வியாழன், 8 அக்டோபர், 2009

வாழ்க்கை வாழ்வதற்கே!

காதல், கடவுள், அழகு, பணம், என்ற தலைப்பில்
கவிநயா நயம்பட உறைத்துவிட்டு,வல்லிஅக்காவை
அழைத்து இருக்கிறார்கள்.வல்லிஅக்காவும் அருமை
யாக எழுதி விட்டார்கள்.என்னை அழைத்து
இருக்கிறார்கள் எழுத,நான் என் அறிவுக்கு எட்டியதை
எழுதி இருக்கிறேன், நீங்கள் படித்து தான் ஆக
வேண்டும்.

காதல்:

காதல் என்றால் அன்பு. ஒவ்வொருவருக்கும்
காதல் எதன் மீதும் வரலாம். நாம் ஆண்,பெண்
இடம் வரும் காதலைப் பார்ப்போம்.இளமையில்
ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மலர் போல்
மனம பரப்பி,கனிபோல் கனிந்து இன்பமூட்ட வேண்டும்.
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே
இல்வாழ்க்கை.முழுமை பெற்ற காதல் என்றால்
முதுமை வரை கூடவரும்.

பாராதியார் காதலைப் பற்றி சொல்கிறார்

“காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்,சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர்,உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினாற் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்”

கணவனுக்கு மனைவி,மனைவிக்கு கணவன் இந்த
காதல்(அன்பு)சீராக இருக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை காதலிக்க
வேண்டும்.

கடவுள்:
கட+உள் = கடவுள்
இதையே திருவள்ளுவர்:

" மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"

அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும்
இறைவனை நினைந்து நமக்கு கொடுக்கப் பட்ட
வாழ்வை நல்லபடியாக வாழலாம்.
இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்
என்று திடமாக நம்ப வேண்டும்.

” அருள் துறை வளர்ச்சியின்று அமைதி உலகில் கிட்டா
அருள் துறையே இறையுணர்வும் அன்பில் உயர்
வழிபாடாம்.” மகரிஷி

பணம்:

” அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”

திருவள்ளுவர் சொன்னதுபோன்று இவ்வுலகில் வாழ
பொருள் அவசியம்.இளமையில் தேடி,முதுமையில்
இன்பமாக அனுபவிக்க வேண்டும்.பொருள் ஒன்றே
வாழ்க்கை ஆகாது.ஒன்றை பத்தாக்கும் ஆசையில்
ஏமாற்றுவாரிடம் ஏமாறக் கூடாது.வரவுக் கேற்ற செலவு
செய்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

அழகு:
பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து அழகு மாறுபடும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
இளமையில் ஒர் அழகு,முதுமையில் ஒர் அழகு.
இயற்கை என்றும் அழகு.குழந்தையின் கள்ளமற்ற
பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழை அழகு, அருவிஅழகு,
பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்
இயற்க்கையின் படைப்புக்கள் எல்லாம் அழகு.

அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்
கொண்டே இருக்கும்.இயற்கையின் அழகை
கெடுக்காமல் ரசிக்க வேண்டும்.ரசிக்க கண் கொடுத்த
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்
ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.
அன்புதான் கடவுள்,கடவுள் தான் அன்பு.
பணம் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருக்கும்.முறையான வழியில் ஈட்டிய பணம்
மகிழ்ச்சியை கொடுக்கும்,வாழ்வில் ஒரு
பிடிப்பைக் கொடுக்கும்,வாழ்வில் நிறைவு
போதுமென்ற மனது இருந்தால் அழகு தானாக
வந்து விடும்.

அப்பாடா ஒரு வழியாக வல்லி அக்கா எழுத
அழைத்த அழைப்பை ஏற்று எழுதி விட்டேன்.

நான் அழைக்க விருப்புபவர்கள்:
ராமலக்ஷ்மி,
கோமா,
R.கோபி,
சந்தனமுல்லை.

நன்றி.

“அருள் பேராற்றல் கருணையினால் உடல்
நலம்,நிறைசெல்வம்,நீள் ஆயுள்,உயர்புகழ்,
மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்”- மகரிஷி.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

23 கருத்துகள்:

  1. அதற்குள்ள பதிவு போட்டாச்சா!!
    ம்ம்.!!!!
    மீன் குட்டி மாதிரி மீன் அம்மாவும் வேகம்தான்:)
    நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  2. ஆகா..! அழகான அனுபவ பகிர்வு!! அந்த வார்த்தைகளுக்குள் பொருள் பொதிந்த தொடர்பையும் கூறியிருக்கிறீர்கள். விரைவில் எழுதுகிறேன்..அழைப்பிற்கு நன்றி!! :-)

    பதிலளிநீக்கு
  3. எனக்கு பிடித்த வரிகள்

    காதல்:-முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும்.

    கடவுள்:-இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்என்று திடமாக நம்ப வேண்டும்.

    பணம்:-இளமையில் தேடி,முதுமையில் இன்பமாக அனுபவிக்க வேண்டும்.

    அழகு:-அழகு மாறிக் கொண்டே இருக்கும்


    அருமை ! :)

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.
    உங்களுடைய தூண்டுதல் தான்
    என்னை எழுத வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. மற்றுமொரு நல்ல பதிவு அம்மா!

    சுவாரஸ்யமாய் எழுதக்கொண்டிருக்கும் நீங்கள் பல்வகையான பதிவுகளையும் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  6. முல்லை,
    பாராட்டுக்கு நன்றி.
    //விரைவில் எழுதுகிறேன்//

    ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆயில்யன் ,

    வந்து வரிகளை ரசித்தமைக்கு நன்றி.
    நீங்களும் இந்த தலைப்பில் எழுதி
    விட்டீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தலைப்பு. அழகான விளக்கங்கள்.
    //காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்
    ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.//
    என முடித்திருக்கும் விதம் வெகு அற்புதம்.

    //அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்
    கொண்டே இருக்கும்.//

    மிகவும் ரசித்த வரிகள்.
    ----------------------------
    சென்ஷி said...
    //சுவாரஸ்யமாய் எழுதக்கொண்டிருக்கும் நீங்கள் பல்வகையான பதிவுகளையும் எழுதுங்களேன்.//

    வழிமொழிகிறேன்.
    ---------------------------
    அன்பான அழைப்புக்கு நன்றி. தொடருக்கான அழைப்பென்றாலே ஏனோ எப்போதும் ஒதுங்கியபடியே நான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்:)!
    ---------------------------
    நல்ல பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கோமதி
    அழைப்புக்கு நன்றி .
    கூடிய விரைவில் பதிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
  10. //கட+உள் = கடவுள்//

    அருமையான கருத்தொன்றை சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அன்பு ராமலக்ஷ்மி ,

    தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    சென்ஷியும்,நீங்களும் கேட்டு கொண்டதுபோல் பல்வகையான பதிவுகளை எழுத முயல்கிறேன்.நீங்கள் எல்லோரும் உற்சாக படுத்துவதால் தான் எழுத ஆசை ஏற்படுகிறது.

    தொடர் எழுத முயற்ச்சிக்கிறேன் என்று
    சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கோமா,
    கூடிய விரைவில் பதிவிடுகிறேன் என்று
    சொன்னதற்கு நன்றி.

    உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்ப்
    பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. யாழினி,
    பாராட்டுக்கு நன்றி.

    கருத்துக்கள் எல்லாம் முன்னோர்கள்
    கருத்து தான்.
    வேதாத்திரி மகரிஷியின் கருத்து தான்.

    பதிலளிநீக்கு
  14. தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி கோமதி மேடம்...

    நான் ஏற்கனவே அன்புடன் அருணா மேடம் அழைப்பை ஏற்று இந்த பதிவை எழுதி விட்டேன்... இங்கே பாருங்கள்...

    க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
    http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  15. கோபி,
    நீங்கள் எழுதிய க..கா.ப..அ..பற்றி
    உங்களுக்கு என்ன தெரியும் படித்து அதற்கு பாராட்டி எழுதியும் உள்ளேன்.

    மறதி வயது ஆகி விட்டது அல்லவா?

    சரி நான் எழுதியது எப்படி இருக்கிறது
    என்று சொல்ல வில்லையே?
    கோபிக்கும் மறதியா?
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. பக்குவப்பட்ட பதில்கள். வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி
    ஆதவன்.

    பதிலளிநீக்கு
  18. //இளமையில்
    ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மலர் போல்
    மனம பரப்பி,கனிபோல் கனிந்து இன்பமூட்ட வேண்டும்.
    காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே
    இல்வாழ்க்கை.முழுமை பெற்ற காதல் என்றால்
    முதுமை வரை கூடவரும்.//

    காத‌லை ப‌ற்றி இதை விட‌ சிற‌ப்பாக‌ வேறு யாரும் சொல்லியோ / எழுதியோ விட‌ முடியாது... மிக‌ ந‌ன்றாக‌ உள்ள‌து கோம‌தி மேட‌ம்...

    //கடவுள்:
    கட+உள் = கடவுள்//

    மிக‌ மிக‌ ந‌ல்ல‌ விள‌க்க‌ம்...

    //இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்
    என்று திடமாக நம்ப வேண்டும்.//

    க‌ண்டிப்பாக‌.... ஏனெனில் ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை...

    //பணம்:

    ” அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு”//

    ஆஹா... நானும் இதையே வ‌லியுறுத்தி விள‌க்கினேன்... இப்போ நீங்க‌ளும்... சந்தோஷ‌மா இருக்கு... என்னே ப‌ண‌ம் ப‌டுத்தும் பாடு...

    //பொருள் ஒன்றே
    வாழ்க்கை ஆகாது.ஒன்றை பத்தாக்கும் ஆசையில்
    ஏமாற்றுவாரிடம் ஏமாறக் கூடாது.வரவுக் கேற்ற செலவு
    செய்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.//

    ஆனாலும், இதுல‌ உங்க‌ யூஷுவ‌ல் ட‌ச் தெரியுதே...

    //அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
    இளமையில் ஒர் அழகு,முதுமையில் ஒர் அழகு.
    இயற்கை என்றும் அழகு.குழந்தையின் கள்ளமற்ற
    பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழை அழகு, அருவிஅழகு,
    பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்
    இயற்க்கையின் படைப்புக்கள் எல்லாம் அழகு.//

    மிக‌ ச‌ரியே... நீங்க‌ள் மேலே குறிப்பிட்டுள்ள‌ அனைத்துமே அழ‌குதான்... ந‌ல்ல‌ சிந்த‌னா ச‌க்கி உங்க‌ளுக்கு...

    //அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்
    கொண்டே இருக்கும்.இயற்கையின் அழகை
    கெடுக்காமல் ரசிக்க வேண்டும்.ரசிக்க கண் கொடுத்த
    இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.//

    ம்ம்ம்... உல‌கினில் எதுவும் நிரந்த‌ர‌மில்லை என்ப‌தை அழ‌காக‌ எடுத்து சொல்லும் அற்புத‌ க‌ருத்து.. க‌ண்டிப்பாக‌ நாம் அடைந்துள்ள‌ அனைத்து விஷ‌ய‌ங்க‌ளுக்கும் இறைவ‌னுக்கு எப்போதும் ந‌ன்றி சொல்ல‌ வேண்டும்...

    //காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்
    ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.
    அன்புதான் கடவுள்,கடவுள் தான் அன்பு.
    பணம் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக
    இருக்கும்.முறையான வழியில் ஈட்டிய பணம்
    மகிழ்ச்சியை கொடுக்கும்,வாழ்வில் ஒரு
    பிடிப்பைக் கொடுக்கும்,வாழ்வில் நிறைவு
    போதுமென்ற மனது இருந்தால் அழகு தானாக
    வந்து விடும்.//

    மிக‌ ச‌ரி... இவை அனைத்து ஒன்றோடொன்று வாழ்வில் அத்தியாவ‌சிய‌மாய் பின்னி பிணைந்துள்ள‌து... அன்பே சிவ‌ம்... ம்ம்ம்... முறையான‌ வ‌ழியில் ஈட்டிய‌ ப‌ண‌ம்தான் மகிழ்ச்சி... எல்லோருக்கும் அந்த‌ நிறைவு வந்தால் எவ்ளோ ந‌ல்லா இருக்கும்...

    கனவு மெய்ப்பட வேண்டும்...

    //“அருள் பேராற்றல் கருணையினால் உடல்
    நலம்,நிறைசெல்வம்,நீள் ஆயுள்,உயர்புகழ்,
    மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்”- மகரிஷி.//

    உல‌கில் உள்ள‌ அனைவ‌ரும் ம‌ன‌ ம‌கிழ்ச்சியுட‌ன், ஒற்றுமை உண‌ர்வுட‌ன் அமைதியாய் வாழ‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டுகிறேன்...

    எப்போதும் போல‌, விரிவான‌ பின்னூட்ட‌ம் இட்டு விட்டேன்... ச‌ரிதானே கோம‌தி மேட‌ம்...

    விரிவாக‌வும், விள‌க்க‌மாக‌வும், சுவார‌சிய‌மாக‌வும் இந்த‌ ப‌திவை எழுதிய‌ உங்க‌ளுக்கு என் வாழ்த்துக்க‌ள் கோம‌தி மேட‌ம்...

    பதிலளிநீக்கு
  19. முதலில் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    திருவள்ளூவர் துணை கொண்டு சிறுக சொன்னாலும் அருமையாக சொல்லியிருக்கிங்க அம்மா ;)

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கு நன்றி கோபிநாத்.


    திருவள்ளுவர் துணைக் கொண்டு
    எல்லோரும் நன்றாக வாழலாம்.

    பதிலளிநீக்கு
  21. கோபி உங்கள் விரிவான பின்னூட்டம்
    மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. நன்றி.

    //உலகில் உள்ள அனைவரும் மனமகிழ்ச்சியுடன்,ஒற்றுமை
    உணர்வுடன்
    அமைதியாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்//
    இந்த காலகட்டத்தில் தேவையான
    வேண்டுதல்.
    நல்ல உள்ளங்களின் வேண்டுதல் வீண்
    போகாது.
    நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  22. உங்களுக்கு விருது இங்கே!

    http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html

    பதிலளிநீக்கு