ஞாயிறு, 8 ஜூலை, 2012

மெளனம்- பகுதி 2

மெளனம் இருப்பது என்று முடிவு எடுத்த போது எந்த 
கிழமையில் ஆரம்பிக்கலாம் என்று  முதலில் யோசித்தேன்.  ஏனென்றால் மெளன விரதம் என்றால் பொதுவாக எல்லோரும் வியாழக்கிழமைதான் 
இருப்பார்கள். நான் சனிக்கிழமை என்று முடிவு செய்தேன், 
ஏனென்றால் என் கணவர், குழந்தைகள் வீட்டில் 
இருப்பார்கள். அப்போது நான் மெளனம் இருப்பது வசதியாக இருக்கும் என்று. (யாராவது வந்தால் நான் மெளனம் என சொல்லி விடுவார்களே)
மெளனம் விரதம் எடுக்க நினைத்த அன்றே எனக்கு 
சோதனை வந்து விட்டது. முதல் நாளே நாளை 
எழுந்தவுடன் மெளனவிரதம் என்று சொல்லிவிட்டேன்.

காலையிலும் வெற்றிகரமாய் ஆரம்பித்து விட்டேன். 
மாலை 7 மணி வரை வெற்றிகரமாய் போன மெளனவிரதத்திற்கு சோதனை வந்தது.அன்று மாலை என் மகனுக்கு நல்ல காய்ச்சல் அவனை  தொட்டுப்பார்த்த நான் பதறிப் போய்  என் கணவரிடம், " டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.  சீக்கீரம் கிளம்புங்கள் ”என்று பேசி விட்டேன். அவனை டாக்டரிடம் கூட்டிச் சென்று வந்தபின் என் மெளனம் தொடர்ந்தது.
மறுநாள் , ஞாயிறு காலை பேசினேன்.


அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு, சொந்த பந்தங்களுக்கு தெரிந்ததும்,”  இது மிகவும் கஷ்டமே! 24 மணி நேரம் இருக்க முடியுமா! ”என்று கேள்வி 
எழுப்பினார்கள். எனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு பழக்கம் உண்டு, என்னை எல்லோரும் கொண்டாடிக்கொண்டு இருக்க வேண்டும், ஏதாவது என்னைத் திட்டினால் அல்லது மனம் புண்படும்படி பேசினால் அவ்வளவுதான்! நாள் முழுக்க பேச மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன். “சாப்பாட்டில் என்ன கோபம் ? வா,வந்து சாப்பிடு” என்று  என் அம்மா ,அப்பா கெஞ்சி, சாப்பிட வைக்க வேண்டும். மெளனம் அதனாலும் எனக்குக் கைவரப்பட்டது.


எங்கள் ஊரில் ஐப்பசி முழுக்குத் திருவிழா நடக்கும். அப்போது கடை போடுவார்கள். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சனிக்கிழமைதான் முழுக்குக் கடைக்குப் போவோம். ”ஞாயிறு கூட்டம் அதிகம் 
இருக்கும். சனிக்கிழமை போவோம்” என்பார் என் கணவர்.  போனால் கடையில் பொருள் வாங்கும் போது சாமானை எடுத்து ”இதை வாங்கிக் கொள்ளவா” என்று குழந்தைகள் கேட்கும் போது சைகையில் ”இது வேண்டாம் வேறு எடு” என்று அவர்களிடம் பேசுவதைப் பார்க்கும் 
கடைக்காரர்,”அய்யோ பாவம்! வாய் பேசமுடியாது போல!” என நினைத்து என்னிடம் சைகையில் பேசுவார் அல்லது வாய் பேசமுடியாதவர்களுக்குக்  காது கேட்காது என்று நினைத்து சத்தமாய்ப் பேசுவார். ஒவ்வொரு கடைகாரர் 
ஒவ்வொரு மாதிரி. என் பெண்ணுக்குக் கோபமாய் வரும்.” 
என் அம்மாவுக்கு காது கேட்கும் , அவர்கள் மெளனவிரதம் மெதுவாய் பேசுங்கள்” என்பாள்.

வீட்டுக்குக் காய் கொண்டு வருபவர், பழக்கார அம்மா,  பால்காரர் எல்லாம் முதலில் பயந்து , பிறகு புரிந்து  கொண்டார்கள். ”சனிக்கிழமையா! அம்மா 
பேசமாட்டார்கள்.” என்று சொல்லிக்கொண்டு ’ஜீன்ஸ்’ 
படத்தில் வருவது போல் சத்தமாய் பேசுவார்கள் .

காலங்கள் ஓடின 
என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் வந்தது.
இருவீட்டுக்கும் உறவினராக இருந்தவர்கள்,  மாப்பிள்ளை 
ஏதோ திருமணத்திற்கு வந்தவர் இரண்டு நாள்  விடுமுறையில் வந்து இருக்கிறார் என்றும் சனிக்கிழமை இரவு வண்டியில் டெல்லி போய்விடுவார் என்றும் கூறினார்கள்.அதனால் சனிக்கிழமையே  மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொல்லிவிட்டேன்  வாருங்கள் என்றார்கள். கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு பஸ்ஸில் போனோம். என் பக்கத்தில் அமிர்தானந்தமயி இயக்கத்தில் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார்கள். அவர்கள் கையில் அமிர்தானந்தமயி  படத்துடன் கூடிய புத்தகம் வைத்து இருந்தார்கள். 
நமக்குத்தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகமே என்று அதைச் சைகையால் கேட்டேன். அவர்கள், என்னைப்  பரிதாபமாக பார்த்துவிட்டுக் கொடுத்தார்கள். அம்மாவை பார்க்க வரச்சொல்லி அவர்களின் புகழைப்  பேசிக்கொண்டு வந்தார்கள். நான் பஸ்  இடையில் நின்ற போது, ”மெளனவிரதம். இன்று பேச 
முடியாது”  என்றவுடன் அவர்கள் வாழ்த்திப் போனார்கள்.

 மாப்பிள்ளை வீட்டிலும் எங்கள் உறவினர் முதலிலேயே சொல்லிவிட்டார்கள். இன்று பெண்ணின் அம்மா மெளனவிரதம் என்று. அப்படியும் மாப்பிள்ளையின் அம்மா என்னிடம் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டார்கள்  
பேப்பரில் எழுதி காட்டினேன்.

அவர்கள் ஜாதகம் பார்க்கும் போது ’லக்ஷ்மி வருவாள்’ என்று சொல்லி 
இருந்தார்களாம், அவர்களுக்கு  பெண்ணின் பெயர்  கயல்விழி முத்துலெட்சுமி என்று சொன்னவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் அப்புறம் தான் வந்து 
பெண்ணைப் பார்த்தார்கள். மாப்பிள்ளை ஊருக்கு அவசரமாய் போகவேண்டியதால் முதலில் மாப்பிள்ளை பார்த்தல்,பிறகு பெண் பார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இறைவன் அருளால் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது.

திங்கள் கிழமை திருமணம்.   சனிக்கிழமை வந்த  உறவினர்கள் எல்லாம் என்ன இவள் இன்றும் மெளனத்தை விடமாட்டேன் என்கிறாளே என்று பேசினார்கள்.


எங்கள் வீட்டுக்கு போன் கனெக்‌ஷன் வந்தபின், யாரும் 
இல்லாதபோது போன் வந்தால், தெரிந்தவர்கள் என்றால், 
போனை எடுத்து இரண்டு தட்டு தட்டுவேன். அவர்கள்
புரிந்துகொண்டு  விஷயத்தைச் சொல்வார்கள்.

கார்டுலெஸ் போன் வாங்கித்தந்தான் மகன் . யாரும் 
இல்லாத நேரம் போன் வந்தால் கீழ் வீட்டில் போனைக் 
கொடுப்பேன் அவர்கள் ,” இன்று அவர்கள் மெளனம். 
நாளை பேசுங்கள்” ,அல்லது ”அவர்கள் கேட்டுக்கொண்டு  
இருக்கிறார்கள் விஷயத்தை சொல்லுங்கள் ”என்பார்கள். மாமியார் அவர்கள் சனிக்கிழமை காலை எப்படி மறக்காமல் பேசாமல் இருக்கிறாள் என்று பாராட்டுவார்கள். மாமாவும் ஊருக்கு போனால்,” நாளை சனிக்கிழமை, கோமு பேசமாட்டாள்” என்று நினைவாய்ச் சொல்வார்கள். 

டில்லியிலிருந்து மகள் ஒரு நாள்  சனிக்கிழமை எனக்கு போன் செய்தாள். அவளுக்கு அவசரம் தனக்கு கிடைத்த பேற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆசையால் சனிக்கிழமை அம்மா பேசமாட்டார்கள் என்பதை மறந்து விட்டு எங்களைஅழைத்துவிட்டாள். அவளது அப்பாவும் 
பக்கத்து வீட்டுப் பெண்ணும்  என் மகளிடம் பேசி  அவளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு,” அக்கா பேசுங்கள், பேசுங்கள். அவள்  மகிழ்ச்சி அடைவாள் அல்லவா?” என்றார்கள்.


அவள் தாயாகப் போகிறாள் என்ற செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனக்கு மகிழ்ச்சியில் அழுகை வந்து விட்டது. அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க மெளனத்தைக் கலைத்து பேசினேன், பின் மெளனம் தொடர்ந்தேன்.


என் மகளுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு திருநாவுக்கரசு நாயனாரின் அம்மாவின் பெயராகிய மாதினியார் என்பதைச் சுருக்கி மாதினி என்று  
வைத்தோம் .அவள்  வளர வளர  அவளுக்குக் கதை கேட்கும் ஆர்வம் 
அதிகமானது. நான் ஊருக்கு போனால்   கதைகள் சொல்வேன்.   ,”சனிக்கிழமை ஆச்சி ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள்?” என்று கேட்பாள்.
இரவு என்னிடம் கதை கேட்கவே வந்து படுப்பாள். அவள் கதை கேட்பதே வெகு அழகாய் இருக்கும். கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்துக்  வைத்துக் கொண்டு கேட்பாள்.  கதையின் போக்குக்கு 
ஏற்ற மாதிரி முகபாவங்களை  மாற்றுவாள்.  கதைகேட்பவர்கள் ஆர்வமாய் இருந்தால் தானே சொல்பவர்களுக்கு உற்சாகம் .அந்த உற்சாகத்தை அவள் தருவாள். 


நான் அவளுக்கு பஞ்சதந்திரக்கதைகள், தெனாலிராமன் 
கதை,  அக்பர் பீர்பால் கதைகள். கண்ணன் கதைகள், அப்பர்,  சம்பந்தர், கண்ணப்பர், குண்டுகாக்காய் கதை, குரங்கும் , இரண்டு பூனைகள் கதை (அப்பத்தை பங்கு போட குரங்கை பூனைகள் கூப்பிட்ட கதை)  ஊசி மூஞ்சி மூடா கதைகள், (குருவியும் ,குரங்கும் ) குரங்கும், முதலையும் வரும் நாவல் மரக் கதை, கஜேந்திர மோட்சகதை,  நரியும், கொக்கும்  பாயாசம் 
சாப்பிட்ட கதை, எறும்பு, புறா, வேடன் கதை, புறாக்கள்  ஒற்றுமையாய் வேடன் விரித்த வலையில் தப்பிய கதை, சிங்கத்திற்கு எலி உதவிய கதை, நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் கதை , என்று தினம் சொல்லி வந்தேன்.

 ”பூந்தளிர்”பத்திரிகையில் வரும் சுப்பாண்டி கதை மிகவும் பிடிக்கும் அவளுக்கு.  பஞ்சதந்திர கதையில் ”புத்திமான் பலவான்” கதைகள் சொல்லும் போது நான் கொடுக்கும் விலங்குகளின் குரல் மிகவும் பிடிக்கும் அவளுக்கு.
கடைசியில் சிங்கமும், நரியும் ஒன்றை ஒன்று  இழுத்துக்கொண்டு ஒடும் என்று கூறும்போது விழுந்து  விழுந்து சிரிப்பாள். கண்ணப்பநாயனார் கதையைக்கூறும்போது,அவர் நல்ல குண்டாய் ”திண்’ என்று 
இருந்ததால் ’திண்ணன் ’என்று சொல்வதை  கேட்டுவிட்டு 
அடுத்ததடவை சொல்லும் போது தின் என்று சைகை 
செய்து சிரித்து திண்ணன் என்று சொல்லுவாள்.

 குண்டு காக்காய் கதையில் வரும் மாமா , மாமி பேச்சை
 நான் சொல்வதை விட அவள் அதை கேட்டு சொல்வது 
அழகாய் இருக்கும். 

 சில சமயங்களில் பாட்டு கேட்பாள். ’தோட்டத்தில் மேயுது 
வெள்ளை பசு,’ ”ஒன்று யாவருக்கும் தலை ஒன்று’   
”பாட்டியின் வீட்டுப் பழம்பானை ’  ’தோ தோ நாய் குட்டி 
துள்ளி வா நாய் குட்டி’ ., ’சின்ன அணிலே மரத்திலே 
என்ன வேலை செய்கிறாய்” போன்ற பாடல்கள் சொல்லிக் 
கொடுத்தால் உடனே பாடுவாள்.  சின்ன சின்ன சாமி 
பாடல்கள் சொல்லிக்  கொடுத்து இருக்கிறேன்.


கதை கேட்பது இப்போதும் அவளுக்கு மிக மிகப்
பிடித்த விஷயம். இப்போதும் காரில்  மதுரைக்கு  போகும் 
போது கதை சொல்லுங்கள் என்றாள். காரைக்கால் 
அம்மையார் கதை, (காரைக்காலில் மாம்பழதிருவிழா  நடை பெறும் அல்லவா! அதற்கு காரணகர்த்தா  காரைக்கால் அம்மையார் தானே!)குண்டு காக்கா கதை மறுபடியும் கேட்டுக்கொண்டாள். இப்போது  பெரிய பெரிய  தடிமனான புத்தகங்களில் ஆங்கில கதைகளை 
அவளே படிக்கிறாள்.

மெளனம் எங்கோ போகிறதே என நினைக்கிறீர்களா? 
எங்கும் போகவில்லை - வருகிறது.   இன்று சனிக்கிழமை,’ஆச்சி மெளனத்தில்  பேசமுடியாது நீ இன்று ஆச்சிக்கு கதை சொல்.  நாளை ஆச்சி  உனக்கு 
கதை சொல்வார்களாம் ’என்று என் மகள் சொன்னால்  கொஞ்சநேரம் அவள் கதை சொல்லுவாள் .அப்புறம்  அழுவாள். அவள் அழுகை பொறுக்க முடியாமல் அவளுக்காக இரவு  கதை சொல்லிவிட்டு அவள் தூங்கிய 
பின் என் மெளனத்தைத் தொடர்வேன். இப்படி  அவளுக்காக மெளனம் விடப் பட்டது தெரிந்து  மற்றவர்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்,  வாரத்தில் 
ஒரு நாள் மெளனம். அது எப்போது இருந்தால் என்ன 
இன்று பேசு நாளை வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

பேத்திக்கு சொன்ன கதைகள் பல .சில கதைகள் நமக்கு 
பாடமாய் படம் பார்த்து கதை சொல் என்று பாடத்தில் 
வந்தவையாயிருக்கும். , பல கதைகள் எல்லோருக்கும் 
தெரிந்து இருக்கும் .ஒரு கதையை தவிர  அது ’குண்டு 
காக்காய்’ கதை. அது என் கணவர் எட்டாவது படிக்கும் 
போது  நண்பர் சொன்ன கதையாம். திருமணம் ஆன 
புதிதில் என் தம்பி, தங்கைகள் உறவினர் குழந்தைகளுக்கு 
இந்த கதையை என் கணவர்  தானே ரசித்து ரசித்து 
சொல்லிக்கொண்டு இருப்பார்கள் குழந்தைகளும் மிகவும் 
ரசித்து கேட்பார்கள். 

அந்தக் கதை  உங்களில் யாருக்காவது தெரியுமா? 
சொல்லுங்கள் பார்ப்போம்.

மகனுக்கு பெண் பார்க்க போனோம்.அப்போது திங்கள் கிழமைகளில் மெளனம் இருந்தேன்.  வெள்ளிக்கிழமை பெண்ணை ஒருமுறை பார்த்து பேசி விட்டேன் மகளுக்காக  மறுமுறை போகும் போது மெளனம் . 
மகனுக்கு திருமணம் ஆனவுடன் அவன் ஊருக்கு போனால் அம்மா விடுமுறைக்கு இங்கு வந்து விட்டு பேசவில்லை என்றால் எப்படி பேசுங்கள் என்பான்.  அவன் ஆபீஸில் பணிபுரியும் குஜராத்தி பெண்ணிடம் என் அம்மா மெளனவிரதம் இருப்பார்கள் என்றானாம் , அதற்கு அவர்கள் நான் எல்லா விரதமும் இருந்து இருக்கிறேன் மெளன விரதம் இருந்தது இல்லை அது எப்படி இருக்க வேண்டும் அம்மாவிடம் கேட்டு சொல் என்றார்களாம்.

என்  தோழிகள் என்னைப் பார்த்து திங்கள் கிழமை, வியாழக்கிழமை என்று  மெளனம் இருந்து விட்டு காலை முதல் மாலை வரைதான் இருக்க முடிகிறது. மாலை பிள்ளைகள் பள்ளி விட்டு வந்தால் அவர்களை சமாளிக்க முடியவில்லை என  சொன்னார்கள்.

கார் வாங்கிய பின்பு காரில் என் கணவர் சைடை பார், 
பின்னாலே பார் என்று சொல்லும் போது சைகையால் 
எப்படி சொல்ல முடியும்?  இது ஒரு அவஸ்தை.

இன்னும் ஏன் மெளனம் எல்லா கடமைகளையும் முடித்து
விட்டீர்கள் என்று ஒரு பக்கம், ஒரு பக்கத்தில் பிள்ளைகள் 
வீட்டில் இல்லாமல் பேச ஆள் இல்லாமல் கஷ்டப்படும் 
கணவர். பிள்ளைகள் இருந்த போது அவர்களிடம் பேசிக் 
கொண்டே இருப்பார்கள். நம்மை கவனிக்க மாட்டார்கள்.

 கணவர் ஓய்வு பெற்ற பின்னும் வேறு கல்லூரியில் வேலை பார்க்கிறார்கள். இப்போது நாளில் பாதிநேரம் மெளனம் தான். தனியாக மெளனம் எதற்கு என்று மெளனத்தை பூர்த்திசெய்து விட்டேன்.  இப்போது சிலர் கேட்பது உங்களுக்கு எவ்வளவு எனர்ஜி, சேவாச்சு, இப்படி விட்டுவிட்டீர்களே என்பதுதான். இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என்ன செய்வது! 

வாய் பேசாமல் இருப்பது மெளனம் இல்லை, மனமும் பேசாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்

 ”மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தல் அடங்கும் என்கிறார். மகரிஷி . ”

மெளனமாய் சில நிமிடங்கள்  கண்மூடி  மூச்சை கவனித்தாலே போதும்  என்கிறார்கள் ஞானிகள்.

காசு செலவு இல்லாமல், மூச்சை கவனித்து(உள் இழுத்து, 
வெளிவிடுவது) வந்தாலே போதும். 
மெளனத்தில் நம் ஆற்றல் சேமிக்க படுகிறது.   மாதம் ஒருதடவை மெளனம் இருக்கலாம். நம்மிடம் உள்ள வேண்டாத சிந்தனைகளை  களையலாம். 
நீ பேசாமல்  இருக்கும் போது இறைவன் உன்னிடம் பேசுகிறான் என்கிறார்கள். மெளனம் சிறந்தது தான்.முடிந்தவரை கடைபிடிக்கலாம்.


வாழ்க வளமுடன்.








40 கருத்துகள்:

  1. எல்லோரும் 100வது பதிவுக்கு வாழ்த்து சொல்லிட்டாங்க...நான் 101 பதிவுக்கு வாழ்த்துக்கள் சொல்றேன் அம்மா ;-))

    (எப்படியே சமாளிச்சிட்டேன்)

    பதிலளிநீக்கு
  2. கத கேளு கத கேளு
    நிஜமான கத கேளு...

    நீங்கள் சொல்லியிருக்கிற கதைகளைப் பற்றிக் கேட்கும் பொழுதே,எவ்வளவு அழகாக ரசனையுடன் சொல்லியிருப்பீர்கள் என்று தெரிகிறது. அந்த குண்டு காக்காய் கதையையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 'மெளன விரதமும், அதற்கேற்பட்ட நெருக்கடிகளும்'
    நிஜங்களும் கதை போல சொன்ன பாங்கில் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, இருபது வருடங்களுக்கும் மேலாக வியாழக்கிழமைகளில் மௌன விரதம் இருப்பார்கள். உங்கள் 100-வது பதிவினையும் இப்பதிவினையும் படிக்கும்போது அவர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள்.

    மௌன விரதம் இருக்கும் போது மனதும் அலையாமல் இருக்கத்தான் பயிற்சி வேண்டும் என நினைக்கிறேன். பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  4. மடை திறந்த வெள்ளமெனப் பாய்ந்த வந்த மெளன அனுபங்கள் சுவாரஸ்யம். ஆச்சரியம்.

    பேத்தி கதை கேட்ட கதை அழகு.

    மெளனத்தை விட்டதன் காரணத்தை யதார்த்தமாக சொல்லியிருந்தாலும் ஒரு வருத்தம் அதில் மெளனமாக ஒளிந்திருக்கிறது.

    /”மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தல் அடங்கும் என்கிறார். மகரிஷி . ”/

    முடிவில் சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. Mallard anupavam. Pakirvukku nanri.
    Pethiyin melirukkum paasam 'mounam'ai velippadukirathu!

    பதிலளிநீக்கு
  6. சூப்பர். சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் யதார்த்தமாய் அனுபவங்களை சொல்லி சிந்திக்க வைத்துவிட்ர்கள்.நீங்கள் தொடர்ந்து எழுதினால் நிறையகற்றுக்கொள்ள முடியும்.நன்றிஅம்மா.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர்கள்.

    ர்சித்துப்படித்து மகிழ்ந்தேன்.

    //மெளனத்தில் நம் ஆற்றல் சேமிக்க படுகிறது. மாதம் ஒருதடவை மெளனம் இருக்கலாம். நம்மிடம் உள்ள வேண்டாத சிந்தனைகளை களையலாம். //

    நல்ல ஆலோசனை. மிகவும் ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  9. //மெளனம் எங்கோ போகிறதே என நினைக்கிறீர்களா? //
    ஆஹா, மனதைப் படிக்கிறீர்கள்!!

    //’குண்டு காக்காய்’ கதை// - தெரியலையே!!

    பெற்றோராக இருப்பவர்கள், தாத்தா-பாட்டிகளாக ஆகும்போது நிறைய மாறுவார்கள். விரதத்தையும் அதனால்தான் விட்டிருக்க வேண்டும் என்று கெஸ் செய்திருந்தேன். கிட்டத்தட்ட சரிதான்.

    //பிள்ளைகள் வீட்டில் இல்லாமல் பேச ஆள் இல்லாமல் //
    உண்மைதான், இப்போது விரதத்தை விட்டது மிகச் சரியான முடிவு, சரியான நேரத்தில்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க கோபிநாத, படித்தீர்களா ? ஏன் கேட்க்கிறேன் என்றால் எப்படியோ சாமாளிச்சிட்டேன் என்கிறீர்களே ! அதனால் கேட்க்கிறேன்.

    முதலில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி. வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கத கேளு கத கேளு
    நிஜமான கத கேளு..//

    நிஜமான கதைதான் ஜீவி சார்.
    உங்கள் ரசிப்புக்கு நன்றி.

    குண்டு காக்கா கதை ஒரு நாள் கண்டிப்பாய் சொல்கிறேன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. மௌன விரதம் இருக்கும் போது மனதும் அலையாமல் இருக்கத்தான் பயிற்சி வேண்டும் என நினைக்கிறேன். பார்க்கலாம்!//

    நிச்சியம் பாருங்கள்

    நானும் 15 வருடம் விடாத மெளனம், விட்டு விட்டு 5 வருடம் இருந்து இருக்கிறேன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  13. மெளனத்தை விட்டதன் காரணத்தை யதார்த்தமாக சொல்லியிருந்தாலும் ஒரு வருத்தம் அதில் மெளனமாக ஒளிந்திருக்கிறது.//

    ஒரு செயலை உறுதிபாட்டுடன் எடுத்துக் கொண்டபின் பாதியில் விட்டால் வருத்தம் இல்லாமல் இருக்குமா? இருக்கத்தான் செய்கிறது ராமலக்ஷமி.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க மாதவி, பேரன், பேத்தி என்றாலே பாசம் தான், அதிலும் முதல பேத்தி அல்லவா!
    உங்கள் வரவுக்கு நன்றி.

    வெகு நாட்களாய் உங்களை பார்க்க முடியவில்லையே1 உங்கள் மெளனத்தை என் மெளனம் கலைத்து விட்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வரவுக்கும் ,கருத்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க இந்திரா, உங்கள் தொடர் வருகைக்கும், என்னை எழுத உற்சாகபடுத்துவதற்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வை. கோபாலகிருஷ்ணன், நீங்கள் என்னை நகைசுவையாக எழுதி இருப்பதாய் சொன்னது மிகவும் மகிழ்ச்சி.

    நீங்கள் தான் நல்ல நகைச்சுவையுடன் கதைகள் எழுதுவீர்கள்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஹூஸைனம்மா, உங்கள் போன பதிவு கேள்விக்கு பதில் கிடைத்ததா?

    உங்கள் மனதை படித்து விட்டேனா!
    ஒருநாள் குண்டு காக்கா கதை சொல்கிறேன்.(அடுத்தபதிவில்)

    இப்போது விரதத்தை விட்டது மிகச் சரியான முடிவு, சரியான நேரத்தில்//

    அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்,
    வெளி ஆட்கள் , நட்புகள் என்று
    அவர்கள் பேசுவதே குறைவு அதில் நான் வேறு மெளனம் என்றால் யாரிடம் பேசுவார்கள்!
    எல்லாம் நன்மைக்கே!

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. எனக்கு ஒன்று புரிவதில்லை, கோமதி அம்மா. மனம் அலைபாயாமல் இருக்க மௌனம் உதவும் என்பது உண்மையா.?வாய் மௌனத்தை அனுஷ்டித்தாலும் மனம் சிந்திப்பதை நிறுத்த முடியுமா.?வாய் மூடாமல் லொட லொட என்று பேசுபவர்கள் மௌனம் அனுஷ்டித்தால் ஒரு வேளை சக்தி சேமிக்கப் படலாம். இதெல்லாம் தேவையா என்று நான் கேட்கமாட்டேன். அது அவரவர் பின் புலத்தைப் பொறுத்தது.அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. G.M. Balasubrananiam சார், மனம் அலைபாயாமல் இருக்க முடியுமா என்று பார்க்க தான் தியானம், மெள்னம் என்கிறார்கள் பெரியவர்கள். முடியும் என்று சிலர் நிரூபித்து உள்ளார்கள்.

    என்னை போல உள்ளவர்கள் முயற்சி தான் செய்யலாம்.

    ஐம்புலன்களுக்கு ஒய்வு தான் தியானம், மெளனம் எல்லாம்.
    புலன் வழிதான் உலக்த்தொடர்பு ஏற்படுகிறது.

    கண்ணை மூடி கொண்டு சிறிது நேரம் இருந்தால், கண்ணுக்கு ஒய்வு., காதை மூடிக்கொண்டு எந்த சத்ததையும் கேட்காமல் இருந்தால் காதுக்கு ஒய்வு, வாயைமூடிக் கொண்டு இருந்தால் வாய்க்கு ஒய்வு.வேகமாய் செயல் படும் போது நம் மூச்சு காற்று நிறைய செலவழிகிறது அதை கவனிக்கும் போது நிதனமாய் மூச்சு உள்ளே வெளியே போய்வருகிறது தெரியும் இது மூக்குக்கு ஒய்வு.
    எப்படியும் கொஞ்சம் நம் ஆற்றல் சேமிக்க படும்.

    தொலைகாட்சி பார்த்துக்கொண்டு, கதை புத்தகம் படித்துக் கொண்டு, பாட்டுக் கேட்டுக்கோண்டு மெளனம் இருக்க கூடாது. அமைதியான இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் தியானம், சிந்தித்தல் என்று இருப்பவர்களுக்கு ஒரளவு மனம் அலைபயாமல் இருக்கும்.
    குடும்பத்தில் இருந்து கொண்டு நம்மால் ஒரளவு தான் மெளனம் கடைபிடிக்க முடியும்.

    ஆழியார் போன்ற அறிவு திருக்கோவிலில் ஒருமாதம் மெளனம் நடை பெறும். கலந்து கொள்பவருக்கு குடும்ப பொறுப்புகள் குறைவதால் நிம்மதியாக மன்ம் அலைபாயாமல் தியானம் , மெளனம் இருக்கலாம்.

    //நாம் பேசாமல் இருக்கும் போது கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டால் எத்தனை, எத்தனை எண்ணங்கள் எழுச்சிப்பெற்று உணர்த்துகின்றன இந்த எண்ணங்கள் நீங்கள் உண்டு பண்ணுகிறீர்களா? நாம் உண்டு பன்ணுவது இல்லை. அது நம் விருப்பத்துக்கு அடங்குவது இல்லை.

    பின்னர் நமது எண்ணங்களை நமது உள்ளங்கலிலிருந்து அலையலையாக எழுப்பிக் கொண்டிருப்பது யார் வேலை? யாரிமில்லை. இறைவனே தான். எவ்வறு? உடல் உறுப்புகளின் மூலம் உணரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் உயிர் மயத்திலுள்ள இருப்பு நிலையாகிய அறிவு சீவகாந்த ஆற்றலால், படர்க்கை நிலையெய்தி மனமாக இயங்கி உணர்கின்றது.

    மனத்தால் உணரும் அனைத்தும், அலைவடிவில் உயிர் மயத்திலிருக்கும் இருப்பு நிலையால் ஈர்க்கப்படுகின்றன. அவை உயிர்த்துகள்களில் பதிவாகின்றன. உயிர்த் துகள்கள் சூழற்சியால், உயிரில் பதிந்த பதிவுகளின் தன்மைகள் யாவும் அதன் விரிவு அலை மூலம் எப்போதும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.//

    ---அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. மகரிஷியின் அருள் உரை நம்மை மேலும் தெளிவாக்கும். என்னால் மனவளக்கலை பயிலமுடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது தங்கள் பதிவு மன ஆறுதலைத்தருகிறது மிகவும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  23. பேச்சினாலோ அல்லது தின்று கொண்டே இருப்பதாலோ
    வருகிற மன உடல் நலப் பிரச்சனைகளுக்கு
    நல்ல தீர்வு மௌன விரதமும்
    உண்ணா விரதமுமே எனபதுவே எனது கருத்தும்
    தங்கள் அனுபவங்களைச் சொல்லிப்போனவிதம்
    பய்னுள்ளதாகவும் இருந்தது.சுவாரஸ்யமாகவும் இருந்தது
    மனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. வாய் பேசாமல் இருப்பது மெளனம் இல்லை, மனமும் பேசாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்


    ”மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தல் அடங்கும் என்கிறார். மகரிஷி .

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    மௌனம் பேசியதே !!

    பதிலளிநீக்கு
  25. இந்திரா, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
    நீங்கள் இருக்கும் ஊரில் இல்லையா? மனவளக்கலை மன்றம்?

    மீண்டும் பதிவை படித்து கருத்திட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ரமணி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.
    மெளனம் தான் பேசியது.

    பதிலளிநீக்கு
  28. ”மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தல் அடங்கும் என்கிறார். மகரிஷி . ”
    மௌனம் பற்றிய பகிர்வு அருமை....
    என்னுடைய பாட்டியும் உங்களை போன்று கதைகள் எனக்கு சொல்லுவார்கள்... மிகவும் அற்புதமான உங்களுடைய மௌனங்கள் கோமதியம்மா....

    பதிலளிநீக்கு
  29. வாங்க விஜி பார்த்திபன், பாட்டிகளுக்கு பேரன், பேத்திகளுக்கு கதை சொல்வது அளவில்லா ஆனந்தம் அல்லவா! உங்கள் பாட்டிக்கும் அப்படித்தான் இருந்து இருக்கும்.
    உங்கள் பாராட்டுக்கும், வ்ருகைக்கும் நன்றி விஜி.

    பதிலளிநீக்கு
  30. நான் சென்னையில் வசிக்கிறேன் எங்கள் வீட்டில் இருந்து மன்றம் சிறிது தொலைவு அதோடு என் கணவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை சில மாதங்களுக்கு முன் நடந்தது.இன்னும் சில மாதம் கழித்து செல்ல குருஅருள் வேண்டும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  31. வாங்க இந்திரா, உங்கள் கணவர் பூரண நலம் பெற்றபின் மன்றம் செல்லலாம்.
    குரு அருள் நிச்சயம் உண்டு.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  33. உங்க மௌன விரதத்தைப் பற்றிய அனுபவங்கள் அருமையா இருந்தது கோமதிம்மா.. குழந்தைகளுக்கு திருமணம் பேசும் சந்தர்ப்பங்களில் கூட விடாமல் மௌனம் இருந்தது வியக்க வெச்சது:-)

    நீங்க சொன்ன கதைகளை பூந்தளிரில் நானும் படிச்சிருக்கேன். என் குழந்தைகளுக்கும் கதை சொல்லியிருக்கேன் :-)

    பதிலளிநீக்கு
  34. வாங்க அமைதிச்சாரல், உங்கள் பின்னூட்டம் சாரல் மழையைப் போல் சுகமாய் இருக்கிறது.

    பாம்பேயில் நல்ல மழையா?
    இங்கும் இப்போது மழை பெய்துக் கொண்டு இருக்கிறது.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. மௌனம் ,தியானம் ந்னு எனர்ஜிய எல்லாம் சேமிச்சதால் ..எவ்ளோ நினைவாற்றல் உங்களுக்குத்தான்..
    எனக்கு இவ்வளவு விவரமாக நினைவில் இல்லை..:)

    பதிலளிநீக்கு
  36. ஒரு வருடம் ஒவ்வொரு சனிக்கிழமை மௌன விரதம் இருந்தேன்.. இப்போது இல்லை.. ஆனால் அதன் பலன் அனாவசிய்மாய் பேசுவதில்லை..

    பதிலளிநீக்கு
  37. வாங்க ரிஷபன், மெளன விரதம் இருந்ததின் நன்மையால் அனாவசியமாய் பேசுவதில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு