திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீ பாதி நான் பாதி

மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.ஒருவனுக்கு உயிரையும்,உடலையும் தந்து உலவ விடுபவள் தாய்.அந்தத் தாய் தன்னை மாதிரி தன் மகனைப் பாதுகாத்துப் பேண இன்னொரு தாய் போன்ற பெண்ணைத் தன் மகளுடன் இணைக்கிறாள். ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.

அதனால் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றார். நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் நலம். அல்லாவிட்டால் பிணி.

ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.

குடும்ப வாழ்க்கையிலே,இன்ப,துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்வை நல்லபடியாக நடத்த கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.

தரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.

இயற்கை தனக்களித்த பொறுமை,தியாகம்,இரக்கம்,தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.இல்லறமாகிய நல்லறத்தைச் சிறப்பிக்க முடியும்.


இப்படி எல்லாமாகிய மனைவியைக் கணவன் போற்ற வேண்டும். அதற்கு ஒரு நாள் தான்
‘ மனைவி வேட்பு நாள்’என்கிறார் அருள் தந்தை வேதாத்திரி.

சுமார் 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பிறந்தகத்தை சுற்றத்தாரை,பிறந்த ஊரைப் பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை என்றென்றும் போற்ற வேண்டும். அவர்களின் பெருமையை உணர வேண்டுமென்று அருட்தந்தை அவர்கள் தன் மனைவி அன்னை லோகாம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள்.

//உலகில் இதுவரை ’தந்தைநாள்’ ,தாயார் நாள், தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.
சுமங்கலி பூஜை என்ற அளவிலே கணவன் வேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள்.
மனைவி வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா?
இது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.ஆனாலும் ஒருவர் தலையிட்டு செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்து தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு,இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆவது நாளை மனைவி வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளில் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள்.நீங்களும் உங்கள் வாழ்க்கைத துணையை நன்றியோடு வாழ்த்தி இக் கவியைச் சொல்லி மகிழுங்கள்:-

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு என்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

-அருள் தந்தை.//

இந்த மனைவி வேட்பு நாளில் இக் கவிதையைக் கணவன் கூறி,மலர் போன்ற மென்மையான மனத்தையுடைய மனைவிக்கு மலரினை அளிக்கிறான்.தியாக உள்ளம் படைத்த மனைவி உள்ளப் பூரிப்போடு உவகையோடும் உள்ளக் கனியாகத திகழ்கின்ற கணவனுக்கு ‘கனியைக்’ கொடுக்கிறாள்.இப்படி இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் என்றென்றும் மனைவியை மதித்து போறற வேண்டும் என்பது தான் அருட் தந்தை அவர்களின் மனைவி நல வேட்பு விழாவின் நோக்கமாகும்.


இன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.

பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.

எந்த வீட்டில்,நாட்டில் பெண் மதிக்கப் படுகிறாளோ அந்த நாடும்,வீடும் முன்னேறும் எங்கெல்லாம் பெண் இழிவு படுத்தப் படுகிறாளோ அங்கு முன்னேற்றம் தடை படும்.

உயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி.

அமைதியான சுற்றுச் சூழலில் அமைந்த இல்லம்,இறையருளால் அமைந்த பெற்றோர்கள்,வாழ்நாள் முழுவதும் ஈருடல் ஓர் உயிராக இணைந்த நல்வாழ்க்கைத் துணை,
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மக்கள் செல்வம்,இனிய நட்புடன் கூடிய உறுதியான,உண்மையான் குடும்ப உறுப்பினர்கள், நிறைவான வாழ்க்கை வசதிகள்,சுற்றத்தோடு கூடிய இனிய உறவினர்கள்,சமுதாயத்தில் நன்மதிப்பு இவற்றுடன்
இல்லறத்தில் கூடி மகிழ்ந்து,இறைநிலையோடு இணைந்து வாழும் குடும்பமே இனிய குடும்பமாகும்.

//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் -அற்புதமே
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்?//

என்பது அருட்தந்தையின் கேள்வி.

கணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்
வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.

கணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.

18 கருத்துகள்:

  1. //ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக//

    இப்போதுதான் அறிய வருகிறேன். நல்ல பகிர்வு.

    //பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.//

    உண்மை. அழகாய் கொடுத்த விளக்கங்களை அற்புதமாய் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது தலைப்பு.

    பதிலளிநீக்கு
  2. கோமதி அம்மா,

    ஆகஸ்ட் 30 மனைவி தினம் புது செய்தி.

    அழகான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. Appreciation கண்டிப்பாக அவசியம். அது மேலும் இணைந் து வாழும் நாட்களை இனிமையாக்க உ தவும் எனும்போது நல்லது தானே..

    \\வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்
    வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.//
    நல்ல பகிர்வு.. நன்றி கோமதியம்மா..

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு அம்மா! நல்ல விளக்கங்கள் - இன்றைய தலைமுறை கணவன் - மனைவிகளுக்கு பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விஷயங்கள் அன்னியமாக தெரிகின்றது! பகிர்வுக்கு நன்றி

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  5. அந்த் டே, இந்த டேன்னு எல்லாம் அந்நிய இறக்குமதியாக இருக்க, அர்த்தமுள்ள “மனைவி வேட்பு நாள்” நம்ம இந்தியமண்ணின் அறிவுறுத்தலா இருப்பதுமகிழ்ச்சி. ஆனா யாருக்கும் இன்னும் தெரியலயே.

    பதிலளிநீக்கு
  6. இத்தனை அழகாக ஒரு நாளைக் கண்டு கொண்டதற்கு மகரிஷிக்கு நன்றி சொல்லவேண்டும். உண்மையான மனநலம் இருப்பவர்கள் மனை நலத்தையும் கொண்டாடுவார்கள்.
    நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  7. ஆகஸ்டு 30 தேதி,1994லிருந்து மனைவி நல வேட்பு விழா கொண்டாடப் படுகிறது முகுந்த் அம்மா.

    பதிலளிநீக்கு
  8. ஆம் முத்துலெட்சுமி, இந்த விழா இணைந்து வாழும் நாட்களை மேலும் இனிதாக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ஹீஸைனம்மா,காலம் வரும்.எல்லோருக்கும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  10. சரியாக சொன்னீர்கள், வல்லி அக்கா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.//

    அட... ஆரம்பமே அசத்தலா இருக்கே..

    //ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.//

    மிக மிக சரியான விளக்கம் கோமதி மேடம்...

    // ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.//

    இது நடைமுறையில் நாம் காணுவது..

    //ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.//

    அதாவது இரு மனம் இணைந்த திருமணத்திற்கு பிறகு தான் என்கிறீர்கள்...

    //கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.//

    சரி.... இதே கருத்தை தான் நான் என் “எடக்கு மடக்கு” வலையில் எழுதிய “வாழ்க்கை” தொடரில் வலியுறுத்தினேன்..

    //தரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.//

    ஒரு குடும்பத்தலைவனாக நான் உணர்ந்த இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறேன் மேடம்...

    //பொறுமை, தியாகம், இரக்கம், தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.//

    ம்ம்... பொறுமை கடலினும் பெரிது.. அதை பெண் உணர்ந்து செயல்படுவாளாயின் அந்த குடும்பமே மகிழ்ச்சி கடலில் மிதக்கும்...

    //ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள். //

    ஓஹோ... அப்படியா... இது எனக்கு செய்தி.... நன்று...

    //இன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.//

    செய்து கொண்டிருக்கிறோம்... தொடர்ந்து செய்வோம்....

    //உயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி//

    விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் உறைந்து, உணர்வில் கலந்த உறவு கூட மனைவி தான்....

    //கணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

    வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்
    வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.

    கணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.//

    எப்போதும் போல், இதுவும் ஒரு நல்ல பதிவாக பதிந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி கோமதி மேடம்....

    பதிலளிநீக்கு
  12. புதிய செய்தி.மகிழ்ச்சியான நல்லபகிர்வு.

    பதிலளிநீக்கு
  13. கோபி ,நல்ல விரிவான பின்னூட்டம் வழங்கியதற்கு நன்றி.

    கணவன், மனைவி
    இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களே பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது ஆள் நுழையும் போது சில சமயம் பெரிய பிரச்சனை ஆகி இருவர் பிரிவுக்கும் அதுவே வழி வகுத்து விடுகிறது அதனால் தான் அதை அடிக்கடி சொல்ல வேண்டியாதாய் உள்ளது.
    நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க மாதேவி.

    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு