போல் இரண்டு துவாரம் இருக்கிறது பாருங்கள்.    அறைகள் வைத்து கட்டுகிறது போலும் தோற்றத்தை கொடுத்தாலும் ஒரு அறையில் முட்டையும் மற்றொரு அறை கூட்டுக்குள் போகும் பாதை.என்ன அழகாய் கட்டிக் கொண்டு இருக்கிறது! கடைசியில் நீண்ட குழாய் போன்ற அமைப்புடன் முடிகிறது கூட்டின் வாயில், பிற உயிரினங்களிடமிருந்து தன் குஞ்சை காப்பாற்ற அதற்கு அறிவை கொடுத்து இருக்கிறார் கடவுள். எதிரிகளை கண்டு அச்சம் அடைவதால் அவை கூட்டமாக அருகருகே  கூடுகள் கட்டிக் கொண்டு வாழுமாம்.

காய்ந்த கூடு மஞ்சளாக இருக்கிறது.  பனைமரத்தில் காய்க்காத மரம் பார்த்துக் கூடு கட்டும் போல இருக்கிறது.  இதில் காய்களே இல்லை.  மரத்தைப் பின்னிப் படர்ந்து இருக்கிறது ஒரு கொடி.

                               
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மூங்கில் மரத்திலும் தூக்கணாங்குருவிக் கூடு இருந்தது . கார் போய்க் கொண்டு இருக்கும் போது எடுத்தது . காற்றில் ஆடுகிறது மரம்.
                                            
முக்குளிப்பான் என்று சொல்லப்படும் பறவை முக்குளிக்கும் அழகை பாருங்கள். வீராணம் ஏரியில்.
வீரநாராயண ஏரியில் நீரின் அலைகள்   கடல்அலைகள் போல்  கரையில் வந்து மோதும் காட்சி,  -பறவைகளின் கூட்டம்.
                                          முக்குளிப்பான் பறவைகள்


எல்லோரும் சேர்ந்து செல்லும்போது நீ மட்டும் ஏன் தனியா போறே கண்ணம்மா ?

நாரையும் தன் கூட்டத்தை விட்டு வந்த காரணம் கேட்கப் போனாயா கண்ணம்மா? 
நாரைகள் அங்குள்ள மரங்களிலும் புற்களிலும் ஆற்றிலும் நிறைய அமர்ந்து இருந்தன.
அணைக்கரை செல்லும் சாலையில் வித்தியாசமான பறவை எதையோ கொத்திக் கொண்டு இருந்தது , கொஞ்சம் சிறு கோழிக் குஞ்சு போல் இருந்தது . என்ன பறவை என்று  இணையத்தில் கூகுளாரிடம் கேட்டால் அது," தாமிரக் கோழி என்ற பறவை. நீர் நிலைகளில் இருக்கும்." என்று சொல்லியது.  எப்படியோ கோழி மாதிரி இருக்கு  என்று சரியாக யோசித்து இருக்கோம் இருவரும்.  தாமிரக் கோழி நீர்நிலையை விட்டு சாலைக்கு வந்து ஏதோ சாப்பிட்டது.  பின் எங்கள் கார் சத்தம் கேட்டு குடு குடு என்று ஓடிப் புதர்களில் மறைந்து விட்டது .
ஆட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி
மாட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி. ஆடும், மாடும் முகம் காட்டவில்லை என்று நினைக்கிறீகளா? நீ இந்த பதிவில் பறவைகள்  மட்டும்தான் போடுகிறாய் நாங்கள் என்னத்துக்கு என்று சொல்லிவிட்டன.

ஆடும் மாடும் காரில் போகும் போது கார் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்டது  கீழே குனிந்து மேய்ந்து கொண்டு இருக்கின்றன.அதனால் முகம் தெரியவில்லை.

ரசித்தீர்களா?-வீரநாராயண ஏரிக்குச் செல்லும் பாதையில் உள்ள பறவைகளை.

 'கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு விழா'- அடுத்தபதிவில்.
                                            
                                                                  வாழ்க வளமுடன்.
                                                                            -------------



34 கருத்துகள்:

  1. ஆனந்தம் அளிக்கும் படங்கள் + காணொளிகளுடன் கொடுத்துள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. காற்றில் கூடு ஆடினால் விழுந்து விடாமலிருக்கும் அளவு கூடு கட்டும் அந்தக் குருவியின் திறமையை என்ன சொல்லிப் பாராட்ட!

    பறவைகளின் சிறப்புப் பதிவாய் அசத்தி விட்டீர்கள். எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பொன்னியின் செல்வன் கதை தொடங்கும் இடம் வீர நாராயண ஏரி.
    பெயரைப் படித்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது சகோதரியாரே
    படங்கள் அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. உங்களின் பரிவு பறவைகளுக்கும் புரிந்திருக்கும் போலிருக்கின்றது.

    இரவில் - தூக்கணாங்குருவிகள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து
    கூட்டினுள்ளே வைத்துக் கொள்ளும் அழகே அழகு!..

    தாங்கள் பார்த்து வியந்திருக்கக் கூடும்.

    கன்றின் மேல் கரிக்குருவி!..

    இன்னும் - இயற்கை உயிர்ப்புடன் தான் இருக்கின்றது - சற்றே உள்தங்கிய கிராமங்களில்!..

    இயற்கை ஆர்வலர் - தங்கள் இனிய மனம் வாழ்க.. தங்களுக்கு இயைந்த இல்லத்தரசு ஐயா அவர்களும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு. முக்குளிப்பான் நீரைக் கிழித்துச் செல்லும் அழகை, குளிக்கும் அழகை இரசித்துக் கொண்டேயிருக்கலாம். காற்றில் ஆடினாலும் தூங்கணாங்குருவிக் கூடுகளை நன்றாகப் படமாக்கியிருக்கிறீர்கள். இப்படி அசைவிருக்கும் போது ஷட்டர் ஸ்பீட் அதிகரித்தால் எளிதாகப் படமாக்கலாம். உங்கள் கேமராவில் ஸ்போர்ட்ஸ் மோட் இருக்கும் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. குருவிக்கூட்டில் ஈரமான களிமண்ணை அப்பி ,அதில் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து ஒட்டி வைக்குமாம் குருவி.. குழந்தைப்பறவைகளின் வெளிச்சத்திற்கு..!

    அந்தப்பூச்சிகள் உயிரோடு இருந்து அசைந்தால்தான் வெளிச்ச்ம் கிடைக்கும் என்பதற்காக பூச்சிகளுக்கு உணவு கொடுத்து பராமரிக்குமாம் ..

    மிகவும் ரசனையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் அதன் கூடு கட்டும் திறமை பாராட்டபட வேண்டிய விஷ்யம் தான். அது முதலில் முடிச்சு போடுகிறது பாருங்கள் அதுவே மிக அழகு. அது தன் சின்ன அலகால் புல்லை பிடித்துக் கொண்டு கிளையை சுற்றி சுற்றி முடித்து போடுவதை பார்க்கும் போது மிக வியப்பாய் இருக்கிறது.
    மிக சிறந்த கட்டாட கலைஞர்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துரைசெல்வராஜூ , வாழ்கவளமுடன்.

    //இரவில் - தூக்கணாங்குருவிகள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து
    கூட்டினுள்ளே வைத்துக் கொள்ளும் அழகே அழகு!..//

    நீங்கள் சொல்வது போல் அந்த காட்சியை இன்னும் பார்க்கவில்லை.
    கேள்வி பட்டு இருக்கிறேன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    எங்கள் இருவருக்கும் நீங்கள் அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான். முக்குளிப்பான் குளிக்கும் அழகையும் நீரில் விளையாடும் அழகையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    படம் எடுக்க நீங்கள் சொன்ன யோசனைகளுக்கு நன்றி. அப்படி செய்து பார்க்கிறேன் ராமலக்ஷ்மி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் இராஜராஜேஸ்வரி வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொன்னது போல் இன்று விஜய் டி.வியில் தேச.மங்கையர்கரசி அவர்களும் சொன்னார்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு, நாங்களே நேரில் பார்த்த ஒரு உணர்வு..

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள். தூக்கணாங்குருவி கூட்டை பற்றியும், இரண்டு அறைகள் வைத்து கட்டும் விந்தையை பற்றி என் மாமியார் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது தான் படத்தில் பார்த்தேன். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் Unknown , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஆதி வெங்கட், வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பதிவைப் பார்வையிட்டதும் “தூக்கணாங் குருவிக் கூடு தூங்கக் கண்டேன் மரத்திலே” என்று வாய் முணுமுணுத்தது.
    த.ம.1

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்கவளமுடன்.
    உங்களுக்கு நினைவுக்கு வந்த பாடல் நல்ல இனிமையான பாடல் .
    தமிழ்மண வாக்கிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. படங்கள் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். எல்லாமே ரசிக்கும்படி இருந்தன. தாமிரக் கோழி என்பது ஆங்கிலத்தில் Moorehen என்று சொல்லப்படும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கும் தாமிரகோழிக்கு ஆங்கிலத்தில் பெயர் சொன்னதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. உங்களின் அழகான புகைப்படங்களுடன் பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனும் கூடவே பயணித்தது போல இருந்தது! அருமையாக எழுதியுள்ளீர்கள்!! இந்த வீரநாராயண ஏரிக்கு செல்லும் வழியை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வ்ரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    மீன்சுருட்டியிலிருந்தும் வீரநாராயண ஏரி போகலாம். சிதம்பரத்திலிருந்தும் சேத்தியாதோப்பிலிருந்தும் போகலாம்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. அச்சோ... என்ன அழகான படங்கள். தூக்கணாங்குருவிக் கூடுகளைப்பார்த்திருக்கிறேனே தவிர இதுவரை தூக்கணாங்குருவியைப் பார்த்ததில்லை. அந்தக் குறையைப் போக்கிவிட்டீர்கள். நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அருமை கண்டுகளிப்புற்றோம்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    நானும் இப்போதுதான் பார்த்தேன் தூக்கணாங்குருவியை.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு


  28. இன்றைய சிகரம்-வலை மின் இதழ் 2 இல் தங்களின் இந்த பதிவை திரு சிகரம் பாரதி அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். (காண்க http://sigaram3.blogspot.in/2014/08/sigaram-valai-min-idhazh-002.html )

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் வே நடனசபாபதி சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. பறவைகள் பற்றிய
    சிறந்த ஆய்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்



    தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:



    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    இரண்டு விருதா? இப்போது தான் இரண்டு விருது கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லி பதிவு எழ்திக் கொண்டு இருக்கிறேன். அதற்குள் மேலும் இரண்டா?
    நன்றி, நன்றி. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு