ஆன்மிகம்-பிள்ளைலோகாச்சாரியார் திருவரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம்-பிள்ளைலோகாச்சாரியார் திருவரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 நவம்பர், 2016

பிள்ளை லோகாச்சாரியார் வைபவம்




இன்று (7.11.2016 ஐப்பசி திருவோணம்) பிள்ளைலோகாச்சாரியார் திருவரசு எய்திய நாள்.  அதை முன்னிட்டு அவர்  திருவரசு எய்திய  ஜ்யோதிஷ்குடிக்கு இன்று சென்றிருந்தோம்.

செல்லும் வழி;-

மதுரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
மதுரையிலிருந்து ஒத்தக்கடையைக் கடந்து மேலூர்   செல்லும் வழியில் இடது புறம் திரும்பி கொடிக்குளம்  செல்லும் பாதையில் 2 கி.மீ செல்ல வேண்டும்.

ஆச்சாரியாரின் வரலாறு;-

பிள்ளைலோகாச்சாரியார், ஸ்ரீ இராமானுஜருக்குப் பின்  வந்தவர். இவர் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் புதல்வர், கி.பி  1205 இல் ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார்.  கி.பி 1311 ல் ஜோதிஷ்குடியில் திருவரசு எய்தினார்.

இராமானுஜருக்குப் பின்  வைணவத்தில்  தென்கலைத் தத்துவத்தை பிள்ளைலோகாச்சாரியார் அறிமுகப்படுத்தினார். வடகலை தத்துவத்தை  வேதாந்த தேசிகர் அறிமுகப்படுத்தினார்.

தென்னிந்தியாவில் அவதரித்த ஆழ்வார்கள் அருளிய திவ்வியபிரபந்தங்களைச் சிறப்பித்துக் கூறுவது   தென்கலை என்பார்கள்.

வடமொழி சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது வடகலை என்பார்கள்.  

இறைவனுக்கும் அடியார்களுக்கும் இடையிலே உள்ள தொடர்பை இரண்டு வகையாகச் சொல்கிறார்கள்.  மர்க்கட நியாயம், மார்ச்சால  நியாயம்  என்று  சொல்வார்கள். 

குரங்கின் குட்டியானது தன்னுடைய  முயற்சியால் தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்கிறது, அதுபோல பக்தன் தன்னுடைய முயற்சியால் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வது மர்க்கட நியாயம்   என்பார்கள்.

பூனையானது  தன்னுடைய குட்டிகளைத்  தன்னுடைய  முயற்சியால் - வாயால்   கவ்விக் கொண்டு எடுத்துச்  சென்று  காப்பாற்றுகிறது.  அதுபோல   இறைவன்   தன்னுடைய முயற்சியால் பக்தர்களைக்  காப்பாற்றுவான் என்பது மார்ச்சால   நியாயம்  என்பார்கள்.

மர்க்கட  நியாயத்தை  வேதாந்த  தேசிகர் வலியுறுத்தினார், மார்ச்சால  நியாயத்தைப் பிள்ளை லோகாச்சாரியார் வலியுறுத்தினார்.

இவர் முமுட்சுப்படி,   தனித்வயம் , ஸ்ரீவசன பூஷணம் போன்ற பல நூல்களை அருளியுள்ளார்.

முகமதியர் படையெடுப்பின் போது   ஸ்ரீரங்கத்திலிருந்து  நம்பெருமா
ளின்  உற்சவ விக்கிரகத்தைப் பாதுகாக்க எடுத்து   வந்து மதுரைக்கு அருகில்  உள்ள ஒத்தக்கடை எனும்  இடத்தில் ஆனைமலை அடிவாரத்தில்  ஒரு குகையில்   மறைத்து  வைத்து  வழிபட்டு வந்தார். இவ்விடத்தில்  அவருக்கு  உடல் நலம்  குறைந்து  இறுதியில் திருவரசு எய்தினார். திருவரசு எய்தும்  போது  தன் அருகே இருந்த சிறு பூச்சிகள், சிறு செடி கொடி முதலியவற்றைத்  தன் கரங்களால்  தொட்டு  அவற்றுக்கும்   மோட்சம்  அளித்ததாக  வரலாறு. 

இந்த  இடத்திற்கு ஜோதிஷ்குடி என்று பெயர். ஆச்சாரியார் நம்பெருமாள் விக்கிரகத்தை   எங்கு வைக்க வேண்டும்  என்று நினைத்த  போது இந்த  இடத்தில் ஒரு ஒளி  தோன்றியதால்  இந்த இடத்திற்கு  ஜோதிஷ்குடி என்ற பெயர்  வந்தது  என்கிறார்கள்.

 நன்றி:- இப்படம்  இணையதளத்தில் இருந்து எடுத்தது-(yel-low blogsot.in)

நம்பெருமாளின் திருமேனி  இருந்த குகையின் வாயிலை தற்காலத்தில் பெரும்  பாறை  விழுந்து   மூடி  விட்டது.  அங்கே இருந்த சிறிய  மண்டபம்  இடிந்து  விட்டது.   அவ்விடத்தை   இப்போதும் காணலாம். 
துளசிமாலை சார்த்தியிருக்கும்  இடத்தில்தான் குகை இருந்தது
இங்கு சில அடியார்கள் திருவாய்மொழிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.


                                              குகைக்குச் செல்லும் வழி
இங்கே   ஸ்ரீ வேதநாராயணப்  பெருமாள்  சிறிய  வடிவில் இருக்கிறார். இடதுபக்கத்தில் அமர்ந்த கோலத்தில்  கைகளைக் கூப்பியபடி பிரம்மா  இருக்கிறார். பட்டர், துளசி அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்.பிரம்மாவிற்கு நான்கு தலை கிடையாது, இங்கு ஒரு தலை தான் என்றும் பெருமாள் வேதநாராயணனாக  இருப்பதால்  பிரம்மாவிற்கு  ஒருதலைதான்  என்றும்  சொன்னார்.


சன்னதிக்கு அடுத்து,  பாதங்கள் ஒரு பீடத்தின் மேல் இருந்தது அதுவும் ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்றார்.  முன்பு குகைகுக்குள் தான்  இருந்தது என்றும்  சொன்னார். 

 கோவிலுக்கு எதிரில் தாமரைப் பொய்கை சதுர வடிவில் இருக்கிறது.  ஒன்று இரண்டு தாமரைப்பூக்கள் உள்ளது. பக்கத்தில் போய்ப் படம் எடுக்க முடியவில்லை , அதில்  யாரும் இறங்கக் கூடாது  என்று சொன்னார்கள் , மீறி இறங்கினால் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள  மரத்தில் உள்ள தேனிக்கள்   கொட்டி விடுமாம்.





   தூரத்திலிருந்து  அங்கு அமர்ந்து இருந்த கருப்பு  நாரையைப்  படம் எடுத்தேன்.

பெருமாள் கோயில் அருகே  சற்று உயரத்தில் பிள்ளைலோகாச்சாரியாருக்கு  சிறிய  விமானத்துடன் ஒரு சன்னதி உள்ளது.   கை கூப்பிய வண்ணம் அமர்ந்த  நிலையில்  இருக்கிறார் ஆச்சாரியார்..

சிவப்புத் துணியால் நடை பாவாடை விரித்து  இருந்தார்கள் 

 பிள்ளை லோகாச்சாரியார்  சன்னதி முன் அமர்ந்து அனைவரும் ராமனுஜரைப்பற்றி பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளை லோகாச்சாரியார்  பற்றிய வரலாறு கல்வெட்டில்  இருந்தது. அவர்கள் எல்லோரும் அமர்ந்து இருந்ததால் அதைப் போட்டோ எடுக்க முடியவில்லை.   .



போகும் பாதையில் கிணறு ஒன்று  இருக்கிறது.   ஊர்  மக்கள் தண்ணீர்  எடுத்துச்  செல்கிறார்கள்  தண்ணீர்  அமிர்தமாய் இருக்கிறது.    எப்போதும் வற்றாதாம்.  ஊறிக்  கொண்டே இருக்குமாம். அந்த ஊர்  மக்கள்  மட்டும்  தான்  எடுக்க  வேண்டும் என்பது கட்டுப்பாடாம்.  

அழகர் கோவில்  கங்கை நீர் போல அவ்வளவு ருசி.  தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தவரிடம் வாங்கிக் கொஞ்சம்  பருகித்  தலையில்  தெளித்துக் கண்களில்   ஒத்திக்  கொண்டோம்.

அவர் ஒரு செய்தி சொன்னார் பழமையான கல்வெட்டு உள்ளது  என்று இடத்தைக் காட்டினார்.  கிணறு இருக்கும்  அதே  சாரியில்  உள்ளது.
                                               கோடியில் கல்வெட்டு உள்ளது.
                                                                கல்வெட்டு


                                                           செல்லும் பாதை



இயற்கை எழில் கொஞ்சும்  இடம், அமைதியான ஆரவாரம் இல்லாத இடம்.  இந்த நாளில் தான் திறந்து வைத்து இருப்பார்கள் மற்ற நாளில் பார்க்க வேண்டும் என்றால் ஆனமலை நரசிம்மர் கோவிலில் இருக்கும் பட்டரை அழைத்து வந்து பார்க்கலாம்   என்று பட்டர் சொன்னார்.
வாழ்க வளமுடன்
-----------