சனி, 10 டிசம்பர், 2016

ஜோதி வழிபாடு, தீபத்திருநாள்

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’ 

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.
காயத்ரீ மந்திரம் :-  நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

’எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ என்று 
முரு கனைப்பாடுகிறார். 

வள்ளலார் தீப வழிபாடு செய்தார். 

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே 
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே 
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியைத்  தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பென நினைத்துத்  தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:-:

’மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!
நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’

அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகைப் புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.

நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதைப் பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விளக்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது. 

இசை மேதை தான்சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.


தீபத்திருநாள், 

தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். மாலை  நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு இங்கு மிகவும் போற்றப் படுகிறது. 

சர்வாலய தீபம்:

சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியைத் தூண்டி,விளக்கை பிரகாசப்படுத்தியது. இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவால யத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவாலயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாகத் தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.

விஷ்ணுதீபம்

விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.

ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார்த்திகை விரதம்:

முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும். பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலூட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.

விளக்கு வழிபாட்டின் பயன்:

கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை. 

கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

 எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !

எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் !
                                                                     வாழ்க வளமுடன் !




25 கருத்துகள்:

  1. "ஜோதி வழிபாடு, தீபத்திருநாள்" படங்களும் பதிவும் அருமை.

    கார்த்திகை திருநாளுக்கு ஏற்ற நல்ல பதிவு.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கார்த்திகை தீபத் திருநாள் - சிறப்பான தகவல்கள்...

    படங்களும் நன்று.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்ட
    சிறப்புப் பதிவு
    படங்கள் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. படங்களும் பதிவுமாய் நன்று,,,,/

    பதிலளிநீக்கு
  8. இன்றைக்கே தீபத்திருநாள் வந்து விட்ட உணர்வை பொருத்தமான படங்கள் ஏற்படுத்தின.

    விளக்கங்களும் சிறப்பாக இருந்தன.

    குறிப்பாக ஜோதி வழிபாடு என்று குறிப்பிட்டமைக்குப் பாராட்டுகள். 'ஜோதி', 'சோதி'யாகியிருந்தால், அதன் ஜொலிப்பே உணர்வில் தைத்திருக்காது.

    பதிலளிநீக்கு
  9. ஜோதி வழிபாடு, தீபத்திருநாள்....பகிர்வு...பல செய்திகள் தாங்கிய அருமையான பகிர்வு..

    பதிலளிநீக்கு
  10. கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  11. தகவல்கள், படங்களுடன் பகிர்வு மிக அருமை. தங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வருகிறேன். தீபத்திருநாள்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் அனுராதாபிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கு நல்வரவு, நலமா?
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    இனி தொடர்ந்து வருவீர்கள் தானே? மகள் நலமா?

    பதிலளிநீக்கு
  20. கட்டுரை சிறப்பாக இருந்தது. படத்தில் இருப்பது எந்த ஊர் கோவில்?

    பதிலளிநீக்கு
  21. கட்டுரை சிறப்பாக இருந்தது. படத்தில் இருப்பது எந்த ஊர் கோவில்?

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
    படத்தில் இருப்பது மாயவரம் புனுகீஸ்வரர் கோவில்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. இந்த வருஷம் கார்த்திகைப் பண்டிகை இங்கே யு.எஸ்ஸில் மருமகள் மற்றும் பேத்தியுடன் கொண்டாடியாச்சு. படங்கள் எடுக்கவில்லை. படமும் கார்த்திகை குறித்த கட்டுரையும் அருமையான தகவல்களுடன் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    பேத்தி, மகன் , மருமகளுடன் கார்த்திகையை கொண்டாடியது அறிந்து
    மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு